14 பிப்., 2015

பாரதிதாசன் கவிதைகள்-13: இன்பம்

இன்பம்

பசி என்று வந்தால் ஒருபிடி சோறு
புசி என்று தந்துபார் அப்பா
பசி என்று வந்தால்...

பசையற்ற உன் நெஞ்சில் இன்பம் உண்டாகும்
பாருக் குழைப்பதே மேலான போகம்
பசி என்று வந்தால்...

அறத்தால் வருவதே இன்பம் -- அப்பா
அதுவலால் பிறவெலாம் துன்பம்!
திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று
செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று!
பசி என்று வந்தால்...

மனுவின்மொழி அறமான தொருநாள் -- அதை
மாற்று நாளே தமிழர் திருநாள்!
சினம்அவா சாதிமதம் புலைநாறும் யாகம்
தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!
     பசி என்று வந்தால்...

கருத்துகள் இல்லை: