6 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-62: "விழியிழந்தோர்"

முக்கண்ணன்
இவர்கள் மீது
நெற்றிக்கண்
ஏன் திறந்தான்?
காக்கும் இமையே
கண் திருடலாமா?

பண்ணிரு விழிகளிலே
பரிவோடு ஒரு விழியால்
பார்த்திடவே வேலவனும்
ஏன் மறந்திட்டான்?

கண்ணாத்தாள்
ஏன் கைவிட்டாள்?
மீன் கண்ணாள்
ஏன் மறந்திட்டாள்?

ஆயிரம்
கண்ணுடையாள்
அலட்சியமாய்
விட்டதென்னே?

விரல்களை
விழிகளாக்கி
காதுகளால்
கற்கும் இவர்கள்
மூன்று கால்களால்
நடந்தாலும்
சொந்தக்காலில்
நிற்ப்பவர்கள்.

இருட்டு ஒரு
பொருட்டில்லை
இறைவன் மீதும்
வெறுப்பில்லை

எண்ணும் எழுத்தும்
கண் எனத் தெளிந்ததால்
கல்வி எனும் வெளிச்சம்
கைகொடுக்கும் இறுதிவரை.

வெறும் ஆறு புள்ளிகளால்
எதனையும் படிக்கலாம்
கெல்லரும்,பிரைலரும்
வெற்றி பெற வில்லையா?

அன்பின் மிகுதியினால்
வீட்டினுள் சிறை வைத்து
எதிர் காலத்தை
இருட்டாக்காமல்

பர்வையற்ற சிறார்களை
சிறப்புப் பள்ளியில் சேர்த்து
கல்விக்கண் கொடுப்போம்
கண்மணிகள் வாழட்டும்!

கருத்துகள் இல்லை: