[7/17, 08:31] Neyam-Satya: இன்றைய தத்துவம :
Anthropocentrism என்று அழைக்கப்படும்
மானிட மைய வாதம்
"மானிட மைய விதி" (Anthropic Principle) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
"மானிட-மைய விதி" முதன்முதலில் கோட்பாட்டியல் வானவியல் பௌதிகவிஞ்ஞானி, ப்ராண்டன் கார்ட்டெர் (Brandon Carter) அவர்களால், 1973-ல் கோப்பர்னிக்கஸ்-ன் 500-வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் ஒரு மாநாட்டில் அளித்த பங்களிப்பில் இடம்பெற்றது. கார்ட்டெர் தனது மானிட-மைய விதியை, கோப்பர்நிக்கஸ்-ன் விதியான ' மானிடஜீவிகள் இப்பிரபஞ்சத்தில் சிறப்புச் சலுகை கொண்ட இடத்தில் இல்லை' என்பதற்கு எதிர்வினையாக முன்வைத்தார். கார்ட்டெரின் முன்வைப்புக்கூற்று யாதெனில், "பிரபஞ்சத்தில் மானிடஜீவிகளின் இட-அமைவு மையத்துவ மானதாக இல்லையெனினும், ஓரளவிற்கு சிறப்புச் சலுகை பெற்றது" என்பதே ஆகும்.
அதாவது, இப்பிரபஞ்சத்தின் அடியோட்டமாகச் செயல்படும் இயற்கைவிதிகளானவை உயிர் தோன்றுவதற்கு ஏதுவான வகையில் அமைந்திருக்கவேண்டும்; அவ்வாறில்லையெனில், இங்கு நாம் தோன்றியிருக்க முடியாது! இதுதான் மானிட-மையத்துவ விதி பற்றிய சுருக்கமான பொருள் விளக்கம் ஆகும்.
இனி நாம் இந்த "மானிட மைய விதி" கிளப்பிய குழப்ப மேகங்களுக்குள் செல்வோம். இவ்விதியானது மிகவும் வெளிப்படையாகத்தெரியும் ஒரு உண்மை நிலை பற்றிய ஒரு கூற்றே ஆகும். ஆனால், மேற்குலக விஞ்ஞானிகள், எவ்வொரு விடயத்தையும் விதிகளின் சொற்களுக்கு மாற்றியும், கோட்பாடுகளின் வழியாகவும் தான் புரிந்துகொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள்!
ஆனால், இங்கே ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. அது கறாரான விதிகளைக்கொண்டு இயங்குகிறது. அதன் வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்தில் பூமிக்கிரகத்தில் உயிர்ஜீவிகள் தோன்றின. அதன் தொடர்ச்சியாக, பிறகொரு கட்டத்தில் சுய-உணர்வுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மானிட ஜீவிகளாகிய நாம் தோன்றி, இப்பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு இயங்குகிறது; அதனுடைய விதிகள் என்ன, அதனுடைய முடிவு எத்தகையதாயிருக்கும்; அதில் நம்முடைய இடம் எது?..என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். ஆக, பிரபஞ்சமும் இருக்கிறது, அதில் நாமும் இருக்கிறோம்! பிறகு அதிலென்ன பிரச்சினை? அதில்தான் பிரச்சினை இருக்கிறது என்கிறார்கள் பல விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும்!
அதாவது, "உயிர் தோன்றியே ஆகவேண்டும் என்பதுபோல் இயற்கையின் விதிகள் அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது; ஆனால், பிரபஞ்சத்தின் அடிப்படையான, பொருண்மையான மாறாத-மதிப்புகளின் (universal constants) எண்ணில் சிறிது மாற்றம் இருப்பின், பிரபஞ்சமானது வேறுவகைப் பட்டதாக அமைந்திருக்கும்; அந்த வேறுவகைப்பட்ட பிரபஞ்சம் உயிர்த் தோற்றத்திற்கு ஏதுவாக அமையாது. மேலும், பெரும் எண்ணிக்கையிலான விபத்துக்கள் எல்லாம் கூட்டாகச்சேர்ந்து நாம் தோன்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதாகத் தோற்றம் தருகிறது" என்றெல்லாம் சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த விஞ்ஞானிகளின் தர்க்கம் ஏன் இவ்வாறு தலைகீழாக உள்ளது என்பதுதான் எனக்குப் புரியவில்லை! இப்பிரபஞ்சத்தில், உயிர்ஜீவிகளும், மனிதஜீவிகளும் ஏற்கனவே தோன்றி வெற்றிகரமாக நிலைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பிரபஞ்சத்தின் பௌதிகவிதிகளும், மாறாத மதிப்புகளும் வேறுவிதமாக இருந்தால், இப்பிரபஞ்சமே நிலைத்திருக்காது, நட்சத்திரங்கள் தோன்றியிருக்காது, ஒரு புழு பூச்சியும் தோன்றியிருக்காது; அறிவுக்கூர்மையுள்ள மனிதஜீவியும் தோன்றியிருக்கமாட்டான், ..... என்பதுபோன்ற வாதங்களுக்களுக்கான அவசியம்தான் என்ன?
ஜெர்மானிய வானவியல் பௌதிகவியல் விஞ்ஞானி ரெய்ன்ஹார்ட் ப்ரூயர் (Reinhard Breuer) அவர்கள், உயிர் தோன்றுவதற்கு சாதகமாக அமைந்த பௌதிக காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார்; அப்பட்டியல் கவனத்திற்குரியவகையில் எண்ணிக்கையில் கணிசமானதாகும்; அத்தனை எண்ணிக்கையிலான விபத்துக்கள் விபத்துபூர்வமாக நிகழ்ந்திருக்கவியலாது என்ற உணர்வை நாம் பெறுகிறோம். கிட்டத்தட்ட நம்மை மனதில் கொண்டே இயற்கைவிதிகளானவை அமைந்தது போல் உள்ளது என்கிறார். பாவம், ரெய்ன்ஹார்ட் ப்ரூயர், அவர் மானிட-மைய விதிக்கு ஆதரவாகப் பேசுபவராக இருக்கிறார்; தனது பார்வையை எடுத்துச்சொல்ல அவர் ஒரு முழு நீளப் புத்தகத்தையே எழுதியுள்ளார்!
மனிதனே பிரபஞ்சத்தின் மையம்
என்னைப்பொறுத்தவரையில், நானும் "மானிட-மைய விதி"யை ஆதரிப்பவனாகவே இருக்கிறேன். ஏனெனில், இப்போதைக்கு மனிதன்தான், ஒவ்வொரு தனிமனிதனும்தான், இப்பிரபஞ்சத்தின் மையம் ஆவான். ஆனால், இம்மையத்துவம் ஒருவகையில் முக்கியமானது; இன்னொரு வகையில், சற்று தற்காலிகமானது! எவ்வாறெனில், மனிதன் தோன்றுவதற்கும் நெடுங்காலத்திற்கு முன்னே, அதாவது, முதல் உயிர் தோன்றியபோது, அதை நாம் "அமீபா" என்று வைத்துக்கொள்வோம்; அந்த அமீபாதான் இப்பிரபஞ்சத்தின் மையமாகத்திகழ்ந்தது; அதாவது ஒட்டுமொத்தப் பிரபஞ்சப் பரிணாம இயக்கமும் அந்த அமீபாவை உருவாக்குவதில் தான் முனைப்பாகக் குவிந்திருந்தது எனலாம். அவ்வாறே, அமீபாவையடுத்து பரிணாமத்தில் வெளிப்பட்ட ஒவ்வொரு மேம்பட்ட உயிர்ஜீவியும் பிரபஞ்சத்தின் புதிய மேம்பட்ட மையமாக மாறிமாறி அமைந்தன.
பரிணாமத்தைப் பொறுத்தவரை, எவ்வொரு குறிப்பிட்ட உயிர்ஜீவியும், அது அறிவுக்கூர்மை கொண்ட ஜீவியாயினும், அல்லது மனிதனே ஆயினும், சிறப்புரிமை பெற்றதல்ல! மனிதன் உள்பட எல்லா ஜீவிகளுமே பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கை அடைவதற்கான கருவிகளே! ஆனால், மனிதஜீவியின் சிறப்பும், முக்கியத்துவமும், அவன் வழியாகத்தான், அவனைக்கொண்டுதான், அவனுள்ளேயும் ஊடேயுமாகத்தான் அந்த இறுதியான மையம், அல்லது அந்த ஒப்பற்ற இலக்கு அடையப்பட இருக்கிறது! ஏனெனில், மனிதனே உணர்வுப் பரிணாமத்தின் (Evolution of Consciousness) ஏகபோகக் களமாகத் திகழ்பவனாக அமைந்துள்ளான்! அதாவது, உணர்வுப் பரிணாமத்தின் உதயம் அவனுடன் அவனுள் தொடங்கி அவனுள்ளேயே முழுமையடைகிறது!
ஒரு குதர்க்கமான பார்வையில், “உயிர்-ஜீவிகள் எவ்வகைப்பட்ட பிரபஞ்சத்திற்கும் ஏற்றவகையில் தகவமைய முடியாதா என்ன, அதாவது, எவ்வாறு நாம் மாறி மாறி அமையும் இரவுக்கும் பகலுக்கும் தகவமைந்துள்ளோமோ அவ்வாறு? ஆக, இப்பார்வையின்படி நமது இருப்பு குறித்து ஆச்சரியப்பட ஒரு காரணமும், அடிப்படையும் இல்லை எனலாமா? ஒருவேளை எவ்வகைப்பட்ட பிரபஞ்சமாயினும் - மிகவும் தாறுமாறான விதிகள் மற்றும், மாறாத மதிப்புகளைக் கொண்டதொரு பிரபஞ்சத்திலும் - அதில் நமது இருப்பைப் பெற்றிருப்போமல்லவா!” இது வெறும் குதர்க்கமான பார்வை மட்டுமல்ல; மாறாக, படு அபத்தமானதாகும்; எவ்வகையிலென்றால், இது உயிர்-ஜீவி மற்றும் அதன் தோற்றம் பற்றிய மிகவும் மேலோட்டமான புரிதலை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது, உயிர்த்தோற்றம் என்பது வெறுமனே தகவமைதல் (Adaptation), மற்றும் உயிர்-பிழைத்திருத்தல் (Survival) ஆகியவற்றைச் சார்ந்தது என்பதாகக் காணும் மிகவும் மேம்போக்கான புரிதல்!
மானிட-மைய விதியை மறுப்பவர்களின் கூற்றின்படி, மானிட-மைய விதியின் வெவ்வேறுபட்ட எல்லாவகைப் பதிப்புகளும் (Versions) பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் தேடலை ஊக்கம் கெடுப்பதாய் உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மானிட-மைய விதியானது, பொய்ப்பிக்கத் தகுமையற்றதாக (Un-Falsifiable) உள்ளதென்றும், ஆதலால், அவ்விதி விஞ்ஞானபூர்வமான கோட்பாடு அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், பௌதிகப் பிரபஞ்சத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? இத்தகைய ஆக்கம்கெட்ட முனைப்புக்குச் சரியான பதிலடியாக, யூகோஸ்லாவிய தத்துவஞானியும், உளவியல் மேதையுமான மார்க்கோ ஊர்சாக் (Marko Uršič) அவர்கள், "பிரபஞ்சவியல் என்பது பரந்த வெற்றுவெளியில் பரவிக்கிடக்கும் உயிரில்லாத நட்சத்திரப் புழுதியைப் பற்றிய விஞ்ஞானம் அல்ல." ("Cosmology cannot be a science of dead stardust spread in the vast empty space") என்று கூறியுள்ளார்.
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, 'பிரபஞ்சமே பிரதானம்' எனும் கொடிய வாதத்தால் பீடிக்கப்பட்டவர்களாவர். பிரபஞ்சத்தை பிரதானப்படுத்தி, மனிதனை தேவையற்ற ஓரத்து நிகழ்வாகச் சுருக்கிக் காண்பதில் அவர்களுக்கு அப்படியொரு அலாதி ஆனந்தம்! இத்தகைய பார்வை பெரிதும் எந்திரத்தனமான, பொருண்மைவாதம் சார்ந்த மட்டுப்பாட்டின் வெளிப்பாடே ஆகும்! இம்மட்டுப்பாட்டை உதறிக்கடந்து முன்னோக்கிச்செல்லும்வரை விஞ்ஞானம் முழுமையாக விஞ்ஞானபூர்வமாக இருக்கப்போவதில்லை!
மானிட-மைய விதியின் ஒரு பதிப்பானது, "வலுவான மானிட-மைய விதி" (Strong Anthropic Principle, SAP) என வழங்கப்படுகிறது; அவ்விதி, "பிரபஞ்சமானது ஏதோவொருவகையில் அதன் வளர்ச்சிப் போக்கில் இறுதியாக உணர்வுள்ள, அறிவார்ந்த ஜீவிகளைக் கொணர்ந்திட வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உட்பட்டதாயுள்ளது." என்று கூறுகிறது. மானிட-மைய விதியின் இன்னொரு பதிப்பு, "வலுவற்ற மானிட-மைய விதி" (Weak Anthropic Principle, WAP) என வழங்கப்படுகிறது; இவ்விதி, "இறுதியாக உயிர்த்தோற்றத்திற்கு உறுதுணையாக அமைகிற பிரபஞ்சத்தில் மட்டும்தான் பிரபஞ்சத்தை அறியும் திறன்கொண்ட உயிர்கள் தோன்றக்கூடும்." என்கிறது. ஆனால், இவ்விதிகள் யாவும் மிகைக்கூற்றுகள், அல்லது வெள்ளிடைமெய் என கருதப்படுகின்றன; இக்கூற்றுகள் வெளிப்படையான உண்மைகளையே பேசுகின்றன, அவை புதிதாக எதையும் சொல்வதில்லை; மேலும், அவற்றைப் பொய்ப்பிக்கவும் வழியில்லாததால், அவை விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகள் அல்லவென்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறான மிகைக்கூற்றுக்களும், வெள்ளிடைமலை போன்ற ஒன்றை விவரிக்கும் கோட்பாடுகளும் ஏன் முன்வைக்கப்படுகின்றன?
ஏனென்றால், நம் விஞ்ஞானிகள் எதையுமே சுற்றிவளைத்துத்தான் புரிந்துகொள்வோம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பருப்பொருள் மாத்திரமே; ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் பருப்பொருள் மற்றும் பௌதிகவிதிகளின் சொற்களிலேயே புரிந்துகொள்வோம் என அடம் பிடிக்கிறார்கள்! ஆகவேதான் நாம் மானிட-மைய விதி போன்ற மிகைக்கூற்றுக் கோட்பாடுகளை முன்வைப்பதும், அவற்றைக்கொண்டு எந்திரவாத விஞ்ஞானத்தின் மட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயற்சிப்பதும் அவசியமாகிறது!
விஞ்ஞானிகள் எவ்வளவு குதர்க்கமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றான, "பிரபஞ்சமானது உயிர்த் தோற்றத்திற்கு உறுதுணையாக இருந்தாக வேண்டும்" என்பதைச் சோதித்துக் காணவேண்டும் எனில், அதற்குச் சான்றாக நம்முடைய பிரபஞ்சமல்லாத வேறு பிரபஞ்சங்களில் உயிர் தோன்றியிருக்கவேண்டும் என்கிறார்கள்! ஆனால், பெரும்பான்மையான விளக்கத்தின்படி வேறு பிரபஞ்சங்களை நம்மால் கண்டுகவனிக்க இயலாது. ஆக, "வலுவான மானிட-மைய விதி" (SAP)யின் கூற்றைப் பொய்ப்பிக்க இயலாததால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது" என்கிறார்கள்!
அடுத்து, "நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாயிருந்தால், நாம் இப்போது இங்கிருக்கமுடியாது. ஆனால், நமது பிரபஞ்சம் வேறு வகைப்பட்டதாக இல்லையாதலால், நாம் இங்கிருக்கிறோம்!" என்பது போன்ற தர்க்கங்களும் பயனற்றவையாகும்! ஏனென்றால், இங்கு ஒரு முழும்பிரபஞ்சமே இருப்பதால், அதன் பகுதியாக இருந்துகொண்டுதான் நாம் வேறுவகைப்பட்ட பிரபஞ்சங்களைப் பற்றியும்; இன்னும் சில சமயங்களில் ஒன்றுமில்லாத நிலை பற்றியும் பேசுகிறோம்! மேலும், நம்மையும் பிரபஞ்சத்தையும் பிரிக்கஇயலாது! இதன் அர்த்தம் நாம் இப்பிரபஞ்சத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையாகவும் இருக்கிறோம்; மேலும், நாம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையின், விதிமுறைகளின் பகுதியாகவும், தொடர்ச்சியாகவும் இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழிமுறைகளையும், விதிமுறைகளையும் கற்பனைசெய்வது பயனற்றது! அனந்த கோடி பிரபஞ்சங்களை நம் கற்பனைகளில் விரித்துக் காணலாம்; அதனால், நமது எதார்த்த நிலை ஒரு சிறு இம்மியளவும் மாறப்போவதில்லை!
ஒரு பார்வையில், பிரபஞ்சத்திற்கு உயிருள்ள ஜீவிகளையும், உணர்வுள்ள மனிதஜீவிகளையும் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயமோ, அல்லது அவை தோன்றுவதற்கு உறுதுணையாக அமைந்தாக வேண்டிய அவசியமோ இல்லை எனக்காண இடமுண்டு எனலாம். ஆனால், ஒரு கட்டத்தில், பிரபஞ்சமானது தன்னைத்தானே அறியும்வகையில் உணர்வு பெறவில்லை எனில், அதன் இருப்பிற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆக, பிரபஞ்சமானது பரிணாமம் எனும் சுய-அமைப்பாக்க (Self-Organization) வழிமுறையில் உணர்வுபெறும் வகையில், முதலில் உயிர்-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, புலன் உணர்வு நிலையை எட்டியது, அதையடுத்து மேற்கொண்ட பரிணாம முயற்சியின் விளைவாக, அது மனித-ஜீவியின் வடிவமைப்பை, அதாவது, சுய-உணர்வு நிலையை வந்தடைந்தது! இவ்வாறு வந்தடைவது என்பது தவிர்க்கவியலாததாகும்.
அதேவேளையில், உயிர்-ஜீவி, மற்றும், மனிதஜீவியை அடைவது பிரபஞ்சத்தின் பிரதான நோக்கமோ, இறுதி இலக்கோ அல்ல! மாறாக, அதன் ஒரே பிரதான இலக்கு முழுமையான உணர்வுநிலையை அடைவதே! மேலும், மனிதனின் வழியாக தற்போது எட்டப்பட்டுள்ள உணர்வு நிலை இறுதியானதோ, முழுமையானதோ அல்ல! ஆயினும், உணர்வின் உச்ச நிலையான முழு-உணர்வுநிலையும் மனிதனைக்கொண்டே, மனிதனின் வழியாகவே சாதிக்கப்பட இருக்கிறது! இதுவே பிரபஞ்சப் பரிணாம வழிமுறையின் அடியோட்டமான திட்டம் ஆகும். இவ்வகையில், மானிட-மைய விதி மட்டுமல்ல, டார்வினின் 'இயற்கைத்தேர்வுக்கு' மாற்றாகக் கொள்ளப்பட வேண்டிய "இலக்கு நிலைத் தேர்வு" (Teleological Selection) முறையும் பொருத்தமானதே ஆகும்.
மானிட-மைய விதியின் வலுவான பதிப்போ(SAP), வலுவற்ற பதிப்போ(WAP), இன்னும் அதன் பல்வேறுபட்ட பதிப்புக்களின் அடிப்படை அம்சம் என்னவென்றால், அவை பிரபஞ்சத்தில் மனிதனின் மையத்துவத்தையும், அவனது முக்கியத்துவத்தையும் சுட்டுகிறது என்பதொன்றே ஆகும்! ஆனால், சிலர், "மானிட இருப்பு என்பது விளக்கம் அளிக்கப்படவேண்டிய பலவகைப்பட்ட அம்சங்களின். பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்ற ஒன்றுதான்!" என்கிறார்கள்.
ஆனால், மானிட இருப்பு என்பது பிற பலவகைப்பட்ட அம்சங்களின், பொருட்களின், பண்புகளின் இருப்பைப்போன்றதல்ல. மேலும், மானிட இருப்பு என்பது எத்தகையது என்பதைக் கொண்டே மானிடனின் முக்கியத்துவம் கணிக்கப்படவேண்டும்; ஆக, மானிட இருப்பானது பலவகைப்பட்ட அம்சங்களில் அதுவும் ஒன்று என்பதாக இருக்கமுடியாது! ஏனெனில், இருப்பு (Existence) என்பது ஒருபடித்தானதல்ல. இருப்பு என்பதை இருக்கின்ற பொருட்களின், பண்புகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்திக் காண முடியும். இருப்பதெல்லாம் இருப்புதான் என பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது! அனைத்துப் பொருட்களையும், அம்சங்களையும் அவற்றின் பண்புகளுக்கு ஏற்ப கிட்டத்தட்ட மூன்று வகையினங்களில் அடக்கிவிடலாம். ஒன்று, சட-இருப்பு (Inorganic Existence); இரண்டாவது, உயிர்-இருப்பு (Organic Existence); மூன்றாவது, உணர்வு-இருப்பு (Psychic Existence). இம்மூன்று வகைகளும் வெறும் இருப்பு நிலைகள் மட்டும் அல்ல; மாறாக, இவை பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளும், வெவ்வேறு தளங்களும் ஆகும். ஒன்றிலிருந்து மற்றொன்று பண்பிலும், தரத்திலும் உயர்வானது, மேலானது.
ஒரு கட்டம்வரை இம்மூன்று இருப்புநிலைகளும், தளங்களும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையே எனக்காண இடமுண்டு என்றாலும், ஒவ்வொரு உயர்-வளர்ச்சி நிலைக்குள்ளும் அதற்கு முந்தைய நிலைகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும். அதாவது உள்ளடக்கப்பட்டதாகவும்; முந்தைய நிலைகளை அடுத்தடுத்த உயர்-நிலைகள் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அமைந்ததாகும். இதன் அர்த்தம் பரிணாமத் தொடரில் இறுதியாக எட்டப்படும் நிலையில் முந்தைய நிலைகள் யாவும் உள்ளடக்கப்பட்டு பிரபஞ்சத்தின் ஒருமையும் முழுமையும் அந்த ஒற்றை இறுதி நிலையில், அந்த ஒற்றைப் புள்ளியில் எட்டப்படும்! எந்தப் புள்ளியிலிருந்து இப்பிரபஞ்சம் வெடித்துத் தோன்றியதோ அந்தப்புள்ளி!
அப்புள்ளியைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் வெறும் குறியீடு (Symbol) மாத்திரமே! பிரபஞ்சத்தின் சாரமான (விதை போன்ற) அந்தப்புள்ளியில், நாம் காணும் பிரபஞ்சம் இடம்பெறாது! இப்புரிதலிலிருந்து காணும்போது, இறுதியில் அப்புள்ளி மட்டுமே முக்கியமானது; அப்புள்ளியை நோக்கிய நிகழ்வுமுறையே பிரபஞ்சம் என்பது. நாம் அந்த வழிமுறையின் உணர்வுப் பூர்வமான பிரதிநிதிகள் ஆவோம்.
முதலிடத்தில் நாம் ஏன் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்? அதற்கான அடிப்படை அவசியம் என்ன? நாம் இருக்கிறோம்! ஆகவேதான் பிரபஞ்சத்தைப்பற்றி நாம் ஆராய்ந்து அறிந்திட விழைகிறோம்! நாம் இல்லாத நிலையில் பிரபஞ்சத்தைப்பற்றி நமக்குக் கவலையில்லை! அதேவேளையில், நாம் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. இரண்டையும் வேறுவேறாகப் பார்ப்பது என்பது, ஒரே நிகழ்வுமுறையின் வெவ்வேறு கட்டங்களை, வளர்ச்சி நிலைகளைத் தனித்தனியே காண்பதன் வழியாக மட்டுமே எழுகிறது.
பரிணாமம் என்றால் என்ன, பரிணாமத்தில் பரிணமிப்பது எது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாதவரை, பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில், உயிர்-ஜீவிகளைப் பற்றியும், இன்னும் அறிவுக்கூர்மையுள்ள ஜீவிகளான நம்மைப்பற்றியும், இன்னும் எதைப்பற்றியுமே நாம் உருப்படியாகப் புரிந்துகொள்ள இயலாது! பிரபஞ்சம் என்பது ஒரு பொதுவான சொல் ஆகும். பிரபஞ்சம் என்றாலே உடுமண்டலங்கள் (கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள், கிரகங்கள்; இன்னும் பலவகைப்பட்ட பருப்பொருளாலான பொருட்கள், மற்றும் நிகழ்வுகள்தான் என்பதாகப் பார்க்கும் பார்வை பழமையானதாகும். இப்பார்வை, பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் எந்திரமாகவும், பருப்பொருளின் பிரும்மாண்டமான அமைப்பாகவும் காண்கிற மட்டுப்பாட்டினால் விளைந்ததாகும்! இவ்வாறு காண்பதற்கான ஒரு பக்கத்தையும், தேவையையும் பிரபஞ்சம் கொண்டிருக்கிறது என்ற போதிலும், பிரபஞ்சம் என்பது பிரதானமாக ஒரு பரிணாம இயக்கமே, நிகழ்வுமுறையே ஆகும்.
பிரபஞ்சத்தைப்பற்றி ஆராயும் விஞ்ஞானிகள், வெளி-காலம் (Space-Time), முப்பரிமாணம், நாற்பரிமாணம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், புறத்தே வியாபித்திருக்கும்
பிரபஞ்சத்தின் வெளி-காலமானது, உணர்வுள்ள மனிதஜீவிகள் தோன்றியபிறகு, உணர்வார்ந்த மனிதனின் உணர்வில் (Consciousness) குவிந்து, மேன்மேலும் குறுகி, வெளியும், காலமும் அற்ற தனி நிலைப்பாடு (Singularity) எனும் புள்ளியில் அடர்ந்து ஐக்கியமாகிவிடுகிறது! இதை நாம் பிரபஞ்சத்தின் செறிவடைவுக் கட்டம் (Conflationary Stage) என்றழைக்கலாம்.
இறுதி மானிட-மைய விதி
மானிட-மைய விதியின் மற்றுமொரு பதிப்பு, இறுதி மானிட-மைய விதி (Final Anthropic Principle) என வழங்கப்படுகிறது. பேர்ரோ & டிப்லர் (Barrow & Tipler) அவர்கள் முன்வைத்த மிகவும் அதீதமான இவ்விதியானது, அறிவுள்ள உயிர்கள் பிரபஞ்சத்தின் மிக அவசியமான ஒரு பண்புக்கூறு என்கிறது. மேலும் ஒருமுறை அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் பிறகு ஒருபோதும் இற்றழியாது என்கிறது. மேலும், மானிட-மைய விதியின் இப்பதிப்பானது, பிரபஞ்சத்தின் ஒரே குறிக்கோள் அறிவுள்ள உயிர்களை உருவாக்குவதும், அவற்றைப் பேணிக்காப்பதும் தான் எனச் சொல்லாமல் சொல்கிறது.
"அறிவுள்ள உயிர்கள் எதிர்காலத்தில் ஒரு நாள் அண்டவெளி முழுவதும் பரவிச் சென்று பிரபஞ்சத்தையே மாற்றியமைத்திடும்; அவ்வழியே, மானிடகுல மதிப்புகளை மிகத்தொலைவான எதிர்காலத்திற்கு ........ஓமேகா புள்ளி (Omega Point) எனப்படும் இறுதி ஒருமை நிலைக்குக் கடத்திச்செல்லும்.... .......அந்நிலையில், அறிவுள்ள உயிர்கள் அனைத்து பருப்பொருளையும், ஆற்றல்களையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்திடும்..." என்றெல்லாம் 'இறுதி மானிட-மைய விதி' விரிகிறது.
ஆனால், நாம் 'பிரபஞ்சம்' எனும் ஒரு பிரும்மாண்டமான மரத்தின் பகுதியாக - துல்லியமாகச் சொன்னால், அம்மரத்தின் பிஞ்சுகளாகவும், காய்களாகவும் - இருந்துகொண்டு, அம்மரத்தின் மூலத்தை அறியும் நோக்கில் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நம்மில் சிலர், அம்மரத்தின் வேர்களைத் தேடிச்சென்று, வேர்களிலிருந்துதான் அம்மரம் தோன்றியது என்கிறோம்! இன்னும் சிலர், இல்லை, இல்லை, 'கடவுள்'தான் அம்மரத்தைத் தோற்றுவித்தவர் என்கிறோம்! ஆனால், இந்த இரண்டு பார்வைகளும் தவறானவை; மாறாக, அம்மரமானது ஒரு வித்திலிருந்துதான் தோன்றியது; அந்த வித்தை - பிஞ்சுகளாகவும், காய்களாகவும் விளங்கும் நாம் ஒவ்வொருவரும் முற்றிக் கனியாவதன் வழியாக, நம்முள்ளேதான் கண்டடைய முடியும் என்கிறோம்! இந்த உவமையில் இடம்பெறும் பிஞ்சு, காய், கனி, வித்து என்பவை உணர்வின் வளர்-முகமான உயர் நிலைகளைக் குறிக்கின்றன!
ஒருவகையில், இந்த ‘இறுதி மானிட-மைய விதி’ யானது மானிடர்களின் மையத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது என்றாலும், அதன் கூற்றுக்கள் அதீதக் கற்பனை சார்ந்ததாக உள்ளன. மேலும், அவை பெரிதும், பிரபஞ்சத்தின் பொருண்மையான பண்புகளையும், பௌதிக விதிகளையும் அடிப்படையாகக் கொண்டமைந்தவையாக உள்ளதாலேயே மிகவும் தவறான கருதுகோள்களுக்கும், கற்பனையான முடிவுகளுக்கும் இட்டுச்சென்றுள்ளன. குறிப்பாக, ஒருமுறை தோன்றிய அறிவுள்ள உயிர்கள், அதாவது அவற்றின் சந்ததிகள் பிறகு எல்லாக் காலத்திற்கும், பிரபஞ்சம் முடியும் வரையிலும் நீடித்து நிலைத்திருக்கும் எனப்படுகிறது! இத்தகைய கூற்று, அறிவுள்ள உயிர்களின், குறிப்பாக மனிதஜீவிகளின் தனித்துவமிக்க தன்மையை அறியாததன் விளைவாகவும்; முக்கியமாக, பரிணாமம் பற்றிய ஆழமான புரிதலின்மையின் விளைவாகவும் எழுந்த கற்பனைக் கோளாறு ஆகும். ஒரு தனிமனிதனை எடுத்துக் கொண்டால், அவன் அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகள், அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே இப்பூமியில் உயிர்வாழ்பவனாக இருக்கிறான்; ஆயினும், அவன் அக்குறுகிய வாழ்காலத்திற்குள்ளாகவே தனது பரிணாம முழுமையை அடைவதற்கான உட்பொதிவை, உள்ளுறையாற்றலைக் கொண்டவனாகத் திகழ்கிறான்!
பிரபஞ்சம் என்பது அடிப்படையில் ஒரு பரிணாம இயக்கம் என்று நாம் குறிப்பிட்டுள்ளோம். அதில் மனிதன் என்பவன் அப்பரிணாம வழிமுறையின் உணர்வுப்பூர்வ பிரதிநிதியாவான்! துல்லியமாகச் சொன்னால், மனிதனின் வழியாக, இன்னும் ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகத்தான் பிரபஞ்சமானது தனது ஒப்பற்ற பரிணாம முழுமையை எட்டுகிறது. அதாவது, பருப்பொருளாலான பிரபஞ்சத்தின் இறுதி முடிவு, எவ்வாறு அமையும் - ஒரு மாபெரும் உள்ளடர்தலில் (Big Crunch) முடிவடையுமா, அல்லது முற்றிலும் தனது வெப்ப ஆற்றலை இழந்து வெப்பச்சாவில் (Heat Death) முடிவடையுமா என்பது போன்ற அனுமானங்கள் தேவையற்றவையாகும்! ஏனெனில், இத்தகைய அனுமானங்கள் பருப்பொருளின் அடர்த்தி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுபவையாகும். அதாவது, பிரபஞ்சத்தை முழுக்க முழுக்க பருப்பொருளின் பண்புகள் மற்றும் பௌதிக விதிகளுக்குச் சுருக்கிக் காணும் மாபெரும் மட்டுப்பாட்டின் மயக்கத்திலிருந்து இன்னமும் விஞ்ஞானம் விடுதலையாகவில்லை!
பருப்பொருள் என்பது பிரபஞ்சத்தின் ஒரேயொரு பண்பு மட்டும்தானே தவிர அதுவே ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அல்ல! இன்னும் சொல்லப்போனால், பருப்பொருளை ஒரு பண்பாகவே கணக்கில் கொள்ள இயலாது. சரியாகச் சொன்னால், அது வெறும் ஒரு கட்டுமானப் பொருள் மாத்திரமே; அதைக்கொண்டு அமையும் கட்டுமானங்களின் மூலம் வெளிப்படக் கூடியவற்றையே (Emergent properties) -உயிர், உணர்வு (Consciousness) ஆகியவற்றையே- முறையான பண்புகளாகக் கொள்ளவேண்டும். இவ்வழிமுறையின் மூலமாக இறுதியாக எட்டப்படும் ‘வெளிப்படு-பண்பு’ தான் “இறுதி மெய்ம்மை” (Ultimate Reality) ஆகும்! அதுவே “மூல மெய்ம்மை”யும் (Source Reality) ஆகும்!
பிரபஞ்சம்' என்பது பரிணாம வழிமுறையில் ஏற்கனவே உருப்பெற்றவை அனைத்தையும், இன்னும் உருப்பெறாத அம்சங்களையும், பண்புகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தத்தையும் குறிக்கும் பொதுவான ஒரு ஒற்றைச் சொல் ஆகும். பிரபஞ்சம் என்பது பல்வேறுவகைப்பட்ட அண்டவெளிப் பொருட்களும், நிகழ்வுகளும் மட்டுமே அல்ல. மாறாக, அத்தனை அண்ட வெளிப்பொருட்களும், நிகழ்வுகளும் சுய-அமைப்பாக்கம் (Self-Organization) எனும் வழிமுறையின் வாயிலாக உருவானவையே என்பதால், அடிப்படையில் பிரபஞ்சம் என்பதை ஒரு பரிணாம இயக்கமாகக் காண்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி, நெடிய இடைப்பட்ட நிலைகளின் வழியாக வளர்ந்து, ஒரு முடிவான இலக்கு அல்லது முழுமை நிலையை அடையும் நிகழ்வுமுறை தான் பிரபஞ்சம் ஆகும்! ஒரு நெடிய சங்கிலித்தொடர் போன்ற நிகழ்வுமுறையில் குறிப்பிட்ட எவ்வொரு கண்ணியை, அல்லது, நிலையை; அல்லது எவ்வொரு பண்பையும், இதுதான் பிரபஞ்சம் என அடையாளப்படுத்திட முடியாது - அந்நிகழ்வுமுறையின் இறுதியான இலக்கு நிலையைத் தவிர! மரமானது அதன் கனியைக்கொண்டே அறியப்படும் என்பதுபோலத்தான் பிரபஞ்சமும். சிலர் காய்க்காத மரங்களும் உள்ளனவே என வாதம் செய்யலாம். ஆனால், காய்க்காத மரங்களைப் பற்றி அதன் காய்கள் எவ்வாறு பேசமுடியும்?
பிரபஞ்சத்தின் பிறப்பைப்போலவே, அதன் இறப்பும் பூடகமானதாகும்! அவ்வாறானதே மனிதனின் பிறப்பும், இறப்பும்! மனிதன் பிறக்கும்போது தனது உண்மையான (தன்னை உணரக்கூடிய முழுமையான) நிலையில் இருப்பதில்லை! அவ்வாறே மனிதன் இறக்கும்போதும் உணர்வுடன் இரு(ற)ப்பதில்லை! உண்மையான முழு-உணர்வுகொண்ட மனிதன் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு உச்சக்கட்டத்தில்தான் தோன்றுகிறான்; அல்லது பலரது விடயத்தில் அத்தகைய உச்சக்கட்டம் தோன்றுவதேயில்லை! இவ்வாறே, பிரபஞ்சத்தின் உச்சக்கட்டமும் அதனுடைய பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே முறையே தனது உச்சக்கட்டத்தை எட்டுகின்ற ஒவ்வொரு தனிமனிதனின் வழியாகவும்தான் நிகழ்கிறது! ஆக, பிரபஞ்சமானது இறுதியில் எவ்வாறு அழியும், அல்லது முடிவுக்கு வரும் என்பது குறித்த பருப்பொருள்சார்ந்த விஞ்ஞானக் கற்பனைகளில் நேரத்தை விரயமாக்குவது பயனற்றதாகும்!
பிரபஞ்சத்திற்கும், அறிவுள்ள ஜீவிகளுக்கும் (மனிதஜீவிகளுக்கும்) உள்ள தொடர்புகுறித்த விடயத்தில், அறிவுள்ள ஜீவிகள் பரந்த இப்பிரபஞ்சத்தின் மீது எவ்விதமான தாக்கத்தையும் செலுத்துவதான தடயம் எதுவும் இல்லை என விஞ்ஞானிகள் பேர்ரோ & டிப்ளர் இருவரும் தங்கள் நூலில் போகிறபோக்கில் ஒரு கருத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். ஆனால், இக்கூற்று மேலோட்டமான ஒன்றாகும். ஒரு மரத்தில் விளையும் ஒவ்வொரு கனியும் மறைமுகமாக பெரும் தாக்கத்தை அம்மரத்திற்குச் செய்கின்றது; அதாவது ஒவ்வொரு கனியும் அம்மரத்தின் முழுமையைச் சாத்தியமாக்குகின்றது! அவ்வாறே, பிரபஞ்சத்தின் மீதான அறிவுள்ள ஜீவிகளாகிய மனிதர்களின் தாக்கமும் மறைமுகமானதாகும்! மனிதஜீவிகள் தங்கள் தாக்கத்தை நேரடியாக பருண்மையாக பரந்த பிரபஞ்சத்தின் மீது செய்யத்தேவையில்லை. ஏற்கனவே இங்கு பூமிக்கிரகத்தின்மீது விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு நாம் செலுத்தியுள்ள பெரும்தாக்கங்கள் நமக்கும் பிறஜீவிகளுக்கும் மிகக்கேடான சுற்றுச்சூழல்சார்ந்த விளைவுகளை உருவாக்கியுள்ளன. கிட்டத்தட்ட நாமும், பிற உயிர்ஜீவிகளும் இற்றழியும் நிலைக்கு நாம் காரணமாகியுள்ளோம்! இந்நிலையில் நாம் பிற கேலக்ஸிகளையும் காலனியாக்குவது என்பதும் பிரபஞ்சம் முழுவதும் பரவி பருப்பொருளையும் பிற இயற்கை ஆற்றல்களையும் நம்முடைய முழுக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவது என்பதும் கற்பனைக் கோளாறாகும்! இது அறிவுள்ள ஜீவிகளுக்கு அழகல்ல!
ஆக, மேற்காணும் விளக்கங்களின்படி, ‘இறுதி மானிட-மைய விதி’யின் பிரதான கருதுகோளான 'அறிவுள்ள தகவல்-முறைப்படுத்தும் (Intelligent information-processing) ஜீவிகள் பிரபஞ்சத்தில் தோன்றுவது கட்டாயம்; அவ்வாறு அவை ஒருமுறை தோன்றிடும் பட்சத்தில், அவை ஒருபோதும் மரிப்பதில்லை' என்பது மிகவும் அதீதமானதொரு நிலையாகும்; ஆகவே, அதற்கு அவசியமில்லை என்றாகிறது. ஏனெனில், முடிவேயில்லாமல், தகவல்-முறைப்படுத்துதல் என்பது தேவையற்றதாகும். அதாவது, தகவல்-முறைப்படுத்துதலுக்காக தகவல்- முறைப் படுத்துதல் (Information-processing for the sake of itself) என்பது அபத்தமானதாகும். தகவல்-முறைப்படுத்துதலின் நோக்கம் அறிவைப் பெறுவதற்காகத்தான். எதைப்பற்றிய அறிவு என்றால், இறுதி மெய்ம்மை பற்றிய அறிவுதான் - பிரபஞ்சம், மனிதன், வாழ்க்கை என ஒட்டுமொத்தத்தின் அர்த்தம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை அறிவதுதான்! அதற்காக ஒருவன் அனந்த காலம் வாழ்ந்துகொண்டிருப்பது என்பது சாபக்கேடான நிலையாகும்! ஆம், இறுதி மெய்ம்மையை, அர்த்தத்தை ஒவ்வொருவனும் தன் வாழ்-காலத்திற்குள்ளாகவே உணர்ந்தறிந்து தன் பரிணாம முழுமையை அடைந்திட முடியும்!
--- எழுத்தாளர்.மா.கணேசன்
நன்றி : திரு நேயம் சத்யா, தத்துவங்களத் தேடி, வாட்ஸ்அப் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக