கி ரா நாட்குறிப்பிலிருந்து .
கி ராஜநாராயணன்.
அகரம் பதிப்பகம் .முதல் பதிப்பு 2003 .
விலை ரூபாய் 90 மொத்த பக்கங்கள் 176.
நாட்குறிப்பு என்றால் என்ன. டைரி என்றும் சொல்லலாம்.
ஓர் இரவும் பகலும் கொண்ட தினம் அல்லது காலத்தில் எழுதப்படுகின்ற குறிப்பு என்று கொள்ளலாம்.
குறிப்பானது அபிப்பிராயம் ,ஒருமை சைகை ,உள் கருத்து ,அடையாளம்
ஞாபகக்குறிப்பு , பொழிப்பு ,காரிய விபரம், குறிப்புக் குறி ,இலக்கு ,உருவக் குறிப்பு என்று பல வகைகளில் அர்த்தம் கொள்ளலாம்.
எழுதுகின்றவனின் மன நிலையைப் பொறுத்து நாட்குறிப்பு அமையும் .சில சமயம் இலக்கியமாகவும் விரியும்.
கி. ரா. அவர்களின் நாட்குறிப்பு அதில் ஒரு வகை..
மேற்குறித்த படி இந்த புத்தகத்தில் கி. ரா. அவர்களின்
அபிப்பிராயம் ,ஒருமை ,சைகை ,உள் கருத்து ,அடையாளம்
ஞாபகக்குறிப்பு , பொழிப்பு ,காரிய விபரம், குறிப்புக் குறி ,இலக்கு ,உருவக் குறிப்பு என்று பல வகைகளில் எழுதப்பட்டிருக்கிறது நாட்குறிப்பு.
#####₹₹
கி .ராஜநாராயணன் என்று உச்சரிக்கும் பொழுதே ஒரு உற்சாகம் நமக்குள் பரவுவதை அறியலாம்.
கி. ராஜநாராயணன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை.
ஆனால் கி. ரா.ஒரு சங்கீதக்காரன் ஆக வேண்டும் என்று விரும்பியவர் .அதற்காக சங்கீதம் கற்றுக் கொண்டவர் என்பது புதுச் செய்தி .
கரிசல் எழுத்தாளராக, நாட்டுப்புற இலக்கிய வாதியாக ,கதைசொல்லியாக, விவசாய சங்கவாதியாக அவர் பன்முகங்களையும் அறிந்துள்ள வாசகர்களுக்கு அவரது இசை முகத்தை காண வாய்ப்பு இருந்ததில்லை. அவருடைய இசை அனுபவங்கள் மிக நீண்டவை; தனித்தன்மை வாய்ந்தவை.
கி. ராஜநாராயணன் என்ற எழுத்தாளருக்கு இசை வேட்கை ,இசை காதல் ,இசைஞானம் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது என்பதை அறிவதில் ஆச்சரியமாகத்தான் இருக்கும்..
#####
கி ராஜநாராயணன் அவர்கள் தனது முன்னுைரையில் இவ்வாறு கூறுகிறார் :
பேயாய் பக்கம் பக்கமாக எழுதி தொலைத்த பேனாவில் இப்போது மை வற்றி விட்டது காவேரி போல ; காலம்தான் .
வாய் பேச முடியாதவனுக்குத்தான் கை என்பார்கள் ;இப்போது கை பேச
முடியாதவனுக்கு வாய் என்று ஆகிவிட்டது .
கதைசொல்லி இதழ் தொடங்கியவுடன் நண்பர்களுக்கு கடிதம் மூலம் நான் சொல்ல வேண்டியதை *நாள்குறிப்பு * என்ற பெயரில் சொல்ல ஆரம்பித்தது ."ஆடு மேய்ச்ச மாதிரியும் அக்காளுக்கு மாப்பிள்ளை பார்த்த மாதிரியும் "என்று ஆகியிருக்கிறது .
இவை இப்போ கடிதங்கலாகவும்
இல்லை ; கட்டுரைகளாகவும் இல்லை .ஏதோ ஒரு எழுத்து வகை ,வடிவங்களாகத் தெரிகிறது .உரைநடை இலக்கிய விளைச்சலில் விளைச்சலில் இதும் ஒரு வகை ,"என்கிறார் தனது முன்னுரையில்
கி. ரா.அவர்கள்.
####₹₹₹₹
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்:
இந்தப் புத்தகத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன .
என்னை கவர்ந்த விஷயங்கள் ,என்னை கவர்ந்த வரிகள் குறித்து பார்ப்போம் .
குளிர்தரு மர நிழல் போல குளிர்ச்சி தருகின்ற வார்த்தைகளில் இது ஒரு புதுவிதமான இலக்கியமாகவும் மிளிர்கிறது இந்த புத்தகம்.
மழைக் காலத்துல ஏத்து மீன் மலையேறி வரும் ; தூரி கொள்ளாது .
ருசின்னா ருசி அப்படி ஒரு ருசி அந்த மீனுக்கு .அதுபோலத்தான் இந்த புத்தகம்.
புதுமைப்பித்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்தில் தனது வித்தியாசமான முத்திரையை ஆழமாகப் .பதித்தவர் பிரமிள் , என்கிறார் ஆசிரியர் ஆனால் அவரை நேரில் சந்தித்ததில்லை என்றும் கூறுகிறார்.
என் சரிதம் எழுதிய உ.வே.சா.
குறித்து அம்பையும் கி. ரா அவர்களும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கூறிய ஒரு வார்த்தை திடுக்கிடச் செய்கிறது ."அடேயப்பா , அந்த மனுஷன் எவ்வளவு விஷயங்கள் சொல்றார் ; எவ்வளவோ அனுபவங்கள் ,எத்தனை விதமான மனிதர்கள் ,பேர்கள், இத்தனை இருந்தும் என்ன பயன் .;எத்தனை பேர்கள் பற்றி அவர் எழுதி ,கட்டின பொண்டாட்டியை பற்றி ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை உண்டா அதில் ?"என்று அம்பை கேட்கிறார். அதை ஆச்சரியப்பட்டு கி .ரா.அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
# எம் வி வெங்கட் ராம் குறித்து எழுதும்போது ,"வெற்றிலை மெதுப்புகிற முகத்துக்கே உள்ள ஒரு லட்சணம் .அதோடு சிவந்த குங்குமப்பொட்டு ,ஒரு தஞ்சாவூர் பந்தா இப்படி ஒரு அட்டகாசம் அவரிடம் ,பார்க்கவே சந்தோஷமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.
#
சில பழங்கள் பழுக்க பழுக்க இனிமை கூடும் .சிவாஜி என்கிற இந்த பழம் பிறப்பிலேயே இனிமையை கூடிய பழமாகவே இருந்தது .அவருடைய குரலே
ஒரு சம்பத்து. அதை நாம் அடுக்கு மொழியில் பேச செய்து பாழ்படுத்தினோம் . சினிமா என்பது கேட்பது அல்ல; பார்ப்பது என்பதை மறந்து போனோம் .ஓசை விஷயத்தில் நாம் ஓதாரிகள். ஆயிரம் தடவை சார்லி சாப்ளின் பார்த்தாலும் புத்தியில் உறைக்கவே இல்லை நமக்கு ",என்கிறார் ஆசிரியர்.
# மலர் தொகுப்பு என்ற பெயரில் லதா மங்கேஷ்கர் தனது சுயசரிதையை எழுதி இருக்கிறார் என்று ஆசிரியர் குறிப்பிட்டார் .
(அவர் பிறந்தது இந்தூர்ட்,வளர்ந்தது கோலாப்பூர் ,ஜொலித்தது மும்பை என்றாலும் அவர் பிறந்த ஊரில் ஒரு மிகப்பெரிய மாளிகை போன்ற கோயில் கட்டி இருக்கிறார் .அங்கு நான் சென்று வந்து மகிழ்ந்திருக்கிறேன். இதுபோலவே எஸ்பிபி அவர்களும் தனது பிறந்த கிராமத்திற்கு நிறையவே செய்திருக்கிறார் .மேன்மக்கள் மேன் மக்கள் தான் போலும்.)
#. மொழி வாரியாக மனிதர்கள் பிரிந்து பல மொழிகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள் .
ஊமை மொழி அப்படி அல்ல. இது ஒரு சர்வதேச மொழி என்று நினைத்துக்கொண்டிருந்த ஆசிறியருக்கு நாட்டுக்கு நாடு மொழி வேறுபடுவது போல ஊமை மொழியும் வேறுபடும் என்கிற விஷயம் கேட்டு அதிர்ந்து போகிறார் ஆசிரியர்.
## தீப குமாரசாமியின் அகால மரணம் குறித்து ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
" ஆத்தை தாண்டி
சமுத்திரத்தையும் தாண்டி
வாய்க்காலை தாண்டும் போது
வாயை பிளந்தான் "
அரிய பல செயல்களை சுலபமாக செய்து முடித்தவன் ஒரு சிறிய செயல் செய்ய முடியாமல் செத்துப் போனான் என்பது.
காலம் என்று ஆகிவிட்ட சிவாஜிகணேசன் பற்றி எவ்வளவு பாராட்டி சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லிவிட்டோம்.
கம்பனைப் போல இனி எக்காலத்திலும் ஒரு கவிஞன் தமிழுக்கு கிடைக்கப்போவதில்லை .
வியாசனை போல் ஒரு கதைசொல்லி பிறப்பான ?
ரசிகர் மணியைப் போல ஒரு ரசஞானியைப் பார்க்க முடியுமா ?
இன்னுமொரு ராஜரத்தினம் ,ஒரு விளாத்திகுளம் ,இசை சித்தர் இளையராஜா இப்படி பார்க்கவே முடியாத அபூர்வங்கள் இவர்கள் .
"பாரிஜாத மரம் ஒரு தடவைதான் பூக்கும் ; அதுவும் ஒரே ஒரு பூ தான் பூக்கும் என்பது போல", என்கிறார் ஆசிரியர்.
####
"அங்கரசம் என்று ஒன்று உண்டு . அங்கங்களால் பாவனை பண்ணித் தெரிவிப்பது .ரசிகமணி இது பற்றி சொல்லியிருக்கிறார் .இதை தெரிந்து கொள்ள இப்போது பாலசரஸ்வதி இல்லை .அந்த அம்மையார் ஆடும் போது நான் பார்க்க கொடுத்துவைக்கவில்லை .ரசிகமணி வாயால் கேள்விப்பட்டதோடு சரி ," என்கிறார் ஆசிரியர்.
## சில மரங்கள் காலம் தவறி காய்ப்புக்கு வருவதுண்டு .அப்படி காய்க்கும் காய்ப்புக்கு இங்கே -- புதுவையில் -- "காம்பீட்டுக் காய் * என்கிறார்கள் .நான் தெரிந்துகொண்ட புதுச்சொல் இது ",என்கிறார் ஆசிரியர்.
##
ரோமாபுரியில் இருந்து டாக்டர் ஃபெரோ
- லூசி அம்மையார் வந்திருந்தபோது வசவு சொல் , தமிழ் மக்கள் திட்டுகிற வசவுகள் பற்றி கேட்டார் .அது குறித்து விவரமாக ஆசிரியர் இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
குறிப்பாக மயிர் முடி ரோமம் குறித்து ஆசிரியர் அருமையாக விளக்கி இருக்கிறார்.
இன்னும் எவ்வளவோ இருக்கு; எடுத்து பதிவு செய்து கொண்டே போகலாம் .இதுவரை போதும் என்று நினைக்கிறேன்.
####
இந்த புத்தகம் படித்து முடித்த பிறகு இவரைப்போல் யாரேனும் எழுத முடியுமா என்று யோசித்தேன் .
ஒரு கரிசல்காட்டு சொலவடை நினைவிற்கு வந்தது .
"வீம்புக்கு மாவு இடிச்சா குலுக்கைப் புல்லுக்குத்தான் சேதம் "என்கிறது அந்த சொலவடை.
நன்றி :