31 ஜூலை, 2020

எளிமையில் இனிமை

படக்கவிதை


*புகை ரதம்* 

இத்தனை கரும்புகை
வெளிவரும் என்று
முன்பே தெரிந்திருந்தால்,
நாங்கள் நடந்தே வந்திருப்போம்.

கவிஞர் நெல்லையப்பன் 

சிரிப்புத்தான் வருகுதையா

ஈஷாவுக்கு அங்கீகாரம்!

நோக வைத்தவை

ஆயுசுக்கும் அரிப்பு தொல்லை இருக்காது கேரள வைத்தியர் ஆச்சார்யா ஜாய்



ஆயுசுக்கும் அரிப்பு தொல்லை இருக்காது 

கேரள வைத்தியர் ஆச்சார்யா ஜாய்

212,976 views•Jun 21, 2020

KAYAKALLPAM TV

503K subscribers

 

Grateful thanks to KAYAKALLPAM TV and YouTube.


செவிக்கின்பம் : திருவண்ணமலை பவா செல்லதுரை



திருவண்ணமலை பவா செல்லதுரை 

லேட்டஸ்ட் ஸ்பீச்

BAVA CHELLADURAI / VASAN TV

14,694 views•Mar 19, 2020

VASAN TV

1.5K subscribers

Grateful thanks to VASAN TV and YouTube.   




இன்றைய தத்துவம் : ஒழுங்கின்மை கோட்பாடு எனும் Chaos theory

இன்றைய தத்துவம் :
ஒழுங்கின்மை கோட்பாடு என்று அழைக்கப்படும்
Chaos theory


Chaos theory ஒழுங்கின்மை கோட்பாடு

--- அத்ரேயா

நம்முடைய அன்றாட வாழ்கையிலும் இத்தகைய சொல்லாடல்கள் எழுவதுண்டு. “அன்னைக்கு ஒரு நாள் எனக்கு இந்த ஹெல்ப் கிடைச்சிருக்கலனா, இன்னைக்கு என்னால இந்த வாழ்கைய வாழ்ந்துட்டு இருக்க முடியாது” என்ற நன்றி நவிழ்தல்களும், “இத அப்போவே சொல்லியிருந்தா பிரச்சினை இவ்வளவு மோசமா போயிருக்குமா?” என கொட்டித்தீர்த்தது கொள்ளும் ஆதங்கங்களும் ஒன்றை நமக்கு அடிக்கடி உணர்த்திக்கொண்டே இருக்கின்றது. அது ஏதெனில், ‘நம்வாழ்வில் நாம் என்றோ, எங்கோ செய்துவிட்ட காரியத்தின் எச்சமொன்று காலங்களை தாண்டி எதிர்பாராத பொழுதொன்றில் நம்மையோ, நம்மை சார்ந்தவர்களையோ, வெளிநபர் ஒருவரையே ஏதோ ஒரு விதத்தில் தாக்குதல் கூடும்’. புரிந்துகொள்வதற்கு கடினமான இந்த ஒழுங்கின்மை பிரபஞ்சத்தின் எல்லா செயல்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துகிறது. சிலந்திவலையை போன்றதொரு ஒழுங்கற்ற தொடர்புகளால் நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டுள்ளோம். இத்தொடர்பை விளங்குவதற்கு முன்வைக்கப்பட்ட விஞ்ஞான பூர்வமான விளக்கமே குழப்பவாதம். குழப்பவாதம் எனும் சொல்லே அதனை புரிந்துகொள்வதில் உள்ள கடினத்தை நமக்கு வெளிச்சமிட்டு காட்டிவிடுகிறது. எனினும் வாசகர்கள் சற்றே பொறுமையுடன் வாசித்தால் நிச்சயமாக குழப்பவாதம் குறித்தான அடிப்படை எண்ணக்கருவை விளங்கிக்கொள்ளமுடியும்.

குழப்பவாதம் /ஒழுங்கின்மை கோட்பாடு : விளக்கம்
குழப்பவாதம் என்பது ஒழுங்கின்மையையும், எதிர்பாராத விளைவுகளையும் தன்னகத்தே கொண்டது. எதிர்பாராததை எதிர்பார்க்க கற்றுக்கொடுக்கும் ஒரு விஞ்ஞான வாதம். பெரும்பாலான பாரம்பரிய விஞ்ஞானங்கள் விளைவுகளை முன்னரே யூகிக்கக்கூடிய ஈர்ப்பு விசை, மின்சாரம் மற்றும் இரசாயன பரிசோதனைகள் போன்றவை குறித்து விளங்கங்களை தந்தவண்ணம் இருக்கையில் குழப்பவாதம் மாத்திரம் வானிலை, பங்குச்சந்தை மற்றும் மூளையில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்கள் போன்ற அடிக்கடி மாற்றமடையும், முன்னறிவிப்பு செய்யமுடியாத விடயங்கள் பற்றிய ஆய்வுகளிலும், கணிப்புகளிலும் ஈடுபட்டுள்ள வண்ணம் காணப்படுகிறது. குழப்பங்களுக்கு என்றும் குறைவில்லாத கணிதத்துறையின் ஒரு விளக்கமே குழப்பவாதம் (ஒழுங்கின்மை வாதம்). இந்த நடத்தையானது சிக்கலான, அதீத உணர்திறன் மிக்க எந்தவொரு அமைப்பிலும் ஏற்படும்.அது கணினியாகவும் இருக்கலாம், சமூகமாகவும் இருக்கலாம். ஓர் சிறுமாற்றம் மொத்த தொகுதியையும் பாதிக்கும் வல்லமை கொண்டது. சிக்கலான வலையமைப்பை கொண்ட எந்தவொரு தொகுதியிலும் ஒரு சிறிய மாற்றமானது காலப்போக்கில் பாரிய வேறுபாட்டை உண்டுபண்ணும். இந்த காரணத்தால் தான் இத்துணை விஞ்ஞான வளர்ச்சியை அடைந்துவிட்ட பின்னரும் கூட, எதிர்வரும் ஒரு சிலநாட்களுக்கு மேலாக நம்மால் வானிலையை கணிக்க முடிவதில்லை. அதையும் மீறி மிகவும் துல்லியமான வானிலைத்தரவுகளை திரட்டிய பின்னர் கணிப்பீட்டை மேற்கொண்டாலும் கூட அதில் ஏற்படத்தக்க ஒருசிறிய மாற்றம் அனைத்து முயற்சியையும் பாழாக்கி விடும். எந்த ஒரு -சூப்பர் கம்ப்யூட்டராலும் கூட ஒரு சிறிய பட்டாம்பூச்சியின் படபடப்பு இந்த சூழலின் வானிலையில் ஏற்படுத்தக்கூடிய பாரிய மாற்றத்தை கணிக்கமுடியாது. இதுவே குழப்பவாத கோட்பாட்டில் மிகப்பிரபல்யம் மிக்க ‘பட்டாம்பூச்சி விளைவு’ (butterfly effect) எனப்படுகிறது.

வானிலை உள்ளிட்ட அமைப்புகளை நாம் பார்க்கும் முதல் தடவையில் அவைகள் சீரற்றவையாக இருப்பதாக எண்ணக்கூடும், ஆனால் குழப்பவாதத்தை பொறுத்தவரையில் எந்தவொரு அமைப்பும் இவ்வாறு எழுந்தமானமாக மாற்றமடைய முடியாது. ஆனால் போதுமான அளவுக்கு பொறுமையை செலுத்தி கவனித்தால் அந்த அமைப்புகளில் ஏற்படும் யூகிக்கமுடியாத ஒரு ஒழுங்குமுறை இருப்பதை காணலாம். ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்பதே குழப்பவாதத்தின் அடிநாதம். அதாவது எந்தவொரு அமைப்பிலும், அதன் செயற்பாட்டின் ஆரம்பத்தில் உருவாகும் சிறுதவறு அந்த மொத்த அமைப்பின் செயலையும் பாதிக்கும்.

குழப்பத்தின் தந்தை : எட்வர்ட் லாரன்ஸ்
குழப்பவாததிற்கு ஆதரவான கருத்தாக்கம் முதன்முதலில் 1880களில் ஹென்றி பொய்ன்க்ரே என்பவரால் முன்வைக்கப்பட்டது. எனினும் 1961 இல் வானியலாளரான எட்வர்ட் லாரன்ஸ் என்பவரே குழப்பவாதம் பற்றிய ஆழமான கண்டுபிடிப்பை உலகத்துக்கு தந்தார். லாரன்ஸ் புதிய கணினிகளை பயன்படுத்தி வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக முன்வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தற்போது சூழலில் நிலவும் வானிலை தரவுகளை உள்ளடக்கிய எண் தொகுதியை கணினியில் பதிவேற்றுவதன் மூலம் எதிர்வரும் சில நிமிடங்களுக்கான வானிலையை லாரன்ஸால் முன்னறிவிப்பு செய்யக்கூடியதாக இருந்தது. கணினி வழங்கிய வானிலை அறிக்கை சரியாக அமையத்தொடங்கியதும் தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கான வானிலை முன்னறிவிப்பை மேற்கொள்வது குறித்து லாரன்ஸ் நம்பிக்கை கொண்டார். இதற்காக லாரன்ஸ் முன்னறிவிப்பு செய்யப்பட்ட வானிலைக்குரிய எண் தொகுதியை மீண்டும் கணினியில் பதிவேற்றம் செய்து இன்னும் சில நிமிடங்களுக்கு பிறகு நிலவப்போகும் வானிலையை உய்த்தறிந்தார். இதே செயன்முறையை பலமுறைகள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதன் மூலம் வருங்காலத்தில் வரும் வானிலை மாற்றங்கள் குறித்து முன்னதாகவே அறிந்துகொள்ள முடியும் என எதிர்பார்த்தார் லாரன்ஸ். எதிர்வரும் சிலநிமிடங்களுக்கு என மட்டுப்பட்டிருந்த லாரன்ஸின் எதிர்வுகூறல் எதிர்வரும் சில நாட்கள்,
சில வாரங்கள் என மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்தது. நாட்கள் இங்ஙனமே சென்றவண்ணம் இருக்க ஒருநாள் லாரன்ஸ் தன்னுடைய கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்தார். நேரவிரயத்தை கவனத்தில் கொண்டு புதிதாக ஒரு கணிப்பை மேற்கொள்ள விரும்பாது, ஏற்கனவே செயற்பட்ட வண்ணம் இருந்த கணினி ஒன்றின் கணிப்பை எடுத்து அதனை புதிய கணிப்பின் ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்தினார். கணினியின் கணிப்புகளுக்கு போதுமான அவகாசத்தை வழங்கிவிட்டு, தானும் ஒரு காஃபி பிரேக்கை எடுத்துக்கொண்டு வேலைக்கு திரும்பிய லாரன்ஸ் ஒரு எதிர்பாராத விடயத்தைகண்டறிந்தார்.

கணினியின் புதிய கணிப்புகள் முந்தையதை போலவே இருந்தாலும் கூட, பின்னர் உருவான இரண்டு கணிப்புகள் மிகவும் வேகமாக அதிகளவு மாற்றமடையத்தொடங்கியது.
‘கணிப்பீட்டில் என்ன பிழைத்தது?’ என்று லாரன்ஸ் குழப்பமடைந்தார். கூடிய விரைவிலேயே அதற்கான காரணமும் லாரன்ஸின் கண்களுக்கு சிக்கின. ஆறு தசமதானங்களில் அச்சிடப்படவேண்டிய எண் கணிப்புகள், மூன்று தசமதானங்களுக்கு கணினியால் மட்டம் தட்டப்பட்டு இருந்தது. அதாவது இரண்டாவது பரிசோதனையில் 0.506 என்ற எண்ணை பயன்படுத்திய போது, உண்மையில் நடைபெற்ற முதல் பரிசோதனை அந்த எண் 0.506127 ஆக இருந்தது. இது ஆயிரத்தில் ஒரு பங்கு, எவ்வாறு பட்டாம்பூச்சியொன்றின் சிறகுகள் படபடத்து கொள்வது நம்முடைய முகத்தில் சிறியதாய் ஒரு காற்றோட்டத்தை உணரச்செய்கிறதோ அத்தகையதொரு சின்னஞ்சிறு வேறுபாடே இதுவும். ஆரம்பப்புள்ளிகள் இவ்வாறு மிகச்சிறிய வேறுப்பாட்டுடன் இருந்த போதிலும் கூட, அதை தொடர்ந்துவந்த கணிப்புகள் அவ்வாறு இருக்கவில்லை. இந்த சந்தர்ப்ப சூழ்நிலையே லாரன்ஸை குழப்பவாதத்தின் அடிப்படையை உணரச்செய்தது. குழப்பங்கள் எதுவுமின்றி நேர்த்தியாக செயல்படும் எந்தவொரு அமைப்பிலும் சிறியளவில் ஏற்படும் வேறுபாடுகள் சிறிய அளவு மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும் என லாரன்ஸ் தன்னுடைய முடிவை முன்வைத்தார். எனினும் காலப்போக்கில் லாரன்ஸின் சமன்பாடுகள் வளர்ச்சியடைந்து வந்த போது அதில் கணிசமான அளவு பிழைகள் உண்டாகின. அதாவது தற்போதைய காலநிலையை குறிக்க பயன்படும் எண் தொகுதியில் ஏற்படும் சிறியபிழை அச்சந்தர்பத்திற்கு வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம், ஆனால் அந்த பிழையான தரவை மீண்டும் மீண்டும் கணினியில் பதிவேற்றம் செய்து பெறப்படும் இறுதி முடிவானது மிகவும் பிழையானதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டது. லாரன்ஸ் இந்த விளைவை மிகச்சிறப்பான ஒப்புவமையுடன் விளங்கப்படுத்தினார். அதுவே ‘பட்டாம்பூச்சி விளைவு’ (butterfly effect). எட்வர்ட் லாரன்ஸின் வானியல் ஆய்வே குழப்பவாதத்திற்கு உயிரளித்தது. சின்னஞ்சிறு மாற்றங்களே பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதே குழப்பவாதத்தின் அடிப்படை.
குழப்பவாதத்திற்கான கோட்பாடுகள்
பட்டாம்பூச்சி விளைவு
குழப்பவாதத்தின் மிகப்பிரதான கோட்பாடு இந்த பட்டாம்பூச்சி விளைவு. பாரிஸ் நகரத்தில் ஒரு பட்டாம்பூச்சி தன்னுடைய சிறகுகளை படபடத்துக்கொள்வதன் விளைவாக அமெரிக்காவில் ஒரு ஹரிக்கேன் புயல் உருவாகக்கூடும். எல்லா ஹரிக்கேன் புயல்களுக்கும் பின்புலத்தில் ஒரு பட்டாம்பூச்சி இருப்பதாக நினைப்பது தவறு, அதே போல எல்லா பட்டாம்பூச்சியின் படபடப்பும் ஒரு புயலை உருவாக்குமெனில் தினமும் சூறாவளியாகதான் இருந்திருக்கும். எனவே தக்கதருணத்தில் சரியானதொரு இடத்தில் இருந்து ஏற்படும் ஒரு சிறிய பிழையே மொத்த விளைவையும் பாதிக்கும். ஆனால் அந்த சிறிய பிழை எது என்பது விளைவுகள் தோன்றிமறைந்த பின்னர்தான் கண்டறியப்படும். இந்த கணத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் இந்த ஐஐ செயலுமே வருங்காலத்தில் பாரிய விளைவை உண்டாக்கலாம். எனவே செய்யும் செயல் குறித்து விழிப்புடன் இருப்பது நலம்.



கணிக்கமுடியாத தன்மை
எந்தவொரு சிக்கலான அமைப்பினதும் ஆரம்பநிலை குறித்து 100% சரியான தரவுகளை நம்மால் பெறமுடியாது. இதனால் இந்த சிக்கலான அமைப்புகளின் எதிர்கால விளைவுகளையும் நம்மால் கணிக்க முடியாது. கணிப்புகளில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சிறுதவறும் மொத்த முடிவுகளிலும் பாரியமாற்றத்தை உண்டுபண்ணும். எனவே சிக்கலான அமைப்புகளை குறித்து நாம் கணிப்பது முற்றிலும் பயனற்றது. இன்றைய திகதியில் கூட உலகத்தில் எத்தனையோ பட்டாம்பூச்சிகள் சிறக்கடித்திருக்கும். ஆனால் அதனால் பின்னாட்களில் ஏற்படப்போகும் விளைவை இப்போது நம்மால் கணிக்கவே முடியாது.


முடிவாக...
இன்றைய திகதியில் ஒரு பல்தேசிய கம்பெனியும், அரசியல் தலைமையும் தங்களின் நலனுக்காக எடுக்கும் முடிவுகள் பொதுஜனத்தின் கழுத்துக்களை நெறிப்பதும், அடக்குமுறைகளுக்கு எதிராக எங்கேயோ ஒரு மூலையில் எழுப்பப்படும் வலுவான எதிர்ப்புக்குரல் ஒட்டுமொத்த உலகத்தையும் புதியதொரு பாதைக்கு அழைத்துச்செல்வதும் மேற்சொன்ன குழப்பவாதத்தின் வெளிப்பாடுகளே. சிறியதொரு மரம் நடுவதின் பயன்கூட இப்போது நமக்கு தெரியாது போகலாம், ஆனால் காலத்தின் வேகத்தில் அவை நிச்சயமாக பெரும் அர்த்தத்தை வழங்கும். சிரியதோ அல்லது பெரியதோ அளவுகள் என்பது எப்போதும் முக்கியம் பெறுவதில்லை. சமூகத்திற்கு நலம் பயக்கும் விடயம் ஒன்று இருக்குமெனில் தயக்கமின்றி அச்செயலை செய்யலாம். இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அவை உலகுக்கு நன்மை செய்யக்கூடும்.

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு
 

இ-பாஸ் கிடைக்காமல் அவதி!

இன்றைய சிந்தனைக்கு

எங்கள் தமிழகம்!



#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பதாயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம்  கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.

வாழிய பைந்தமிழ் நாடு...


நன்றி : ஆலவாயர் அருட்பணி மன்றம், புதிய தகவல்கள், முகநூல்.

குட்டிக்கதை : நாவிதரும் பண்டிதரும்



"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

 அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

 பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

 வேலையை ஆரம்பித்தார்...

'நாவிதர் கோபப்படுவார்' என்று  எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... 
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
            
"நல்ல சந்தேகங்க சாமி... 
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. 
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?" 

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு  சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
 
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம். 
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..." 

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். 

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" 
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். 

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?" 

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..."  என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

*"நம்முடைய அறிவும்...*
*புத்தியும்...*
*திறமையும்...*
*அதிகாரமும்...*
*அந்தஸ்தும்...*
*பொருளும்...*
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*

*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*


நன்றி : திரு எஸ்.கிங்ஸ்டன், முகநூல்.

இன்றைய தத்துவ மேதை : டேவிடு ஹ்யூம் (David Hume)

இன்றைய தத்துவ மேதை :
டேவிடு ஹ்யூம் (David Hume) 

(பிறப்பு: மே 7, 1711; இறப்பு: ஆகஸ்ட் 25, 1776) 

ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த மெய்யியலார், வரலாற்றாசிரியர், பொருளாதார அறிஞர், எழுத்தாளர் ஆவார். அவரது மெய்யியல் பாணி "புலனறிவு மெய்யியல்" (philosophical empiricism) மற்றும் "ஐயுறு மெய்யியல்" (philosophical skepticism) என்னும் வகையைச் சார்ந்தது. மேற்கத்திய மெய்யியலின் முதன்மையான அறிஞர்களுள் ஒருவராக யூம் கருதப்படுகிறார். மேலும், ஸ்காட்லாந்து அறிவொளி இயக்க வழிகாட்டியாகவும் அவர் போற்றப்படுகிறார். பிரித்தானிய புலனறிவு மெய்யியல் என்னும் சிந்தனை வகையாளராக, டேவிடு யூம், ஜான் லாக், ஜோர்ஜ் பார்க்லி, மற்றும் சில மெய்யியலார்களோடு இணைத்துக் குறிப்பிடப்படுவதுண்டு.

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு

கல்லிலே கலைவண்ணம்

மலரும் நினைவுகள்!

நாவில் எச்சில் ஊறுகிறது! 

மதுரையில் பள்ளியி்ல் பயின்ற காலம்.  நியூ சினிமா தியேட்டருக்கு அருகே சைக்கிளில் கூடை கட்டிக்கொண்டு வந்து மாங்காய் விற்பார் ஒருவர்.  

முதலில் ஒரு பாத்திரத்திலிருந்து தாளித்த கடுகு எண்ணெயுடன் இருக்கும்; அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு சிரட்டையில் விடுவார்.  அந்த ஸ்பூனாலேயே கடுகை நன்றாக மசித்துவிட்டு, 
பச்சரிசி மாங்காய்த் துண்டுகளை சிரட்டையில் அள்ளிப் போடுவார். அளவான மிளகாய்த்தூள்,  உப்பு.  ஒரு கரண்டியினால் நன்றாகக் கிளறுவாா்.  

ஒரு தாளில் அப்படியே கொட்டிக் கொடுப்பார். 

அதுபோன்ற மாங்காயை இன்று வரை சாப்பிட்டதேயில்லை. 

விகடன் சுஜாதா மலர்


படித்ததில் பிடித்தது என்று கேட்டிருப்பீர்கள். படித்ததில் தோய்ந்து, ரசித்து, மயங்கியது என்று கேள்விப்பட்டதுண்டா?

இதோ…

விகடன் சுஜாதா மலர். 

346 பக்கங்கள் முழுக்க்க்கக சுஜாதா… மட்டுமே. 

எனில் இப்போது சொல்லுங்கள். என் முதல் வரி சரிதானே? 

நாம், வாத்யாரின் போட்டோக்களைப் பார்த்திருக்கிறோம்… அவரின் கதைகளையும்  கட்டுரைகளையும் படித்துக்கொண்டே இருக்கிறோம். அவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். புனித யாத்திரை படித்திருக்கிறோம்.  ஆனால் அத்தனையையும் மொத்தமாக ஒரே இடத்தில்!!

யெஸ்! சூப்பர் மார்க்கெட்!

அட்டையே எட்டு சுவை விருந்து. விதவிதமான சுஜாதாக்கள் பாஸ்போர்ட் சைஸில் சிரிக்கிறார்கள். 

திருமதி சுஜாதாவின் நினைவுப்பகிர்வு, வாலி, மனுஷ்யபுத்திரன், இரா முருகன், சுஜாதா தேசிகன், அமுதவன் ஆகியோர் அவரைப் பற்றிப் பகிர்ந்த கட்டுரைகள்.. 

செம டைஜஸ்ட்.

பிரித்தபின் முடிக்காமல் கீழே வைத்தால் அவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று அர்த்தம்.  அவ்ளோ சுவாரஸ்யம்.

அவர் பாஷையில் சொன்னால் அச்சுக்கொட்றாப்பல கலர் போட்டோக்கள். இது வரை பலவற்றை நான் பார்த்ததேயில்லை. (கமலுடன் இருக்கும் போட்டோ ஒன்றில் நீல முழுக்கை ஷர்ட்டின் ‘கஃப்’பில் சின்னதாய் ஒரு நட்சத்திரம்.. சிம்பாலிக்?)

கறுப்பு வெள்ளையில் குழந்தை மாதிரி அடி மனசிலிருந்து சிரிக்கிறார் பாருங்கள் ஒரு சிரிப்பு… யம்மாடீ. 

அவருடைய திருமதியின் கருத்துக்களைக் ஊன்றி கவனித்தபோது … மிகுந்த புத்திசாலித்தனமும் பொறுமையும் தென்படுகின்றன. அதைவிட..  கணவரை என்னமாய்ப் புரிந்து வைத்திருக்கிறார்!

துவக்கக் கட்டுரை, கவிதை வடிவிலானது. ஆம்.. வாலி!

சில வரிகள்…

ஒரே ஊர்
ஒரே பேர்
அவனும் நானும் 
ரங்கராஜன் ஊரில்
ரங்கராஜன் பேரில்
எழுத்தார்வம் ஏற்பட்டபின்
அடியேன் இரண்டெழுத்திலும்
அவன் மூன்றெழுத்திலும் கரந்துறைய-
இருந்த இடத்தில் நின்றது 
இயற்பெயர். 
செகமனைத்தும் சென்றது 
செயற்பெயர்
•••
தமிழைக் கைப்பற்றினோம்
அடியேன்
மூன்றாம் தமிழ்மீதும்
அவன் முதல் தமிழ்மீதும்
கண் வைத்துக் காதல் முற்றினோம்!
•••
ஆஸ்பத்திரியில் என்ன கிழமை.. நாள்.. ஏது நடந்தது  ஒண்ணுமே தெரியலை. என் லைஃப்லேயிருந்து அந்த நாட்கள் காணாமல் போய்டுச்சு” மனுஷ்ய புத்திரனிடம் சுஜாதா சொன்னது. 

தமிழ் சினிமாவில் அதிகமாக திருட்டுக்கொடுத்த எழுத்தாளர் சுஜாதாதான்... காட்சிபூர்வமாக ஏதேனும் ஒரு பகுதியைச் சுடுவது சுலபமாக இருந்தது.. உதாரணமாக அவரது பதவிக்காக என்ற நாவல் பல பகுதிகளை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்” என்கிறார் இவர். 

தமிழ் இயக்குநர்கள் பலர், தமிழ் எழுத்தாளர்களை ஒரு கறிவேப்பிலையாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

“உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்தால் என்ன செய்வீர்கள்?” ‘திரும்பக் கேட்பதற்குள் செலவழித்துவிடுவேன்” சுஜாதாவின் பதில். 

புத்தகக் கண்காட்சிகளில் அவரை ஒரு முறை தொட்டுப் பார்க்கக் கைகள் நீளும் என்றும் “அவருக்கு இவ்ளோ வயசாயிடுச்சா…?! என்று அதிர்ச்சியுடன் பேசிக்கொள்வதையும் குறிப்பிடுகிறார். 
•••
இரா முருகனின் கட்டுரை பிரமா…..தம். நகைச்சுவையில் சுஜாதாவை ஒற்றி எடுத்த நடை. உருண்டு சிரிக்க வைக்கிறார். 

கல்யாணத்துக்கு சுஜாதா வராததால் ஹனிமூன் பெங்களூர்! சுஜாதாவுக்கு இந்தப்புத்தகங்களைக் கொடுக்கணும் என்று எடுத்து வைத்த போது அந்தப் பெண்-பெயரைக் கேட்டு மனைவியின் முகம் சூம்பியதை… கிராதகா என்று அவள் உறவினர் பார்த்ததை… எழுதி, பெங்களூரில் குல்கந்து சாப்பிட்டு அதே கையோடு சுஜாதா வீட்டு அழைப்பு மணியடித்தபோது ‘மணி சத்தத்தோடு சொச்ச குல்கந்து வாசமும் உள்ளே ஓங்கி அடித்திருக்கும்’ என்று சொன்னது முருகன் டச். 

சுஜாதா என்பது ‘சார்’ என்றவுடன் இவர் மனைவியின் முகம் மலர்ந்தது கற்பனைதான் என்றாலும் சுவாரஸ்யம்தான். 

முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பாளர் இரண்டாயிரம் கைமாற்றுக் கேட்க, முருகன் பி எஃப் லோன் போட்டுக்கொடுக்க (கஸின் மேரேஜ்) இவரையும் அழைத்துக்கொண்டு அந்தப் பதிப்பாளர், சுஜாதா வீட்டுக்குப்போக… ஆயிரம் ரூபாயை (பிளாஸ்டிக்) தட்டில் வைத்துக் கொடுத்த நிகழ்ச்சியை இதைவிட சுவையாய் எழுத முடியாது. அதன் கிளைமாக்ஸை இதைவிட சுவாரஸ்யமாய்க் கொடுக்க முடியாது. 

மார்ச் மாதம் என்பதால் ஆபீசில் இன்கம் டாக்ஸுக்குப் பிடித்ததால் ஆயிரம் ரூபாய் நிதி மாதிரி” என்று சுஜாதா சொன்ன நெகிழ்ச்சி.. 

‘என் சிறுகதைத் தொகுப்பு எப்போ வரணுமோ  அப்போ வரட்டும். இந்த சந்தோஷமே எதேஷ்டம்” என்று முருகன் சொன்ன நெகிழ்ச்சி..
வேறென்ன வேண்டும்!!

•••

சுஜாதா தேசிகன்.. 

“எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு…” என்று வேண்டிய சுஜாதாவை அழைத்துக்கொண்டு போன அனுபவத்தை.. டிக்கெட் பரிசோதகர் “இவர்தானே மிஸ்டர் சுஜாதா” என்று கேட்ட இன்டரெஸ்டிங் ஆரம்பத்துடன் அண்ணனும் தம்பியும் கோவிலில் பேசிக்கொண்டவற்றை எழுதி.. அவரின் தளர்ச்சிக்கு வருந்தி..  

“இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?”

“சிவாஜி படத்தின் ப்ரிவ்யூவுக்கு ஒரு டிக்கெட்” என்று சொன்ன தேசிகன் ஏற்கனவே ஒத்திகை பார்த்திருப்பாரோ?

கட்டுரையை இவர் முடித்திருக்கும் விதத்தில் கண்கள் நனைவது உறுதி (ஏற்கனவே படித்திருந்தால்தான் என்ன? எத்தனை முறை படித்தாலும்தான் என்ன? மீண்டும்+ படித்தேன்!)
•••
அமுதவன் கட்டுரை அற்புதம். நான் இரண்டு முறை படித்ததோடு என் கணவர் படிக்கும்போது கொக்கு மாதிரி எட்டிப் பார்த்து மூன்றாம் முறை படித்தேன். அதே இடங்களில் சிரிப்பு வந்தது.

கமல ஹாசன் சுஜாதாவைச் சந்திக்க விரும்பியதால்  அமுதவன் அதற்கு ஏற்பாடு செய்ததை எவ்வ்வ்ளோ சுவையாய்ச் சொல்லியிருக்கிறார். அதற்கு எத்தனை தடைகள். 

இந்தக் கட்டுரையில் எம் எஸ் பெருமாள் சாரும் வருகிறார். 

சுஜாதாவைச் சந்திக்க கமல் வெறித்தனமான ஆவல் காட்டியிருக்கிறார்!

கமல் வீட்டு வாசலில் அமுதவன்+ அகிலன் கண்ணன் காத்திருந்ததை... அங்கே சுஜாதா மாமனாரின் ஆஸ்டின் காரில் வந்ததை.. சரியாக வாசலில் வந்து  கார் நின்றபோது, “காம்பவுண்டுக்குள் நிறுத்த இடமிருக்காய்யா” என்று கேட்டதை.. ஸ்டார்ட் செய்தபோது மக்கர் செய்து அது நின்றுவிட்டதை.. சங்கடத்துடன் அதைத் தள்ளிவிடுமாறு மெல்க்யூவை அவர் கேட்டதை (அமுதவனை மெல்க்யூ என்று இயற்பெயர் சொல்லி அழைக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா.. மற்றொருவர் … கிகி) 

மெல்க்யூவும்  அ.கண்ணனும் சுஜாதாவின் (மாமனாரின்) காரைத் தள்ளியதை.. பலம் போதாமல் அது இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்ததை.. அப்போது அம்பாசிடரில் அங்கு வந்த கமல் ஓ..டி வந்து காரைத் தள்ளியதை, வாத்யார் பதறியதை… “பதற்றத்தில் எங்கயாவது பிரேக்கை கீக்கை அழுத்திப்புடாதீங்க” என்று  கமல் ஜோக் அடித்ததை… கமல் அறையில் அலங்காரப் பொருளாக நிஜ மண்டையோடு வைத்திருந்ததை.. க்ளாஸாய் வி(வ)ரித்திருக்கிறார் அமுதவன். 

கட்டுரையின் உச்சக்கட்டம்.. 

திரும்பிப் போகும்போது தானும் வரவா என்று கமல் கேட்க மகாபலிபுரத்திலிருந்து இந்த சந்திப்புக்காக விரைந்து வந்த கமல் மறுபடி மகாபலிபுரம் ஷூட்டிங் போக வேண்டுமே என்று சுஜாதா தயங்க.. “வழியில் கார் நின்னுடுச்சுன்னா தள்ளணும் இல்லையா” என்று கமலின் குறும்புக் கேள்வியுடன் கட்டுரை முடிகிறது.

•••

ஒரு ஆன்மிகப் பயணத்தை இப்படியுமா எழுத முடியும்? அழுகை.. சிரிப்பு.. திகில் என்று நவரசக்கட்டுரை அது. 

ஆளை விடுங்க. 346 பக்கத்தை ஒரு பதிவுக்காக இந்த அளவுதான் சுருக்க முடியும். நீங்களே வாங்கிப் படித்து பிரமித்துக்கொள்ளுங்கள்.


நன்றி : Ms வேதா கோபாலன், விகடன் மற்றும் முகநூல்.

கருத்து மேடை : ஈ-பாஸ்

ஈ-பாஸ் சிக்கல்கள் 

நடந்து முடிந்த - நடந்துகொண்டிருக்கிற நடைபெறவிருக்கிற லாக்-டவுன்களின் மிகச் சிக்கலான கட்டுப்பாடு ஈ-பாஸ் நடைமுறைதான். இந்த விஞ்ஞான யுகத்தில் ஒரே மாவட்டத்துக்குள் மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் அமைவது இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் நடிகர் ரஜினிகாந்த்க்கே சாத்தியமில்லை எனும்போது தினமும் நூறு இருநூறு மட்டும் சம்பாதிக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கு எப்படிச் சாத்தியமாகும்? அதுவும் மாவட்ட எல்லைகளின் அருகில் வசிப்பவர்களுக்கு இது ஏறத்தாழக் குடும்பத்துடன் தற்கொலை முடிவை நோக்கித் தூண்டும் கட்டாயம்தான்.

இந்தக் கொடூரத்தில் பொதுப்போக்குவரத்தும்        ஈ-பாஸ் முறையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். தேவதானப்பட்டி எனும் ஊர் தேனி-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் வத்தலக்குண்டு எனும் நகரம். மணிக்கொடி கால எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் ஊர். இது திண்டுக்கல் மாவட்டத்துடன் சேர்ந்தது. தினமும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் காய்கறிகள் உட்பட பலவித அத்தியாவசியப் பொருட்களை அதிகம் செலவில்லாமல் பேருந்துகள் மூலம் தேவதானப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு கொண்டுசென்று வியாபாரம் செய்து 'அன்றாடம் காய்ச்சி' வந்தார்கள். 

இப்போது பேருந்தும் இல்லை, ஈ-பாஸ் கட்டாயம் வேறு. அவர்களின் வீட்டு அடுப்புகளில் பாஸ் எதுவும் எடுக்காமலேயே ஈக்கள் ஒருவேளை உட்கார்ந்திருக்கலாம். இதில் 100 வியாபாரிகள் என்பது 100 குடும்பங்கள். மொத்தம் சுமார் 500 பேர் பாதிக்கப்படலாம். இதில் vice-versaவாக வத்தலக்குண்டுவிலிருந்து அருகாமைக் கிராமங்களுக்குச் சென்று வியாபாரம் செய்யும் சிறு குறு வியாபாரிகள் 100 பேர் என்று எடுத்துக்கொண்டால் அந்தப் பக்கம் 500 பேர் பாதிப்பு. மொத்தம் 1000. இந்த நிலைதான் எல்லா மாவட்ட எல்லைகளுக்கும். சென்னை, கோவை போன்ற பெரு மாவட்ட எல்லைகளில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்காகும். 

பாண்டிச்சேரியையும் சமூகம் நமது மாவட்டங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறது. அதையும் சேர்த்தால் 40 மாவட்டங்கள். 40000 பேரின் சோற்றில் அடி. இது வியாபாரிகள் கணக்கு மட்டும்தான். விவசாய, தொழில் தேவைகள், வேலைக்குச் செல்பவர்களின் எஸ் டி டி தனி. ஜூனில் பொதுப்போக்குவரத்துப் பாதி அளவு இயக்கப்பட்டபோது இவர்கள் அரை வயிறாவது சாப்பிட்டார்கள். ஜூலையில் மறுபடியும் வயிற்றடி விழுந்தது . 'கண்ணிழந்தான் பெற்றிழந்தான்' என்பது போல இது பிழைப்பைக் கொடுத்துப் பிடுங்கியதற்குச் சமம். 

இதோடு மட்டுமல்லாமல் ஈ-பாஸ் குளறுபடிகள் கொரோனா எண்ணிக்கையை விடவும் கூத்தாட்டம் போட்டன.  முடிந்த பயணத்திற்குப் பாஸ் எடுப்பது முதல் போலிப் பாஸ்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப பாஸ் யூஸ் ஆனது. குழந்தைகளை வண்புணர்வு செய்த பேடிகள் முதல் சாத்தான் குளம் கொடூரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வரை பலர் ஈ-பாஸ் இல்லாமலேயே எந்த மாவட்டங்களுக்கும் சென்று அங்கு பிடிபட்டார்கள். ஆனால் தக்காளி கூறு ஐந்து ரூபாய் என்று விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்த மூதாட்டிகளைக் குடிசைக்குள் பட்டினியோடு முடக்கியது ஈ-பாஸ் நடைமுறை.

ஒவ்வொரு லாக்-டவுன் நீட்டிப்பிலும் சென்னையிலிருந்து பல லட்சக் கணக்கானோர் இரு சக்கரவாகனத்திலேயே கூடக் குடும்பத்துடன் சொந்த ஊரை நோக்கிப் பயணிக்க, வட மாநிலத் தொழிலாளர்கள் நாட்டின் பல பாகங்களில் நடந்தே ஊர் சென்றார்கள். இன்றைக்கும் பெரியகுளம் - தேனி ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. நகரங்களுக்குள் ஆட்டோ, டாக்ஸிக்கள் கூட்டமாகப் பயணிக்கின்றன. ஞாயிறு அசைவத்திற்குக் கட்டாய ஊரடங்கு விடப்பட்டதால் சனிக்கிழமை மதியம், மாலைகளில் நகரப் பகுதிகள் பொக்குவரத்து நெரிசலில் கிட்னி பிதுங்கி முழிக்கின்றன. 

ஒவ்வொரு கடை வீதியும் ரங்க நாதன் வீதியாகி கொரோனாவின் விதியானது. டாஸ்மாக் மகாதிமித்யம் நான் சொல்லி சமூகத்திற்குத் தெரிய வேண்டியதில்லை.  இதில் பொதுப் போக்குவரத்தை மட்டும் முடக்கி யாது உபயோகம்? சில பல கோவில்களில் கும்பாபிஷேகம் உட்பட பல வித வழிபாடுகள் பெரும் பக்தர் கூட்டத்துடன் நடந்தது கோவில் சாதனை மற்றும் கோவிட் சாதனை. திருமலைக் கோவிலில் அர்ச்சகர், பணியாளர் உட்பட்ட 200 பேருக்குக் கொரோனா என்றால் அங்கு வந்து வழிபட்டுச் சென்ற லட்சக்கணக்கான பக்தர்களில் எத்தனை பேருக்குத் தொற்றுப் பரவி இருந்திருக்கும்?

சரி, பிறகு என்ன செய்யலாம்? பொதுப் போக்குவரத்தையும் திறந்துவிட்டுக் கொரோனா வளர்ச்சித் திட்டம் தீட்டலாமா? என்று நீங்கள் கேட்பீர்கள். அதுதான் இந்தப் பேரிடர் காலத்தின் மிக முக்கியச் சிக்கல். அன்றாடச் சோற்றுக்கும் வழி வேண்டும். தீயாய்ப் பரவும் கொரோனாவுடனும் அன்றாடம் மன்றாட வேண்டும் என்னும் இமாலாய முயற்சியில் கதகளி ஆடுகின்றன அரசுகள். ஆனால் சுமார் நான்கரை மாத காலம் இத்தனை கட்டுப்பாடுகள் போட்டும் கொரோனா கட்டுப்படவில்லை என்பது கட்டுக்கதை இல்லை. 

இப்போதுதான் 'அனைவருக்கும் மாஸ்க்' என்ற ரேஷன் கடைக் கொள்கைக்கே வந்துள்ளோம். ஆனால் தனி ஒழுக்கம் இல்லாதவர்கள் இந்த மாஸ்க்கையும் அணியப் போவதில்லை என்பது வேறு விஷயம். இதே போல வசதி இல்லாதவர்களுக்கு இதே ரேஷன் கடைகள் மூலமாகவே நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கலாம்.  சந்தையில் ஒரு ரூபாய் மதிப்பு முதல் தரமான மாத்திரைகள் கிடைக்கின்றன. அரசே மொத்தக் கொள்முதல் செய்யும்பொழுது விலை இன்னும் குறையும். வசதி படைத்தவர்கள் இதையும் வாங்க ஆயிரம் ரூபாய்க்கு வரிசையில் நின்றதைப் போல முனைப்புக் காட்டாமல் இருந்தால் அது சாலச் சிறப்பு. 

இதே போல ஈ-பாஸ்களையும், வாகனங்களையும் சோதனைக்கு உள்ளாக்கும் திருவாளர் திருவிளையாடல் காவல் துறையை கொரோனாத் தடுப்புச் சுகாதார முறைகள், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் பஞ்சாயத்துகளைக் கவனிக்க வைக்கலாம். உத்தரவுக்குப் பணியாத அலட்சிய பொது ஜனம் உதைக்குப் பணிந்தால் கொரோனாவின் ஓட்டம் குறையும். மற்ற கட்டுப்பாடுகள், நோய்த் தடுப்பு வாழ்வு முறைகளைப் பொது ஜனமே முன் வந்து கடைப்பிடித்தால் நிச்சயம் கொரோனா குறட்டை விடும். நமக்கு வெகு காலம் முன்பாகவே பாதிக்கப்பட்ட நாடுகளில் இப்போது க்ரிக்கெட் மேட்ச்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய செய்தி - பார்வையாளர்கள் கட்டுப்பாடு இருந்தாலும். துபாயிலும் செப்டம்பரில் ஐ பி எல் துவங்கவிருக்கிறது. நாம் நான்-வெஜ் வாங்க மட்டும் முண்டியடிக்கிறோம்.

பட்டினிச் சாவுகளைத் தவிர்க்கவாவது  பொருத்தமான சமயோசிதமான துணிச்சலான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம். அந்த சமயோசித முடிவு என்பது நிச்சயம் ஈ-பாஸ் முறையோ அல்லது நூறு சதவீதம் பொதுப் போக்குவரத்தை முடக்குவதோ அல்ல. ஏனென்றால் மந்திரிகளுக்குக் கிடைக்கும் இன்னோவாக்களும் ஆன்மீகச் செம்மலுக்குக் கிடைக்கும் லம்போகினிக்களும் நமக்குக் எப்போதும் கிடைக்கப் போவதே இல்லை. ஜெயவிலாஸ் பஸ்ஸே ஜெயம். அரசுப் பேருந்தே அனுதினம்.

மீண்டு வருவோம்.

#உளறுவதெல்லாம_உண்மை

பரிமேலழகன் பரி

நன்றி :  திரு.பரிமேலழகன் பரி,  திரு ஜமீல் ஜலாலுதீன், புதிய தகவல்கள், முகநூல்.
 

வாவ்! படங்கள்

சுற்றுச்சூழல்

சட்டசபையில் முத்துலட்சுமி ரெட்டியின் கேள்வி!


சட்டசபையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் ஒரு தில்லான கேள்வி!!!

தமிழக சட்டசபை வரலாற்றில் இதற்கு முன்பும் பின்பும் இதை விட வீரியமிக்க கேள்வி எப்போதாவது எழுப்பப்பட்டிருக்குமா? எனில் அரசியல் அறியாதவர்கள், சபை நடப்பை உற்றுக் கவனிக்காதவர்கள் எவருக்கும் பதில் சொல்வது சற்றுக் கடினமே. ஆயினும் ஒரு பெண்ணாக இவரது கேள்வியானது, கேள்வி கேட்கும் உத்வேகம்  கொண்ட அத்தனை பெண்களுக்கும் மேற்கோள் காட்டத்தக்க வகையில் ஒரு முன்மாதிரி வினா என்று சொன்னால் மிகையில்லை.

இன்றைக்கு ஒழிக்கப்பட்டு விட்ட 'தேவதாசி முறை' பற்றி சட்டசபையில் அன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் முனைப்புடன் செயல் பட்டுக் கொண்டிருக்கும் "பொட்டுக் கட்டுதல்" எனும் வழக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி இந்தியாவின் முதல் பெண் சட்ட மன்ற  உறுப்பினர் எனும் பெருமை பெற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டசபையில் குரல் எழுப்பினர். அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சத்யமூர்த்தி அவர்கள் "தேவதாசி முறை என்பது கடவுளுக்குத் தொண்டு செய்வதற்காக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரப்படும் ஒரு கோயில் சார்ந்த நடைமுறை அதை ஏன் தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்?" என்று பதில் கேள்வி எழுப்பினார். அதற்கு முத்துலட்சுமி ரெட்டி அளித்த பதிலில் காந்தாரி மிளகாயை விடக் காரம் அதிகமிருந்தது.

’அப்படி கடவுள் சார்ந்த புனிதமான ஒரு நடைமுறையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள் மட்டும் தான் ஈடுபடுத்தப்படவேண்டுமா? ஏன் உயர்சாதி பெண்களும் இந்த நடைமுறையில் ஈடுபடுத்தப் படலாமே’ என்றார். இந்த பதிலில் சட்டசபையே அதிர்ந்து சில நிமிடங்கள் இயங்க மறந்தது. அவரது வீரியமிகுந்த பல சட்டசபை விவாதங்களின் பின் தான் குறிப்பிடத்தக்க அந்த பழங்கால கொடுமை அடுத்த தலைமுறைப் பெண்களை அணுகாமல் அகன்றது. இது பாதிக்கப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை வரலாற்றுப் புகழ் மிக்க சமுதாய புரட்சி. இதற்கு வித்திட்டவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.

இதில் கவனிக்கப்பட   வேண்டிய விஷயம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் தாயார் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். தந்தை பிராமண குலத்தவர். இசை வேளாளர் உள்ளிட்ட மேலும் பல பிற்படுத்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த  பெண்கள் 'பொட்டுக்கட்டும்  வழக்கத்தால் அன்று பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். பெண்களின் சுய விருப்பமின்றி வெகு இளமையிலேயே அவர்கள் கோயில்களின் பெயரால் தெய்வத்தின் பெயரால் பொட்டுக் கட்டப்பட்டு புனிதமான கோயில் காரியங்களில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறிக்கொண்டு பெரும்பாலும் அதிகார வர்க்கத்தினரின் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்  கொண்டிருந்தனர். இதைத் தடுக்க  நிச்சயம் ஒரு சட்டம் வர வேண்டும். அதற்கு நிச்சயம் தொடர்ந்த போராட்டம் வேண்டும். அதை யார் செய்வது? சமூகச் சீர்திருத்தத்திற்காக எவர் போராட வரினும் அது பாராட்டுதலுக்குரியதே. ஆயினும் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களே நேரடியாகக் களத்தில் இறங்கினால் போராட்டம் இன்னும் வலுவாக இருக்கும் அதற்கான பலனும் உறுதியானதாக இருக்கும் என்பதற்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சமூகப் போராட்டம்  ஒரு மிகச் சிறந்த உதாரணம்

 ஜூலை 30. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாள். தேவதாசி முறை ஒழிப்பு  மட்டும் அல்ல அநாதரவான பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காக்க "அவ்வை இல்லம் " அமைத்தது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அடையாறு புற்று நோய் மையம் அமைத்தது, இப்படி அவரது ஒவ்வொரு சமூகப் பங்களிப்பும் இன்றைய பெண்கள் வியத்தகு உதாரணம் கொள்ளத் தக்கவையே! இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் இவை மட்டுமல்லாது அவரது ஒட்டுமொத்த சமூக சீர்திருத்தச் சாதனைகளுக்காக இந்திய அரசு 1952 ஆம் வருடம் 'பத்ம பூஷன்' விருது அளித்து கௌரவித்தது.

இன்று அவரது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்தல் நமது கடமை


நன்றி : திரு பிரபாகரன், புதிய தகவல்கள், முகநூல்.

*கொரோனாவுக்கு மாவட்டங்களில் சித்த வைத்தியம்*


*கொரோனாவுக்கு மாவட்டங்களில் சித்த வைத்தியம்*

கொரானாவுக்கு சித்த மருத்துவத்தின் மூலம்   முழுமையாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெற விரும்புவோர்  கீழ்காணும்  தமிழக சிறப்பு சித்த மருத்துவ
மையங்களை தங்களின் பரிசோதனை விபரங்களுடன் அணுகலாம்.

சென்னை மாவட்டம் :
1. Dr.அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி [225]
வியாசர்பாடி, சென்னை-600 039.

2. ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரி [425]
54, கலைஞர் தெரு, காவேரிரங்கன் நகர்,
சாளிகிராமம், சென்னை-600 093.

வேலூர் மாவட்டம் :
3. தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி [100]
தொரப்பாடி.

திருப்பத்தூர் மாவட்டம் :
4. அரசு பாலிடெக்னிக் கல்லூரி [50]
 அக்கரகாரம்,நாட்ரம்பள்ளி (அருகில்)

ராணிப்பேட்டை மாவட்டம் :
5. ஆற்காடு மஹாலட்சுமி கல்லூரி [70]
 ராணிப்பேட்டை.

திருவண்ணாமலை மாவட்டம் :
6. பழைய அரசு மருத்துவமனை [60]
திருவண்ணாமலை.

7. அண்ணா யுனிவர்சிட்டி [80]
 தச்சூர்,ஆரணி தாலுக்கா.

கோவை மாவட்டம்
 8. கொடிசியா காம்ப்ளக்ஸ் | Codissia Complex [28]
 அவினாசி ரோடு.

தேனி மாவட்டம் :
9. மேரி மாதா ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் [100]
பெரியகுளம் (அருகில்).

தென்காசி மாவட்டம் :
10. நல்லமணி யாதவா கலை & அறிவியல் கல்லூரி [150]
ஆயக்குடி.

விழுப்புரம் மாவட்டம் :
11. அரசு சட்டக்கல்லூரி மகளிர் விடுதி [155]
பெரும்பாக்கம்.

நெல்லை மாவட்டம் :
12. அரசு சித்தமருத்துவக் கல்லூரி [200]
  பாளையங்கோட்டை.

13. SCAD காலேஜ் [200]
  பொன்னாகுடி. 
  
சிவகங்கை மாவட்டம் :
14. ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை [100]
 திருப்பத்தூர்.

குறிப்பு : தங்களின் மாவட்டங்களில் சித்தமருத்துவ மையங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் மேற்கண்ட , அருகிலுள்ள, மாவட்ட  மையங்களில் சிகிச்சை பெறலாம். மொத்தமுள்ள படுக்கை வசதிகள் ['அடைப்புக்குறிக்குள்'] கொடுக்கப்பட்டுள்ளது.


நன்றி : பெரிய நெசலூர் கணேஷ்ராம், படித்ததில் ரசித்தது, முகநூல்.

30 ஜூலை, 2020

இன்றைய சிந்தனைக்கு

கொரோனாவிற்கு இலவச ஹோமியோபதி மருந்து!

Dr கலாமின் கட்டளைகள் !

சீரிய சொற்பொழிவுகள்!

சிரிக்கவும் சிந்திக்கவும்

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : ரத்தன் டாடா


ரத்தன் டாடா:

கடிகாரம் முதல் கார் வரை வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா..!  - பொக்கிஷ பகிர்வு

உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்..! - இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா.

நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா சன்ஸின் தலைவர் ரத்தன் டாடா. அவரைப் பற்றிய சிறப்புகள் இதோ..

1937ல் சூரத் நகரில் நாவல் டாடா-சுனூ தன்மதியருக்குப் பிறந்த டாடா,  தனது நிர்வாக மேல்படிப்பை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் 1975ல் முடித்தார். அவர் அங்கு மேற்படிப்பை முடித்தவுடனேயே மிகப்பெரிய நிறுவமான IBMல் அவருக்கு வேலை கிட்டியது. ஆனால் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தாய்நாட்டிற்கே திரும்பினார்.

தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார்.

30 வருடம் டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்காற்றிய ரத்தன் டாடா, 1991ல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நடந்ததெல்லாம் உலகமே வியந்த அசுர வளர்ச்சி.

உலகையே தன்வயப்படுத்தினார்..

அதுவரை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த டாடா குழுமத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். 'சிறிய முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்காது' என்பார் டாடா. 'எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்' என்று கூறுவார். அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளை கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறையிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம்.

ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. இது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்திய கார்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தினார்.

கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க,  உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ். உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க,  உலக சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம்.

தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இவரது பங்கீட்டைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருதும்,  பத்ம விபூஷண் விருதும் வழங்கி கௌரவித்தது.

உலகை உறையவைத்த நானோ

அனைத்து முன்னனி கார் நிறுவனங்களும் கோடிகளில் கார்களைத் தயாரித்துக்கொண்டிருக்க, மாற்றுத் திசையில் பயணித்தார் டாடா. சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது.

தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். விலை முன்பு  சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்), உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ.

விலை குறைவு என்றாலும் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்கு தலை வணங்கின.

பாகிஸ்தானியர் முகத்தில் அறைந்தார்

மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தாஜ் ஹோட்டல்களும் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானவையே. அவற்றை சரிசெய்வதற்காக பொது டெண்டர் விடப்பட்டபோது பாகிஸ்தானைச் சார்ந்த இரு பெரும் நிறுவனங்கள் அவற்றிற்கு விண்ணப்பித்திருந்தன.

அந்த டெண்டெரை தனதாக்கும் பொருட்டு அந்நிறுவனங்களைச் சார்ந்த இருவர் டாடாவைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். பாகிஸ்தானியர்கள் என்பதால் அவர்களை வெகுநேரம் காக்கவைத்த டாடா, பின்னர் அப்பாயின்ட்மென்ட் இன்றி யாரையும் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார். அவர்கள் இருவரும் அன்றைய தேதியில் அமைச்சராய் இருந்த ஆனந்த் ஷர்மாவை அணுக, டாடாவிடம் இதுபற்றி பேசியுள்ளார் அமைச்சர்.

அதற்கு டாடா அளித்த பதில் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும். 'உங்களுக்கு வேண்டுமானால் இது கூசாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அது அவமானம்' என்று டாடா கூற, அதிர்ந்து போனாராம் அமைச்சர்.

ஒரு சமயம் டாடா சுமோ கார்கள் வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு,  மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா நிறுவனத்திற்குத் தர, ‘பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது’ என்று ஆர்டரை நிராகரித்தார் டாடா. பணம்தான் முக்கியம் என்று பலரும் அறத்தை மீறிச் செயல்பட்டாலும் பணத்தை விட தாய்நாடுதான் தனக்கு முக்கியம் என்று கருதுபவர் டாடா.

இளைஞர்கள் பலருக்கும் தொழில் நுணுக்கங்களை பயிற்று வருகிறார். சரியாக 4 ஆண்டுகள் முன்பு, இதே நாளில் டாடா குழும தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார் ரத்தன் டாடா. மிகவும் சாந்தமான மனிதர். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கும் தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளைச் செய்து வருகிறார். எதையும் நேரடியாகப் பேசுவார் டாடா.

'நீங்கள் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை ?' எனக் கேட்டதற்கு '4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேராமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளது' என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் டாடா. ஆனால் அவையெல்லாம் அவரது சிந்தனையை சிதறடிக்கவில்லை. அவரது தொலைநோக்குப் பார்வைகளை சிதைக்கவில்லை.

முன்னற்றம் என்பதை மட்டும் மூச்சாய்க் கொண்டு, இன்று வரை அம்முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் டாடா. உலக சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்ததை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும்,  ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது.  

'என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்' என்பார் ரத்தன் டாடா.

அவரது சிறகுகள் இன்னும் பல்லாண்டு காலம் பல இடங்களில் விரிந்து பறக்கட்டும்..!

*தமிழ்க் களஞ்சியம்* -  http://bit.ly/2jsKWgA


நன்றி : தமிழ்க் களஞ்சியம் மற்றும் திரு அரவிந்தன் குமார், படித்ததில் ரசித்தது, முகநூல்.

கல்லிலே கலைவண்ணம்

சதுரகிரியின் ஆச்சரியங்கள்!


சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும். 

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும். 

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார். 

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் ” கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும். 

உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.. 

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்
சித்தர்களின்குரல்...


நன்றி : திரு.முருகவேல் குட்டிவேல், படித்ததில் ரசித்தது, முகநூல்.

மெய்யடக்கப் பயிற்சி

சக்தி விகடன் மற்றும் உலக சித்தக் கலைகள் ஆய்வு  மையம் இணைந்து வழங்கும் யோகக் கலைகள் - சிறப்பு மெய்யடக்க மெய்யடக்கப் பயிற்சிகள் ( கட்டண ஆன்லைன் வகுப்பு -ஆகஸ்டு 2 ஞாயிறன்று காலை 7 மணிக்கு). 

பிரபஞ்ச சக்தியை ஈர்த்து உடலின் நாடி மையங்களைச் செம்மைப்படுத்தும் இந்தப் பயிற்சியில் நீங்களும் கலந்துகொள்ளலாம். முன்பதிவுக்கு: 

Grateful thanks to :
https://store.vikatan.com/events/69-yoga-training/

சிரித்து வாழவேண்டும்

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்..

இதைக் கண்டு பலர் வியந்தனர்.. இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது..

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா..? 

அவ்விடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் *400 ரூபாயா? அல்லது 4000, 40,000.. அப்படி ஏதாவதா?* என்று..

*400 ரூபாய்* மட்டுமே என்றான்..

வரிசையில் ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்..

அங்கே ஒருவன் நாற்காலிகளை விற்றுக் கொண்டு இருந்தான்..

*"வாங்க சார்...வாங்க சார்... ஸ்டராங்கான நாற்காலி சார்.. சீக்கிரத்துல உடையாது சார்..*
*400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்.."*
என்று கூவினான்..


*நீதி :*
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது..

நல்லா யோசிக்கணும்..?

சாத்தியமான்னு பார்க்கணும்..?

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது..

*ஆசையே துன்பத்திற்கு காரணம்*

நலக்குறிப்புகள்

நன்றி : திரு ஸ்ரீதர் A, நாட்டு மருந்து, முகநூல்.

நூல்மயம்

பொன். செந்தில்குமார் எழுதிய 'இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை'... ரூ.135 மதிப்புள்ள இ-புக் முற்றிலும் இலவசமாக!

இலவசமாகப் படிக்கலாம் இ-புக்! + விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம் 

Install & Register Vikatan App Get Free E-book click here https://vikatanapp.page.link/IyarkaiVelaanmai

அதிர்ச்சித் தகவல்கள்!

#JUSTIN | ஊரடங்கில் மட்டும் பிரசவத்தின்போது 91 கர்ப்பிணிகள் உயிரிழப்பு!

நன்றி :
www.ns7.tv | #Lockdown | #PregnantLady | #Covid19

Grateful thanks to News 7 Tamil & Facebook.


கருத்து மேடை : வாழ்க்கை எப்படியெல்லாம் ....

#வாழ்க்கை..

மனித வாழ்வில்
எண்ணில் அடங்கா ஆசைகளை
எண்ணி எண்ணி வடிவமைத்தாலும்
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றியே செல்கின்றது
வாழ்க்கை.

கற்பபை வாசலில் இருந்து
துளிர்விடும் தருணம் முதல்
நான்கு கால்களில்
ஊர்வலமாக செல்லும் வரையில்
எத்தனை உறவுகள் 
பாச வலையில்
பாலம் அமைக்கின்றன...

தாயின் வடிவில்...
தந்தையின் வடிவில்...
சகோதர வடிவில்...
காதல் வடிவில்...
நட்பின் வடிவில் என...
விரிந்தே செல்கின்றது
வாழ்க்கை பயணம்...

சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து 
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...

உறவுகள் இன்றி
உயிர் துடிக்கும் 
உறவு ஒன்று - இங்கே
தொடங்கிய பயணம்
முடிவினை நோக்கி
காலியான வண்டியாய்
தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி...

சுற்றுச்சூழல்

இன்று ஒரு தகவல்

உலக நண்பர்கள் தினம்

29 ஜூலை, 2020

நூல் நயம் : எஸ்ராவின், 'நீரிலும் நடக்கலாம்"

இன்றைய வாசிப்பு "நீரிலும் நடக்கலாம்". எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியது
உயிர்மை பதிப்பகம் வெளியீடு .
விலை ரூபாய் 130/- 
மொத்த பக்கங்கள் 168 .
முதல் பதிப்பு 2014.

    விழித்திருப்பவனின் இரவு, உபபாண்டவம் ,நெடுங்குருதி ,உறுபசி இன்னும் பல நூல்கள் எழுதி தமிழ் நாடெங்கும் ரசிகர்களை கொண்டவர் 
எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள்.
   இந்த சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன.
     ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய பாத்திரமாக வருகிறார் .அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவு கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழிலக்கியத்தில் ஒரு பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட கதை இதுவே.
      குறுங்கதை ,சிறுகதை, நீள் கதை, தனிமொழி உரையாடல் மட்டுமே கொண்ட கதை ,மிகை புனைவு , மறுகதை,விந்தை
 என எத்தனையோ மாறுபட்ட கதை கூறும் முறைகளில் புனைவின் முடிவில்லாத சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

      நவீன சிறுகதைகளின் பரப்பை முற்றிலும் புதியதொரு தளத்திற்கு கொண்டு சென்று இருப்பதே இந்த தொகுப்பின் தனிச்சிறப்பு.

   *****
எஸ் .ராமகிருஷ்ணன் தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்: நீரிலும் நடக்கலாம் எனது பதினான்காவது சிறுகதைத்தொகுப்பு. இந்த கதைகளை இப்புதிய திறப்பு என்றே சொல்வேன். ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தில் எனக்கு இருந்த மனநிலையில் சாட்சியே. முந்தைய கதைகளில் இருந்து விலகி புதிய திசை நோக்கி எனது கதைகள் பயணிக்கத் துவங்கி இருப்பதன் அடையாளமாகவே இந்த தொகுப்பை கருதுகிறேன் .
        அந்த வகையில் இந்தத் தொகுப்பு பிரதானமாக இரண்டு மையப்புள்ளிகளை கொண்டிருக்கிறது. ஒன்று எழுத்து, எழுத்தாளன் ,அவன் சந்திக்கும் உலகம் மற்றொன்று பெண்களின் எளிய ஆசைகளும் அது தோற்றுப்போகும் தருணங்களும் அதன் விளைவாக உருவாகும் துயரையும் பற்றிய கதைகள்.
   இந்தத் தொகுப்பின் வரையறைக்குள் அடங்காத கதை என்று ஒரு பல் போதும் கதையை கூறுவேன். அதுவே அடுத்த தொகுப்பிற்கான திறவுகோல் என்று கருதுகிறேன் .காலணிமயமாக்கம் நமக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த கோபமும் ஆற்றாமையும் எனக்குள் இருக்கின்றன. அதன் வெளிப்பாடே இந்த சிறுகதை.
   புனைவும் நடப்பும் ஒன்று கலந்தே வாழ்க்கை இருக்கிறது .இதுபோலவே புனைவிற்கு எதார்த்த உலகம் சுவையூட்டுகிறது. இந்த கதைகள் அதன் பாதிப்பில் உருவானவையே .
      செகாவ் வை சந்திக்கச் செல்லும் இளம் எழுத்தாளனாக நான் இருந்திருக்கிறேன். மானசீகமாக நான் சந்தித்திருக்கிறேன், உரையாடியிருக்கிறேன், அவர்களை,ருஷ்ய எழுத்தாளர்களை குருவாகக் கொண்ட ஏகலைவன் ஆக என்னை உணர்கிறேன். என்று எஸ் ராமகிருஷ்ணன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
****
 இந்தத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் இருக்கின்றன .
ஆண் மழை 
கற்பனை சேவல் 
நீரிலும் நடக்கலாம் 
அவளது வீடு 
செகாவின் விருந்தாளி 
தனலட்சுமியின் துப்பாக்கி 
பதினாறு டைரிகள் 
எம்பாவாய் 
ஒரு பல் போதும் 
வானோர் 
வெறும் இருட்டு 
காப்காவிற்கு செண்பக வல்லியைத் தெரியாது.
 ரயில் நிலையத்தில் ஒருவன் 
இரண்டாவது புலி 
இன்னும் சில கிளைகள்....
******
கதைகளைப் படிக்கும்போது எனக்கு ஒரு சில நினைவு ஓட்டங்கள் .இது முழுமையும் கற்பனையா அல்லது எங்கோ கேட்டு தெரிந்து கொண்ட சில கதைகளை கற்பனையை புகுத்தி எழுதப்பட்டவையா அல்லது ஆசிரியரின் அதீத கற்பனை தீண்டலா என்று யோசித்தேன் .வாழ்க்கை என்பதும் கதை என்பதும் இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்து பிரிக்க முடியாதது .கற்பனை அற்ற வாழ்க்கை வாழ்க்கை இல்லாத கற்பனை ஒன்றும் சுவைக்காது ,கவைக்கு உதவாது.
       கதையை படிக்க எடுத்தவுடன் கீழே வைக்காமல் முழுமையாக படித்தேன். சில கதைகள் என்னை மிகவும் பாதித்தது. எம்பாவாய் ,ஆண் மழை ,சகாவின் விருந்தாளி ,16 டைரிகள் இன்னும் ஓரிரு கதை என்னை மிகவும் பாதித்தது .எனக்கு நடந்தது போல இருக்கிறது .என்னுடைய,என்னுள் ஏதோ நடந்தது போல இருக்கிறது .இந்தக் கதைகளை எல்லாம் வாசிக்கும் பொழுது நாமும் கூட ஒரு கதை எழுதலாம் என்கிற எண்ணத்தை உண்டாக்கும் வண்ணம் ஆசிரியரின் கைவண்ணம் புத்தகம் முழுவதும் பரந்து கிடக்கிறது.
   ஒருமுறை அல்ல இருமுறை பலமுறை வைத்து போற்றி பாதுகாத்து படிக்கப்பட வேண்டிய நூல் என்பது எனது எண்ணம்., பொழுது போகத்தான்.
*****
1)ஆண் மழை .
மழையில் ஆண்மழை ,பெண்மழை  ஆசிரியர் அற்புதமாக விளக்குகிறார். ஆண் மழை என்றால் என்ன என்று இதில் வரும் கனத்த மழை சொல்லும்.
      நாயகன் நாயகனின் தந்தை இருவரும் மழை பெய்தால் அது அந்த அளவு தினமும்  குறித்து தனி நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். வானிலை ஆய்வு இயக்குனர் கூட தனது பணி நிமித்தம் மழை அளவு குறித்து வைத்து கொள்வார்களே அன்றி ,தனிப்பட்ட முறையில் தமக்காக குறித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக நான் அறியவில்லை .
     நான் கூட பணி நிமித்தம் ஒவ்வொரு மாதமும் பெய்த மழை அளவு காற்றின் அளவு மற்றும் வானிலை விபரம் குறித்து மாதாமாதம் எனது மேலதிகாரிக்கு அறிக்கையாக  தெரிவித்துக் கொண்டு இருந்தேன் .ஒருமுறை சோழவரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் எனது பணி காலத்திலேயே அதிகபட்சமாக மழை பொழிய கண்டேன் .
    மழை என்றாலே ஒவ்வொரு ஆண் மகனுக்கும் பெண்மை வந்துவிடும்; ஒரு ஒரு பெண்ணுக்கும் ஆண் தன்மை வந்துவிடும் என்று எனக்குள் ஒரு ஐயம் எப்போதுமே உண்டு .
   இந்த கதையின் ஆசிரியர் மழை அளவு குறிக்கின்ற தந்தையையும் மழை அளவு குறிக்கின்ற மகனையும் பற்றிக் குறிப்பிடுவார் .மழை அளவு குறிக்கின்ற தந்தைக்கு யாருக்கும் தெரியாமல் 
தனிவீடு, சின்ன வீ்டு கேரளாவில் இருந்ததாகவும் அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்ததாகவும் மகன் அமெரிக்கா வாழும்போது தெரிந்து கொள்கிறார் .
இந்த விஷயம் அவரின் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தது ,தெரிந்திருக்கிறது ;அம்மா மூலமாக மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. மனைவி மூலமாகவும்,தற்போது தந்தையின் கடிதம் மூலமாகவும் தற்போது மகன் தெரிந்து கொள்வதாக ஆசிரியர் கதை முடிப்பார் .
     ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்தும் ,அவிழ்க்காமலும்,மறைத்தும் மறைக்காமலும் மழை புரிந்து கொண்டுதான் இருக்கிறது.
     "நிறைய விஷயங்களை  ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை .இந்த ஊர் மழை அதைத்தானே கற்றுத் தருகிறது "என்று அவன் மனைவி சொல்வதாகக் கதை முடிகிறது.
2) "எம்பாவாய் ".
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கதை இது .எனது ,எனக்குள் இருக்கின்ற பெண் தன்மை 60 சதம் என்பதால் எனக்கும் இந்த கதை பிடித்துப் போனது .அம்மாவின் கடிதத்தை பிற்காலத்தில் வாசிக்க நேரும் என்ற ஒரு மகன் மனம் எப்படி இருந்தது என்றும் அவனின் அம்மா அவளது வாழ்க்கை பருவத்தில் எப்படி இருந்தாள், எத்தனை புத்தகங்களைப் படித்தாள் ,அவள் மனநிலை என்ன என்பது குறித்து இந்த கதை சொல்கிறது .ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கின்ற கதை தளம் .சுமார் ஐம்பது,அறுபது வருடங்களுக்கு முன் 
நடந்த கதையாக குறிப்பிடப்படுகிறது. ஆத்திரம் தீர இயற்கை உபாதையை கழிக்க கூட பெண்களுக்கு இடவசதி இன்மையை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
     கதையை படித்து முடித்த பிறகு எனக்கும் எனது அம்மாவின் நினைவு வரத்தான் செய்கிறது.
3) "செகாவின் விருந்தாளி"
 செகாவ் காலத்தில் நடந்த கதையாக ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
    செகாவின் காதலியை வேலைக்காரி ஆக்கி , செகாவின் தங்கை மரியாவை தோட்ட வேலை செய்கின்றவளாவாகவும், டால்ஸ்டாய் படம் அறையில் மாட்டி இருப்பதை காட்டிய வண்ணம் இந்த ஆசிரியரே ஒரு கதையை எழுதியதாக அவரிடம் சென்று காண்பிப்பதாகவும்,ஒரு நாயை கதாபாத்திரமாக கற்பனையில் உருவாக்கி ,பிரம்மாண்டமான ஏரியை உருவாக்கி கதையை நடத்திச் செல்கிறார். இவர் அமெரிக்காவில் பயணம் செய்தபோது கண்ட ஏரியின் பிரம்மாண்டத்தை அப்படியே இந்த கதையில் புகுத்தியிருக்கிறார் .அவ்வளவு பெரியது ஏரி,."அதை பார்க்கும் போது பூமி உயர்த்திப் பிடித்து உள்ள ஒரு மதுக்கோப்பை என்று கூட தோன்றும்" என்பதாக ஆசிரியர் கவித்துவமாக வர்ணிப்பார் அந்த ஏரியை.
டால்ஸ்டாய் சொல்வதைப்போல ஒரு வரி:
"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை என்ற டால்ஸ்டாயின் வரி நினைவுக்கு வந்து போனது "என்பதாக ஆசிரியர் குறிப்பிடுவார்.
 செகாவின் விருந்தாளி மன மயக்கத்தை தருகிறது.
4)"நீரிலும் நடக்கலாம் ".
அவனுக்கு அவன் பெரியப்பாவை பிடிக்கும். அவன் பெரியப்பா அடிக்கடி மௌன விரதம் இருப்பார் .அவன் பெரியப்பா எப்பொழுதும் பின்னோக்கி நடப்பார் .முன் நோக்கி நடந்து அவன் பார்த்ததேயில்லை .பின்னோக்கி நடக்கும் ஒரு வைராக்கியத்தை அவர் வளர்த்துக் கொண்டுவிட்டார்.பின்னாளில் காணாமல் போய்விடுகிறார் .காசிக்கு சென்று அங்கேயே சமாதி ஆகிவிட்டதாக பின்னாளில் அவன் அறிகிறான்.

  "நீரில் நடப்பது ஒரு பெரிய வித்தை அல்ல, விந்தை இல்லை .அப்படி நடக்க ஞானியாக தான் இருக்கனும் அவசியமில்லை .மனசும் உடம்பும் ஒத்துழைத்தால் எதையும் செய்து காட்டலாம். அதை நம்ம கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்"என்று அவன் தந்தை சொல்வதாக ஆசிரியர்  எழுதுவார். மேலும் அவன் தந்தை சொல்வதாக, "ஒருத்தனை உலகம் புரிஞ்சிக்காம போயிட்டா தப்பில்லை .ஆனா வீடு புரிந்து கொள்ளாமல் போய்விட்டா அந்த வாழ்க்கை நரகம் தான். எங்க அண்ணனை ஊரும் புரிஞ்சு கிடலை ,வீடும் புரிஞ்சு கி, யாரும் புரிஞ்சுக்கல .அவனுக்கு அது ஒன்றும் பெரிய குறையாக இல்லை .அவன் மனசு எத்தனை பேருக்கு வரும் "என்று அவன் தந்தை சொல்வதாக ஆசிரியர் குறிப்பிடுவார்.
ஒரு குடும்பத்தில் மனைவி மூலம் தீராத பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆண்களின் மனோபாவத்தை காட்டுகிறது. பிரச்சனைகள் இல்லாத ஆண்கள் இல்லை பிரச்சினைகளை உருவாக்காத பெண்களும் இல்லை.viceverse ஆகவும் இருக்கலாம்.
5) "தனலட்சுமியின் துப்பாக்கி" புதுமைப் பெண்ணின் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு தனித்தன்மையை ஆசிரியர் இலகுவாக கொண்டு சென்றிருக்கிறார் .புகுந்த வீட்டுக்கு வரும்போது  தனலட்சுமி ஒரு துப்பாக்கியை கொண்டு வருகிறார். பிடிக்காத புகுந்த வீட்டுப் பெண்மணிகள் புரளி பேசுகிறார்கள் .கணவனும் ஏசுகிறார் துப்பாக்கியை கழற்றி கிணற்றில் போட்டு விடுகிறான் .ஆனால் மீண்டும் அவளிடம் துப்பாக்கி இருப்பதாக அவள் சொல்லிக் கொண்டே இருக்கிறாள் . 
    முப்பது வருஷம் உடன் வாழ்வதால் மட்டுமே ஒரு பெண்ணை புரிந்துகொள்ள முடியாது என்பது அன்றுதான் நல்ல பெருமாளுக்கு புரிந்ததாக ,தனலட்சுமி கணவன் ,ஆசிரியர் குறிப்பிடுவார்.
இதுதான் கதை.
6) "16 டைரிகள்".
இந்தக்கதையில் ராமபத்ரன் சிறு வயது முதல் டைரி எழுதும் பழக்கம் கொண்டிருந்தார் ஓய்வு பெற்ற பின் பழைய டயர்களை எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார் தீவைத்து கொடுத்து விடலாமா என்று யோசிப்பார் யாரும் இல்லாத போது பழைய டயர்களை ஒவ்வொன்றாக எடுத்து படிக்க ஆரம்பிப்பார் பழைய நினைவுகள் அவரை வாட்டும் சில குத்தீட்டி போல.
பழைய டைரிகள் கடந்தகாலத்தின்உள்ளே இறங்கும் படிக்கட்டுகள் .அதன்வழியே நிறைவேறாமல் போன தருணங்களுக்குள் மீண்டும் பிரவேசிக்க முடியும் .உதிர்ந்த கனவுகளை கையில் எடுத்து பார்க்க முடியும் .அவமானத்தில் கசிந்து கண்ணீர் விடுவது உணரமுடியும் .நிராசைகள் தானே எழுத வைக்கின்றன .சந்தோஷமான மனிதனால் என்ன எழுதிவிட முடியும்.
   " டைரி என்பது ஒரு மாயக்கண்ணாடி. அதன் வழியே கடந்த காலத்தை மட்டும் நாம் காண்பதில்லை ,இறந்த தருணங்களை மறுபடி தன் வசமாக்கி பார்க்கிறோம் .ஒரு வகையில் இன்னொரு முறை அதே நிகழ்வில் வாழ்கிறோம்.
வாழ்க்கை அனுமதிக்க மறுத்த ஒன்றை எழுத்து அனுமதிக்கிறது .அதுவே டயரி "என ராமபத்ரன் புலம்புவதாக ஆசிரியர் குறிப்பிடுவார்.
     நானும் ஒரு சில டைரிகள்   எழுதியிருக்கிறேன் .இளம்வயதில் எழுதியிருக்கிறேன் .பின்னர் அந்த 
வழக்கம் விட்டு போனது .எப்பொழுதேனும் ஓய்வு நேரத்தில் எடுத்துப் படித்து சுவைத்து இருக்கிறேன் இந்தக் கதையில் வரும் ராமபத்ரன் போல.
7) "கற்பனைச் சேவல்."
சுமார் அறுபது வருடங்களுக்கு முன் சேவல்சண்டை கிராமங்களில் நடந்து கொண்டிருக்கும் அது பற்றிய கதை இது .

காயாம்பு சண்டைசேவல் ஒன்றை வளர்த்து வந்தார்.பல கிராமங்களுக்குச் சென்று சேவல் சண்டையில் கலந்து கொண்டு பல வெற்றி கொண்டுவருவார் .இந்த சேவல் வாங்குவதற்காக அந்த காலத்தில் பலத்த போட்டி .ஆயிரம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த சேவலுக்கு விலை வைத்து குறிவைத்து வருவார்கள் .இவர் யாருக்கும் தரமாட்டார் .
    இதன் காரணமாகவே தனது நல்ல குடும்பத்தை இழந்தார் ;மக்களை இழந்தார்; கட்டிய மனைவியை இழந்தார் ;சேவலையும் இழந்தார் .
   இப்பொழுது மனச்சிதைவு காரணமாக தனியே புலம்பிக் கொண்டிருப்பதாக கதை.
  .எனது பெரியப்பா மகன் ஒருவரும் கூட இது போல சண்டை சேவல் வளர்த்து,சேவல் சண்டையில் கலந்து கொண்டு வருவார் அவர் வெற்றி பெறாமல் வீடு திரும்புவதே இல்லை .தனது சேவைலை ராமபாணம் என்று சொல்வார் அவர் பெயர் கூட ராமச்சந்திரன் .அவர் கலந்து கொண்ட சேவல் சண்டையில் பல சேவல்களை கழுத்தை வெட்டி ரத்தம் வடிய வடிய செய்து வெற்றிக் களிப்போடு வீடு திரும்பி வருவார் வந்தவுடன் எல்லோருக்கும் கோழி கறி பிரியாணி ஆக்கி போடுவார் .இன்னும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. ஐ ஜி. எப்.அருள் அவர்கள் தமிழ்நாட்டு ஐஜியாக இருந்த போது இதற்கு தடை விதிக்கப்பட்டது.

"ஓடும் சேவலை துரத்தி ஓடுபவர் போல தாவி ஓடிக்கொண்டிருந்தார் காயாம்பு. இல்லாத சேவல் ஒன்று தனியே ஓடிக்கொண்டிருந்தது "என்பதாக கதை முடியும்.
8) "அவளது வீடு ".
தன் அப்பாவிற்கு சொந்த வீடு இல்லை என்பதன் காரணமாக தனது அம்மா பட்ட மனக்கஷ்டம் உடற்கட்டும் எல்லாம் அறிந்த இவள் நல்ல வீடு ஒன்று வாங்குகிறாள். சொந்தமாக சிறிய வீடு என்பதனால் அது அவளுக்கு பிடிக்கவில்லை .எனவே ஒவ்வொரு நாளும் புதுப்புது வீடாக வாடகைக்கு தேடிப் புறப்படுகிறாள். அங்கங்கே இருக்கக் கூடிய வீடுகளை பார்த்து உள்ளே நுழைந்து சமையலறை எப்படி இருக்கிறது ,ஹால் எப்படி இருக்கிறது என்று எல்லாம் பார்த்து கண்டு கொண்டு வருகிறாள் .
       பிறகு ஒருநாள் தனக்கு பிடித்த ஒரு வீட்டை ,சொந்த வீடு இருக்கிறது ,கணவன் பிள்ளைகளோடு வாழ்கிறாள் , இருந்தாலும் தனக்கு ,தனக்கே தனக்கு பிடித்தவாறு தன் மனதுக்குப் பிடித்தவாறு ஒரு வீட்டையும் பார்த்து அதில்தான் மட்டும் குடி வந்து இருக்கிறாள் .
    இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிந்து அவர்கள் வீட்டை காலி செய்துவிட செய்கிறார்கள் என்பதாக கதை முடிகிறது.
  "வீடு ஆண்களுக்கு வாழ்விடமாகவும், பெண்களுக்கு வாழ்விடமாகவும் இருக்கிறது "என்று ஆசிரியர் சொல்வது மிக சரியான ஒன்று.
9) "ஒரு பல் போதும்,"
இது ஒரு புது விதமான பழிவாங்கல் போல இருக்கிறது .வீட்டுக்குள்ளேயே பழி வாங்கு வார்கள் .பக்கத்து வீட்டுக்காரனை பழி வாங்குவார்கள். தெருவிலேயே வசிக்கின்றவனைப் பழி வாங்குவார்கள். ஒரு கிராமம் மற்றும் ஒருகிராமத்தை பழிவாங்கும் .ஒரு நாடு வேறு நாட்டினை பழிவாங்கும் .
      ஆனால் இந்த கதையில் ஒரு தாத்தா தன் பேரனிடம் சொல்லி நான் சத்தியாகிரகம் செய்தபோது சுதந்திரத்திற்காக எனது இரண்டு பற்களையும் ஆங்கிலேயன் உடைத்துவிட்டான்.எனவே நீ இங்கிலாந்து சென்று அங்கு இருக்கக்கூடிய ஆங்கிலேயர் ஒருவனின் ஒரு பல்லை பிடுங்கி எடுத்துக்கொண்டு வா "என்று சொல்வார். பேரனின் நண்பன் தனது பல்லைத் தானே உடைத்துக்கொண்டு இவனிடம் கொடுத்து உன் தாத்தா ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இதைக் கொண்டுபோய் கொடு" என்று கொடுப்பான் .இந்த கதையை புதுவிதமான கதை என்றும் இந்தக் கதையை கொண்டு மீண்டும் வேற புதிய அத்தியாயம் தொடங்கப்படும் என்றும் ஆசிரியர் கூறுகிறார். 
தேசபக்தி காட்டுவதைப் போல இருக்கிறது இந்த கதை.
மற்ற சில கதைகள் வழக்கம்போல் சுவையாகவே இருக்கிறது .அவசியம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு நீரிலும் நடக்கலாம்.

நன்றி : திரு.எஸ்ரா மற்றும் திரு கருணா முர்த்தி, முகநூல்.

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : இசைஞானி இளையராஜா


இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...

1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.
 
2. பிறந்த தேதி : 2.6.1943

3. தந்தை : டேனியல் ராமசாமி 

4. தாய் : சின்னத்தாய் 
 
5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

6. கல்வி : எட்டாம் வகுப்பு

7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )

8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)

10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது

11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே  ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.
 
*என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன் மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும், பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 

*இன்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய் இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் இளையராஜா.

16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு ரயில் ஏறினார்.

17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்

18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர். 

19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர். 

20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும் அங்கேயே பயிற்சி பெறலானார்.

21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்.

22. க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி வந்துள்ளார்கள்.

25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால் அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார். 

26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும், இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும் போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங் அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார். 

27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில் சேர்ந்தார்.

28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

29.. முதல் படம் “அன்னக்கிளி” தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.

30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும் பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு 
எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது திறமையை நிரூபித்தார் இளையராஜா. 

31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில் அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய் 
உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”. 

32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது. ஆனால் சினிமாவில் சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.

33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது. ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள். 

35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின் வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன் வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.
 
36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.   

37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான் புத்துயிர் பெற்றன.

38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான் கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.  

39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான 
ஒன்று. 

40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில் இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை 
ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள். 

*வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும். 

*ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும். 

*சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்க வேண்டியதில்லை. அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார். 

*மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம் என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.
 
42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.

43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்

46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார். 

1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987  - சிந்து பைரவி (தமிழ்)
1989  - ருத்ர வீணை (தெலுங்கு)
2009  - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.

48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். 

*பண்டிட் பீம்ஸென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும் பாராட்டிப் பேசினார்.

49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம் வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது என்று அடிக்கடி சொல்வார்.

50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ் செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு 
பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும் ‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.

51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். 

*அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.

52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. 

*இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை 
மும்மூர்த்திகளில் ஒருவரான ” தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.

53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.

57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர், 

58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக் 
கொடுத்திருக்கிறார்.

59.  பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று வெள்ளம் என்று வர்ணிப்பார்.

60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.

61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. 

*ஹிந்தி பாடல்களை கேட்பதையும் 
பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான சாதனையை செய்தவர் இளையராஜா.

62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.

63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து சாதனை படைதுள்ளார்.

66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின் இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.

69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. 

*அதே இணையதளம் இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.

71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75 ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின் “ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.

72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :

1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, 
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.

73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா.


நன்றி: திரு.ஆனந்த் ரவி, புதிய தகவல்கள், முகநூல்.