27 ஜூன், 2023

நூல் நயம்

"ஓ ! மாம்பழமே "!.
அமரர் கல்கி. சாரதா பதிப்பகம் .
முதல் பதிப்பு 2000 விலை ரூபாய் 25 .
மொத்த பக்கங்கள் 120.

# இது ஒரு கட்டுரை புத்தகம் .
அமரர் கல்கி குறித்து அறிமுகமே தேவையில்லை .அதிலும் மணிரத்தினம் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்து விட்ட பிறகு உலகத்தமிழ் மக்கள் அனைவராலும் போற்றப்படுகிற ஒருவராக அமரர் கல்கி அவர்கள்விளங்குகிறார் .
       செத்தும் கொடுத்தான் சீதைக்காதி என்று சொல்வார்கள் .அதாவது ஒரு நன்கொடையாளர் .இந்த யுகத்தில் இந்த நூற்றாண்டில் அவதரித்த சீதைக்காதி அவர்கள் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருந்தார் .கை சிவந்து போன போதும் கொடுத்துக் கொண்டே இருந்தார் .அப்படிப்பட்ட அவர் தனது இறப்புக்குப் பிறகு யாரேனும் வந்து கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று கைகளில் மோதிரம் கொண்டு வெளியே நீட்டிக்கொண்டு புதைக்கச் சொன்னதாக சொல்வார்கள். செத்தும் கொடுத்தான் சீதைக்காதி என்று சொல்வார்கள் .
         அது போலவே எழுதிய போதும் எழுதுகின்ற காலங்களிலும் நிறைய சம்பாதித்தவர் புகழ் பொருளை .அவ்வாறு பொருளை சம்பாதிக்கவில்லை என்றாலும் பெரும் புகழ் சம்பாதித்தவர் அமர கல்கி அவர்கள் .அவரது மறைவுக்குப் பிறகு அவர் 100 கோடி ரூபாய் சம்பாதிக்கின்ற ஒரு சக்தி வாய்ந்த படைப்பினை பொன்னியின் செல்வனை படைத்துவிட்டு சென்றது எனக்கு சீதைக்காதியை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.

       இது ஒரு கட்டுரை புத்தகம் .பொதுவாக கட்டுரை என்று சொன்னால் ஆய்வு செய்து நிஜமான சத்தியமான உண்மைகளை வைத்து எழுதப்பட வேண்டும் .ஆனால் கல்கி அவர்கள் ஆசியம் humour கலந்து கட்டுரைகள் எழுதி இருக்கிறார் .மொத்தம் பத்து கட்டுரைகள் கீழ்கண்ட தலைப்புகளில்.

1)ஓ! மாம்பழமே
2)நோயற்ற வாழ்வு
3)பகல் தூக்கம்
4)அடிமையா? எஜமானா?
5)ஓர் அனுபவம்
6)ஸோஷலிஸம் வேண்டாம்!
7)காதல் எங்கே?
8)பெரிய மனிதர்!
9)அமர வாழ்வு
10).பேச்சு பலவிதம்.

    எல்லாக் கட்டுரைகளும் படிக்க படிக்க சுவை தருவதாக இனிப்பதாக பொழுதுபோக்காக இருக்கிறது .
முதல் கட்டுரை மட்டும் பார்க்கலாம் .

       குடியாத்தத்தில் இருந்த பொழுது இந்த கோடைகால ஆரம்பத்தில் மாம்பழம் சீசன் ஆரம்பித்து விடும் .எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் தான் பஜார் இருக்கிறது .அங்கு மாம்பழ மண்டிகளே பத்துக்கு மேற்பட்டு இருக்கும் .அந்த காலத்தில் கோடைகளில் கிழவிகள் மாம்பழங்களை கூடைகளில் கொண்டு வருவார்கள் .ஐந்தாறு கிழவிகள் என் வீட்டு வாசலில் வந்து அம்மாவை தொந்தரவு செய்து 50 ரூபாய்க்கு 100 ரூபாய்க்கும் கொடுத்து விட்டு செல்வார்கள் தினசரி .இன்றைய மதிப்பில் 500 ரூபாய்க்கும் அதிகமாகவும் இருக்கும் .
       எனது அம்மா ஒரு மாம்பழ பிரியை.அவரின் ரத்தமான எனக்கும் மாம்பழம் என்றால் உயிர் .எங்கள் ஊர் பக்கம் மல்கோபா மாம்பழம் மிகவும் சுவைப்போனது ,பேர் போனது ,விலையும் அதிகமாக இருக்கும் .எங்கள் நிலத்தில் மூன்று மாம்பழ மரங்கள் ,நீலம் ,பெங்களூரா 
செந்தூரா இருக்கும்.

         மாம்பழம் என்றால் மொத்தத்தில் இனிமை என்பதுதான் என்றாலும் நுட்பமான நாக்குகளுக்கும் மூக்குகளுக்கும் அவைகளில் உள்ள வேறுபாடுகள் தெரிந்து விடுகின்றன.
         இன்னும் ஒரே இனமுள்ள மாமரங்களிலும் கூட மரத்துக்கு மரம் ருசியில் மாறுபாடு உண்டு. 
         பனைக்கு பனை பத நீர் ருசி மாறுபடும் அது போல.

         இந்த மாம்பழம் என்று சொன்னவுடனே  எனக்கு ரசிகமணி  டி கே சி அவர்கள் நினைவுதான் வருகிறது .அவர் வீட்டில் எப்பொழுதும் இலக்கியப் பிரியர்கள் இருப்பார்கள் .உணவு பந்தி பரிமாறபட்டு கொண்டே இருக்கும். ஒவ்வொரு இலைகளுக்கும் பந்தி பரிமாறப்படும் .
        அவரது இலையில் மட்டும் நெல்லிக்காய் அளவு ஓட்ஸ் களியும், எடுத்த கெட்டி மோரும் தொட்டுக்கொள்ள ஒரு பல் நெல்லிக்காய் ஊறுகாய் மட்டுமே காரணம் அவருக்கு தித்திப்பு நோய் பத்திய உணவு அது தான்.

      மற்ற இலைகளில் தோல் சீவிய மாம்பழத் தூண்டுகள் தேன் மழையாக விழுகின்றன .பார்த்துக் கொண்டிருந்த ரசிகமணி தனக்கும் ஒன்று கேட்கிறார் .ஒரு மாம்பழத் தூண்டில் மிளகு அளவு நுள்ளி எடுத்து இலையின் ஓரத்தில் வைக்கப்படுகிறது. 
         அதை இழுத்து இலையில் தேய்த்து நாக்கில் வைத்து ருசி பார்த்து இது இன்ன மரத்தின் பழந்தானே என்று கேட்கிறார் ரசிக மணி அவர்கள். இந்த நிகழ்ச்சி என்னை ஆச்சரியப்பட வைத்த ஒன்று.

    என்னால் மல்கோபா மாம்பழத்திற்கும் மற்ற மாம்பழத்திற்கும் உள்ள சுவை வித்தியாசம் மட்டுமே சொல்ல முடியும் .இருக்கின்ற மற்ற வகை மாம்பழங்களுக்கு இடையேயான சுவை வித்தியாசம் சொல்ல முடியாது .காரணம் எனது நாக்கு ருசி மூக்கு ருசி அவ்வளவுதான்.

      கலிபோர்னியா அருகில் நாபா Napa என்ற நகரில் மகளை பார்க்க சென்றிருந்த பொழுது அங்கு ஒயின்  தொழிற்சாலைக்குச் சென்றேன் .அப்பொழுது எனக்கு மாதிரி கொடுத்தார்கள் 10 மில்லி என்கிற அளவில் .
          தயாரித்து ஒரு வருடமானது ,இரண்டு வருடமானது ,ஐந்து வருடமானது ,பத்து வருடமானது, 15 வருடமானது ,20 வருடமானது, 25 வருடமானது என்கிற அளவில் கொடுத்து சுவைக்க சொன்னார்கள் .
           அடுத்த அறைக்கு சென்று அங்கு இரண்டு மாதிரி வைக்கப்பட்டிருந்தது .அதை சுவைத்து அது எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டும் .எல்லாவற்றையும் சுவைத்துவிட்டு போட்டியில் தோற்று விட்டு வந்து விட்டேன் .

      10 மொந்தைகளில் 10 வகை கள் ஊற்றி கொடுத்தாலும் எனது தாத்தாவால் இந்த நிலத்தில் இந்த பனைமரத்துக்கள் என்று சொல்லிவிடக் கூடிய தன்மை அவரது மூக்குக்கும் நாக்குக்கும் இருந்ததாக எனது தந்தை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

        வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு மதுசார பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்றவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. 
          கி.மு. 5000 – 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

           வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

        2012 ஆம் ஆண்டில் இத்தாலி நாடே மிகவும் அதிகளவிலான வைனை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் பெற்றது. அதன் பின் முறையே பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப்பெற்றன.

        திராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. 
          திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.

          நமது சர்க்கரை ஆலையில் இருக்கக்கூடிய பெரிய பெரிய பேரல் போல அந்த காலத்து ரயில் நிலையங்கள் அருகில் இருந்த பர்மா ஷெல் பேரால் போல ஒயின் தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது .

       இதில் ஒன்றை அவசியம் குறிப்பிட வேண்டும் .அடைக்கப்பட்ட பாட்டில்களில் கார்க் ஒன்று வைப்பார்கள் .அந்த கார்க்கு தான் முக்கியமானது. அந்த காக்கை பொருத்துதான் ஒயின் சுவை கூடுவதும் குறைவதும் .வேறு எதன் கொண்டு மூடினாலும் ஒயின்ஸ் சுவைக்காது  என்று சொல்வார்கள் .ஒயின் சுவை காக்கப்பட வேண்டுமானால் ஒயின் சுவை கூட்டப்பட வேண்டுமானால் கார்க்கு கொண்டு மூடி தயாரிக்க வேண்டும் அடைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

Cork தக்கை (அடைப்பான்)
தக்கை என்பது புட்டிகளுக்கு அடைப்பானாகப் பயன்படுத்தும் ஒரு மரப்பொருள் ஆகும். இது ஆங்கிலத்தில் கார்க் (Cork)என அழைக்கப்படுகிறது. ஒருவகை ஓக் மரத்தின் பட்டையிலிருந்து இந்த தக்கை தயாரிக்கப்படுகிறது. இம்மரங்கள் ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

தக்கை மரம்
வைன் குடுவையை அடைக்கப் பயன்படுத்தும் தக்கை

இம்மரம் 20 ஆண்டுகள் வளர்ந்த பிறகே இதில் தக்கை செய்யக்கூடிய அளவு பட்டை உண்டாகும். இந்தப் பட்டையைக் கைக்கோடாரி கொண்டு பெயர்த்து எடுப்பார்கள். இவ்வாறு எடுத்த பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பட்டை எடுக்க முடியும். இம்மரங்கள் சுமார் 300 ஆண்டுகள் வரை வாழும். மரத்திலிருந்து எடுத்த பட்டைகளை நீரில் ஊற வைத்துக் கொதிக்க வைப்பார்கள். இதனால் பட்டை மென்மையாகும். தக்கையை அரைத்துத் தூளாக்கி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பல வழிகளில் பயன்படுத்துகின்றனர்.

          மாம்பழம் தலைப்பு பார்த்தவுடன் எனது நினைவுகள் எங்கெங்கோ சிதறி பறந்து சென்று விட்டது. சரி கல்கி அவர்கள் எழுதிய மாம்பழம் குறித்து பார்ப்போம்.

அமரர் கல்கி அவர்களின் கற்பனையை மாம்பழத்தை படிக்கும் போது நிஜமாகவே நடந்து விட்டது போன்ற ஒரு தோற்றம் வாயைத் தோற்றம் ஏற்படுத்தத்தான் செய்கிறது.

லண்டன், மே 4
"நேற்று மாலை ஸவுதாம்டன் துறைமுகம் வந்து சேர்ந்த 'விக்டோரியா' என்னும் கப்பலில் இந்தியா தேசத்து மாம்பழங்கள் வந்து இறங்கின.'

அயல்நாட்டுத் தந்தி

மேற்படி செய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில் சின்ன எழுத்துத் தலைப்புடன் மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனுடைய பின் விளைவுகள் என்னவென்பத்தைக் கேளுங்கள்!

       மறுநாள் சாயங்காலம் வண்டனிலுள்ள இந்திய மந்திரி காரியாலயத்தில் இந்தியா மந்திரிக்கும் அவருடைய சகாக்ககளுக்கும் இந்தியாவின் ஹைகமிஷனரால் ஒரு விருந்து நடத்தப் பெற்றது. முதன் மந்திரி மிஸ்டர் பால்ட்வின் உள்படப் பிரமுகர்கள் அநேகர் விஜயம் செய்திருந்தார்கள்.

        அடுத்த நாள் காலையில் வெளியான லார்ட்ராதர் மியரின் 'டெய்லி மெயில்' பத்திரிகையில் கொட்டை எழுத்தில்  ''நேற்று இரவு இந்தியா மந்திரி காரியாலயத்தில் ஒரு விருந்து நடந்தது. அந்த விருந்தைப் பற்றிய ஒரு வதந்தி பிரிட்டிஷ் பொது மக்களின் மனத்தைக் கலக்கி வருகிறது. அந்த வதந்தியைப் பற்றிய உண்மை என்ன? மிஸ்டர் பால்ட்வின் பதில் சொல்வரா?"

அன்று சாயங்காலம் வெளியான லார்ட் பீவர் புரூக்கின் 'ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில், மேற்படி விருந்தில்
ஒரு புதிய வகைப் பழம் பரிமாறப்பட்டதென்றும், அந்தப்
பழம் இந்தியாவிலிருந்து வந்ததென்று நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்றும் கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய முழு உண்மையையும் வெளிப்படுத்தியே தீருவோம் என்றும் பிரசுரம் செய்யப்பட்டது.

       "பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து வந்த மாம்பழங்களைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மந்திரிகள் சாப்பிடும் படியான நிலைமைக்கு நாம் தாழ்ந்துவிட்டோம். என்ன அவமானம்! இந்தியர்களுக்கு நம்மிடமுள்ள மதிப்பில் அரைப்பங்கு போயிருக்குமென்பது திண்ணம். முதுகெலும்பில்லாத இந்த மந்திரிசபையை இன்னும் எத்தனை நாளைக்குப் பிரிட்டிஷ் பொது ஜனங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்பது சர்ச்சில் கட்டுரையின் சாராம்சம்.

         "மாரினிங் போஸ்ட்' பத்திரிகையில் அடுத்த நாள் வெளியான செய்தி எல்லாரையும் தூக்கிவாரிப் போட்டு விட்டது. மேற்படி விருந்தில் மாம்பழம் என்று வைக்கப் பட்ட ஒவ்வொன்றும் உண்மையில் ஒரு வெடிகுண்டு என்பதாகவும், விருந்தினரில் ஒருவர் ஒரு மாம்பழத்தை விழுங்கி அவருடைய வயிற்றில் அது வெடித்த பின்னர் உண்மை தெரிந்து மற்றவர்கள் தப்பித்துக் கொண்டார்களென்றும், விஷயம் இப்போது ஸ்காட்லாண்டு யார்டு துப்பறியும் நிபுணர்கள் கையில் இருக்கிறதென்றும் அந்த விவரம் சொல்லிற்று.

        "இதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை" என்பதாக ஓர் உத்தியோக முறை அறிக்கை மறுதளித்தது.

        இதுகுறித்து  பெர்னாட்ஷா  அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு அவர் ,"செத்துப் போங்கள் " என்று சொல்லிவிட்டார்.

        இங்கிலாந்தில் நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவில் இது சம்பந்தமாக நிகழ்ந்த சம்பவங்களை ஆசிரியர் சொல்லுகின்ற விதமே நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கிறது.
இங்கிலாந்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் தந்தி பேப்பரில் வந்து பிரசுரம் ஆனது.
கலைமகள் பத்திரிக்கையில் மாம்பழக் கவிராயரை பற்றி ஒரு கட்டுரையும் கலாநிலையும் பத்திரிகையில் முக்கனியில் மாங்கனி சேர்ந்ததா என்பதை பற்றி ஒரு ஆராய்ச்சியும் வெளியாயின.
மாம்பழங்களுக்கு இந்த பாடு படுகிறார்கள் ருசியை பார்த்து விட்டால் என்னதான் சொல்வார்களோ என்று விகடன் ஆஸ்யத்துடன் எழுதினான்.

       அரசியல்வாதிகள் தலைக்கு ஒரு பக்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் ," எல்லா விஷயங்களிலும் போல இதிலும் ஸ்திரீகள் அலட்சியம் செய்யப்படுவதை கண்டித்தார்.
 
        "மகாத்மா ஏழு நாள் உபவாச விரதம் தொடங்கியிருக்கிறார்" என்னும் பயங்கரமான செய்தி தேசமெங்கும் பரவியது. விசாரித்ததில், மகாத்மா சேலம் ஒட்டு மாம்பழம் ஒன்றின் ரஸத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் ருசியைப் பற்றி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், இவ்வாறு நாவின் ருசிக்கு இடங் கொடுத்துவிட்டது தவறு என்று பின்னால் உணர்ந்து பிராயச்சித்த உபவாசம் தொடங்கியிருப்பதாகவும் தெரியவந்தன.

        "உலகப் பெரியாரையே மயக்கி உபவாசம் இருக்கச் செய்த ஒப்பற்ற ஒட்டுமாம்பழம்" என்று எங்கெங்கும் விளம்பரங்கள் காணப்பட்டன.

நிற்க. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் வேண்டுகோளின்படி தேசத்தின் நானாபாகங்களிலிருந்தும் மகாத் மாவுக்குத் தந்திகள் பறந்தன.

''மாம்பழம் சாப்பிட நாங்கள் இருக்கிறோம். கவலைப் பட வேண்டாம். உபவாசத்தை நிறுத்தவும்" என்று இந்திய மக்கள் ஒரு முகமாய் மகாத்மாவை வேண்டி கேட்டுக் கொண்டார்கள் இப்படி வேண்டி கேட்டுக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இதோ இந்த மாம்பழத்தை சாப்பிட்டு தொலைகிறேன் என்று அமரர் கல்கி அவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டுக் கொண்டே இந்த கட்டுரையை முடிக்கிறார்.

      கற்பனை தான் என்றாலும் நிஜமாகவே நடந்தது போல் எழுதுகின்ற ஆற்றல் கல்கி அவர்களுக்கு இருந்தது என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இது போலவே அனைத்து கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை: