19 மார்., 2025

கவிதை நேரம்


சூரியன் வருவது யாராலே?
சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன?

பேரிடி மின்னல் எதனாலே?
பெருமழை பெய்வதும் எவராலே?
யாரிதற் கெல்லாம் அதிகாரி?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
தரையில் முளைத்திடும் புல் ஏது?

மண்ணில் போட்டது விதையொன்று
மரஞ்செடி யாவது யாராலே?

கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்
கருவில் வள்ர்பதுயார் வேலை?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
எத்தனை ஊர்வன பறப்பனபார்!
எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!

எத்தனை நிறங்கள் உருவங்கள்!
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள்;

அரன் அரியென்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தையென்பார்கள்;

சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வாகள்;

எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதொ ஒருபொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,

எந்தப் படியாய் எவர் அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன?

நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

*நாமக்கல் கவிஞர்*

கருத்துகள் இல்லை: