31 அக்., 2021

இன்றைய திருமந்திரம் : பாடல் #1301:


திருமந்திரம் - பாடல் #1301: நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

குறைவது மில்லை குரைகழற் கூடு
மறைவது மாரண மவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லார்கட்
கிறவில்லை யென்றென் றியம்பினர் காணே.

விளக்கம்:

பாடல் #1300 இல் உள்ளபடி எந்த விதமான குறைகளும் இல்லாத நிலையை அடைந்த சாதகர்கள் மேன்மையான சாம்பவி மண்டலச் சக்கரத்திற்கு ஏற்ப ஞானமும் அருளும் எப்போதும் குறைவில்லாமல் இருப்பார்கள். ஒலிக்கின்ற சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளும் சாதகர்களை விட்டு எப்போதும் பிரியாமல் அவர்களுடனே சேர்ந்து இருக்கும். வேதங்கள் சிறப்பித்து சொல்லுகின்ற உண்மை ஞானமாகவே இருக்கின்ற 51 எழுத்துக்களையும் அதனதன் இயல்புக்கு ஏற்ப முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொள்ள முடிந்தவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை என்று இந்த நிலையை அடைந்தவர்கள் உறுதியாக சொல்வார்கள். இதை சாதகர்களும் முழுவதுமாக உணர்ந்து கண்டு கொள்ள வேண்டும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: