12 ஜூன், 2009

நினைத்துப் பார்க்கிறேன்-1: "டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும், திரு.கௌதம நீலாம்பரன் அவர்களும்"

இன்று காலை நடை பழகிவிட்டு, அப்படியே கடைக்குப்போய் ஹிந்து நாளிதழ் வாங்கிவரச் சென்றேன். கடையில் இம்மாத அமுதசுரபி இதழ் தொங்கக் கண்டேன். தரமான தமிழ் இதழ்களை ஊக்குவிக்க வேண்டும் என்று திடீரென்று ஞானம் பிறக்க, ஒரு பிரதியை வாங்கினேன். நான் அமுதசுரபி வாசகனல்ல. எப்போதாவது திடீரென்று இதுபோல் வாங்கினாலோ அல்லது நூலகம் அல்லது வேறு யாரிடமோ வாங்கிப்படித்தால்தான் உண்டு.

வீட்டிற்குச் சென்று பக்கத்தைப் புரட்ட ஆரம்பித்ததும் முதலில் கண்டது, நான் நினைத்ததுபோல் திரு விக்கிரமன் ஆசிரியரல்ல என்பதும், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியர் என்பதும்தான். உடனே காரைக்குடியில் புத்தகத் திருவிழா அமைப்பாளராக திருப்பூர் கிருஷ்ணன் அவர்களை அழைத்ததும், அவர்கள் அன்புடன் இசைந்து, காரைக்குடி வந்து கலந்துகொண்டு நண்பர் பசுமைக்குமாரின் நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியதும் நினைவிற்கு வந்தது.

பக்கத்தைத் திருப்பிக்கொண்டே வந்ததில் 'எழுத்துலகம்" பகுதியில் "நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்" என்ற தலைப்பில் திரு கௌதம நீலாம்பரன் பற்றிய குறிப்பு கவனத்தை ஈர்க்க, அதைப் படிக்கலானேன். அவர் தமிழில் சரித்திரக் கதைகள் எழுதுவதில் சிறந்தவர் என்றும், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும் அறிவேன். அவரும் காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு எங்கள் அழைப்பை ஏற்று, எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்கள் அனைவரையும் மகிழ்வித்ததும், பின்னர் சிறப்புரையாற்றியதும் மனத்திரையில் ஓடியது.

மேலும் அன்றிரவே அவர் சென்னை திரும்ப வேண்டியிருந்ததால், தனியார் சிறப்புப் பேருந்தில் பதிவு செய்து வைத்திருந்தோம். நானும் இன்னொரு நண்பரும் அவரை வழியனுப்ப காரைக்குடி பெரியார் சிலை அருகே பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவரோடு உரையாடிய இனிய அனுபவமும் நினைவிற்கு வருகிறது. மலர்ந்த முகத்தோடு நான் பேசியதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே, இதையெல்லாம் எழுதினால் என்ன என்றார். நான் ஏதோ அசடு வழிந்துவிட்டு, நான் புத்தகப்பிரியனே தவிர, எழுத்தாளனல்ல என்று இயலாமையை வெளிப்படுத்தினேன். ஆனால் அவர் அதோடு விட்டுவிடாது, சென்னை சென்றதும் எனக்குக் கடிதம் எழுதி மறுபடியும் என்னை எழுதுமாறு உற்சாகப் படுத்தினார். அதோடு மட்டுமல்லாமல், 'குங்குமச்சிமிழ்' இதழ் ஒன்றும், மற்றும் ஒரு ஆன்மிக இதழ் பிரதியொன்றையும் அனுப்பிவைத்தார். நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாவின் தொடர்ச்சியாக "புத்தகப் பிரியர்களுக்கான் கையேடு" ஒன்றை வெளியிட எண்ணியிருந்தேன். அதில் பிரசுரிக்க அவரிடமிருந்து தமிழில் சரித்திரக் கதைகள் பற்றிய கட்டுரை ஒன்றைக் கேட்டிருந்தேன். ஒரு சிறந்த கட்டுரை ஒன்றை எங்களுக்காக எழுதி, உடனே அனுப்பியிருந்தார். பல பிரச்சினைகளால் அந்தக் கையேடு கனவாகவே முடிந்து போனது. நான் அவருக்குப் பதிலும் எழுதவில்லை என்பதைக் குற்ற உணர்வோடு தற்போது நினைவுகூர்கிறேன்.

இருக்கட்டும். நா.பா.வின் இலக்கிய மாணவரான, இவர் சிறப்புகளை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறேன். 'தமிழ் வாகைச் செம்மல்', 'பேராசிரியர் கல்கி இலக்கிய விருது', செங்கமலத்தாயார் அறக்கட்டளை அளித்த 2008 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் போன்ற பல பெருமைகள் அவரைத் தேடி வந்துள்ளன. இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட சரித்திர, சமூகச் சிறுகதைகளைத் தொகுத்து நிவேதிதா புத்தகப் பூங்கா வெளியிடவிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மேலும் மணிவிழாக் காணும் திரு கௌதம நீலம்பரனும் அவர்களது குடும்பத்தினரும் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழவும், அவர் மேலும் மேலும் சாதனைகள் படைக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

1 கருத்து:

nellaiappan சொன்னது…

அன்பு சூரி!
நினைத்துப் பார்க்க
நிறைய விஷயங்கள்
உங்களிடம் இருக்கும்
தினம் நினைத்துப் பாருங்கள்
எனபது எங்கள் வேண்டுகோள்.