23 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-32: "தவறும் நீதி"

வாரம் என்றால் ஏழு நாள்
மாதம் என்றால் அதிக பட்சம்
முப்பத்தியொரு நாள்.
வயிற்றில் குழந்தை என்றால்
இருநூற்றெழுபது நாள்.
கோர்ட்டில் வழக்கேன்றால்
எத்தனை நாள்?

அறுப்பு முடித்தால்
கடன் அடைக்கலாம்.
வீட்டை விற்றால்
மகள் திருமணம் நடத்தலாம்.
மாட்டை விற்றால்
பேறுகாலம் பார்க்கலாம்.
எவற்றையெல்லாம் விற்றால்
வழக்கை முடிக்கலாம்?

தாமதமாக வரும் நீதி
தவறிய நீதிதானே!
வழக்காட
இல்லை பணம்
என்றால்
தோற்றுப்போகுமா நீதி?

எத்தனை காலியிடங்கள்
நீதிபதி பதவிகளுக்கு!
நீதிபதி நியமனங்களை
விரைவு படுத்தவேண்டி
எந்தக் கோர்ட்டில்
வழக்குத் தொடுப்பது?
அந்த வழக்கும்
எப்போது முடியும்?

கருத்துகள் இல்லை: