30 அக்., 2021

இன்றைய திருமந்திரம் - பாடல் #1251

திருமந்திரம் - பாடல் #1251: நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றா ளிறைவனே நற்பய னேயென்பர்
கற்றா னறியுங் கருத்தறி வார்கட்குப்
பொற்றா ளுலகம் புகல்தனி யாமே.

விளக்கம்:

பாடல் #1250 இல் உள்ளபடி சாதகர் பெற்ற திருவடிகளின் பெருமையை உடையவள் அனைத்திற்கும் மேலான இறைவனோடு எப்போதும் சரிசமமாக சேர்ந்தே இருக்கும் மனோன்மணி எனும் இறைவியாவாள். நன்மையைத் தருகின்ற திருவடிகளைக் கொண்ட பரம்பொருளான இறைவனை சென்று அடைவதே இந்த உலகத்தில் கிடப்பதற்கு மிகவும் அரிய பயனாகும் என்பதை அவனது திருவடிகளை அடைந்தவர்கள் கூறுவார்கள். அப்படி அடைந்த திருவடிகளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு தமது எண்ணத்திலும் அவனை வைத்து முழுவதும் அறிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு பொன் போன்ற இறைவனின் திருவடிகளை இந்த உலகத்திலேயே அடைய முடியும் என்பதால் அதற்காக இந்த உலகத்தில் பிறவி எடுத்து வந்து அவனோடு ஏகாந்தத்தில் தனித்திருப்பதும் கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் பேறாகும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: