5 ஆக., 2020

இன்றைய தத்துவம் : சாருவாகம் எனப்படும் உலகாயத தத்துவம்

இன்றைய தத்துவம் :
சாருவாகம் என்று அழைக்கப்படும்
உலகாயதம்  தத்துவம்

சார்வாகம் என அழைக்கப்படும் உலகாயதம் இந்தியாவில் தோன்றிய ஒரு மெய்யியல் கோட்பாடு. உலகை நோக்கி பொருள்முதல்வாத அனுபவாத அணுகுமுறையை இது முன்னிறுத்துகிறது. கடவுள், மாயை, பிறவிச்சுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாயதம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், "உலக உடன்பாட்டு சிந்தனையும்" கொண்டது. இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது.
இந்திய மெய்யியலில் பொருளியவாத, இயற்கை விளக்க நோக்கு உடைய மெய்யியல் சார்வாகம் அல்லது லோகாயதம் அல்லது நாத்திகம் ஆகும். இது இந்திய மைய மெய்யியலான வேத மெய்யியலுக்கும், சடங்குகளுக்கும் கடுமையான எதிர்ப்பை முன்வைத்த பொருளிய வாதமாகும்.
சார்வாகம் என்பது இந்தியத் தத்துவ இயலில், தத்துவ ரீதியான ஐயப்பாடுகள் மற்றும் வேத மறுப்பு ஆகியவற்றைக் கைக்கொண்ட ஒரு பிரிவாகும்.
இந்தியத் தத்துவ இயலில், சார்வகம், நாத்திக வாதமாகவே வகைப்படுத்தப்படுகிறது. இதே போன்றதொரு வகைப்படுத்துதலே புத்த மற்றும் சமண மதங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இது பருப்பொருள் சார்ந்த மற்றும் இறை மறுப்பு வாதப் பண்புகள் குறித்தே அறியப்படுவதாக உள்ளது. இந்து மதத் தத்துவ இயலின் மரபு வழி வந்துள்ள ஆறு கருத்தாக்கங்களில் ஒன்றாக இது கருதப்படவில்லை எனினும், இந்து மதத்தின் உள்ளீடாக பருப்பொருள் சார்ந்த கருத்தியக்கம் என்ற அளவில் இது குறிப்பிடத்தக்கதாகும்.


பெயரும் தோற்றுவாய்களும் : 
இப்பெயர் முதன் முதலாக கௌடில்யரின் அர்த்த சாத்திரம் என்னும் நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அவர், யோகம், சாங்கியம் மற்றும் உலகாயதம் என்னும் மூன்று தர்க்கவியல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். உலகாயதம் என்பது இங்கு தர்க்க ரீதியான கருத்துப் பரிமாற்றங்களைக் குறிப்பிடுகிறதே அன்றி, பருப்பொருள்சார் வாதத்தினை அல்ல.    இச்சொல், முதலில் புரந்தரர் என்னும் தத்துவ இயலாளரால் ஏழாம் நூற்றாண்டில் கையாளப்பட்டது. அவர் தம்மை ஒத்த பருப்பொருள்வாதிகளை "சார்வாகர்கள்" எனக் குறிப்பிடுகிறார். சொல் இலக்கணத்தின் வழி,  எனும் இச்சொல்லுக்குப் பொருள், 'பேச்சில் திறனுற்றவன் வாதத்தில் ஆர்வமுற்றவன்' என்பதாகும்.

எதிக்ஸ் ஆஃப் இந்தியா (The Ethics of India) என்னும் தமது நூலில் ஈ.டபிள்யூ.ஹாப்கின்ஸ் (E. W. Hopkins), சார்வாகத் தத்துவம் புத்த தத்துவத்துடன் சமகால விளைவு என்பதாகக் குறிப்பிடுகிறார். கி.மு. 500ஆம் ஆண்டு வாக்கில், இது, "நம்பிக்கையின்மை" எனப் பொருள்தருவதாகக் கொள்ளப்பட்டு ஒரு முறையான தத்துவ இயலுக்கான அங்கீகாரம் விடுக்கப்பட்டது.
காண்பதையே கருத்தென்று கொள். உணர்வால் அறிய இயலாதவற்றை உன் பின்னால் விட்டு விட்டுச் செல். 
இவ்வாறாக, சார்வகம் என்பதானது இறுதியாக மௌரியர்கள் காலத்து நம்பிக்கையின்மை என்னும் தத்துவ வாதப் பிரிவாக மாறுபடலானது. ஆயினும், ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே எப்போதிருந்து இது முறைப்படுத்திய ஒரு தத்துவப் பிரிவாக இருந்து வந்துள்ளது என்பதை அறிய இயலவில்லை. பிரஹஸ்பத்ய சூத்திரங்கள் மௌரியர் காலத்தவையாகவே இருக்கக் கூடும். பதஞ்சலியின் மஹாபஸ்யத்தில் இவை பற்றிய ஒரு குறிப்பினைக் கொண்டு, இவற்றை கி.மு.150ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த கால கட்டத்தவையாகக் கொள்ளலாம்.

நம்பிக்கைகள் : 
தத்துவ இயலின் சார்வாகப் பிரிவானது, இறை மறுப்பு, பருப்பொருள் சார்பு மற்றும் இயற்கை இயைமை ஆகிய நம்பிக்கைகளைக் கொண்டது.
மரித்தபின் மறு வாழ்வில்லை மரணம் அடைந்த பின்னர் மறு வாழ்வு உண்டென்று சார்வகம் நம்புவதில்லை. இத்தனிமங்களிலிருந்து கிளர்ந்தெழுந்ததான பருப்பொருள் அறிவு அழிகிறது. அது அழிந்த பின்னர்- அறிவென்று ஏதும் நிலைப்பதில்லை. 

இயற்கை இயைமை : 
இயற்கை இயைமை என்பதையே சார்வகம் நம்பியது. அதாவது அனைத்துப் பொருட்களும் (ஏதும் கடவுள் அல்லது பரம்பொருள் ஆகியவற்றிலிருந்து அல்லாது) இயற்கையிலிருந்தே உருவாகின்றன.
நெருப்பு கொதிப்பாகவும், நீர் குளிராகவும் காலைக் காற்று புத்துணர்வாகவும் உள்ளது. யாரிடமிருந்து இந்த வகைகள் வெளியாயின? இவை அவற்றின் இயல்புகளே அன்றி வேறேதுமில்லை.

உணர்வமிழ்மை:
மதம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பே எனவும், இறைமை என்று ஏதும் இல்லை எனவும் சார்வகம் கருதியது. 

பண்டை இந்தியாவில் திகழ்ந்த ஒரு பொருள்முதல் வாதக் கோட்பாடு. இது பற்றிய மிகவும் தொன்மையான குறிப்புகள் பௌத்த அறநூல்களில்தான் முதன்முதல் காணப்படுகின்றன. மரபு வழியாக இக் கோட்பாடு பிரகஸ்பதி என்னும் புராண மாந்தரோடு இணைத்துப் பேசப்படுகின்றது. வேதங்களில் நாத்திகர்கள் என்ற தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் சார்வாகர்கள் எனப்படுவோராவர். பல்வேறு பழைய நூல்களும் இப் பொருள்முதல் வாதக் கோட்பாட்டை சார்வாகம் என்றே குறித்துள்ளன. நிலம், நீர், தீ, வளி ஆகிய மூலக்கூறுகளின் கலப்பால் உருவானதே இவ்வண்டம் என்பது இதன் அடிப்படை. (சில நூல்களில் விசும்பை அய்ந்தாவது மூலப்பொருளாகக் குறித்துள்ளன.) பொருள்களின் இயல்பு, அவற்றுள் கலந்துள்ள மூலப்பொருள்களின் அளவிற்கேற்பவே அமையும்...... கடவுள், மோட்சம், நரகம், ஆன்மா ஆகியவற்றை முற்றாக மறுப்பது; இன்பியல் கோட்பாடு இம் மெய்யியலில் முதன்மையான இடத்தை வகிக்கிறது என்பதாகும்.
“இராதாகிருட்டினன் உலகாய்தம் என்ற சமற்கிருதச் சொல் ‘பார்க்கப்படும் புலனுலகு’ என்ற பொருளில் வழங்கும் பொருள்முதல் கோட்பாட்டை உணர்த்தும் என்பார். தாசு குப்தா, ‘மக்கள் வாழ்வில் காணப்படும் ஒரு வாழ்க்கை நெறி’ என்றும், ‘சார்வாகத்தைத் தழுவிய அனைத்துக் கோட்பாடுகளையும் குறித்த ஒரு பொதுப் பெயர்’ என்றும் இச்சொல்லிற்கு விளக்கம் தருகின்றார்.

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு

கருத்துகள் இல்லை: