28 நவ., 2011

பிருந்தாவின் கவிதைகள்-6: அம்மாவின் பிறந்தநாள்

இன்று பிறவி எடுத்தாய்!
எங்களை ஈன்றபோது மறுபிறவி எடுத்தாய்!!
எங்களை உருவாக்க உழைத்து உருகி
மறைந்தே போனாய்!
விலைமதிப்பற்ற தாய் அன்பை தொலைத்தாலும்
உன் வயிற்றில் உதித்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளே!!
நீ கொடுத்த இந்த உடலையும்
உன் இனிய நினைவுகளையும்
சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நீ கண்ட கனவுகளை நனவாக்க!!!

(நவம்பர் 27 அன்று எழுதியது)  

25 நவ., 2011

சூரியின் டைரி-55: தாகூரின் நாவல், "தி ரெக்" (The Wreck)



ஒரு மாதத்திற்கு மேல் உடல்நிலை சரியில்லாமல், தற்போதுதான் உடல்நிலை சிறிது, சிறிதாக தேறி வருகிறது.  ஒருமாதமாக பெரும்பாலும் படுக்கையிலேயே சிரமப்பட்டு பொழுதைக் கழித்தேன்.  எதுவும் செய்ய இயலவில்லை.  உணவும் செல்லவில்லை.  ஏற்கனவே நான் ஒரு சர்க்கரை நோயாளி.  சர்க்கரை நோயாளிகளின் முக்கிய பிரச்சினை அவர்கள் உண்ணும் உணவை சக்தியாக, ஆற்றலாக மாற்றும் திறன் குறைவாக இருப்பது; அதன் விளைவாக, உடல் உறுப்புக்கள் அவை செயல்பட தேவையான ஆற்றல் இல்லாமல், அரைகுறையாக செயல்படுவது.  அதிலும் உடல் எடையில் மூன்று சதவிகிதமே உள்ள மூளை, உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் பதினேழு சதம் எடுத்துக் கொள்ளும்.  சர்க்கரை வியாதி + உணவை ஏற்கா நிலையில் மூளையின் செயல்பாடு எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை.  முக்கியமாக ஒரு மந்த நிலை, எதிலும் ஈடுபாடின்மை, மனத் தளர்ச்சி போன்றவை எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்.  தினசரி செய்தித்தாளைக் கூட படிக்க ஈடுபாடில்லை.  தினமும் போடும் 'சுடோக்கை' கண்டுகொள்வதே இல்லை.  சாதாரணமாக எனக்கு மிகவும் பிடித்த,  இரண்டு மூன்று வரிகளில், ரத்தினச் சுருக்கமாக பயனுள்ள ஆரோக்கியத் தகவல்களைத் தரும் சென்னை டைம்ஸ் கூட ஈர்க்கவில்லை.  

நிலைமை கவலை அளிப்பதாக இருந்தது.  நாவல் ஏதாவது படித்தாலென்ன?  நாவல் என்றால் சுவாரசியமாக இருக்கும்.  எனவே நான்கைந்து புத்தகங்களை எடுத்தேன்.  அதிலொன்று, தாகூரின் புகழ் பெற்ற நாவல்.  படகு விபத்தால் ஏற்படும் இடமாற்றங்கள், குழப்பங்கள் என்று கதை விறுவிறுப்பாகச் செல்லும்.  பள்ளி நாட்களின் சுருக்கமான பதிப்பைப் படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். மேலும் அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் வெளிவந்த "மாதர் குல மாணிக்கம்" என்ற திரைப்படத்தையும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.  படகு விபத்திற்குப் பதிலாக, அரியலூர் ரயில் விபத்து;  அப்புறம் வேறு சில மாற்றங்கள்.  தாகூரின் கதையில் ஒரு மணப்பெண் விபத்தில் பலியாவாள்;  தமிழில் இரண்டு புதுமண ஜோடியும் பிழைக்கும்;  மணப்பெண்கள் இருவரும் இடம் மாறுவர்;  இறுதியில், சிக்கல் எப்படி அவிழ்கிறது, அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் கணவன்மாரை எப்படிச் சென்றடைகின்றனர் என்பது கதை.

தெரிந்த கதையை இருந்த போதும் அந்த நாவலைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் முழுமையான - சுருக்கப்படாத அந்த நாவலைப் படிக்கவேண்டும்; தாகூரின் எழுத்து வண்ணம், வர்ணனைகள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல்தான்.  அந்தக்கால வங்காளத்தைக் கண் முன் கொண்டு வருகிறார்.  அற்புதமான வர்ணனைகள்.  குறிப்பாக, கங்கையாற்றில் கதாநாயகனும், கதாநாயகியும் காசிப்பூர் வரை பயணம் செய்வது; ஒவ்வொரு இரவு ஆற்றங்கரையில் ஒரு கிராமத்தில் படகு நிற்பது; அந்த நேரம் வேண்டிய பொருட்களை பயணிகள் வாங்குவது, சமைப்பது, மற்றும் அந்த கிராம மக்களைப் பற்றிய வர்ணனை.

ஒரு மெகா சீரியல் எடுத்தால், அதுவும் தாகூரின் எழுத்துப் படி, சிதையாமல், உருவாக்கப் பட்டால் மிகவும் நன்றாயிருக்கும்.  ஏற்கனவே, வங்க மொழியிலோ, இந்தியிலோ எடுக்கப்பட்டிருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.  நானூற்றுப் பதினாலு பக்கங்கள் கொண்ட நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தேன்.  அருமையான நாவல்.  ஒரே குறை 'க்ளைமாக்ஸ்தான்'.  அப்பா தாங்க முடியாத அளவிற்கு, தலை சுற்றும் அளவிற்கு திருப்பங்கள். நம்மூர் மெகா சீரியல்கள் தேவலாம் என்றாகிவிட்டது. 

இந்தக் குறையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சுவையான நாவல்.  1926-ஆம் வருடம் முதற் பதிப்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் வங்காள மாநிலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு பதமாக ஒரு பருக்கை இந்நாவல்.

என்னைப் பொறுத்தவரை தாகூருக்கு மிகவும் நன்றி.  மனம் துவண்டு, செய்வதறியாது இருந்த நிலையில் இந்நாவல் ஒரு டானிக் போல செயல்பட்டது என்றால் மிகையில்லை.           

21 நவ., 2011

சூரியின் டைரி-54: நல்ல சாவு

அது என்ன நல்ல சாவு?  பயங்கரமான சாலை விபத்திலோ, குருரமான தீ விபத்திலோ, இல்லை படுக்கையில் மாதக் கணக்கில் கிடந்து நாறி,  அன்பு வைத்திருந்த மனைவி மக்கள் எல்லாம் வெறுத்து, இவன் ஒழிய மாட்டானா என்று ஏங்கும் நிலை-இதெல்லாம் நிச்சயமாக நல்ல சாவு இல்லை.  தூக்கத்திலேயே எந்த வித தொல்லையும் இன்றி உயிர் பிரிவது மிகச் சிறந்த சாவு என்று நினைக்கிறேன்.  காலையில் காப்பியுடன் மனைவி எழுப்ப, ஒன்றுமே சலனமில்லாமல், கட்டையாகக் கிடக்க, அலறி அடித்து, டாக்டர் வந்து பார்த்து, சாரிங்க! அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிவாக்கில் உயிர் பிரிந்துவிட்டது என்று சொல்கிறார் அல்லவா, அதுதான் நல்ல சாவு.  இன்னும் நல்ல சாவு என்றால், நமக்கு மட்டும் அறிகுறிகள் காட்டும், நாம் சுதாரித்து நாம் செய்யவேண்டிய கடமைகளை விரைவாக முடித்து, கணக்கு வழக்குகளையெல்லாம் தெளிவாக ஒப்படைத்துவிட்டு, சிக்கல்களையோ, பிரச்சினைகளையோ குடும்பத்தாருக்கு விட்டுச் செல்லாமல் இருப்பது. முக்கியமாக, பெரும் மருத்துவச் செலவை உண்டாக்காமல் இருப்பது.

எனது உறவினர் ஒருவரின் தந்தை இரவில் உடல் நலம் திடீரென மோசமாக, அவசர அவசரமாக, வாடகைக்கார் பிடித்து, மதுரை சென்று, அங்கே புகழ் பெற்ற தனியார் மருத்துவ மனையில் பெரும் பணம் செலவு செய்து, அவரைக் காப்பாற்றி வீடு கொண்டு சேர்த்தார்.  ஆனால், இரண்டு மாதம் கழித்து, நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர் அலுத்துக் கொண்டார்: "நான் தப்புப் பண்ணீட்டேன்! அன்றைக்கே அவரைச் சாக விட்டிருக்கவேண்டும்.  தற்போது படுத்த படுக்கையாய் இருக்கிறார். சொல்வதைக் கேட்பதில்லை.  கண்டதையும் தின்றுவிட்டு, படுக்கையை நாறவைக்கிறார்.  பிள்ளைகள் எல்லாம் அருவருப்புப் படுகிறார்கள்.  அவருக்குப் பாடு பார்பதற்குள் உயிரே போய்விடுகிறது.  அவர் சீக்கிரம் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருக்கிறேன்."

நான் என் தினசரிப் பிரார்த்தனையில்: "பிறவிப் பயனை அடைதல் வேண்டும்; முழுமை பெறவேண்டும்; மகத்தான சாதனைகள் படைத்திடல் வேண்டும். உரிய நேரம் வந்ததும், மன நிறைவோடு, சிரித்த முகத்தோடு, உன் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.

இப்பிறவியை நல்லபடியாக முடித்திடல் வேண்டும்; அல்லல் படாமல், அவதிப் படாமல், அசிங்கப் படாமல், துன்பப் படாமல், துயரப் படாமல், கேவலப் படாமல் முடித்திடல் வேண்டும்.  அடுத்த பிறவியிலாவது முற்றிலும் தூயவனாகப் பிறந்து, முற்றிலும் தூயவனாக வாழ்ந்து, முற்றிலும் தூயவனாக முடித்திடல் வேண்டும்.

எஞ்சியுள்ள காலத்திலாவது உடல் உபாதைகள், மன உபாதைகள், நோய்கள், பிணிகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, கடன்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, மன நிறைவுடனும், மன நிம்மதியுடனும், மன மகிழ்வுடனும், சீரும் சிறப்புடன் வாழ நல்லருள்  புரிவாய் இறைவா"  என்று வேண்டிக் கொள்வேன்.

ஒரு மாதம் படுக்கையில் கிடந்து, நாய் படாத பாடு பட்டு எழுந்த பிறகு, தற்போது என் பிரார்த்தனை மிகவும் சுருங்கிவிட்டது.  சாதனைகள், புடலங்காய்கள், மன நிறைவு, மன மகிழ்வு இவற்றையெல்லாம் கடாசி விட்டு, "இயலாமை, முதுமை, தள்ளாமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகு முன், இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்; வேறு ஒன்றுமே எனக்கு வேண்டாம்" என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.  நோய்களும், கஷ்டங்களும் மனிதனை எந்த அளவுக்கு பக்குவப் படுத்துகின்றன!

இறைவன் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறானா என்று பார்க்கலாம்.    

17 நவ., 2011

சூரியின் டைரி-53: மானாமதுரை

மானாமதுரை  இரயில்  நிலையத்தின்  புதிய  முகப்பு 


முதல் பிளாட்பாரத்தில் மழை கொட்டுகிறது 

முதல் பிளாட்பாரத்தின் கடைசியில்தான் 
டிக்கட் பரிசோதகர்களின் அறை  



தம்பிமார் பயின்ற 
ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி 


வைகை மேம்பாலத்திலிருந்து ஊருக்குள் நுழையாமல்  பைபாஸ் சாலை வழியே புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதை - அண்ணா சிலை 

புதர்தான் என்றாலும் வைகைக் கரையில் ஒரு அழகிய காட்சி 


வைகை ரயில் பாலமும், 
எங்கு பார்த்தாலும் மண்டிக் கிடக்கும் புதரும் 


வைகை சாலைப் பாலத்திலிருந்து ஒரு காட்சி 



மானாமதுரை கீழ்கரை - ஒரு காட்சி 


அருள்மிகு பூர்ண சக்ர  விநாயகர் கோவில்



அருள்மிகு  ஆதிபராசக்தி  திருக்கோவில்  


அருள்மிகு சாஸ்தா ஆலயம் 



மானாமதுரையின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோமநாதர் திருக்கோவில் - வைகை ஆற்றங்கரையில் 



வைகை ஆற்றுத் தரைப்பாலம் - பெரும்பாலும் ஆற்றில் தண்ணீர் இல்லாதபடியால் இப்பாலம் வழியே எளிதில் அக்கறை செல்லலாம் 

வைகை சாலைப்பாலத்தில் வாகனங்கள் செல்கின்றன 


எனது பள்ளி இறுதித் தேர்வு முடியவும், இரயில்வேயில் பணிபுரிந்த என் தந்தைக்கு திருநெல்வேலியிலிருந்து, மானாமதுரைக்கு மாற்றலாகவும் சரியாக இருந்தது.  நான் விடுமுறையில் திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்தேன்.  வீடு மாற்றியதே எனக்குப் பின்னர்தான் தெரியும்.   1965  ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன்.  ஒருநாள் அப்பாவிடமிருந்து ஒற்றைவரிக் கடிதம் வந்தது. இரவு ராமேஸ்வரம் பாசெஞ்சரில் அவருடன் நான் மானாமதுரை   செல்லவேண்டும். இதுபோன்ற ஒற்றைவரிக் கடிதம் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதை தெளிவாக்கியது. எனக்கு சித்தப்பாவைவிட்டு பிரிந்து செல்ல விருப்பமில்லை; சித்தப்பாவிற்கும் என்னை அனுப்ப மனமில்லை. இருப்பினும் வேறு வழியின்றி திருச்சி இரயில் நிலையம் சென்றோம். சித்தப்பா என்னிடம் சொன்னார்: அப்பா கேட்டால் சொல்லிவிடு துணிமணி எதையும் எடுத்து வரவில்லையென்று. சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்துவதைப் போல். என்னைப் பார்த்ததும், ஏறி உள்ளே உட்கார் என்று ஒரு உறுமல் கட்டளை. நான் சப்தநாடியும் ஒடுங்க, அந்த ரயில் பெட்டியில் ஏறி காலியாக இருந்த ஒரு ஓரத்தில் அமர்ந்தேன். சித்தப்பா ஏதோ சொல்ல முயல, அவரை ஒரு கடி, அதோடு அவர் சரி. ரயில் புறப்பட்டது. மேலே லக்கேஜ் ரேக்கில் ஏறிப் படுத்துக் கொள்கிறாயா என்று கேட்டு, விரிப்பையும் விரித்துக் கொடுத்தார்.  நான் ஏறிப் படுத்தேன்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன்.  இரவு  முழுவதும்  தந்தை டிக்கட் பரிசோதனை செய்யும் தன் பணியைப் பார்க்கப்  போய்விட்டார்.   

அதிகாலை மூன்று மணி அளவிருக்கும்.  தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி மானாமதுரை வருகிறது; இறங்கவேண்டும்; தயாராகு என்றார் தந்தை. விடியாத ஒரு வேளையில் மானாமதுரையில்  வந்திறங்கினேன்.  டிக்கட் பரிசோதகர்களின் பெட்டிகள் வைக்கும் அறையில், இரண்டு, மூன்று பெட்டிகளை இழுத்துப் போட்டு, படுத்துறங்கு; விடிந்தவுடன் எழுப்புகிறேன்; வீட்டிற்குச் செல்லலாம் என்றார் தந்தை.  உறங்கினேன்.  அவர் மீண்டும் என்னை எழுப்பியபோது, நன்றாக விடிந்திருந்தது.  பல் தேய்த்து, அருமையான காப்பி ஒன்றைப் பருகிவிட்டு, (அப்போதெல்லாம் மானாமதுரையில் இரயில்வே சிற்றுண்டியகம் இருந்தது; அங்கே சிறப்பான காப்பி கிடைத்தது), அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.

வைகை ஆறு மானாமதுரையை மேல் கரை, கீழ்கரை  என்று இரண்டாகப் பிரித்திருந்தது.  ரயில் நிலையம், எங்கள் வீடு போன்ற முக்கிய பலவும் மேல் கரைதான்.  கீழ் கரை ஞாயிறன்று அப்பாவுடன் சந்தையில் காய்கறி வாங்கச் செல்வது, பின்னர் கட்டப்பட்ட அமுது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்க்கச் செல்வது,  நண்பர்களுடன் செல்லமுத்து கடையில் புரோட்டா சாப்பிடச் செல்வது  என்று மிகக் குறைந்த தொடர்புதான்.

மேல்கரையில் ரயில் நிலையத்துடன் ஊர் முடிகிறது.  அல்லது ரயில் நிலையத்திலிருந்துதான் ஊர் ஆரம்பமாகிறது.

பிரதான சாலையில் அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன். சரியான பட்டிக்காடு. நெல்லை மாநகருக்குப்பின், மானாமதுரை அவ்வாறு தோன்றியதில் வியப்பில்லை. அடுத்த ஐந்தாண்டுகளை அந்த ஊரில் எப்படிக் கழிக்கப் போகிறேன் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது.  பத்து நிமிட நடைக்குப்பின் ஒருவழியாக வீட்டை அடைந்தோம்.  ஒரு பழைய வீடு.

இப்படித்தான் மானாமதுரை வாழ்கை ஆரம்பித்தது.  1970-ஆம்  ஆண்டு அந்த ஊரை விட்டுக் கிளம்பி, காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் குடிபுகுந்தது வரை உள்ள வாழ்க்கையை தற்போது பதிவு செய்ய முடியாது. நான் பதிவு செய்யப்போவது 2011 அக்டோபரில் மீண்டும் மானாமதுரையைச் சென்று பார்த்தது பற்றித்தான்.  அதாவது நாற்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மானாமாதுரையைப் பார்த்தது பற்றி.

மதகுபட்டியிலிருந்து சிவகங்கை   சென்று, பின் அங்கிருந்து மானாமதுரை செல்ல திட்டம்.  ஆனால் நேரடியாக மானாமதுரை பேருந்தே கிடைக்க, நேராக மானாமதுரைக்கே    சீட்டு வாங்கினேன்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் மானாமதுரை கீழ்கரை, வைகைப் பாலம், மேல்கரை என்று பேருந்து செல்ல, மேல்கரை அடைந்தவுடன் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழி வெளியே சென்றது.  இது முதல் மாற்றம்.  புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தின் மறுபகுதியில் புதிதாக முளைத்திருந்த சாலையில் இருந்தது.  அருகே இரண்டு பெரிய சினிமா தியேட்டர்கள், மற்றும் பல கடைகள் என்று ஊர் வளர்ச்சி பெற்றிருந்தது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் என்பதை முதலில் உணர்ந்தேன். அதன் பின் ஊருக்குள் நடந்தேன்.  பிரதான சாலையில் பெரிதான  மாற்றம் ஒன்றுமில்லை. தம்பிகள் பயின்ற ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி. சீனியப்பா என்ற பெயரில் பல நிறுவனங்கள் (சினிமா தியேட்டர் உட்பட).  நாங்கள் அங்கிருந்த காலத்தில் பெரிய மரக்கடை வைத்திருந்தார்கள்.  தற்போது நிறைய மரக்கடைகள் மற்றும் தியேட்டர்.  நான் சற்றும் எதிர்பாராத ஒன்று பெரிய குழந்தைகள் மையம் ஒன்று டோப்ளர் ஸ்கேன் வசதியுடன்!

அடுத்து நிறைய குட்டிக் குட்டி கோவில்கள்.  (படங்களைப் பதிவு செய்துள்ளேன்.)  நகரின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத  சோமநாதர் திருக்கோவில்.  எதிரே வைகை ஆற்றின் தரைப்பாலம்.  கிட்டத்தட்ட தூர்ந்து போயிருந்தது.  கோவிலைத் தாண்டி சென்றபோது வைகை ஆற்றின் மேலுள்ள பெரிய பாலம்.  அதற்கு முன் அண்ணா சிலை.  பாலத்திலிருந்து பார்த்தபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  நாங்கள் வாழ்ந்த காலத்தில் வைகை ஆற்றுப் படுக்கை, மெரீனா பீச்சைப் போன்று வெள்ளைமணல் கொழிக்கும் எங்களது மாலைப் பொழுதை உவகையுடன் கழிக்கும் இடம்; குழந்தைகள் கொட்டமடிப்பது, விளையாடுவது;  தற்போது முற்றிலுமாக தூர்ந்து, புதர் மண்டியிருந்தது.  ஆறே சுருங்கிவிட்டதுபோன்ற உணர்வு.

நான் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப்  பயின்ற லக்ஷ்மி தட்டெழுத்துப்பள்ளி காணாமல் போயிருந்தது. புகுமுக வகுப்பில் இருமுறை தோற்று,  கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு இடம் கிடைக்காமல், அந்த ஆண்டை வீணாக்காமல் உருப்படியாக தட்டெழுத்து, சுருக்கெழுத்து வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் ஏதோ காலம் வீணாகி விடக்கூடாது என்று பொழுதுபோக்காக படித்த அவைதான் என் வாழ்வின் ஆதாரமாயின.  குடும்பம், பிள்ளைகுட்டி, அவர்களது படிப்பு, திருமணம் என்று அனைத்திற்குமே உதவியது அந்தப் படிப்புதான். இறுதியில் எனது சிறு சிறு கனவுகளை   நனவாக்கவும், எனக்கு ஓரளவு பெயரும் புகழும் கிடைக்கவும் அவையே ஆதாரமாயிருந்தன என்பதுதான் வாழ்க்கையின் வினோதம்.  

நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை.  தொடர்பே இல்லாமல் போயிருந்தது.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், பிரதான சாலையில், குண்டு காதர் கடையில் அப்பா எங்களுக்கு நொறுக்குத்தீனி வாங்கி வருவார். அந்தக் கடை காணாமல் போயிருந்தது.  அதுபோல் காலையில் அருமையான, சுவையான தேநீர் வழங்கும் சைவப் பிள்ளை கடையும் காணாமல் போயிருந்தது.   

நாங்கள் கடைசியாகக் குடியிருந்த தெற்கு ரத வீதியிலுள்ள வீட்டில் முகப்பில் மட்டும் சிறிய மாற்றம்.  முகப்பில் கேம்ப் காட்டில் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, வேடிக்கை பார்ப்பது, உறங்குவது என்று எவ்வளவு நாட்களை கழித்திருக்கிறேன்.  எதிரே இருந்த கிருஷ்ணா மெடிக்கல்ஸ் காணாமல் போயிருந்தது.  எங்களூர் பாராளுமன்ற உறுப்பினர் தா.கிருட்டிணன் அவர்களது கடை.  திறந்து வைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்திருந்தார். என் படுக்கையில் இருந்து பார்த்தால், கல்லாப் பெட்டியில் யார் என்று தெரியும்.  பல நாட்கள் எங்கள் எம்.பி. உட்கார்ந்திருப்பார்.  இளைஞர்களெல்லாம் சான்றிதழுக்காகப் படையெடுப்பர்.  பொறுமையாக ஒவ்வொருவருக்கும் தனது லெட்டர் பேடிலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுப்பார்.  அவர்கள் ஓடோடிச் சென்று டைப் அடித்து வாங்கி வருவர்.  அவரும் பொறுமையாக அனைவருக்கும் கையெழுத்திட்டுக் கொடுப்பார்.  பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வளர்ந்தார். அதன் பின் பல்லாண்டு கழித்து,மதுரையில் அவர் கொலையுண்ட செய்தி  வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

கடைசியாக மானாமதுரை ரயில் நிலையம்.  ஒருகாலத்தில் எப்போதும் ஜேஜே என்றிருக்கும்.  இராமேஸ்வரம், சென்னை, மதுரை, விருதுநகர் என்று நான்கு புறமும் ரயில் பாதைகள் பிரிந்து செல்லும் ஒரு முக்கிய ரயில் நிலையமாக விளங்கியது, காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட ரயில்கள். மண்டபம்-பாம்பன் இடையே தரைப் பாலம் வந்த பிறகு, ரயிலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இன்று மிகக் குறைந்த ரயில் சேவைகளுடன் பரிதாபமாக் காட்சியளித்தது.  புதிய கட்டிடம், புதிய சிறந்த முகப்பு என்று எல்லாம் இருந்தும் பழைய சிறப்பில்லை.  நல்ல காப்பி கூட கிடைக்கவில்லை.  நாராயணன் என்று ஒருவர் புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கு நான் பல புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.  கமுதக்குடியில் பாதிரித் தோட்டத்தில் இருந்து, ஆப்பிள் கொய்யா என்று விதையே இல்லாத, மிகச் சுவையான கொய்யா வரும். எல்லாம் மறைந்துவிட்டது.

ஒருவித ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன்.

பின் குறிப்பு: 

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தியேட்டரில் காலை பதினோரு மணி காட்சி "எங்கேயும் எப்போதும்" என்ற படம் பார்த்தேன்.  படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் மட்டுமே படம் பார்த்தோம்! தீபாவளிக்கு முந்திய சிலநாட்கள் என்பதால் கூட்டமே இல்லை.                       அது மட்டுமே இப்பயணத்தில் சற்று ஆறுதலான விஷயம்!