20 ஜூலை, 2026

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

இன்று ஒரு தகவல்

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

மேன்மக்கள்

*சுவாமி விபுலானந்தர்*
(நினைவு தினம் ஜூலை 19, காலமான ஆண்டு 1947.)
.....................................................
  1892 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழறிஞர் விபுலானந்தர். இயற்பெயர் மயில்வாகனம், பல்துறை சார்ந்த பேரறிஞர். கவிஞர். விஞ்ஞானப் பட்டதாரி. 

   பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியர். ஆராய்ச்சியாளர். மொழிபெயர்ப்பாளர். துறவி.
  
   அடிகளார் 1931இல் தமிழ் நாடு வந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். 

  பின் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியரானார். 
  
  1922 இல் சென்னை ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு ராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமம் பெற்றார். 

   அங்கு "ராமகிருஷ்ண விஜயம்" என்ற தமிழ் இதழுக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். "செந்தமிழ்" என்னும் பத்திரிகையிலும் கட்டுரைகள் எழுதினார். 

    ஆசிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலானந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தர். 
  
   அதன் பின் இலங்கை திரும்பினார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். 

   மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்யாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைத் தீவு சாரதா வித்யாலயம் என்பன அவர் நிறுவியவையே. 
  
   தலைநகர் கொழும்பில் தமிழ்ப் பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்யாலயத்தைத் தொடங்கினார். 

  அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் ராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.
  
   சாதி, மத, மொழி, இன ஏற்றத் தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். 
   
   1924இல் மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் "நாடகத் தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி. சீனிவாஸ ஐயங்க¡ரின் வேண்டுகோளுக்கிணங்க "மதங்க சூளாமணி" என்ற நூலை எழுதினார்.

     இவர் எழுதிய நூல்களில் யாழ் நூல் மிகவும் புகழ்பெற்றது. 1937இல் இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். 

   அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கில இதழுக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

  கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983இல் விபுலானந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் "விபுலானந்தர் பிள்ளைத் தமிழ்" என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கிறார். 
 
   சிவானந்த வித்யாலய முகப்பில் உள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட பின்வரும் கவிதை வரிகள் பொறிக்கப் பட்டுள்ளன:

  "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
   வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
   வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
   உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

.....................................................
திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