#புத்தகமும்நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#புத்தகமும்நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 மார்., 2026

புத்தகமும் நானும் -2: இரும்புக்கை மாயாவி - சித்திரக்கதைகள்

புத்தகமும் நானும் -2
இரும்புக்கை மாயாவி- சித்திரக்கதைகள்

நெல்லையப்பன் 18.06.24


அரிசியின் மேலே அவனவன் பெயரை ஆண்டவன் எழுதி வைப்பான். அதை அடுத்தவன் யாரும் கெடுப்பதற் கில்லை; அவனவன் தின்றே தீர்ப்பான். இது ஒரு திரைப்படப் பாடல் வரி. இஸ்லாமிய வேதம் சொன்ன கருத்தை, பாடலாசிரியர் கவித்துவமாக, அதே சமயம் எளிமைப் படுத்திச்  சொல்கிறார்.

ஆண்டவனின் இன்னொரு விளையாட்டைப் பாருங்கள்.  ஒரு மனித உயிரை படைத்து, அதை இரண்டாகப் பிரித்து பூமியை நோக்கி வீசி விடுவாராம். அவை வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு காலக்கட்டத்தில், கருவினுள் புகுந்து,  ஒன்று ஆணாகவும்,  மற்றது பெண்ணாகவும், பிறந்து, வளர்ந்து, தன் உயிரின் இன்னொரு பாதியை தேடோதேடென்று தேடிக் கண்டடைந்து இணைந்து விடுமாம். இந்த தேடலில் தான் சிக்கலே இருக்கிறது.

 பருவம் அடைந்த பிறகு பார்க்கும் ஒவ்வொருவரையும், இவர் தானா, இவர் தானா என்று மனம் மயங்கி, குடும்பத்தினர், நண்பர்கள் செய்த குழப்பங்களும் சேர்ந்து, அவசரக் கோலத்தில்  பெரும் பிழை நேர்ந்து விடுகிறது. அதைத்தான் நாம் திருமணம், காதல், கள்ள உறவு, பாலியல் வன்கொடுமை, என வெவ்வேறு பெயரால் அழைக்கிறோம். அப்பா ஆண்டவா!, நீ விளையாட இந்த மனிதப் பயல் தானா கிடைத்தான்?

புத்தகம் பற்றியும் இதே போன்ற ஒரு கருத்து உண்டு.  "அச்சு ஏறும் ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியிலும்,  முதல் பக்கத்தில், அதை யார்யார் படிக்கப் போகிறார்கள் என்பது, கண்ணுக்குத் தெரியாத ஒரு மையினால் எழுதப்பட்டு இருக்குமாம்.  அந்தப் புத்தகம் அவர்களை எப்படியோ தேடிச் சென்று சேர்ந்து விடுமாம்.

சரி, அப்படி சென்று சேர்ந்து விட்டாலும், அவன் உடனே படித்து விடுவானா என்ன? கல்லாகச் சமைந்த அகலிகை, ராமன் கால் படாதா என்று  காத்துக் கிடந்தது போல், வாசிப்பவன் கை படாதா! என்று புத்தகங்களும் தவமிருக்கும் போலும்.

சித்திரக் கதைகள் இவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை. கையில் எடுத்தால்  ஒரே மூச்சில் முடித்து விட்டுத்தான் மறுவேலை. அப்போது எனக்கு 10 வயது. எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் சபாபதி அம்மாவின் 6 பையன்களில் முதல் மூவர் எனக்கு தோழர்கள். அவர்கள் வீட்டில், கடைக்கு வந்த அன்றே *"முத்து காமிக்ஸ்"* புத்தகங்களை நைனா வாங்கி வந்து விடுவார். முதலில் அவர் படித்து விட்டு பிள்ளைகளிடம் கொடுப்பார். (காமிக்ஸ் சிறார்களுக்கே என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் தவறு. அது எல்லா வயதினருக்கும், இரு பாலருக்கும் ஆனது.)  ஒரு பிரதியை 20 , 30 பேர், போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். 

என் வாசிப்பு அனுபவத்தை தொடங்கி வைத்தவர் முத்து காமிக்ஸ்  திரு.முல்லை தங்கராசன் அவர்கள் தான். என் "புத்தகக் கோட்டி"க்காக நீங்களோ, என் குடும்பத்தினரோ யாரையாவது உதைக்க வேண்டும் என்று நினைத்தால் முதன்மையானவர் அவர்தான்!  ஆனால் துரதிஷ்டம், இன்று அவர் இல்லை. வாழ்க்கையின் மிகப் பெரிய முரண், பல இளைஞர்களுக்கு கற்பனை மற்றும் creativity என்ற வாசலை விரியத் திறந்து விட்ட அவர், பின் ஒருநாள், பலர் கலந்து கொண்ட ஒரு விழாவில், உயரமான மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். என்ன சொல்ல.


எப்படிப் பட்ட கதைகள்! கருப்பு வெள்ளையில் விழிகளை விரிய வைத்த படங்கள்!!
 அடடா, என்னே கற்பனை வளம்! அவர் உருவாக்கிய இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ & ஸ்டெல்லா எல்லாம் எங்களின் *கதாநாயகர்கள்* எங்களின்  *ஒரே எதிரி* அ.கொ.தீ.க ( அழிவு, கொள்ளை, தீயவர் கழகம்). இது வேறு கழகம். தி.மு.க, அ.தி.மு.க வோடு நீங்கள் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆங்! ஒரே எதிரி என்றா சொன்னேன்?வேண்டுமானால் சில ஆசிரியர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

நம் பள்ளிப் பாடத் திட்டங்கள் இன்னும் கொஞ்சம் creative ஆக இருந்தால் சித்திரக் கதைகளின் மூலம் பல நல்ல விசயங்களை மாணவர்களுக்கு புரியும் படி சொல்லி எளிதில் மனதில் பதிய வைக்க முடியும். ஏன் இன்னும் *மஞ்சள் பூ மர்மம்* எந்த வகுப்பிற்கும் பாடமாக வைக்கப்பட வில்லை?

வாசிப்பின் பரிணாமத்தை நான் இப்படிச்  சொல்வேன்.

படங்களை பார்த்து பெயர் சொல்லுதல் - பாட்டி, தாத்தா, அம்மாவிடம் கதை கேட்டல் - படங்களை பார்த்துக்  கதை சொல்லுதல்  - சித்திரக் கதைகளை எழுத்துக் கூட்டிப் படித்தல் - நன்நெறிக் கதைகள்- தெனாலிராமன், அக்பர், பீர்பால் கதைகள்- திகில், மர்மம், துப்பறியும் கதைகள் - சரித்திர நாவல்கள்- காதல் கதைகள்- காமம், பாலியல் கதைகள்- வீர, தீரக் கதைகள்- புரட்சி -சமூக அவலம் - வர்க்கம் - பெண்ணியம் - ஆன்மிகம் - கட்டுரைகள்- ஆய்வுகள்- சூரியனுக்கு கீழுள்ள எல்லாமும்.

இந்தச் சங்கிலியின் ஆரம்ப கண்ணிகளில் ஒன்றான தாத்தா, பாட்டி, அம்மாவிடம் கதை கேட்டல் என்ற இடத்திலேயே சங்கிலி அறுந்து விடுவது தான் பெரும் சோகம்.

புத்தகமே படிக்காதவர்கள் பற்றி என் சொல்ல? 

ஒன்று செய்யலாம். அவர்களுக்காக, எழுந்து நின்று ஒரு நிமிடம் நாம் மௌனம் அனுஷ்ட்டிப்போம்!

4 மார்., 2026

புத்தகமும் நானும் -1

இன்று முதல் ஒரு புதிய தொடர். நான் பெரிதும் போற்றும் எனதருமைத்தம்பி எங்கள் குடும்ப வாட்ஸ்ஆப் குழுவில் தொடர்ந்து எழுதிவருவதை இங்கே பதிவு செய்யப் போகிறேன்.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மிகவும் மகிழ்வேன்.

                                                                    தம்பி நெல்லையப்பன் 


 புத்தகமும் நானும் -1
நான் சம்பாதித்த முதல் புத்தகம்
நெல்லையப்பன்  16.06.24

கோட்டையூர் "தஞ்சாவூர் அருணாசலம் செட்டியார் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி ஒரு பேச்சுப் போட்டி அறிவித்திருந்தது. 

1) நான் விரும்பும் தலைவர் 
2) எனக்கு பிடித்த கவிஞர் 
3) உலக அரங்கில் இந்தியாவின் நிலை  

- இந்த மூன்றில் ஏதாவது ஒன்று பற்றி 5 நிமிடங்கள் பேச வேண்டும். அவ்வளவு தான். ஆசிரியர் வகுப்பறையில் சுற்றரிக்கையை சப்தமாக படித்து விட்டு அவராகவே என் பெயரை எழுதிக் கொண்டார்.

TTE ஆன என் அப்பா, அப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவார். காலை 6 மணி ரயிலில் வீட்டிற்கு வந்து, குளித்து சாப்பிட்டு 8 மணி ரயிலை அன்று பிடிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவர் வீட்டிற்கு வருகிறார். அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் விஷயத்தைச் சொன்னேன்.

"சரி எழுதிக் கொள்" என்று உடை மாற்றிக் கொண்டே சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன வேகத்திற்கு என்னால் எழுத முடியவில்லை. திரும்பத் திரும்ப கேட்டுக் கேட்டு எழுதினேன். இடையில் அம்மாவுடன் கணக்கு வழக்கு. வீட்டில் இருந்த மற்ற 8 குழந்தைகளுடன் (இரண்டு அக்காமார் திருமணமாகி புக்ககம் சென்று விட்டிருந்தனர்)  கொஞ்சி, பேசி,  கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, தனக்கு அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு முக்கியம் என்று, ஒவ்வொருவரையும் உணர வைத்து, குளித்து, இடைஇடையே கட்டுரை வரிகளை என்னிடம் சொல்லியபடி, வெங்காய சட்னி வச்சு ஒரு இட்லி, நேற்று திரிச்ச மிளகாய் பொடிக்கு ஒரு இட்லி, பழைய புளிக்குழம்பு உங்களுக்கு பிடிக்குமே என்று அதற்கு ஒரு இட்லி என்று அம்மையையும் திருப்தி செய்து, கட்டுரையையும் திருத்திக் கொடுத்து, என்னை பின்னால் உட்கார வைத்து சைக்கிளை மிதி மிதி என்று மிதித்து, ஸ்டேஷனில் கிட்டத்தட்ட ஓடிப்போய்   ரயில் ஏறினார் அப்பா. பாருங்கள்! எழுதும் எனக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. 

 அப்பாவின் நேர மேலாண்மை அசர வைக்கிறது. அதற்கு மற்றொரு சான்று இருபது வருடங்களில் 11 குழந்தைகள்.

மத்திய சர்க்கார் உத்தியோகம் என்றாலும், அந்த இழுத்துக்ககோ, பறிச்சிக்கோ சம்பளத்தில், பல பெட்டிகளை ஒற்றையாக இழுக்கும் குட்ஸ் இன்ஜின் போல
இருந்தார் அப்பா. ஆனால் அப்பா சோகமாக இருந்தோ, கவலையுடன் சோர்வுற்று இருந்தோ நாங்கள் பார்த்ததே இல்லை. தந்தையர் தினத்தில் இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்துதான் இத்தனை கண்ணீர் கண்களில் வந்து முட்டுகிறதோ! 

தான் பெற்ற 11 குழந்தைகள், அந்த குழந்தைகளை பெற்றுக் கொடுத்த தன் மனைவி (*எனக்குத் தெரிந்து உலகத்திலேயே தொடர்ந்து 20 ஆண்டுகள் தான் பெற்ற 11 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த ஒரே பெண்மணி*) இவர்கள் மனம் ஒரு கிஞ்சித்தும் வாடிவிடக் கூடாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்பவராக, சிரித்த முகத்துடன், வானளாவிய நகைச்சுவை உணர்வுடன் இருந்தவர் அப்பா.

                                                               எங்கள் தந்தையார் 


நிற்க! கட்டுரை போட்டி என்னாச்சு?  "புத்தகமும் நானும்" என்ற தலைப்பு எதற்கு? இருங்கள், பக்கத்தில் வந்து விட்டோம்.

11ஆம் வகுப்பு மாணவர்கள் பத்து பேர்  கலந்து கொண்ட அந்தப் போட்டியில் நான் ஒருவன் மட்டுமே 10ஆம் வகுப்பு மாணவன். பேசிய அனைவருமே காந்தி, காமராஜர் அல்லது பாரதி பற்றியே பேசினர். நான் ஒருவன் மட்டுமே "உலக அரங்கில் இந்தியாவின் நிலை" என்ற தலைப்பில் தட்டுத் தடுமாறிப் பேசினேன். 

என்னைவிட நான்கு, ஐந்து மாணவர்கள் நன்றாக பேசியதாக நான் நினைத்த போதும், எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.

அந்த வருட பள்ளி ஆண்டு விழாவில், பேச்சுப் போட்டி- இரண்டாம் பரிசு- எஸ்.நெல்லையப்பன் என்று ஒலி பெருக்கியில் அறிவிக்க நான் பெருமையுடன் மேடையேறி அந்த பரிசை பெற்றுக் கொண்டேன். பரிசாகக் கிடைத்தது ஒரு புத்தகம். 

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அந்த புத்தகம் "தைப்பாவை". அது ஒரு கவிதை புத்தகம். நான் அதை அடிக்கடி கையில் எடுத்து அழகு பார்ப்பேன். இரண்டொரு நாளில் வீட்டிற்கு  வந்த அப்பாவிடம் புத்தகத்தை கொடுத்தேன்.  அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அதை படிக்கத் தொடங்கினார்.  நான் பெருமையுடன் அருகில் நின்றிருந்தேன். உண்மையில் அது அவருக்குக் கிடைத்த பரிசு தானே!.

 இப்படியும் சொல்லலாம்- நான் என் வாழ்க்கையில் முதன் முதலாக சம்பாதித்தது ஒரு புத்தகத்தை. அதன் அன்றைய விலை ரூபாய் மூன்று. 

அதன் பிறகு அந்த புத்தகம் எங்கே போனது என்று தெரிய வில்லை. நானும் அந்த புத்தகத்தை இன்று வரை படிக்க வில்லை. இன்று என் நூலகத்தில், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக  சுமார் 3000 புத்தகங்கள் இருப்பினும், அதில் "தைப்பாவை" பிரதி இல்லை. உங்கள் யாரிடமேனும் இருக்கிறதா கண்ணதாசனின் "தைப்பாவை"?
🙏🙏🙏

(தொடரும்)