18 ஜூலை, 2020

ஓங்கார நிலை - வேதாத்திரி மகரிஷி

*வாழ்க்கை மலர்கள்: 
ஜூலை 17*

*ஓங்காரம்*

சப்தத்தின் மூல நிலையை “ஓம்” என்ற சொல்லால் உணர்த்துகிறார்கள். “ம்” என்னும் எழுத்தின் மூலம் தான் ஓங்காரத்தின் ஓர் இயல்பைப் பிறருக்கு உணர்த்த முடியும் என்று நினைத்தவர்கள் “ம்” என்ற சப்தம் எழாமல் இருக்க அதை ஞாபக அளவில் உணர்ந்து கொள்ளும்படி விளக்கம் செய்தார்கள்.

இசையின் விரிந்துயர்ந்த உச்ச நிலையை உணர்த்த உயிரெழுத்தாகிய “ஓ” வின் மூலம் சப்தத்தை எழுப்பி, உயர்த்திக் காண்பித்தார்கள். இசையின் ஒடுக்க நிலையை “ம்” என்ற ஒலியை அளவில் படிப்படியாகக் குறைத்துக் குறைத்து இசைத்துப் பின் மௌன நிலையில் நினைப்பாகக் காட்டினார்கள். இவ்வாறு சப்தத்தின் விரிவு நிலை ஒடுக்க நிலை இரண்டையும் முற்காலத்தவர்கள் விளக்கி வைத்தார்கள்.

புலணுணர்ச்சிகளிலே, அறிவைச் செலுத்தி, நாத தத்துவத்தை அறிவிலே விரிவும், தெளிவும் பெறாத பக்தனுக்கு ஒருவாறு விளக்க அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஓசையின் உச்ச நிலையை உணர்த்தும் “ஓ” என்ற ஒலியையும், எழுத்தையும் ஓ – ம் [ஓஓஓஓம்] என்று ஒலித்துக் காட்டினார்கள். அவைகளை ஏடுகளில் “ஓம்” என்ற எழுத்துக்களாக எழுதிக் காண்பித்தனர்.

அந்த இரண்டு ஓசையும் சேர்ந்து “ஓம்” என்ற தனி ஓசையாயிற்று. அந்த இரண்டு எழுத்தும் சேர்ந்து ஒரு புதிய “ஓம்” என்ற ஒரு கூட்டு எழுத்தாயிற்று. ஆகையால் “ஓம்” என்பது ஒரு சங்கேதம் – குறிப்பு (Symbol) ஆகும். ஆகவே “ஓம்” என்ற ஓசைக்கோ, சொல்லிற்கோ எந்தத் தனிச் சிறப்போ, மதிப்போ கிடையாது. புத்தகத்திலுள்ள கருத்தை அறிந்த பின், புத்தகம் மற்றவர்களுக்குத் தேவையாகும் என்று அதைப் பத்திரப்படுத்தி வருகிறோம். அதுபோல் தான் “ஓம்” என்ற சொல்லும் நிலைத்து வருகிறது; தொடர்ந்து வருகிறது.

அந்த ஓங்கார நிலையை உணர்த்துவதற்கும் “ம்” கூடத் தேவையில்லை. இது போன்ற [.] புள்ளியே போதுமானது. தனிப்புள்ளியில் உச்சரிப்பு ஓசையானது எப்படி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று கூர்ந்து உணர்ந்து உணர்ந்து ஓங்காரத்தின் இயல்பை நன்றாய் அறிந்து கொள்ளலாம்.

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
    🔔 ▶️ www.youtube.com/SkyVethathiriyaGnanakkudil 🔔

கருத்துகள் இல்லை: