30 ஜன., 2009

புறநானூறு-1: "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொருது இறங்கும் அல்லர் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்.

- கணியன் பூங்குன்றனார்

நெல்லையப்பன் கவிதைகள்-45: "கலி காலம்"

நல்ல தலைவர்கள்
நாட்டு மக்களை
அரசியலுக்கு அழைத்தது
அந்தக்காலம்.

தொண்டர்கள் திரண்டு
தெண்டனிட்டு தங்கள்
தலைவரை இழுப்பது
இந்தக்காலம்.

இரவு பகல் பாராது
தலைவர்களெல்லாம்
பொதுப்பணி செய்தது
அந்தக்காலம்.

வெற்றி வாய்ப்பிற்கு
காலம் கனிய காத்திருந்து
லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்ட்டாக வருவேனென்பது
இந்தக்காலம்.

மூழ்கிக் கொண்டிருப்பவன்
கதறி அழைக்கிறான்
கைதூக்கிவிட தலைவருக்கு
காலம் இன்னும் கனியவில்லையாம்!

29 ஜன., 2009

ஆன்மிக சிந்தனை-16:

"நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வந்திருக்கிறேன்." - பரமஹம்ஸ நித்யானந்தர்.

இன்றைய சிந்தனைக்கு-38:

பகிரப் பகிர பொங்குவது ஆனந்தம்;
பகிரப் பகிர குறைவது துக்கம்.

28 ஜன., 2009

நலக்குறிப்புகள்-३०: "பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள்"

சளி, இருமல், ஆஸ்த்துமாவிற்கு ஒரு சிறந்த மருந்து. தொடர்ந்து சாப்பிட சுவாசக் கோசங்கள் பலம் பெறும். இரத்த சோகைக்கும் இது சிறந்தது. ஆன்டிஆக்ஸிடன்ஸ் நிறைந்தது. இரும்புச் சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளர்கள் தவிர மற்றவர்கள் சாப்பிடலாம்.

27 ஜன., 2009

கருத்துக்கள்-13: "எப்படி உருப்படும் இந்த நாடு?"

"....இன்றும், தனியார் பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்குச் சம்பளம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். நகரத்தில், ஒரு கால் சென்டரில் அல்லது ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்குச் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். எப்படி உருப்படும் இந்த நாடு?..."

"உரத்த சிந்தனை: 'பொய் 'சத்தியமும்', இந்திய பொருளாதாரமும்!" - சாரு நிவேதிதாவின் கட்டுரையிலிருந்து, தினமலர்.
நன்றி: திரு சாரு நிவேதிதா & தினமலர்.

இன்றைய சிந்தனைக்கு-37:

வசதி வரமும் அல்ல.
ஏழ்மை சாபமும் அல்ல.

நலக்குறிப்புகள்-29: "நோய் தடுப்பாற்றலுக்கு காரட்!"

காரட்டைக் கழுவி, சுத்தம் செய்து, பச்சையாக சாப்பிடுவது - நன்றாக மென்று சாப்பிடுவது - நல்லது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காரட் சாப்பிடவேண்டும். காரட் கண்ணிற்கும் மிகவும் நல்லது. முக அழகைத் தரும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். பற்கள் பழம் பெறும். மேலும் மாதவிடாய்க் கோளாறுகள், வேட்டைச்சூடு, மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றிற்கும் சிறந்தது. இதில் உள்ள பீட்டா-கரோடின் நோய் தடுப்பாற்றலை வளர்க்க உதவும்.
Detailed Wikipedia article on "CARROT":
Grateful thanks to Wikipedia, the free encyclopedia.

நெல்லையப்பன் கவிதைகள்-44: "அவர் வருவாரா?"

இழுபறியான நதிநீர்ப் பங்கீடு,
இலங்கையில் இனப்படுகொலை,
இட ஒதுக்கீடு 33 சதவிகிதம்,
இறக்கை கட்டும் பெட்ரோல்,
இன்டர்நெட் வழி கலாச்சார சீரழிவு,
பயமுறுத்தும் பணவீக்கம்,
பங்குச்சந்தை தொடர் சறுக்கல்,
பெரிதாகும் ஓசோன் ஓட்டை,
உயரும் பூமியின் வெப்பம்,
வளரும் வன்முறைக் கலாச்சாரம்,
அதிகரித்துவரும் எய்ட்ஸ் பயங்கரம்,
இருதுருவமாகும் பொருளாதாரம்:
பற்றி எரியும் பிரச்சினைகள் இவையல்ல;
தமிழனின் தலையாய பிரச்சினை -
அரசியலுக்கு அந்த நட்சத்திரம்
வருவாரா மாட்டாரா?

23 ஜன., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-43: "எங்கே தொலைத்தோம்?"

அந்தப் பழைய புகைப்படத்தில்
சிரிக்கும் சிறுவர்கள் நாம்தானே?
எங்கே தொலைத்தோம்
அந்த இன்முகத்தை?

எங்கே போயின
சிரிக்கும் கண்களும்
சாந்தம் தவழும் முகமும்
அந்த அப்பவித்தனமும்?

படிக்கப்போன இடத்தில்
பள்ளியில் தொலைத்தோமா?
கல்லூரி களவாடிக்கொண்டதா?
எப்படி வந்தன இத்தனை
இறுக்கமும், சுருக்கமும்?

அப்பா, அம்மாவிற்காக ஒன்று,
மனைவி, குழந்தைகளுக்காக ஒன்று,
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக ஒன்று,
பணியிடத்திற்கென்று ஒன்று,
என்று முகமூடிகளை அணிந்தணிந்து
அந்த முகமூடிகளே முகங்களாக
முற்றிலும் மாறிவிட்டனவா?

என்ன விலை கொடுத்தால்
திரும்பவும் கிடைக்கும்
அந்தப் பழைய முகம்?

21 ஜன., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-42: "கருகும் மொட்டுக்கள்"

பற்றவைத்த பின்னும்
வெடிக்காத பட்டாசு சொன்னது:
"பிஞ்சு விரல்கள் எனைச் செய்தபோதே
வெடித்துவிட்டது என் இதயம்
வெடித்த வெடி எப்படி
வெடிக்கும் மறுபடியும்?"

உரசிய பின்னும் ஒளி கொடுக்காத
தீக்குச்சி சொன்னது:
"எனைச் செய்த சிறார்களின் கண்கள்
ஒளியிழந்து கிடந்ததே!
நான் எப்படி ஒளி கொடுப்பேன்?"

சாயம் போன பனியன் சொன்னது:
"கைகழுவிய பின்னும்
சாயக்கரையோடு தானே
சாப்பிடப் போவார்கள் சிறுவர்கள்!
எங்கு மட்டும்
சாயம் போன மாயம் என்ன?"

ட்ராஃபிக் சிக்னல் சொன்னது:
"பிச்சை கேட்கும் சிறுவர்களின்
கை நிறைந்துவிடும் தினமும்,
வயிறு நிறைவதில்லை ஒருபொழுதும் -
பங்கு கொடுக்க வேண்டுமே பலருக்கும்."

உணவகத்தின் மேஜை சொன்னது:
"உணர்ச்சியற்ற மரக்கட்டைகள் நாங்கள் -
எழுதுகோல் ஏந்தவேண்டிய விரல்கள்,
எங்களைச் சுத்தம் செய்யும்போதும்
வாழாவிருக்கிறோம் நாங்கள்."

திருட்டுச் சிறுவனின் வாக்குமூலம்:
"படிப்பு சரியா வரலைங்க, ஐயா!
மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னாங்க.
பேப்பர் போட்டேங்க வீடு வீடா.
ஹோட்டல் வேலைக்கு போனேங்க;
காச ஏமாத்துனாங்க; ராத்திரில
கெட்ட வார்த்த பண்ணினாங்க;
பிடிக்கலீங்க எனக்கு.
ஓடிவந்து இப்படி ஆயிட்டங்க."

நலக்குறிப்புகள்-28: "ஆயுளைக் கூட்டும் கற்றாழை!"

இன்றைய உலகில் காற்று, நீர், உணவு என்று எல்லாமே மாசடைந்து, உடல் செயல்பாட்டை பாதித்துக் கொண்டிருக்கின்றது. நாற்பது வயது கடந்த அனைவருமே நோயாளி என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. பிறந்தது முதலே நம் உடலில் திசுக்கள் உற்பத்தியும், அழிவும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. புதிய திசுக்கள் உற்பத்தியாவது குறைந்து, பழைய திசுக்களின் அளவு கூடும்போது, மரணத்தை நோக்கி நாம் செல்கிறோம். இதற்குத் தீர்வாக கற்றாழை அமையும் என்று தற்போது கருதப்படுகிறது.

