28 டிச., 2022

குட்டிக்கதை

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் பாண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு வரலாம் என்று நினைத்தார் கிருஷ்ணர். உடனே புறப்பட்டு காட்டுக்கு போனார். அவர்களைப் பார்த்தார். அவர்களோடு ஓர் இரவு தங்கினார்.
அப்போது பாண்டவர்கள் அவருக்கு காவல் காத்தார்கள். இரவு காவல் ஒருவர் மாறி ஒருவர் கண் முழித்துக் காவல் காக்க வேண்டும். ஆளுக்கு கொஞ்ச நேரம். முதலில் அர்ஜுனன் காவல் காத்தான். எல்லோரும் தூங்குகிறார்கள். அவன் மட்டும் முழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது எதிரில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. உற்றுப் பார்த்தான் அது ஒரு பூதம். அது எதிரில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்தது.
இவன் நேரம் முடிந்தது.
அடுத்தபடியாக நகுலன் காவல் காக்க வந்தான். இப்போதும் அந்த பூதம் கண்ணில் பட்டது.ஆனால் அது முதல் இருந்ததை விட கொஞ்சம் பெரிதாக தெரிகிறது. இவனுக்கு அடுத்தபடியாக சகாதேவன், பீமன், தருமன் இப்படி மாறி மாறி காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். வர வர பூதத்தின் வடிவம் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஒவ்வொருவரும் அதை கொல்ல முயற்சி செய்தார்கள்.
இரவு காவல் பணியிலே பாண்டவர்கள் மாறி மாறி ஈடுபடுவதை பார்த்தார் கிருஷ்ணர். தர்மரைப் பார்த்து கேட்டார் இந்த காவல் பணியில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாதா? நானும் கூட சிறிது நேரம் கண் விழித்து காவல் காக்கிறேன் என்றார்.
செய்யுங்களேன். இந்த உலகத்தையே பாதுகாப்பதும் நீங்கள் தான். பாண்டவர்களை பாதுகாப்பது நீங்கள் தான். இந்த பாதுகாவல் பணியில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை வேண்டாம் என்று சொல்ல நாங்கள் யார் என்றார்.
ஒவ்வொருவராக காவல் காத்து முடிந்ததும் இப்போது கிருஷ்ணர் வர வேண்டிய முறை காவலுக்கு கிருஷ்ணர் புறப்பட்டார்.
இப்போது தருமர் சொன்னார் கிருஷ்ணா காட்டில் ஒரு பெரிய பூதம் இருக்கிறது. அது வரவர பெரிதாகிக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கும் அதனால் நீங்கள் போகாமல் இருப்பது நல்லது என்றார்.
அதற்கு கிருஷ்ணர் சொன்னார் இப்படி என் மேல் உனக்குச் சந்தேகம் வரலாமா? ஏன் இப்படிப்பட்ட சந்தேகம். அது உன்னுடைய பலவீனம். நான் நிச்சயமாக காவல் செய்யத்தான் போகிறேன் என்றார்.
நடு இரவு இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரைக்கும் அவருடைய நேரம். 3 மணிக்கு மேல் அர்ஜுனன் வரவேண்டும் அதனால் மூன்று மணிக்கு அர்ஜுனன் வந்து பார்க்கிறான் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டு இருக்கிறார். அவன் எதிரில் பார்க்கிறான். பூதத்தையும் காணவில்லை. பிசாசையும் காணவில்லை.
அர்ஜூனன் கேட்கிறான் கிருஷ்ணா நீ அந்த பூத அரக்கனை அழித்து விட்டாயா? 
இப்போது கிருஷ்ணர் சொல்கிறார். அர்ஜுனா நான் எந்த பூதத்தையும் பிசாசையும் அழிக்கவில்லை.
என் கண்ணுக்கு அப்படி எதுவுமே தெரியவில்லை. எல்லாமே நம்முடைய பிரதிபலிப்புதான். நம்முடைய கோபம் தான் நமக்கு முன் அரக்கத்தனமாக காட்சியளிக்கிறது.எவ்வளவுக்கு எவ்வளவு கோபம் அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு சமமாக அதுவும் வளர்கிறது. எனக்கு யார் மீதும் கோபமோ வெறுப்போ இல்லை.
உண்மையிலே நமக்கென்று யாரும் எதிரிகள் கிடையாது நம்முடைய குணங்கள் தான் நமக்கு எதிரிகள். உள்ளே இருக்கிற உணர்வுகள் தான் நமக்கு பிரதிபம்பமாக வெளியே தெரிகிறது. வெறுப்பே இல்லாமல் எல்லாத்தையும் அன்பால் நிரப்பும்போது நம் கண் முன்னால் அன்புதான் தெரியும். அரக்கன் தெரிய மாட்டான் என்கிறார் கிருஷ்ணர். இதை எல்லாம் சரியாக புரிந்து கொண்டால் எல்லோரும் இன்பமாக வாழலாம். 

கருத்துகள் இல்லை: