18 பிப்., 2023

நூல் நயம்

"கீதை நிழலில் "
எஸ் பொ. மித்ரா வெளியீடு .
முதல் பதிப்பு 2000 விலை ரூபாய் 75.
 மொத்த பக்கங்கள் 216.

        எஸ்.பொன்னுத்துரை புகழ்பூத்த தமிழ் எழுத்தாளர்.  படைப்பிலக்கியக் கர்த்தா: மார்க்சிய சிந்தனையாளர் ஆவார். இவர் கீதை நிழலில்' எனும் நூலை படைத்தது வியப்புரைக்கு உரியதாகும்.

         மட்டக்களப்பினைத் தமது இல்லற பூமியாக்கிக் கொண்ட எஸ்.பொ. சுவாமி விபுலானந்தர் வழியே வேதாந்த
சிந்தனைகளையும், அவற்றின் மற்றொரு பரிமாணமான பகவத் கீதைச் சிந்தனைகளையும் அறிமுகம் செய்துள்ளார். ஆனாலும், அவர் ஒரு மார்க்சியவாதி. படைப்பிலக்கியக் கர்த்தா என்கிற உரிமைகளையும் விட்டுக்கொடுக்கவில்லை.

        கடுங்கோடை வெப்பத்தில் பயணிக்கும் ஒருவன் குளிர் நிழலைத் தேடி அலைய முற்பட்டது போல எஸ்.பொவும் கீதையின் நிழலில் அமைதி பெற விழைந்தார். மார்க்சியத்தில் தோய்ந்தவர் உள்மனப் போராட்டக் குழப்பங்களைத் தீர்த்துத்க் கொள்ள "போர்க்களத்திலே பிறந்த மெய்ஞானக் கீலதயை நாடினார்.
      இந்த கீதையின் நிழல் தேடலை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கு அவரே "விதை" எனும் முன்னுரையில் விடையளித்துள்ளார்.

ஒரு சமயம் என் மனத்தினை பாரிய சஞ்சலம் உலைக்கலாயிற்று. அதனைப் போக்க மார்க்கம் என்ன என மனம் அலையலாயிற்று. அப்பொழுது பகவத் கீதையே என் நினைவில் எழுந்தது. மீண்டும் அதனுடன் கலக்க வேண்டும் என்ற ஆசை முற்றியது. கீதையின் படனம் வேர் கொண்டது. கீதையிலே ஒன்ற ஒன்ற என் மனம் இலேசாகியது என்பது சத்தியம்"

       கீதைக்குப் பல்வேறு நோக்குகளில் உரைகளும் விளக்கங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆதி சங்கரர் அத்வைத நோக்கிலும், இராமானுஜர் விசிஷ்டாத்வைத நோக்கிலும், மத்வர் துவைத நோக்கிலும் உரைகள் கண்டுள்ளனர். மரபுவழிபட்ட நோக்கில் இருந்து விலகி கீதையை மனதில் நிகழும் நன்மை - தீமைப் போராட்டமாக உருவகப்படுத்தி அதற்கு அனாசக்தி யோகம்' என்றும் பெயரிட்டார் காந்தியடிகள்.

      .. "கீதை. சூத்திரங்கள் அடங்கிய நூலன்று. அது ஒரு மகத்தான தர்ம காவியம். அதில் எவ்வளவு நுட்பமான பொருள்கள் காணலாமோ, அப்படியே புதிய அழகான அர்த்தங்களும் செய்து கொள்ளலாம். கீதை பாமர மக்களுக்காக இயற்றப்பட்டது. அதில் ஒரே விஷயம் பலவிதமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால், கீதையிலுள்ள மகா வாக்கியங்களின் அர்த்தம் காலத்திற்குத் தகுந்தவாறு மாறிக் கொண்டே இருக்கும். அதன் மூலக் கொள்கை ஒரு போதும் மாறாது. ஆனால், அந்தக் கொள்கையை அனுஷ்டிப்பதற்கு விரும்பும் மனிதன் மற்ற அர்த்தங்களைத் தனக்குத் தோன்றியவாறு செய்து கொள்ளலாம். ஒரு காலத்திலோ, தேசத்திலோ விதியாக இருப்பது, மற்றக் காலத்திலும் தேசத்திலும் விலக்காகலாம். பலனில் பற்று மட்டும் எப்பொழுதும் விலக்கி; பற்றின்மை எக்காலமும் விதி" என்று எழுதினார். காந்தியடிகளின் மேற்கூறிய விளக்கவுரைகள் எஸ்.பொ வின் கீதை சிந்தனைக்கு உறுதுணையாக நிற்கின்றன. 

      அத்துடன் எஸ்.பொ மேலும் சில 'உரிமைகளை' எடுத்துக் கொண்டுள்ளார்.
நூலிற்குள் 'விதி' எனும் கதையில் (பக்.153) எஸ்.பொ சுயகுறிப்பாக எழுதுகின்றார். "அவன் மிக சாமானியன். சௌகரியத்திற்காக எஸ்.பொ என்று அழைக்கப்படுபவனுங்கூட. தத்துவக் கடைசல் அவன் நோக்கமும் அல்ல. எல்லாமே இற்றுவிட்ட சுகநிலை தவநிலை என்றுங் கூறலாம். அந்தக் காற்றிலே கீதாசிரியரின் புல்லாங்குழல் இசை மிதந்து வராதா என்ற தாகத்தினை மட்டும் அந்தத் தவம் விழுங்கவில்லை." படைப்பிலக்கியக் கர்த்தா எனும் நிலையில் ஏற்பட்ட மன உளைச்சல்கள், சங்கடங்கள் எவ்வாறு கீதை நிழலில் இளைப்பாறின; தெளிவு பெற்று. சோக விமோசனம் ஏற்பட்டது என்பதையும் விளக்கியுள்ளார்.

"என் நிலைக்களன் பயன் கருதா பக்தியன்று, படைப்பு என்ற நிலைக்களன் என்று கூடச் சொல்லலாம்." என்று 'விதை'யிலே சுட்டிக் காட்டியுள்ளார்.

        'படைப்பு என்ற நிலைக் களன்' என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். 'கீதையிலே காணப்படும் கருத்துக்களை ஒன்றிச் சில கற்பனைகள் முளைத்தன. விளங்கியும் விளங்காததுமான ஐயநிலையில் வேறு சில கற்பனைகள் கிளைத்தன... கீதையுடன் நேரடித் தொடர்பற்ற கருத்துக்கள் மட்டுமின்றி, எதிர்த்துருவமான கருத்துக்களும் முகங்காட்டியுள்ளன."

பாரதி குறிப்பிட்டதுபோல, "மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதிக்கும் கீதையைத் தமது வாழ்க்கை அநுபவங்களைக் கொண்டு புரிந்துக் கொள்ள எஸ்.பொ எடுத்த முயற்சியை சொல்லோவியமாகச் சித்தரிக்கின்றது. விருப்பம் போல் மேய்ந்து. சாவகாசமாக படுத்து அசை போடும் பசுவாகத் தம்மை எஸ்.பொ உருவகப்படுத்திக் கொண்டுள்ளார். இறுதிக் கதையான முளையில் காலம் காலமாகச் செழித்த கருத்து வயலிலே கோபிகிருஷ்ண கானத்தாற் கவரப்பட்ட பசு ஒன்று மேய்கின்றது. பசியின் அகோரம். ஜீரணிக்க இயலாத அளவுக்கு வயிற்றைச் செம்மிக் கொள்ளுகின்றது. சுகமும் அவதியும். அவதியிலே அண்டை மரநிழலில் அது படுத்துக் கொள்ளுகின்றது. அசை மீட்டும் படலத்தின் துவக்கம் கீதை அல்ல. கீதை நிழலில் அசை போடுதல் நீண்டது. பசுவுக்கு நாளைக்கும் புதிதாகப் பசி எடுக்கும்." இந்தப் 'பசி'க்கு உணவாக கீதை கிட்டியது போல புதிது புதிதாகத் தொடரும் 'பசி'க்கும் புதிய உணவு வகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் இறுதியாக உணர்த்தியுள்ளார். அந்த 'புதியப் பசி'க்கு எவ்வகை 'உணவு' கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து அறியவேண்டும்.

        ஆன்மீகம், அறம், தனிமனித ஒழுக்கம். சமூக ஒழுக்கம் முதலான விழுமியங்களை விளக்கிப் பரப்பிட கதைசொல்லும் உத்தி காலங்காலமாக கையாளப்பட்டு வருகின்றது. புத்தர் ஜாதகக் கதைகள், ஈசாப்பு கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், நவ தந்திரக் கதைகள், நீதி நெறிக் கதைகள், இராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசக் குட்டிக் கதைகள் என வகைப்பட்ட கதைகள் வெளிவந்துள்ளன. 

         ஆனால் எஸ்.பொ வின் கீதை நிழலில் கதைகள் மேற்குறிப்பிட்ட வகைப்பாடுகளில் அடங்குவன அல்ல. இவை கீதையின் தாக்கத்தால் விளைந்த சிந்தனைகள். அவருடைய கற்பனைகள் கீதைக்கு எதிர்த் துருவமான கருத்துகளையும் சமகால அவதிகளின் குரல்களையும் வெளிப் படுத்தியுள்ளன. உவமைகள் சில, பிறர்களிடமிருந்து எடுக்கப்பட்டன என்றாலும் பெரும்பான்மையானவை அவருடைய உருவாக்கங்களே. இவை தமிழில் ஒரு படைப்பிலக்கியக் கர்த்தாவின் புதிய முயற்சி

         அனைத்துக் கதைகளின் தலைப்புகள் இரண்டே எழுத்துகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். சில தலைப்புகள் அதிகமாகப் புழக்கத்தில் இல்லாத சொற்களை நினைவூட்டுதல்போல் உள்ளன. சான்றாக விகை எனும் சொல்லைக் குறிப்பிடலாம் .
      இந்த அரிய சொல்லிற்கு பொருள் காண நான் சற்று முயற்சியெடுக்க வேண்டியதாயிற்று. இறுதியில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பேரகராதியில் கண்டேன். விகை' என்றால் '"மோக்கம்" "வீடு பேறு" என்று பொருள் கூறப்பட்டுள்ளது. 
      வீடு பேறு மோக நீக்கம் இன்றியமையாதது எனும் கீதை உபதேசத்தை விளக்க வந்த கதைக்கு இலக்கியச் சொல்லின் திட்ப நுட்பத்தை விளக்கும் வகையில் 'விகை' என்று தலைப்பிட்டுள்ளார். எஸ்.பொ .

        மோக நீக்கம் வேண்டி பாரதியார் இசைத்த "மோகத்தைக் கொன்று விடு" என்று தொடங்கும் பாடலையும் நினைவூட்டுவது போல் அமைந்துள்ளது தலைப்பு. 

    கீதை பக்தி நூலா, ஞான நூலா, யோக சாத்திரமா,மோட்ச நூலா. கர்ம சாத்திர நூலா எனும் பல்வேறு சர்ச்சைகளை அறிந்து புரிந்துக் கொண்டவர் என்பதை எஸ்.பொவின் இந்தச் சிறுகதைமட்டுமன்று வேறு சில கதைகளும் எடுத்துரைக்கின்றன.

கீதையை இதயத்தைக் கொண்டு கற்க வேண்டும் என காந்தியடிகள் தட்டிக் காட்டியது போல் எஸ்.பொவும் கீதை எனும் கண்ணாடியில் சாதகன் தன் முகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக தன்னுடைய இதயத்தைப் பார்க்கத் தக்க ஆன்ம பக்குவம் பெறவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். 'கீதை என்ற கண்ணாடியில் ஒவ்வொருவரும் உங்கள் தனிப்பட்ட உருவத்தைப் பார்க்கின்றீர்கள். இதயத்தைப் பார்ப்பதற்கு மோகம் தடையாக அமைந்தது. கீதை அருளப்பட்டதும் அர்ஜுனனின் மோகம் கலைந்தது. அத்தகைய மோக நீக்கம் உங்களுக்கும் கைவரப்பெறுமானால், கீதையின் மோக நீக்கம் என்னும் தரிசன பயனைத் தரிசித்தல் சாலும் என்றார் குருதேவர்."

ஞான, கர்ம, பக்தி நெறிகளை ஒருங்கிணைத்து பேறு எனும் கதையிலும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் எஸ்.பொ. "ஞானத்திற்கும் கர்மத்திற்கும் உள்ள தொடர்பினை விசாரிக்கும் எண்ணம் பரமாத்மாவிற்குத் தோன்றியது. இரு மீமாம்சைகளையும் பக்தி என்ற இனிய பிணைப்பினாற் பூரணப்படுத்தி என்னை அருளினார்"ஞானம்,பக்தி,கர்மம் எனும் மூன்று மார்க்கங்களும் அவர் ஆன்ம பரிபக்குவத்தைப் பொறுத்தது என்பதைத் 'திரி' எனும் கதையிலே பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார் எஸ்.பொ-"மோட்சம் அடைவதற்கு மானிடர் முன் மூன்று மார்க்கங்கள் உள். அவரவர் யோகத்தைப் பொறுத்தது அவரவர் மார்க்கம்". 'மறை யிலும் மூன்று நெறிகளைப் பற்றி விளக்கியுள்ளார். இவையாவும். கீதையின் சாராம் சங்களை எஸ்.பொ உள்வாங்கிக் கொண்டு பிறழ்ச்சி திரிபுகள் இல்லாமல் வெளிப்படுத்தும் சிந்தனைத் தெளிவை அடையாளங் காண வைக்கின்றன."

அத்வைத வேதாந்தத்தின் பரமாத்மா ஜீவாத்மா பற்றிய விளக்கங்களில் 'குடம்' பற்றிய ஒப்புமை மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன. குறிப்பாக இரு ஒப்புமைகளை குறிப்பிடத்தக்கன. ஒன்று. மண் - குடம் தொடர்பானது. மற்றொன்று குடம் ஆகாசம் தொடர்பானது. எஸ்.பொ முதல் கதையிலேயே குடம் - ஆன்மா பற்றிய ஒப்புமையைக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'குடம் என்ற உடற்கொட்டு, அதற்குள் இருப்பதாகத் தோன்றும் ஆன்மா. ஆன்மா தன் ஆதி சத்துடன் கலக்கும் போது சம்சார சக்கரம் இற்று விடுகின்றது. அதுவே நித்யம்" சந்திரன் ஒன்றேயானாலும் நீர் நிறைந்த பத்து குடங்களிலும் பத்தாகத் தெரிகின்றது." குடங்களிலே தெரிபவை ஒரு சத்தின் பல்வேறு அசத்துத் தோற்றங்கள்" என்று வருணிக்குமிடத்தில் அத்வைத வேதாந்த மரபு வழிபட்ட உவமையை எடுத்தாண்டுள்ளார். குடம் உடைந்தால் அதன் ஆதி சத்தான மண்ணாகி விடுகின்றது. 

'மண்' எனும் கதையில் அத்வைத வேதாந்தத்தின் புகழ்பெற்ற '
'கடாகாசம்' மஹாகாசம் ஒப்புமையை மிகத் தெளிவாக விவரித்துள்ளார். வெளியிலிருக்கும் பரந்த ஆகாயமே குடத்துள்ளும் இருக்கிறது. "குடம் உடைந்ததும் 'அது பரந்த ஆகாயத்துடன் கலந்துவிடுகிறது" என்று கணக்கிடும் மகுடவசனங்களை அமைத்துள்ளார். வரையறைக்கப்படாது எங்கும் பரவியுள்ள ஆகாசத்திலே குடமாகிய உபாதிகாரணமாக அக்குடத்தால் தன்னுள் முகக்கப்பட்ட ஆகாசம் மாத்திரம் குடாகாசம் எனவும், அக்குடத்திற்குப் புறம்பாக வெளியிலுள்ள ஆகாசம் மஹாகாசம் (பரவெளி) எனவும் படுகின்றன. மாண்டுக்ய உபநிடதத்தில் (2.31-3.3) கடாகாசம், மஹாகாசம் பேசப்படுகின்றன.

          'பரமாத்மா மஹாகாசத்தைப் பேய் என்று கூறப்பட்டுள்ளது. சரீரங்கள் குடங்களைப் போலும், ஜீவர்கள் குடத்திலுள்ள ஆகாசத்தைப் போலும், சிருஷ்டி விஷயத்திலும் இதுவே தகுந்த திருஷ்டாந்தம், குடங்கள் உடைந்த போது குடங்களிலுள்ள ஆகாசம் மஹாகாசத்தில் கலந்து விடுவது போல் இந்தப் பரமாத்மாவில் ஜீவன்லயமடைகின்றான்." 

'         'சகுனத்தடை' எனும் மூட நம்பிக்கையை 'வேளை' எனும் கதையில் பூனையின் வாதத்திறமை புதுமையாகவுள்ளது. ஒப்புக் கொள்ளத்தக்கதாக உள்ளது. இக்கதைக்கு எஸ்.பொ அமைத்துள்ள பின்வரும் மகுட வசனங்கள் சிந்திக்கத்தக்கன. "அது அதற்கு அந்தந்த வேளையென்று ஈசன் நியமித்திருக்கையில் ஒரு காரியம் கை கூடுதலுக்குச் சகுனம் தடையாக இருக்கின்றது என்று பேசுதல் நீரீச்சுவர வாதஞ் சார்ந்ததாகும்."

           'யோனி' எனும் கதையின் தலைப்பும், அதன் உள்ளடக்கமும் முதல் வாசிப்பில் சற்று திடுக்கிடவைத்தாலும் மறு வாசிப்புகளில் தத்துவ நுட்பங்கள் வெளிப்படுகின்றன. இக்கதைக்கு தரப்பட்டுள்ள மகுட வசனங்கள், பின் வருவன: தன் காமத்தினவுக்கு தீனியிடும் கருமத்தில் பெண் ஒருத்தி கருத்தரிக்கின்றாள். அதற்கு அவள் பெறும் தண்டனைதான் மகப்பேறு." தண்டனையில் பெற்ற குழந்தையையே ஆற்றில் வீசியெறிந்த தாயைப் பற்றியக் கதை 'யோனி'. ஈன்றெடுத்தக் குழந்தையை
கொன்றதற்கான காரணத்தை அந்தத் தாய் பின் வருமாறு விளக்கினாள். "அஃது அழுக்கின் கறை என் மாம்ஸ இச்சைகளுக்கு என் உடலை அர்ப்பணித்தேன் என்ற பலவீனத்தின் சின்னம்," குடும்ப உறவில், ஆண்- பெண் தாம்பத்ய உறவில் பாலியல் வாழ்க்கையின் ஒரு பகுதியேயாகும். காம இச்சை மட்டுமே குடும்ப உறவாகாது; தாய்மைப் பண்பாகவே உணர்ச்சியை உள்வாங்கிக் கொண்டும் 'யோனி' தாய்மையின் புனிதச் சின்னமாகும். காம விகாரங்களின் களியாட்டக் களம் அல்ல. சதைப் பசிக்கு உரியது அல்ல, யோனி புனித சிருஷ்டித் தத்துவத்தின் உருவகம் யோனி தாய்மைத் தத்துவத்தைக் கொச்சைப்படுத்த நினைப்போருக்கு ஓர் அதிர்ச்சி அணுகுமுறை, 'யோனி' மயக்க நிலையை விட்டொழித்து ஆன்மீக கலப்பின் தோய்விலே, தெளிவிலே பிறக்கும் அமைதியான உறவே குடும்ப உறவிற்கு உரியது என்பதையும் 'யோனி' உணர்த்துகின்றது.

        இந்நூலில் உள்ள 52 கதைகளில் 50 வது கதை 52 சிந்தனைக் கணுக்களாய் அமைந்துள்ளது. 
        இந்தப் பகுதி பாரதியாரின் 'காட்சி' முதலான வசன கவிதை'களை ஒத்தது. 
பாரதியைப் போன்று தம்மைப் பாதித்தவர் வேறு எவரும் இலர் என்று பெருமிதம் பொங்கப் பேசுவது எஸ்.பொவிற்கு உகந்த வழக்கமாகும். நடைச் சிறப்பியல் மட்டுமல்லாமல், தத்துவக் கருத்து வளத்திலும் பாரதியின் தாக்கத்தை வெளிப்படுத்தும் சிந்தனை கணுக்கள் தொகுப்பிற்கு 'திண்ணை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திண்ணைப் பேச்சு' என்று இழிந்து இற்றுகோகாமல், கீதைச் சிந்தனைகளுக்கு சிறப்பிணைப்பாக கீதைச் சிந்தனைகளோ! திண்ணைச் சிந்தனைகளோ!" என்று அவரே குறிப்பிடும்படி அமைந்துள்ளது இப்பகுதி.
###

 'எஸ்.பொவுக்கு முன்னால் தமிழ்ச் சொற்கள் கைகட்டிச் சேவகம் செய்கின்றன' என்கிற இரசிகமணியின் கூற்றும் நினைவுக்கு வருகின்றது.

நன்றி : 
திரு கருணா மூர்த்தி
&
முகநூல்

கருத்துகள் இல்லை: