2 பிப்., 2017

நலக்குறிப்புகள்-97: பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் எளிதில் ஜீரணமாகக் கூடியது. உடலுக்குக் குளிர்ச்சி தருவது. மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்துள் ளது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவாகும்.   நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், எடை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.


மேலும் பீர்க்கங்காய்ச்சாறு, மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்தாகும். 

பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக் கூடிய வேதிப் பொருட்களும் மிகுதியாக உள்ளன. 

மது அருந்துகிறவர்களுக்கு மதுவினால் ஏற்படும் நச்சுக்களை ரத்தத்தில் இருந்து அகற்ற பீர்க்கங்காய் உதவும். ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் உதவுகிறது.

குறைந்த  கலோரி என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. 

பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாய்ட்ஸ்  போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது. 

பீர்க்கங்காய் முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது.


உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. 

ஓமியோபதி மருத்துவத்தில் பீர்க்கங்காயின் சாறு கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுப்பாதையின் உட்புறப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகிறது.

இலைகளை மையாக  அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்துத் பூசி வந்தால் தொழுநோய்ப் புண்கள் விரைவில் ஆறும். பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் ரத்தக் கசிவு நீங்கி காயம் ஆறும். 

ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து அதனோடு இனிப்புச் சுவைக்காக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும்.

கருத்துகள் இல்லை: