31 ஆக., 2020

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : ஆபிரகாம் பண்டிதர்

யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்?

ஆபிரகாம் பண்டிதர் 1899ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வாங்கி, அதற்கு "கருணானந்தபுரம்" என்று பெயரிட்டார். பொதுமக்கள் அதைப் "பண்டிதர் தோட்டம்" என்றே அழைத்தனர். அவ்விடத்தில் பல வகையான மரம் செடி கொடிகளையும், மூலிகைகளையும் மலர்களையும் பயிரிட்டார். வேளாண்துறையில் புதிய ஆய்வுகளையும் மேற்கொண்டு பரிசுகளும் பெற்றார்.

தஞ்சாவூரில் அவருடைய இல்லத்தில் பண்டிதர் "கருணாநிதி மருத்துவக் கூடம்" (Karunanidhi Medical Hall) என்றொரு பிரிவைத் தொடங்கி அங்குக் கூடிவந்த மக்களுக்கு மருத்துவ நல உதவி நல்கினார். அவர் வழங்கிய "கோரோசனை மாத்திரைகள்" பிரபல்யமானவை. அவை இந்தியாவில் மட்டுமன்றி, அந்நாளைய சிலோன், பர்மா, மற்றும் ஆங்கிலேயர் கைவசம் இருந்த கிழக்கு ஆசிய நாடுகள் (இன்றைய சிங்கப்பூர், மலேசியா) முதலியவற்றில் அந்த மாத்திரைகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது.

1908, பெப்ருவரி 22ஆம் நாள் ஆபிரகாம் பண்டிதரைச் சந்திக்க அந்நாளைய பிரித்தானிய ஆளுநரான சர் ஆர்த்டர் லாலி (Sir Arthur Lawley) என்பவரும் அவர்தம் துணைவியாரும் வந்தனர். அவர்கள் பண்டிதரின் பணிகளைப் பெரிதும் பாராட்டினர்.

1909ஆம் ஆண்டு பிரித்தானிய இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தம்மைச் சந்திக்க வந்த பிரித்தானிய ஆளுநரின் வருகையின் நினைவாகப் பண்டிதர் ஒரு பெரிய சமூகக் கூடம் கட்டி அதற்கு "லாலி சமூகக் கூடம்" (Lawley Hall) என்று பெயரிட்டுச் சிறப்பித்தார்.

தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர்.

“தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத் துறவியார் கருணானந்தர்பால் அரிய மருந்து முறைகளைக் கற்றுக்கொண்ட அறிஞர்; சிலப்பதிகார இசை நுணுக்கங்களையும் சங்க இலக்கிய இசையியலையும் முதன் முதலில் ஆராய்ந்து பிற ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்றவர்; மேற்கு நாட்டினர்க்குத் தென்னக இசையியல் பற்றிக் கட்டுரைகள் எழுதியும், கருணாமிர்த சாகரத்தை ஆங்கிலத்தில் எழுதியும் ஐரோப்பிய இசையியலையும் தமிழ் இசையியலையும் ஒப்பீடு செய்து பணியாற்றியவர்; பழம் இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டு அளித்து, மறைந்துபோகாமல் காத்த இசைப்புரவலர்.”

தமிழிசை வளம்:

தமிழிசைக் களஞ்சியத்தை உருவாக்கிய முனைவர் வீ. ப. கா. சுந்தரம், ஆபிரகாம் பண்டிதரை அறிமுகப்படுத்தும் முறை இது. வரலாற்று வல்லுநர், பறவையியல் வல்லுநர் (ஆர்னிதாலஜிஸ்ட்), புகைப்படக் கலைஞர், ஓவியர், சோதிடர், இசைத்தமிழ் வல்லுநர், இசைப்பாடல் ஆசிரியர் எனப் பல்வேறு ஆற்றல்கள் பெற்றுத் தமிழுக்குத் தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதரை இதைவிடச் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்த முடியாது. எல்லாக் கலைகளும் ஒன்றுக்கொன்று தமக்குள் கொண்டிருக்கும் தொடர்பினை நன்றாக உணர்ந்தவர். இவை யாவினுக்கும் மேலாக, இசைத் தமிழ் ஆய்வின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்.

வாழ்க்கை வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள், முத்துச்சாமி நாடார், அன்னம்மாள் தம்பதியர்க்கு மகனாகத் தோன்றியவர். மிக எளிய குடும்பம். முத்துச்சாமி நாடார், சாம்பவர் வடகரையை விட்டு பங்களாச் சுரண்டை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்த ஆங்கிலப் பாதிரியாரிடம் தோட்டக்காரனாகப் பணியாற்றினார். அன்னம்மாள் ஆலயப் பணிகளைச் செய்துவந்தார். பண்டிதர், தமது ஆரம்பக் கல்வியைப் பன்றிகுளம் என்னும் ஊரில் முடித்தார். 14 வயதிலேயே திருமலாபுரம் என்னும் சிற்றூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1874இல் திண்டுக்கல் சென்று நார்மல் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டார். அவரது திறமையாலும் அறிவாற்றலாலும் அப்பள்ளியை நடத்திவந்த யார்க் துரையின் நன்மதிப்பைப் பெற்றார். அவரிடமிருந்தே புகைப்படக் கலையையும் கற்றார்.

திண்டுக்கல் கந்தசாமிப் பிள்ளை என்பாரிடம் அச்சுத் தொழிலைக் கற்றார். சோதிடக் கலையையும் பயின்றார். வயலின் வித்துவான் சடையாண்டிப்பத்தர் என்பாரிடம் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார். திண்டுக்கல் வழியாகப் பழநி செல்லும் சித்தர்கள், சாதுக்கள், பரதேசிகளிடம் சித்த மருத்துவக் கூறுகளைப் பயின்றார். திண்டுக்கல்லுக்கு அருகே ஆனைமலைப் பட்டியில் வசித்துவந்த பொன்னம்பல நாடார்க்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பொன்னம்பல நாடார் ஒரு மருத்துவர். 1887இல் அவர் சுருளிமலைக்குப் பண்டிதரை அழைத்துச் சென்றார். அங்கு கருணானந்த மகரிஷியைக் கண்டு அவருடைய சீடர் ஆனார். தமது மருந்துகளுக்கெல்லாம் கருணானந்த சஞ்சீவி என்றே பெயரிட்டிருந்தார். (அக்காலத்தில் மருத்துவர்களைப் பண்டிதர் என்று அழைப்பது வழக்கம். மருத்துவத்தையும் பண்டுவம் என்பார்கள். பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளையும் பண்டுவச்சி என்பது மரபு.)

1882இல் பொன்னம்மாள் என்பாரை மணந்தார். கணவன் மனைவி இருவரும் ஆசிரியப் பணி புரிந்தனர். 1890இல் மருத்துவ அலுவல்கள் மிகுந்ததால், ஆசிரியப் பணியைத் துறந்து இருவரும் சொந்த மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

மருந்துகளை விற்கக் கும்பகோணம் செல்வது இவரது வழக்கம். தஞ்சை நகருக்கு மேற்கிலிருந்த நிலத்தை வாங்கிக் கருணானந்தபுரம் என்ற பண்ணையை அமைத்தார். 1894இல் ஒரு வீட்டையும் வாங்கினார். இங்கிலாந்து லிவர்பூல் நகரிலிருந்து நீர் இறைக்கும் குழாயையும் காற்றாலையையும் வாங்கிப் பெரிய கிணறுகளை வெட்டி நிலத்தைப் பண்படுத்தினார். பிறகு தமக்குத் தேவையான மூலிகைகளை அங்கேயே பயிரிட்டார். வேளாண்மை ஆய்வுகளிலும் ஈடுபட்டார். (1899இல் ஆவானிக் என்னும் தொற்றுநோய் பரவியபோது, பண்டிதரின் மருந்துகள் தான் சமயசஞ்சீவியாகப் பயன்பட்டன என்பர்.) தஞ்சையில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த கோயில் பாக்கியம் அம்மையார் என்பாரின் இசைத்திறமையில் ஈடுபட்டு அவரை இரண்டாம் திருமணம் புரிந்துகொண்டார்.

கரும்பில் இவர் கண்டுபிடித்த ஒரு புதிய வகைக்கு ராஜாக் கரும்பு எனப் பெயரிட்டார். அது அக்கால அரசுக் கண்காட்சிகள் அனைத்திலும் பரிசு பெற்றது. அரசு ஆய்வுப் பண்ணைகளில் பயிரிடப்பட்டது. புதுவிதமான பட்டுப்பூச்சிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். வேளாண்துறையிலும் சித்தமருத்துவத் துறையிலும் பண்டிதர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அக்கால பிரிட்டிஷ் அரசு ராவ் சாகிப்பட்டத்தை 1909இல் வழங்கி கௌரவித்தது.

தஞ்சையில் முதன்முதலில் மின்சாரம் இவர் வீட்டில் தான் பயன்படுத்தப்பட்டது. 1911இல் அவரது மனைவி பொன்னம்மாள் மறைந்தார். பின்னர் பாக்கியம் என்பவரைப் பண்டிதர் திருமணம் செய்துகொண்டார்.

சுருளிமலைக் கருணானனந்த முனிவர்தான் இவருக்கும் தமிழிசையின் நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தவர். எனவே இசைத்தமிழில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இதற்கேற்ப கோயில்பாக்கியம் அம்மையாரும் இசைவல்லுநராக வாய்த்தார்.

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் கீர்த்தனைகளும் வர்ணங்களும் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே இருந்தன. சங்கீதம் கற்கும்போது பாடல்கள் தாய்மொழியில் எளிதில் புரியும் வண்ணம் இருக்கவேண்டும் என்பது ஆபிரகாம் பண்டிதரின் கருத்து. தெரியாத மொழியில் பாடும்போது அதன் முழுப்பயனும் கிட்டாமல் போய்விடுகிறது. பொருள் புரிந்து அர்த்த பாவத்தோடு பாடுவதே சிறப்பு என்பதும் அவர் கருத்து.

தமிழிசை ஆய்வில் ஈடுபடுவதற்காகப் பழைய இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டார். தஞ்சாவூரில் இசை ஆய்வுக்கென சங்கீத வித்யாமகாஜன சங்கம் என்ற அமைப்பை உண்டாக்கினார். 1912 முதல் 1914 வரை மூன்றாண்டுகள் சங்கீத வித்யாமகாஜன சங்கம் இசை மாநாடுகளைச் சிறப்பாக நடத்தியது. இம்மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்கள், பெயர்கள், கட்டுரைகள், இவை பற்றிய செய்தித்தாள் விமரிசனங்கள் ஆகிய யாவற்றையும் முறையாகக் கருணாமிர்த சாகரத்தில் வெளியிட்டார். இதனால் பண்டிதருடைய வரலாற்றுக் கண்ணோட்டம் புலனாகிறது. தாமே ஒரு புகைப்பட வல்லுநர் என்பதால், தாமே சொந்தமாக நடத்திய இந்த மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்களைப் பாதுகாத்ததன் வழி, அக்கால இசை வல்லுநர்களை அவர்களது பெயர்களுடன் நாம் இன்றும் கண்டு மகிழ முடிகிறது.

1909இல் லண்டன் அரசுக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சுத்தொழிலையும் கற்றவர் என்பதால், தஞ்சையில் லாலி அச்சகத்தை நிறுவினார். மின்விசையால் அங்கு இயங்கிய முதல் அச்சகம் இதுவே.

தஞ்சைக் கந்தசாமிப் பிள்ளை என்பவரிடம் சோதிடம் கற்றார். சோதிட விமரிசினி என்ற சபையை ஏற்படுத்தி அதற்குத் தலைமை வகித்துத் திறம்பட நடத்தினார். இசைக் கலைக்கும் சோதிடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது பண்டிதர் கருத்து.

பரோடா மகாராஜாவைக் கொண்டு 1916ஆம் ஆண்டு பரோடாவிலும் ஓர் இசை மாநாட்டினை மார்ச் 20 முதல் 24 வரை நடத்தினார். கர்நாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் வல்ல பேரறிஞர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சி இது. இதில் ஐரோப்பிய இசையியலோடு தமிழ் இசையியலை ஒப்பிட்டுக் கட்டுரை வழங்கினார். இம்மாநாட்டில், இவரது புதல்வியர் கனகவல்லி, மரகதவல்லி இருவரும் 24 சுரங்களை வீணையில் வாசித்துக் காட்டிப் பண்டிதரின் கருத்தை உறுதிசெய்தார்கள். இந்த 24 சுர முறையை பரோடா திவான் மட்டுமின்றி, வீணை சேஷண்ணா, எல். முத்தையா பாகவதர் போன்றவர் ஏற்றுப் பெரிதும் பாராட்டினர். (கர்நாடக இசையில் 22 சுரவரிசை முறையே கையாளப்படுகிறது.)

வாழ்க்கையின் முதற்பகுதியை மருத்துவ ஆய்வுக்கும், இரண்டாம் பகுதியை இசை ஆய்வுக்கும் அர்ப்பணித்த பண்டிதர், தமது 59ஆம் வயதில் 1918 ஆகஸ்டு 31 அன்று இயற்கை எய்தினார்.

தாம் வாழ்ந்த காலத்தின் ஆட்சியாளர்கள், அறிஞர்கள், புலவர்கள், இசைவல்லுநர்கள் பலரோடும் நெருங்கிய தொடர்பும் கடிதப் போக்குவரத்தும் வைத்திருந்தார். சோழ வந்தான் அரசஞ் சண்முகனார், உ. வே. சாமிநாதையர், ஹரிஹர பாரதி, ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், வீணை வேங்கட ரமணதாசர், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், தஞ்சை எல். உலகநாத பிள்ளை, மு. இராகவையங்கார், ஜே. எஸ். சாண்ட்லர், செல்வக் கேசவராயர், திரு. வி. க., போன்றோர் அவருடன் தொடர்பு கொண்டிருந்த சிலர்.

இசை ஆய்வு முன்னோடி

சமஸ்கிருதத்தையும் விஞ்சிய செம்மொழி என்று தலைமைபூண்டு உலாவரவேண்டிய இந்தியாவின் மிகப்பழைய மொழியாகிய தமிழ், தன்னிடம் எத்தனையோ வளமிருந்தும் அயலார் ஆட்சிக் காரணத்தாலும் ஆதரவின்மையாலும் மெலிந்து சூம்பிக் காணப்படுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தமிழிசை.

தமிழில் தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொட்டு இசையிலக்கணம் விரிவாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலும் ஏராளமான பண்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இன்றைக்குத் தமிழிலே பாடுவதென்பது இன்னும் அரசியல் சார்ந்த விவகாரமாகவும் ஒரு சாதிக்கு எதிரான விவகாரமாகவுமே பார்க்கப்படுகின்ற நிலை பரிதாபத்திற்குரியது. மிகக் குறைந்த அளவே இசையிலக்கணம் தெரிந்த ஒருவனுக்கும்கூட, சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியத்திலும் வரும் இசைக்குறிப்புகளைப் படித்தால் அக்காலத் தமிழிசைதான் இன்றைய கர்நாடக, இந்துஸ்தானி இசைகளுக்கு முன்னோடி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆயினும் இந்த எளிய விஷயத்தைச் சொல்வதற்கும், தமிழ்நாட்டில் தமிழில் பாடுவதுதான் முறை என்பதை வலியுறுத்துவதற்கும் 1930கள் தொடங்கி ஒரு பெரிய இயக்கமே (தமிழிசை இயக்கம்) தேவைப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இசைப்பகுதிகளைத் தமிழ்ப் புலவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராயவில்லை. 14ஆம் நூற்றாண்டு முதல் தெலுங்கு, சமஸ்கிருதம் முதலிய மொழிகள் தமிழ் நாட்டில் வளர்ந்தனவே ஒழிய தமிழ் வளரவில்லை. தெலுங்கர் ஆட்சியில் வேறென்ன நடக்கும்? தமிழில் இசையே கிடையாது என்று சொல்லும் நிலை நானூறாண்டுகளில் ஏற்பட்டுவிட்டது. இதுபற்றி ஆபிரகாம் பண்டிதர் எழுதுகிறார்:

சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும், அது சிறந்த தென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்.

(கருணாமிர்த சாகரம், ப.916)

14ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலம், தமிழிசை அறவே இல்லாத இருண்ட காலம் என்றால், இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் இன்றுவரை போராட்டக்காலமாகவே இருக்கிறது. வேறெந்த நாட்டிலாவது, வேறெந்த மொழியிலாவது அந்தந்த மொழியில் பாடக்கூடாது என்று சொல்ல முடியுமா? கேட்டாலே வயிறு வலிக்கச் சிரிப்பார்கள். நமக்கு உண்மையிலேயே இது வயிற்றுவலி.

பண்டைக்காலம் முதல் வழங்கிவந்த தமிழிசையை சாரங்கதேவர் என்னும் ஆசிரியர் படித்துப் பின்பற்றி, அதன் வாயிலாக இந்துஸ்தானி இசையை விளக்க, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலை எழுதினார். அவர் 14ஆம் நூற்றாண்டினர். காஷ்மீரிகளும், தென்னிந்தியரும் ஒன்றுபோல அவரைத் தங்களைச் சேர்ந்தவர் என்கிறார்கள். (க.சா.ப. 1088). பிறகு வந்த வேங்கடமகி என்பார் அந்நூல் கருத்துகளைக் கர்நாடக இசைக்குப் பொருந்துமாறு செய்தார். பிறகுவந்த புரந்தரதாசர்தான் தமிழிசையையே கர்நாடக இசை என்று சொல்லிப் பிரபலப்படுத்தினார். மேலும் மாயாமாளவ கௌள இராகத்தை அடிப்படையாக வைத்து ஸ்வராவளி, ஜண்டை, தாட்டு, அலங்கார வரிசைகளைக் கற்பிக்கும் இன்றைய முறையை உருவாக்கிய வரும் அவரே.

சிலப்பதிகார இசை நுணுக்கங்களை முதலில் ஆராய்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர். இசை நுணுக்கங்களை ஆழமாக அறியவேண்டுமானால் வீணை, புல்லாங்குழல் இவற்றுள் ஒன்றையேனும் திறம்பட இசைக்கும் அறிவு தேவை என்பதை அறிந்தார். தஞ்சை அரண்மனையில் வீணை பயின்றார். பின்னர் தம் மகள்களுக்கும் வீணை ஆசிரியர்களை அமர்த்தினார். பல நீண்ட ஆண்டுகள் இரவுபகலாக இசைநூல்களைக் கற்றும், கலந்துரையாடியும், பழைய இசைப்பனுவல்களைத் திரட்டியும் உருவாக்கிய ஆய்வு நூலுக்குத் தமது அருட்குருவாகிய கருணானந்தர் பெயரால், கருணாமிர்த சாகரம் என்றே பெயரிட்டார். 1917இல் அந்நூல் வெளியாயிற்று.

கருணாமிர்த சாகரம்

தமிழிசை இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த ஒரே நூல், கருணாமிர்த சாகரம்தான். 1940களில்தான் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது. அதற்குப் பிறகு குடந்தை ப. சுந்தரேசன், வெள்ளை வாரணன் ஆகியோர் யாழ்நூல் கருத்துகளைப் பரப்பிவந்தனர். எம். எம். தண்டபாணி தேசிகர் முதலியோர் தமிழில் மட்டுமே பாடும் உறுதிபூண்டு அதைச் செயல்படுத்தியதால், அவர்கள் பிற வித்வான்களால் ஏற்றுக்கொள்ளப்படவோ புகழப்படவோ இல்லை. ஒரு காலத்தில் தியாகராஜ பாகவதர், எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்களால் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வளர்ந்துவந்த தமிழிசை இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது. ஒரே லட்சிய வேகத்தோடு தமிழிசைப்பாடல்கள் எழுதிய இலக்குமணப் பிள்ளை, மதுரகவி பாஸ்கர தாஸ், பாபநாசம் சிவன் போன்றோர் இன்று இல்லை. இவ்வளவெல்லாம் இருந்தாலும் தமிழிசை உணர்வு ஓரளவு பரவுவதற்குக் காரணமாக, தமிழிசை இலக்கணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. எஸ். இராமநாதனுடைய Music in Cilappathikaram (அவரது முனைவர் பட்ட ஆய்வேடு) 1960களில் வெளிவந்தது. இவற்றின் காரணமாக தலித் மக்கள் தனி இசைவிழா நடத்துகின்ற நிலை வரை இன்று வளர்ந்துள்ளது. பிறகு வீ.ப.கா. சுந்தரம், சேலம் ஜெயலட்சுமி போன்றோர் தமிழிசையிலும் அதன் இலக்கணத்திலும ஆர்வம் காட்டி வந்தனர். இவை எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருந்த நூல் கருணாமிர்த சாகரம்.

கருணாமிர்த சாகரம் என்பது ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கைப் பணிநூல் (magnum opus). இது ஏ4 அளவிலான தாள் அமைப்பில் 1346 பக்கங்கள் கொண்டது. நான்கு பாகங்களாக அமைந்தது இப்பெருநூல். இந்நூல் சுருதிகளைப் பற்றியது என்று குறிப்பிடுகிறார் பண்டிதர்.

பன்முக ஆற்றல் பெற்றவரும் இசைத்துறையில் ஆழக்கால் பதித்தவரும் தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது 71ஆம் வயதில் 31.8.1919இல் தனது இசைத் துடிப்பை நிறுத்திக் கொண்டார்.

நன்றி :

கருத்துகள் இல்லை: