24 செப்., 2018

இன்று ஒரு தகவல்-98:

விநாயகரை ‘விதை’ நாயகர் ஆக்கிய தொண்டு நிறுவனம்... 

இளைஞர் சுவரஜித் கோவையில் நடத்தும் தொண்டு நிறுவனம் ’So Aware’ இயற்கையைக் காக்க புது முயற்சியாக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி. சென்ற 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. வண்ண வண்ண பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால் விநாயகர் சிலைகளை கடல், குளம், குட்டைகளில் கரைப்பது ஆண்டுதோறும் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் மாசு குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு தீர்வாக கோவையைச் சேர்ந்த ‘சோ அவேர்’ தொண்டு நிறுவனத்தினர் ‘கிரீன் கணபதி’ எனும் விதை நாயகர் சிலையை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சுவரஜித் நண்பர்களோடு இணைந்து உருவாக்கிய இந்த சோ அவேர் தொண்டு நிறுவனம்.
கல்வி, உணவு, மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக் கொண்டு இந்த விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்த சிலைகளின் நடுவில் விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்தபிறகு, சிறுதொட்டியில் வைத்து நீர் ஊற்றி வர வேண்டும். 10 நிமிடத்தில் களிமண் முழுவதும் கரைந்து விடும், பின் அதன் உள்ளே இருக்கும் விதை முளைக்க ஆரம்பிக்கும். பின்னர் இதனை தொடர்ந்து தொட்டியிலோ அல்லது நிலத்திலோ நட்டு வைத்து வளர்க்கலாம்.

பாரம்பரிய கலாசாரத்தை பாதிக்காத, அதேசமயம் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத இந்த விதை விநாயகர் சிலைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திரு சுவரஜித், அவரது நண்பர்கள் மற்றும் 'So Aware' அமைப்பிற்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

(விநாயகர் சதுர்த்திக்கு முன்னர் வரவேண்டிய தகவல் தவிர்க்க முடியாமல் தாமதமாக பதிவிடுகிறேன். மன்னிக்கவும்)

நன்றி: ஜெயசித்ரா மற்றும் YourStory Media P Ltd

கருத்துகள் இல்லை: