30 ஜூன், 2011

என்ன நடக்கிறது?-15: நாமெல்லாம் மருத்துவ ஆராய்ச்சிக்கான எலிகள் !

நேற்று 29 .6 .2011 ஆனந்த விகடனில் படித்த செய்தி என்னைப்  பெரிதும் அதிரவைத்தது, நடுங்க வைத்தது.  "யாருடைய எலிகள் நாம்?" என்ற சமஸின் கட்டுரை அது.

புதிதாக உருவாக்கப்படும் மருந்துகள் மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை விளைவிக்கிறது என்று சோதிக்கப்பட்ட பின்னரே சந்தைக்கு வருகின்றன.  மேலை நாடுகளில் இத்தகைய சோதனைகளுக்கான விதிமுறைகள் மிகக் மடுமையானவை.  ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்ற ஆணையின் பேரில் நூறு கோடி, இருநூறு கோடி என்று நஷ்ட ஈடு கொடுக்கும் நிலை அங்கே உண்டு.  ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சட்டங்கள் எளிதாக வளையக்கூடியது; மக்களை எளிதாக ஏமாற்றலாம்; அதை அரசோ, அரசு அமைப்புகளோ கண்டுகொள்ளாமல் இருந்துவிடும்; எல்லாவற்றையும் எளிதாக மூடி மறைத்துவிடலாம்.  எனவே பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதுபோன்ற சோதனைகளை இந்தியாவில் நடத்துகின்றன.  எல்லாவற்றையும் மீறி, சமயங்களில் இச்சோதனைகளின் கடுமையான பின்விளைவுகள் பற்றி அதிர்ச்சியும், வேதனையும் தரும் உணமைத்தகவல்கள் கசிகின்றன.  நம்மிடையேயும் மனசாட்சி உள்ள சிலர் இருக்கிறார்கள் என்று உணர முடிகிறது.  

உதாரணத்திற்கு ஒன்று.  ஆந்திர மாநிலத்தில்   கருப்பைப் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனைகளில் 14,000 பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமிகள் ஈடுபடுத்தப் பட்டனர்.  அச்சிறுமிகளுக்கோ அல்லது அவர்களது பெற்றோர்களுக்கோ இப்படி ஒரு ஆய்வு நடப்பதே  தெரியாது.  இந்தச் சிறுமிகளில் சிலர் இறந்ததைத் தொடர்ந்தே உண்மை வெளிவந்தது.

இதுபோல தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் நடந்த ஆய்வு ஒன்றில்  49 ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறந்தன.

உண்மை வெளிவந்தாலும்கூட, பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் ஏமாற்றிவிடுகிறார்கள்.  உதாரணமாக, சென்ற ஆண்டு ஆய்வில் இறந்த 670 பேரில் 8 பேருக்கு மட்டுமே நஷ்ட  ஈடு வழங்கப்பட்டுள்ளது.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?  

நம்மைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் எளிதாக விலைபோய் விட்டார்களா?  

இது போன்ற விஷப்பரிட்சைகளை அப்பாவி நோயாளிகள் மேல், அவர்களது அனுமதியின்றி நடத்த  யார் அனுமதி வழங்கியது?  

இது போன்ற கொடுமைகள் எப்படி எளிதாக மறைக்கப்பட்டுவிடுகின்றன!  

அரசோ, அரசு அமைப்புகளோ, மீடியாக்களோ இதையெல்லாம் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கின்றன?

நாட்டின் முக்கிய பொறுப்புகள் எவ்வளவு கேவலமான, காசாசை பிடித்த, கல்மனம் கொண்ட கயவர்கள், சுயநலமிகளின்  கையில் சிக்கியுள்ளதை நினைக்கும்போது மிகவும் அச்சமாக இருக்கிறது.  எனது வேதனையையும், அச்சத்தையும் என் வலைப்பூவில் பதிவு செய்துவைக்கிறேன்.  அதனால் பெரிதாக எதுவும் நடக்கப் போவதில்லை, யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை என்று அறிந்தாலும் இதைச் செய்துவைக்கிறேன். 

நன்றி:  "சமஸ்"  மற்றும்   ஆனந்த  விகடன்.