22 ஜூன், 2009

இன்றைய சிந்தனைக்கு-50:

மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே இறைவன் உன்னைப் படைத்திருக்கிறான். அந்தச் செயல்களைச் செய்து, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு. - சுவாமி விவேகானந்தர்.

கருத்துக்கள்-14: "கல்விக் கொள்ளை"

கல்விக் கொள்ளையைத் தடுக்க மாநில அரசோ, மத்திய அரசோ கடுமையாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்குப் போய்விட்டது. காரணம், நேரடியாகவே இந்தத் 'தொழிலில்' இருப்பவர்களில் பலரும் அரசியல் புள்ளிகள்தானே. இனம் அத்தனை சீக்கிரமாக தன் இனத்தைக் காட்டிக் கொடுக்குமா? ஜூ.வி. போன்ற புலனாய்வு இதழ்கள்தான் இவர்களின் நிஜமுகங்களை மக்களுக்கு தோலுரித்துக் காட்டவேண்டும்! - வே. சத்தியநாதன், காஞ்சிபுரம், 'கடிதங்கள்', ஜூனியர் விகடன் ஜூன் 24, 2009.

நன்றி: திரு வே.சத்தியநாதன் & ஜூனியர் விகடன்.

19 ஜூன், 2009

இன்றைய சிந்தனைக்கு-49:

அன்பு, கருணை, தயை, ஒழுக்கம் போன்ற நற்குணங்களால் ஏற்படும் மன நிறைவே சொர்க்கமாகும். நாம் எங்கேயோ சொர்க்கம் இருப்பதாக எண்ணுகிறோம். நமக்கான சொர்க்கத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். - ஸ்ரீ சத்ய சாய்பாபா.

18 ஜூன், 2009

நினைத்துப் பார்க்கிறேன்-4:

இரண்டு நாட்களாக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். 'ஆன்லைன்' (online) நூலகமான, 'உலகப் பொது நூலகத்தில்' (World Public Library: http://worldpubliclibrary.org/) உறுப்பினரானேன் நேற்று. வெகுநாட் கனவு நேற்றுத்தான் நிறைவேறியது. இன்னும் ஓராண்டு காலத்திற்கு ஐந்து லட்சம் புத்தகங்களை 'டௌன்லோட்' (download) செய்யவும், படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நினைத்தாலே இனிக்கிறது! அதுமட்டுமல்ல, 'உலக -புத்தகத் திருவிழா' (World eBook Fair) தொடங்கும் ஜூலை 4-ம் நாள் முதல் ஒரு மாதகாலம் இருபத்திரண்டு லட்சம் புத்தகங்களுக்கு மேல் 'டௌன்லோட்' செய்யலாம், படிக்கலாம்! ஒரு புத்தகப்பிரியனுக்கு இதைவிட மகிழ்ச்சியான சேதி என்ன இருக்க முடியும்?

'கிரிடிட் கார்டு' மூலம் 8.95 அமெரிக்க டாலர்கள் ஆண்டுச் சந்தா செலுத்தியவுடன் இந்தப் புத்தகப் பொக்கிஷ அறையைத் திறக்கும் சாவி என் கையில் வந்தது.

முதலில் கிடைத்த ஜாக்பாட் 'ப்ராஜெக்ட் மதுரை' (Project Madurai: http://www.infitt.org/pmadurai/index.html). சங்கத் தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மற்றும் ஜெயகாந்தனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள், கல்கியின் நாவல்கள், ஈழத் தமிழரின் படைப்புகள் என்று எவ்வளவோ!

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் 'டௌன்லோட்' செய்வதிலேயே கழிந்தது. அதற்காக ஒன்றுமே படிக்காமல் விட்டுவிட முடியுமா? முதல் நாளே ஏதாவது படிக்க வேண்டாமா? படித்தேன் ஜெயகாந்தனின் 'யுகசந்தி' என்ற சிறுகதையை. என்னவொரு அற்புதமான படைப்பு! பொறுமையின் இலக்கணமாய், சகிப்புத்தன்மையின் சிகரமாய், பார்ப்பதற்கு சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தோன்றினாலும், இந்தக் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் மிகுந்த கௌரிப்பாட்டி ஒரு வித்தியாசமான படைப்பு. (...நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து, பரந்து ஓடுகிறார்கள். மழையும், வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகிவந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வறண்ட பாலையை மாறிப்போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? ...)

இந்த நேரத்தில் சில வருடங்கள் பின்னே சென்று, நினைத்துப் பார்க்கிறேன். காரைக்குடி புத்தகத் திருவிழாவை நடத்துவது என்று காலை முன்வைத்தாகிவிட்டது. 'கையைச் சுட்டுக்கொள்ளப் போகிறாய்! சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறாய்! என்று அனைவரும் எச்சரித்துக் கொண்டிருந்த நேரம். அதற்கு என் உள்மனதில் இருந்து கீதை பதில் சொல்லிக் கொண்டிருந்தது: "The doer of good never comes to harm." "No effort is ever wasted." "My devotee never perishes."

முன்னனுபவம்
இல்லாமல் இப்படி ஏதோ தைரியத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். நகரின் முக்கிய பொதுநல அமைப்புக்களும், பிரமுகர்களும் ஆதரவு தர முன்வந்தனர். அதுவே ஓரளவு தைரியத்தைக் கொடுத்தது. இருந்தாலும் உதறல்தான், எல்லாம் நல்லபடியாக அமையவேண்டுமே!

முதல்கோணல் முற்றிலும் கோணலாகிவிடுமே! எனவே துவக்க விழா மிகச் சிறப்பாக அமைய வேண்டும், மிகச் சிறந்த எழுத்தாளர் ஒருவர் வந்து துவக்கி வைத்தால் சிறப்பாக இருக்குமே என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம் . நிறைய ஆலோசனைகள். ஆனால் என் மனதில் திரு ஜெயகாந்தன் அவர்களை எப்படியாவது அழைத்துவந்து, சிறப்புரையாற்ற வைக்கவேண்டும் என்ற ஆசை. என் உள்ளக்கிடக்கையை கவிதா பதிப்பகம் திரு சேது.சொக்கலிங்கம் அவர்களிடம் கூறினேன். 'எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள். நீங்கள் வேறெதுவும் செய்யவேண்டாம்' என்றேன். 'கவலைப்படாதே சூரி! நான் ஏற்பாடு செய்கிறேன்' என்று நம்பிக்கை தந்தார் அவர். அப்போது அவர் ஜெகேயின் புத்தகங்களை தொகுத்து வெளியிட்டிருந்தார். அவர் சொன்னபடியே செய்தது மட்டுமல்ல, ஜேகேயை காரைக்குடிக்கு அழைத்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

இங்கே நான் ஒன்றைப் பதிவு செய்யவேண்டும்: காரைக்குடி புத்தகத் திருவிழா நிறைய அற்புதமான, ஆற்றல்மிக்க மனிதர்களுடன் (எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள்) நெருங்கிப் பழகும் வாய்ப்பைத் தந்தது. மேலும் அவர்களது அன்பிற்கும், நட்பிற்கும் ஆளாக்கியது. அப்படிக் கிடைத்த ஒரு அரிய நண்பர்தான் திரு 'கவிதா' சொக்கலிங்கம் அவர்கள்.

திறப்புவிழாவில் ஜேகேயின் சொற்பொழிவு அற்புதமாக அமைந்தது. வாசகர் கூட்டம் ஆடாமல், அசையாமல் கட்டுண்டு அவரது தெளிவான சிந்தனையில் வடிந்த சிறப்புரையில் மயங்கிக் கிடந்தது.

பிறகு கேட்பானேன்? தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளும் அமைய, முதல் காரைக்குடி புத்தகத் திருவிழாவே வெற்றிகரமாக அமைந்தது. இன்று அது ஏழாவது புத்தகத் திருவிழா வரை நீண்டுவிட்டது; இன்னும் நீளும். இவ்வாறு கம்பன் விழா போல், காரைக்குடி புத்தகத் திருவிழாவும் காரைமா நகருக்கு மேலும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் அசைபோட மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த நேரத்தில் புத்தகத் திருவிழா வெற்றி பெற கடும் உழைப்பையும், ஆதரவையும் நல்கிய அனைத்து உள்ளங்களையும் நன்றியுடன் போற்றி மகிழ்கின்றேன்.

17 ஜூன், 2009

இன்றைய சிந்தனைக்கு-48: "எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருங்கள்!"

உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கலானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது பயனுள்ள ஒரு செயலைச் செய்தோம் என்ற மனத்திருப்தி உங்களுக்குக் கிட்டும். மனிதன் வெறும் உணவினால் மட்டும் வாழ்பவன் அல்ல என்ற பழமொழியை நினைத்துப்பாருங்கள். பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட, குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள். - ஸ்ரீ சுவாமி சிவானந்தர்

"மன அமைதியைப் பெறுவது எப்படி?" என்ற சுவாமி சிவானந்தர் எழுதிய கட்டுரையிலிருந்து

நன்றி: "இமைய கீதம்", ஆன்மிக மாத இதழ், ஜூன் 2009.

14 ஜூன், 2009

நினைத்துப் பார்க்கிறேன்-3: "உலக இரத்த தான தினம்"

இன்று ஜூன் 14-ம் நாள் 'இரத்த தான தினம்' . இரத்த குரூப்களை கண்டுபிடித்த அறிவியல் மாமேதை கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாள். இந்நாளை உலக சுகாதார அமைப்பு 'உலக இரத்த தான தினமாக' தேர்ந்துள்ளது. இதுவரை இரத்த தானம் லட்சக்கணக்கான மனிதர்களைக் காத்துள்ளது; இன்னும் எத்தனையோ லட்சம் பேரை காப்பாற்றும். இவ்வாறு உயிர்களைக் காப்பாற்றும் அரும்பணி ஆற்றும் அனைவருக்கும் நன்றி நவிலுமுகமாக இத்தினம் கொண்டாடப் படுகிறது.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை, நானறிந்த வரையில், என் தம்பி நெல்லையப்பன் கல்லூரியில் பயிலும் காலத்தில் இரத்த தானம் செய்திருக்கிறான். ஆனால் அவன் வீட்டிலோ அல்லது வெளியிலோ யாரிடமும் அதைப்பற்றி சொல்லிக்கொண்டதில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய பேப்பர்களை புரட்டிக் கொண்டிருந்தபோது தற்செயலாக இரத்த தானத்திற்காக அவனக்கு வழங்கப்பட்ட சான்றிதழைக் கண்டபிறகுதான் அவன் ரத்த தானம் செய்த உண்மை எனக்குத் தெரிந்தது.

அடுத்து எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் ரோட்டரியன் திரு முத்து.பழனியப்பன் அவர்களை இன்று நினைத்துப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நூறு முறைக்கும் மேலாக இரத்த தானம் செய்த சாதனையாளர் அவர். அவரது துணைவியாரும் பலமுறை ரத்த தானம் செய்துள்ளார். காரைக்குடி நகரிலுள்ள பல சேவை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அவருக்கு 'குருதிக்கொடை வள்ளல்' என்ற பட்டம் வழங்கி பாராட்டிச் சிறப்பித்தது நினைவிற்கு வருகிறது.

காரைக்குடி நகரில் எந்த பொதுநல நிகழ்ச்சி நடந்தாலும் அதில் திரு முத்து.பழனியப்பனின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். காரைமா நகரின் தொழில் வணிகக் கழகத்தின் நெடுநாள் தலைவர் அவர். காரைக்குடி புத்தகத் திருவிழா மூலம் அவரது இனிய நட்பு எனக்குக் கிடைத்தது. எத்தனையோ முறை நான் உதவி வேண்டி அவரிடம் சென்றிருக்கிறேன். அத்தனை முறையும் அன்போடு அவர் செய்த உதவியை எந்நாளும் என்னால் மறக்க முடியாது.

திரு முத்து.பழனியப்பன் அவர்களையும், தம்பி நெல்லையப்பனையும், அவர்களைப்போன்று தன்னலமில்லாமல் பிற உயிர்காக்க குருதிக்கொடை வழங்கிய நல்ல உள்ளங்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி மகிழ்கிறேன்.