கற்றாழையில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள், விட்டமின் பி-2, பி-6, பி-12 மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. இதனால் தானோ எனனவோ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர்கள் இதை தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகக் கருதினர். இந்த அமினோ அமிலங்கள் புதிய திசுக்களின் உற்பத்தியைக் கூட்ட உதவுவதோடு மட்டுமல்லாமல், பழைய திசுக்களின் அழிவையும் தடுக்கின்றன. மேலும் விட்டமின் பி-12 உள்ள ஒரே தாவரம் கற்றாழை மட்டுமே. கற்றாழை நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் உதவுகிறது.

தினமும் கற்றாழைச் சாற்றை, வெறும் வயிற்றில் 25 மில்லி குடித்து வந்தால், சர்க்கரை நோய், குடல்புண், பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், இடுப்புவலி, மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள் போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாகவும் செயல் படுகிறது.

அடிப்படை: தினகரன் நாளிதழ், மதுரைப் பதிப்பு, ஜனவரி 19, 2009.
நன்றி: தினகரன் நாளிதழ்.

20 ஜன., 2009

என்ன நடக்கிறது?-9: "ஒரே மழைக்கு சாலைகள் வாய் பிளந்தது ஏன்?"

சமீபத்தில் போடப்பட்ட பெரும்பாலான சாலைகளில் தற்போது ஜல்லி கற்கள்தான் உள்ளன. இதுபற்றி, சாலைகளைப் போட்ட கான்ட்ராக்டர்களோ, நிதி ஒதுக்கிய அரசோ கவலைப்படவில்லை. மாறாக, மீண்டும் அந்த இடங்களில் சாலைகளைப்போட நிதி ஒதுக்கும் பணியைத் துவக்கிவிட்டனர்.
முந்தைய காலங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது; அவ்வளவு தரமானதாக இருந்தது. ஆனால், தற்போது போடப்படும் சாலைகள் ஓராண்டுகூட தாக்குப்பிடிப்பதில்லை.
சமீபகாலமாக, தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் ஏராளமான சாலைப்பணிகள் நடந்தன. தற்போது பெய்த மழையில், இந்தப்பணிகளின் தரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. சாலைகளின் மேல் மணல் போல ஜல்லிக்கல்தான் உள்ளன. இவற்றில் பல சாலைகள், ஆறு மதங்களுக்குள் போடப்பட்டவை.
தரமற்ற சாலைப்பணிகள் மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான். மாநகராட்சி அளவில் சாலைப்பணி நடந்தால், கவுன்சிலரில் இருந்து, அனைத்து தரப்புக்கும் கமிஷன் கொடுத்தால்தான் டெண்டரே கிடைக்கும். முப்பது சதவிகிதம் வரை கமிஷனாகக் கொடுத்துவிட்டு, பதினைந்து சதவிகிதம் லாபமும் வைத்து காண்ட்ராக்டர்கள் பனி செய்தால், ஐம்பத்தைந்து சதவிகித அளவில்தான் தரம் இருக்கும்.
நெடுஞ்சாலைத்துறை மூலம் போடப்படும் சாலைகளின் தரமும் இவ்வாறுதான் உள்ளன. தற்போதுள்ள நிலையில், இதுவே அதிக பட்ச தரம் என்று திருப்திப்படும் நிலையில் அதிகாரிகள் உள்ளனர். சாலைகளின் தரத்தை உறுதி செய்த பின்னர்தான் காண்ட்ராக்டர்களுக்கு முழுமையாக நிதி வழங்கப்படுகிறது. அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுத்துவிடுவதால், தரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
'சாலைப்பணிகள் மேற்கொள்ளும்போது, எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை, எத்தனை கிலோமீட்டர் தூரம் அந்தப்பணி நடைபெற்றது? பணியை மேற்கொண்ட காண்ட்ராக்டர் யார்? எந்தத் தேதியில் பணி நிறைவடைந்தது? எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டது? பணியை கண்காணித்த பொறியாளர் யார்? என்பது போன்ற விவரங்கள் சாலை ஓரத்தில் வைக்க வேண்டும்' என்ற விதியை அரசு கொண்டு வந்தது. ஆனால், இதுபோன்ற பலகைகள் பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை. அவ்வாறு வைத்திருந்தால், சாலைப்பணியில் நடந்த ஊழல் நிச்சயமாக அந்தந்தப் பகுதி பொதுமக்களுக்கு தெரிய வந்திருக்கும்.
சாலை போடாமலேயே போட்டதாக கணக்கு காட்டுதல், பள்ளம் மேடுகளை மட்டும் சரிசெய்துவிட்டு மொத்தமாக சாலை போட்டதாக கணக்கு காட்டுதல், அதிக நிதியை வாங்கிக்கொண்டு குறைந்த செலவில் சாலை போடுதல் போன்ற முறைகேடுகள் இதன் மூலம் தடுக்கப்பட்டிருக்கும். அடுத்ததாக, தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுத் திட்டம், தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளால் அரசியல்வாதிகள் பலருக்குத்தான் கோடிகள் கிடைக்கும் என்ற மக்களின் சந்தேகத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
நன்றி: தினமலர் சிறப்பு நிருபர், தினமலர், மதுரை, 7.12.2008.

கடிதம்-9: "அவமானம் ஒரு சிலருக்கு மட்டும்தானா?"

இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன, கோடி கோடியாக! இப்போது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.7800 கோடி ஊழல் செய்து உலக வங்கியின் மதிப்பையே சரிய வைத்துள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்தே இது நடைபெற்று வந்திருக்கிறது. இந்திய கிராமப்புறங்களில் சிலர் வயிற்றுப்பசிக்கு தேங்காய், மாங்காய், வேர்க்கடலை, மீன் போன்றவைகளையும், ஆடு, மாடுகளையும் திருடுவார்கள். திருட்டு தெரிந்துவிட்டால் மரத்தில் கட்டிப்போட்டு அடிப்பார்கள். அவமானம் தாங்காமல் சிலர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் மட்டும் இல்லை, உலக வங்கியின் மதிப்பையே சரிய வைத்து சாதனை புரிந்துவிட்டு, வெட்கமோ, மானமோ இன்றி இவர்கள் டிவியில் பேட்டி கொடுக்கிறார்கள். அவமானம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தானா? - எம்.கோவிந்தராஜன், வந்தவாசி.
நன்றி: திரு எம்.கோவிந்தராஜன் & தினமணி, மதுரை, 13.1.2009.

கேள்வியும் பதிலும்-27:

"ஒரு மனிதனைப்போல் இன்னொருவர் இருப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை. அப்படியிருக்க, நான் அவரைப்போல் வர ஆசைப்படுகிறேன், இவரைப்போல் வரவேண்டும் என்பது என் லட்சியம் என்றெல்லாம் கூறுவது ஏன்?" (விஜயலட்சுமி, பொழிச்சலூர்)
"ஒரு 'இன்ச்பிரேஷனுக்குத்தான்!' மூக்கு, கண், வாய் ஒரே மாதிரி இல்லாமல் இருக்கலாம். லட்சியங்கள் ஒரே மாதிரி இருக்க முடியும் அல்லவா? 'மாவீரன் அலெக்சாண்டர் போல நானும் வரவேண்டும்' என்று ஆசைப்பட்டவர் ஜூலியஸ் சீசர். செங்கிஸ்கானைப்போல ஆக வேண்டும் என்று தைமூர் விரும்பினான். அப்பாவைப் பின்பற்றி மகனும் பிற்பாடு எவரெஸ்ட் சிகரம் ஏறி கொடி நாட்டியது உங்களுக்குத் தெரியுமா? - டென்சிங் மகன்!
நன்றி: ஆனந்த விகடன், 22.10.2008.

நெல்லையப்பன் கவிதைகள்-41: "அரசியல் பிழைத்தோர்"

சமூகத்தில் ஒரு பாதி,
முப்பத்து மூன்று சதவிகித
இடங்களுக்காக,
போராடப் போகிறார்களாம்,
மற்றொரு பாதியை எதிர்த்து!
அவர்கள்
கேட்க வேண்டியது,
ஐம்பது சதவிகிதமல்லவா?

அரசியல் பெண்களின்
முகவரிகளை எல்லாம்
தொகுத்தபோதுதான்
தெரிய வந்தது,
அவர்கள்
தங்களுக்கென்று
தனி முகவரி மட்டுமல்ல,
முகமே இல்லாதவர்கள் என்பது!

அவர்கள்
பின் கதவு வழியாக
பினாமியாக வந்து
அரசியல் அரிதாரம்
அவசரமாய் பூசியவர்கள்;
பழம் தின்று கொட்டைபோட்ட
அரசியல் அண்ணாச்சிகளின்
மகள், மனைவி, மருமகள்,
அல்லது நண்பிகள்;

பெண் பினாமிகளை,
ஆண் பினாமிகளைவிட
ஆபத்தானவர்களாக,
குறித்து வைத்துள்ளது வரலாறு.

பினாமிகளுக்கா
முப்பத்து மூன்று?
சுயமாய் பெண்கள்
வரட்டும் அரசியலுக்கு;
சுத்தப்படுத்தலாம்
இருவரும் சேர்ந்தே,
சாக்கடையை!

15 ஜன., 2009

திருவள்ளுவர் தினம்

Thiruvalluvar
இன்று திருவள்ளுவர் தினம். உலகப் பொது மறை திருக்குறளை உலகிற்கீந்த உத்தமர்; இரண்டு வரிகளில் பிரபஞ்சத்தையே அடக்கும் வித்தை கற்றவர்; தமிழின் தலை சிறந்த நீதிநூலை வழங்கியவர்; அவர் உரைத்த குரள்நெறிப்படி வாழ்ந்து காட்டியவர் - அப்பெருமகனாரை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இன்று போற்றி, வணங்கி மகிழ்கின்றனர். பைபிள், பகவத் கீதைக்கு அடுத்தபடியாக உலகில் அதிக மொழிகளில் வடிக்கப்பட்ட நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. எக்காலத்திற்கும், எவ்வினத்தவர்க்கும் பொதுவான வாழ்கலை நூலாம் வள்ளுவத்தை நாளும் போற்றிப் பயின்று, அதன்படி வாழ்தலே வள்ளுவப் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.

எனக்கு மிக, மிகப் பிடித்த சில குறள்கள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு."
"புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்."
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று."

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்."

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து."

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையான் உழை."

"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை."
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்."

"அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்."

2 ஜன., 2009

இயற்கை உணவுக் குறிப்பு-4: கார அவல்"

நன்றாக கல் நீக்கி சுத்தம் செய்த அவலை நீரில் தேவையான பக்குவத்தில் ஊறவிடவும். நீர் சேர்த்த அவலுடன் தேங்காய் துருவல், வெட்டிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா சேர்க்கவும். எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலக்கவும். கார அவல் சாப்பிடத் தயார்.

கார அவல் தயாரிப்பது சுலபம். சத்து மிகுந்த இந்த உணவை சர்க்கரை வியாதி அன்பர்களும் அளவாகச் சாப்பிடலாம். மலச்சிக்கல் நீங்கும். பசிப்பிணி தீரும். உடல் சதை குறையும். இயற்கை நலவாழ்வு முகாம்களில் இவ்வுணவு வழங்கப்படுகிறது.

கடிதம்-8: "புதிய நாகரிகம்"

"புத்தாண்டைப் புரிந்துகொள்வோம்" கட்டுரை படித்தேன். புத்தாண்டு என்றாலே குடியும், கும்மாளமும்தான் என்ற விஷவிதை இன்றைய இளைஞர்-இளைஞிகளிடம் வேரூன்றிவிட்டது. பெற்றோரும், சமூக சிந்தனையாளர்களும், அரசும் ஒருங்கிணைந்து அவர்களை நல்வழிப்படுத்தினாலன்றி நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, குடும்ப அமைப்பை புதிய நாகரிகம் என்ற 'சுனாமி' விழுங்கிவிடும். - முருகு.சிற்றரசன், திருமுட்டம், ஆசிரியர்க்கு கடிதம் பகுதி, தினமணி, மதுரை, ஜனவரி 2, 2009.
நன்றி: திரு.முருகு.சிற்றரசன் & தினமணி நாளிதழ்.