5 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-36: "வறுமைக்கோடு"

தலையெழுத்தையும்
வறுமைக்கோட்டையும்
உழைப்பால் விளைந்த
வியர்வை அழித்துவிடாதா?

அழிக்க முடியாதென்பதற்கு
வறுமைக்கோடு ஒன்றும்
உள்ளங்கை ரேகையல்ல;
ரேகை தேய உழைப்பவனின்
தலைக்குமேல் ஒருபோதும்
வட்டமடிக்காது வறுமைக்கோடு;

மீறக்கூடாதென்பதற்கு
வறுமைக்கோடு ஒன்றும்
இலட்சுமணக் கோடல்ல;
உழைக்க விரும்பும்
வறியவனுக்கு வாய்ப்பாக
வேலை கொடுத்தால்
காலுக்கடியில் மிதிக்கலாம்
எந்த வறுமைக்கோட்டையும்.

அறுபது ஆண்டுகள்
முடிந்த பின்னும்
நாட்டின் எல்லைக்கோட்டைத்
தாண்டவில்லையே வறுமைக்கோடு!

அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி
தன் சட்டைக்கு
கஞ்சியாய்ப்போட்டு
விறைப்பாக நடப்பவன்
இருக்கும் வரை
என்றும் இருக்கும்
நாட்டில் வறுமை.

கருத்துகள் இல்லை: