29 ஆக., 2012

யோக சித்தி-69: கல்வி-1

அறிவு  தொழிலொழுக்கம்  ஆண்மை  அழகாம்
திறமான  கல்வித்  திரு.

மேற்சொன்னவாறு  உள்ளிருந்து  அறிவைக் கல்லிஎடுப்பதே  கல்வியாம்.  மனிதனைப் பூரணப்படுத்தும்  திறமை வாய்ந்த கல்வியின் ஐந்துயிர்களாவன:-  (1)  அறிவு: தன்னறிவு, நூலறிவு; (2) தொழில்:  வறுமையற்று வாழ ஒரு நல்ல தொழில் திறமை; (3) ஒழுக்கம்: 'அறவியலிலும் ',  'நடையியலிலும்'  காணும்  நல்லொழுக்கம்; (4) ஆண்மை: உடல் மனவுறுதி, ஆட்சித்திரமை, காரியத் திறமை, தைரியம் முதலிய வீரத் தன்மைகள்; (5) அழகு: இசை, காவியம், ஓவியம் ஆகிய அழகுக் கலைவளம்.

நல்லறிவு, நல்லொழுக்கம், நற்றொழில்வளம், நல்லாற்றல்,  நற்சுவையின்பம்  - இவையே கல்வியின் ஐந்துறுப்புக்கள்.  இவற்றில் ஒன்று குறைந்தாலும் கல்வி முற்றுப் பெறாது. ...

கல்விக்கு, எண்ணெழுத்து கண்ணெனத் தகும்; தன்னறிவு தலைஎனத் தகும்; ஒழுக்கம் உலமெனத் தகும்;  ஆற்றல் உடலெனத் தகும்;  அழகுக் கலை வடிவெனத் தகும்.   மன இருள் ஒழிக்கும் மாசிலா ஞானம், பெரியார் சொல்லும் அரிய  நூற் பயிற்சி, உலகியல், வானியல், உயிரியல் அறிவு, ஆடை உணவிற்காகிய  நற்றொழில்,  வைரவுடலம் வைக்கப் பெறுதல், வீரத் திறமை, வித்தகப் பெருமை, அழகுக் கலைகள், அருட்பணி வளமை,  ஆருயிர்க்கு அன்பு இவை சீரிய கல்வியாம்.  

கருத்துகள் இல்லை: