9 செப்., 2021

குட்டிக்கதை : மனித வாழ்க்கையின் உண்மை

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,

"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.

*மனித வாழ்க்கையின் உண்மை*

கருத்துகள் இல்லை: