*வேதாத்திரிய மெய்விளக்கம் *
*எல்லோரும் மெய்ஞானம் பெற வேண்டும்!*
*எத்தனையோ கோடிக்கணக்கான உயிர்கள் உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவு என்ற சிறப்பு உண்டு.*
*இந்த ஆறாவது அறிவுக்கு ஏற்ற ஒரு செயல், ஒரு பயன் அவன் பெற வேண்டும்.*
*ஆறாவது அறிவைச் சாதாரணமாக உலகில் உணவு சேகரிக்கும் முறையிலோ, மற்ற புலன்களை இயக்கி இன்ப துன்ப அனுபோகங்களைக் கொள்ளும் வகையிலோ, செயல்படுத்தும் போது பொருள்வயப்பட்ட அறிவு என்றும் புலன்வயப்பட்ட அறிவு என்றும் சொல்கிறோம்.*
*நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அதைவிட உயிர்தான் முக்கியம். உயிரின் படர்க்கை நிலைதான் மனம். உயிர் என்றாலும், மனம் என்றாலும் ஒரு அளவில் ஒன்றுதான்.*
*ஆனால் உடலை அறிந்து கொள்ள நாம் முயல்கிறோம். உடலுக்கு வேண்டிய தேவைகளை, பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயல்கிறோம். அது யாருக்காக? உயிருக்காக. உயிர்தான் முக்கியமான ஒரு தத்துவம். அதைப் பற்றி உணர்ந்து கொள்ளும்போது தான் நேர்மையான சீரான வாழ்வு (Balanced Life) உண்டாகும்.*
*ஒன்றுக்கொன்று முரணாக உண்டாகிறது என்றால் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்று சொல்லக்கூடிய உணர்ச்சிவயப்பட்ட செயல்கள், எண்ணங்கள் இவைகளெல்லாம் உண்டாகும்.*
*அருள்வயப்பட்ட அறிவிலே இதே இந்த ஆறுகுணங்களும் புனிதமடைந்து, மாற்றம் பெற்று விழிப்பு நிலையினால் செம்மை பெற்ற மேன்மையான நற்குணங்களாகவே மலரும்.*
*பொதுவாக ஐயுணர்வுகளுக்கு உட்பட்ட உயிர்கள் பொருள்வயப்பட்டே வாழ்வது இயல்பு. ஏனென்றால் ஆறாவது அறிவாக உள்ள ஒரு சிறப்பு அங்கே இல்லாததனால் உயிரைப் பற்றியோ, மனதைப் பற்றியோ, உணர்ந்து கொள்ள முடியாது.*
*மனிதப்பிறவியில் ஆறாவது அறிவு வந்துவிட்ட பிறகு அதை உணர்ந்துதான் ஆக வேண்டும். அதற்காகவே பிறவி வந்தது.*
*யோகம் (Simplified Kundalini Yoga) என்பதே அறிவைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய ஒரு சிறந்த பயிற்சி. அப்படி அறிந்து கொள்ளக்கூடிய பயிற்சியைப் பெற்று அறிந்து கொண்டு வாழ்விலே செம்மையாக வாழும்போது அதை ஞானம் என்று சொல்கிறோம்.*
*மெய்ஞ்ஞானம் மனிதன் அடைய வேண்டிய பேறு. அப்படி அடையாமல் வேறு எதை அடைந்தாலும் அதிலே மனம் (Mind) நிறைவு பெறாது.*
*எவ்வளவுதான் இன்பமயமான வாழ்க்கையாக இருந்தாலும் கூட எதுவோ ஒன்று விட்டுப் போனதாகவே தெரியும். காரணம் முழுமுதற் பொருளிலே இருந்து தன்னை விலக்கிக் கொண்ட மனம், பொருள் மேலேயே நினைவு இருப்பதனால் அதன் பயனை முழுக்கத் துய்க்க முடியவில்லை.*
*ஆகையினால் வயது வந்தவர்கள், சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் எல்லோரும் மெய்ஞ்ஞானம் பெற வேண்டும்.*
*அத்தகைய உன்னதமான பயிற்சி முறை தான் எளியமுறை 'குண்டலினியோக (Simplified Kundalini Yoga) பயிற்சியாகும்.*
*உபதேச மார்க்கம்*
வாசியோக முறையொன்றும் இங்கு இல்லை.,
வாய்விட்டு உச்சரிக்கும் மந்திரமில்லை.,
ஊசிமுனை வாசல் ஒன்றைத் திறந்து காட்டி,
உன்னையே அங்குக் காவல் சில நாள் வைத்து,
தேசிகனாய் அருள்ஒளிரும் பார்வை மூலம்,
தீட்சை மறுபடியும் ஈந்தழைத்துச் சென்று
மாசில்லா ஆதிநிலை அறியும் உச்சி
மன்றத்தில் அமர்த்திடுவேன் அமைதி காண்பீர்.
(ஞானக்களஞ்சியம் கவி: 1449)
*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
நன்றி :