27 ஆக., 2021

கவிதை நேரம் : சூது - நெல்லையப்பன்

சூது

இருவர் கோலியாட,

சுற்றிப் பலர் நின்று, 

யாருக்கு வெற்றி என்று

பந்தயம் கட்டும் 

பழம்பெரும் விளையாட்டே 

அவன் ஆடிய முதல் சூது.

"வை ராஜா வை" என்று 

பகல் நேரக் காட்சி 

படம் பார்க்கப்போன 

இரு வேறு தருணத்தில் 

இழந்தது சில காசுகள் 

இரண்டாவது பெருஞ்சூது.

இழந்தது கொஞ்சம் தான், 

சில்லறை மட்டும் தான், 

இதயத்தில் அதன் தாக்கம் 

இன்றுவரை நின்றுவிட,

தோற்றதனால் ஜெயித்தான் 

சூதுக்கு விடைகொடுத்தான்.

சீட்டு, ரேசு, லாட்டரி, 

மங்காத்தா, காட்டன்-

சூது பலவகை 

எதையுமவன் தொடல.

திறனறிந்து பொருள் 

தீதின்றி வரவேண்டுமெனக் 

கற்றறிந்ததனால் அல்ல! 

படம் பார்க்க முடியாம, 

வீடு திரும்ப வழியின்றி,

மூன்று மணி மன உளைச்சல்

சிறுவன் மனதில் நின்றுவிட 

பட்டுணர்ந்த பாடமது 

விட்டுவிட்ட பெருஞ்சூது!

கருத்துகள் இல்லை: