3 ஆக., 2011

மனதில் பதிந்தவை-9: ஆனந்த விகடன், ஜூலை 27, 2011

ஆனந்த விகடன், ஜூலை 27, ௨௦௧௧.  இந்த இதழில் "புள்ளிவிபரங்கள்" பகுதியிலிருந்து தொடங்குகிறேன்.

இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியாக உயர்ந்திருக்கிறது.  கவலை தரும் தகவல். குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரமும், அதற்காக அரசு செலவழித்த பெரும்பணமும் வீணோ என்று தோன்றுகிறது.  என்னதான் திட்டம் திட்டமிட்டு செயல்படுத்தினாலும், மக்கட்தொகையைக் கட்டுப்படுத்தாதவரை வாழ்க்கைத்தர உயர்வோ, பொருளாதார முன்னேற்றமோ சிரமம்தான்.

அடுத்து, அறுபது சதவிகித உணவுப் பொருட்கள் பதப்படுத்தாததால் வீணாகின்றன என்ற அதிர்ச்சித் தகவல்.  ஏற்கனவோ நமது உணவு தானியக் கிடங்குகளில் தானியங்கள் புழுத்து வீணாகி பயனற்றதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, கண்டனங்கள், ஏழை எளியவர்க்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று வெளியான செய்திகள் நினைவிற்கு வருகின்றன.  ஆனால் நம் அரசோ வழக்கம்போல் செயல்படாமல் இருக்கிறது.  வீணாகப் போனாலும் பரவாயில்லை, யாருக்கும் இலவசமாகத் தரமோட்டோம் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.  அவர்கள் படித்த பொருளாதாரக் கோட்பாடுகள் அதைத் தவறு என்று என்று சொல்கிறதோ?

"சொல்வனம்" பகுதியில், அமீர் அப்பாஸின் அற்புதமான கவிதை, "தேவதைகளின் உலகம்".  

அடுத்து, என்னை ஈர்த்தது, விகடன் மேடையில் எஸ்.ராவின் கேள்வி-பதில்கள்.  அதிலிருந்து:

தமிழ் இலக்கியத்தின் டாப் டென் புதினங்கள்: 

1 . தி.ஜானகிராமன் - மோகமுள்
2.  ஜெயகாந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்
3.  கி.ராஜநாராயணன் - கோபல்ல கிராமம்
4.  ப.சிங்காரம் - புயலிலே ஒரு தோணி
5.  ஜி.நாகராஜன் - நாளை மற்றும் ஒரு நாளே
6.  சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை
7.  அசோகமித்ரன் - ஒற்றன்
8.  கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம்
9.  வண்ணநிலவன் - கடல்புரத்தில்
10.எஸ்.சம்பத் - இடைவெளி 

"நேர்மையாக வாழ்வது என்பது ஒரு சவால்.  அது தனி நபர், சமூகத்துடன் மோதும் போராட்டம். அதை சமூக அமைப்பு எளிதாக அன்கீகரித்துவிடாது. பொதுவாக, மனிதம் மனம், கீழ்மைகளையும், தீய எண்ணங்களையும், வன்முறைகளையும் நோக்கியே ஓடுகிறது. நல்வழிப்படுத்துதல் நாமாக மேற்கொள்ளவேண்டிய முயற்சி!"  (அற்புதம், எஸ்.ரா!)

படித்துப் பிரமித்துப்போன வாழ்க்கை வரலாறு: "ஹெலன் கெல்லர். சிறு வயதில் கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்த அவர் விடாமுயற்சியில் கல்வி கற்று, அதன் வழியே உலகம் வியக்கும் ஆளுமையாக எப்படி உருமாறினார் என்பதை விளக்கும் அவருடைய சுயசரிதையான "STORY OF MY LIFE " மறக்க முடியாத புத்தகம்!" 

விகடன் வரவேற்பறையிலிருந்து: மகாபாரதக் கதைகளின் வழியே அதில் மறைந்திருக்கும் தத்துவ விசாரங்களை எடுத்துக் கூறும் வலைப்பூ:                   <http://bagavathgeethai.blogspot.com>.

அடுத்து, குழந்தைகளுக்கு கதை சொல்ல உதவும் எளிமையான இணையதளம்: .

அடுத்து, அழகிய பெரியவனின் பத்தொன்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, "குறடு".  பக்கங்கள் 200 - விலை ரூ.130 /-.  கலப்பை வெளியீடு.

"வலைபாயுதே" பகுதியிலிருந்து: 

thoppi_az@twitter.com: "மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும், மற்றவர்கள் செய்யும் தருகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்!

இதழுடன் இலவச இணைப்பு: "என் விகடன்".  அதிலிருந்து:




"கலாம் கண்காட்சி" - இராமேஸ்வரத்தில் கலாம் அவர்கள் வசித்த வீட்டை புனரமைத்து, அங்கே ஒரு அருங்காட்சியகம்.  இந்த நேரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்ப்படுமுன் தம்பி நெல்லையப்பனுடன் நான் சென்றிருந்தபோது அவன் வீட்டின் நிரபதுபோல படம் எடுத்தேன்.  மற்றபடி, வீடு பூட்டியிருந்தபடியால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

"என் ஊர்" பகுதியில், கவிஞர் விக்ரமாதித்யனின் திருநெல்வேலி பற்றிய கட்டுரை.  நானும் பழைய திருநெல்வேலிக்காரன்.  கட்டுரையில் வரும் பழக்கமான பெயர்கள்:  புட்டாரத்தி அம்மன் கோயில், கள்ளத்தி முடுக்குத் தெரு, நயினார் குளம், குறுக்குத்துறைக் கோயில்(ஒரு காலத்தில் என் மாமா இக்கோவிலின் மேலாளர்), கீழப் புதுத் தெரு, தெற்குப் புதுத் தெரு (இரண்டு தெருவிலும் நாங்கள் குடியிருந்திருக்கிறோம்), காந்திமதியம்மன் சன்னதி, நெல்லையப்பர் கோவில், வாகையடி முக்கு, பூதத்தார் முக்கு, ராயல் டாக்கீஸ், பாப்புலர் தியேட்டர் (இத்தியேட்டர் உரிமையாளரின் மகன் என்னுடன் ஒரு வருடம் படித்தான்), ரத்னா டாக்கீஸ் என்று சிறு வயதில் நண்பர்களுடன் கொட்டமடித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன.  
         

கருத்துகள் இல்லை: