29 ஆக., 2011

மனதில் பதிந்தவை-15: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 17, 2011

 ஆனந்த விகடன், ஆகஸ்ட் 17, 2011 
-------------------------------------------------
 புள்ளிவிபரங்கள் பகுதியில் தலையைச் சுற்றும் ஒரு எண்: 
1,78,10,00,00,000. ஸ்பெக்ட்ரம்  ஒதுக்கீட்டில் அரசு இழந்த பணமா?  இல்லை, வேறு ஏதாவது புதிய ஸ்கேமில் அரசு இழந்த பணமா?  இவை எதுவுமே இல்லை. டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகை இது!  யார் கண்டது, இலவசங்கள் நிறையத் தரவேண்டி உள்ளது; அதற்குப் பணம் நிறையத் தேவைப்படுகிறது என்றும், நிறையப் பணம் ஈட்டச் சுலபமான வழி என்றும், இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களில் அரசே விபச்சார விடுதிகளை ஏற்று நடத்தும் நிலை வந்தாலும் வரலாம்!

தலையங்கம்: "அழகிய அசுரன்".  வேறு யார், பிளாஸ்டிக்தான்! சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் எவ்வளவு கடுமையாகப் பாதிக்கிறது, அதன் பின்விளைவுகள் எவ்வளவு மோசமானவை என்று அனைவருக்கும் தெரியும், அரசுக்கு நன்றாகவே தெரியும்.  இருந்தும் நாட்டில் ஒரு நாடகம் நடைபெறுகிறது.  'கேரிபேக்குகளை' தடை செய்தல்; அபராதம் விதிக்கப்படும், இவற்றைக் கொளுத்தாதீர்கள், விஷ  வாயு வெளியாகும்  என்று அச்சுறுத்துதல்கள், அறிவுறுத்தல்கள்.  எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.  அப்புறம் எல்லோரும் மறந்துவிடுவார்கள்; மறுபடியும் எங்கும் 'கேரிபேக்குகளும்' மற்ற மக்காத பிளாஸ்டிக் குப்பைகளும்.  இத்தகைய பிளாஸ்டிக்கையும், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியையும் தடை செய்வதை விடுத்து, இதற்கு மாற்றுத் தேடும் வழியை விடுத்து, சும்மா ஒப்புக்காக நாடகம் ஆடுவது ஏன்?  உறுதியான தடுப்பு நடவடிக்கை விடாமல் அரசைத் தடுப்பது எது, தடுப்பவர் யார்? என்ற கேள்விகளே என் மனதில் எழுந்தன.

அடுத்து, ப.திருமாவேலனின் நிலா அபகரிப்புக் குற்றங்கள் பற்றிய கட்டுரை.  இரண்டாயிரத்து எண்ணூறு வழக்குகள் பதிவாகியுள்ளனவாம்.  சரியான நடவடிக்கை எடுத்து, அடாவடிப் பேர்களை சிறைக்கு அனுப்பி, நிலங்களை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்!

வலைபாயுதே பகுதியில் நான் மிகவும் ரசித்தது, அன்னா ஹஜாரே தேர்தலில் போட்டியிடத் தயாரா எனும் மனீஷ் திவாரியின் கேள்விக்கு, டிவிட்டரில் ஈரோடு கதிரின் எதிர்க் கேள்வி: "அய்யா, முதல்ல மன்மோகன் சாரை தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வரச்சொல்லுங்க!" 

அச்சச்சோ அவார்ட்ஸ் பகுதியில் கோயிந்து கொஸ்டீனை மிகவும் ரசித்தேன்: "விவசாஈகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தர்றதா போன ஆட்சியில வாக்குக் கொடுத்தீங்களே பெரியவரே.  நடக்கற வழக்குகளைப் பார்த்தா, கொடுத்த மாதிரி தெரியலையே... எல்லாமே எடுத்த மாதிரி இருக்கே?"


  

கருத்துகள் இல்லை: