20 அக்., 2008

பாரதி கவிதைகள்-11:

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றுப் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியி னுள்ளே உயிரெலாம் நான்.

கம்பனி சைத்த கவியெலாம் நான்
காருநர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொயையிருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரக் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினான் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டபல சக்திக் கணமெலாம் நான்
காரண மாகிக்க கதித்துனோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருட்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதியே நான்.

கருத்துகள் இல்லை: