14 டிச., 2025

மேன்மக்கள்: நா.பா. என்றொரு குறிஞ்சி மலர் - திருப்பூர் கிருஷ்ணன்

நா.பா. பிறந்த தினம்: டிசம்பர் 18, 1932, மறைந்த தினம் டிசம்பர் 13, 1987
..................................   
*நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்...*
          *திருப்பூர் கிருஷ்ணன்*
..................................   
  `சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!`
..................................   
  *யதார்த்தவாதப் படைப்புகளே பெருகியுள்ள தற்கால இலக்கிய உலகில், காவிய மரபில் லட்சியவாத இலக்கியத்தைப் படைத்துப் பெரும்புகழ் பெற்றவர் தீபம் நா. பார்த்தசாரதி. 

  தாம் வாழ்ந்த சம காலத்தில் இப்போது எந்த நட்சத்திர 
நடிகருக்கும் இல்லாத அளவு பெரும் புகழ் நா.பா.வின் எழுத்தால் அவருக்குக் கிட்டியது. 

   அவரின் கரத்தில் தங்கள் குழந்தையைக் கிடத்திப் பெயர்வைக்கச் சொன்னவர்களும் அவர் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர்களும் நிறையப் பேர். 

   மதுரை அருகே நதிக்குடியில் 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தவர் நா.பா. பாண்டித்துரைத் தேவர் பரிசுடன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றவர். 

   சென்னைப் பல்கலைக் வித்வான் பட்டம் பெற்றார். தவிர சென்னைப் பல்கலையில் தமிழ் எம்.ஏ. பட்டமும் பெற்றார். 30.7. 1987 அன்று சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு பிஎச்.டி பட்டத்திற்கான ஆய்வேடு அளித்தார். 

   ஆனால் முனைவர் பட்டம் பெறுவதற்குள் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் காலமானார். 

   ஆங்கிலம், சம்ஸ்க்ருதம், இந்தி ஆகிய மொழிகளையும் அறிந்தவர். `மணிவண்ணன், பொன்முடி, வளவன், கூடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர், தீரன்` உள்ளிட்ட பல புனைபெயர்களில் எழுதிவந்தார். 

    பாரதியார் பணியாற்றிய சிறப்புடைய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகள் கல்கி வார இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 

   தீபம் மாத இதழை நிறுவி இருபத்து மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தினார். அவர் காலமானபின் தீபம் இதழ் நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகள் தினமணிகதிர் வார இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். 

   சாகித்ய அகாதமி தேர்வுக் குழு உறுப்பினராக இருந்தவர். நேஷனல் ·பிலிம் ·பெஸ்டிவல் ஜூரியாகப் பணியாற்றியவர். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தில் பொறுப்பான பதவி வகித்தவர். 

   சோவியத் யூனியன், போலந்து, இங்கிலாந்து, பிரானஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ரோம், எகிப்து, குவெய்த் போன்ற நாடுகளுக்கு பாரத அரசாங்கத்தின் கல்வி மற்றும் கலாசார அமைச்சக அழைப்பை ஒட்டி விசேஷ கலாசாரத் தூதராகப் பயணம் மேற்கொண்டவர். 

   சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களுக்குப் பலமுறை சென்று வந்தவர். 

    39 சமூக நாவல்கள், 9 வரலாற்று நாவல்கள், 22 சிறுகதைத் தொகுதிகள், ஒரு நாடக நூல், இரண்டு இலக்ண நூல்கள், ஒரு கவிதை நூல், இரண்டு திறனாய்வுக் கட்டுரை நூல்கள், நான்கு பொதுக் கட்டுரை நூல்கள், இரண்டு பயணக் கட்டுரை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் என எழுதிக் குவித்தவர். 

   இவர் படைத்தவையாக எண்பத்து ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழை அணி செய்கின்றன. 

 `சமுதாய வீதி` நாவலுக்கு சாகித்ய அகாதமிப் பரிசு, `துளசி மாடம்` நாவலுக்கு ராஜாசர் அண்ணாமலைச் ரெட்டியார் பரிசு, `சாயங்கால மேகங்கள்` நாவலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு என இன்னும் பற்பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். 

  *தமிழில் சாதனை படைத்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தி. ஜானகிராமன் என்றால் அழகியல். ஜெயகாந்தன் என்றால் விவாதக் கோணம். ஆர். சூடாமணி என்றால் உளவியல். ராஜம் கிருஷ்ணன் எனறால் கள ஆய்வு. லா.ச.ரா. என்றால் தத்துவப் பார்வை.

   இப்படிப் பல எழுத்தாளர்களின் தனித்தன்மையைப் பட்டியலிடுவோம் என்றால் நா.பா. எழுத்தின் தனித்தன்மை என்பது அவரது அழகிய நடை. சிலேடை போன்ற தமிழுக்கே உரிய நயங்கள் அனைத்தும் கலந்த நடை அது.  

   மற்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் போல் நா.பா. எழுத்தை அதன் அத்தனை நயங்களும் புலப்படுகிற மாதிரி மொழிபெயர்ப்பது கடினம். 

   `அவள் பார்வையே ஒரு பேச்சாய் இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது.` என்பது நா.பா. இலக்கியத்தின் ஒரு வரி. 

  இதில் முதலில் வரும் பார்வை என்ற சொல், கண்பார்வையைக் குறிப்பது (SIGHT) . இரண்டாவதாக வரும் பார்வை பரந்துபட்ட சமூகப் பார்வையைக் குறிப்பது.(VISION). இந்த வரியை எப்படி இதே சிலேடை நயத்தோடு இன்னொரு மொழியில் மொழிபெயர்க்க முடியும்? 

  இதுபோல் நா.பா இலக்கியத்தில் இன்னும் ஏராளமான எடுத்துக் காட்டுக்களைக் கூற முடியும். நா.பா.வின் நடை தமிழுக்கே உரிய அழகிய சொல் நயங்களை உள்ளடக்கிய நடை. 

   எனவே நா.பா. இலக்கியத்தைத் தமிழில் தமிழர்கள் அனுபவிப்பது மாதிரி, மொழிபெயர்ப்பில் பிற மொழியினர் அனுபவிக்க இயலாது.  

  *நா.பா. படைப்பிலக்கியத்தின் இன்னொரு பண்பு, ஆங்காங்கே தென்படும் பொன்மொழிகளைப் போன்ற சிந்தனையைத் தூண்டும் வரிகள். பாயசத்தின் இடையே முந்திரிப் பருப்பு மாதிரி அவை வாசகர்களை ஈர்த்து ரசிக்க வைத்தன. எ.கா.:
 
 `சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!`

   இத்தகைய வாக்கியங்கள், அத்தியாயங்களின் முகப்பில் தனியே எடுத்து அச்சிடப் பட்டிருக்கும். தவிர கதையின் இடையேயும் இந்த வரிகள் வரும். 

   கதையோடு பொருந்தியிருக்கிற இதுபோன்ற வரிகள், கதையிலிருந்து தனியே எடுத்தாலும் படிப்பவர் மனத்தில் நீண்டநேரம் சிந்தனையைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதே இவ்வரிகளின் சிறப்பு. 

   நா.பா. வாசகர்கள் பலர் இந்தப் பொன்மொழிகளைக் குறிப்பிட்ட புத்தகங்களில் தனியே அடிக்கோடிட்டு வைத்துக் கொள்வதுண்டு. 

  *நா.பா.வின் பாத்திரங்கள் எல்லாம் தரைக்கு அரையடி மேலே நிற்கின்றனவே என நா.பா.விடம் வானொலிப் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நா.பா. சொன்ன பதில்...

(இதன் நிறைவுப் பகுதி அடுத்த பதிவில்...) 
..................................

கருத்துகள் இல்லை: