24 அக்., 2009

இன்று படித்தவை-1: அக்டோபர் 24, 2009

1. "The Gospel of Sri Ramakrishna" by Mahendranath Gupta - (சுவாமி நிகிலானந்தா அவர்களின் அருமையான ஆங்கில மொழி பெயர்ப்பு - மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மட வெளியீடு)

என்னுடைய தலையாய வேத புத்தகம். பல முறை படித்திருந்தாலும், மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்பதால் 'தினமும் படிக்கவேண்டிய புத்தகங்கள்' வரிசையில், மேஜை மீது தனியே வைத்திருக்கிறேன். என்னுடைய அருமை நண்பர் முனைவர் ரா.ஜானகிராமன் அவர்கள் எனக்கு அன்புடன் வழங்கிய நாள்: ஜூலை ஏழு, 1990. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் வரை என் புத்தக அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தது. தாங்கமுடியாத மன உளைச்சலால் தனிமைப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த நேரம், என்னை அறியாமல், இதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு அற்புதமான ஔடதமாக வேலை செய்தது. அப்புறம் என் வாழ்க்கையின் திசையே மாறிவிட்டது.

325-326 பக்கங்களை இன்று படித்தேன். இல்லறத்தாருக்கான பயனுள்ள அறிவுரைகள் அடங்கிய பகுதி இது.

இல்லறத்தார் ஆன்மீகத்தில் ஈடுபட எத்தனை இடைஞ்சல்கள், சிரமங்கள்! நோய்நொடிகள், துன்பம் துயரம், வறுமை, மனைவியுடன் கருத்து வேறுபாடு, சொன்னபடி கேட்காத பிடிவாத குணமுள்ள குழந்தைகள் என்று பெரிய பட்டியலே போடலாம். இருப்பினும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். அவ்வப்போது எங்காவது சென்று, தனிமையில் பிரார்த்திக்க வேண்டும். இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நாளோ, இரண்டு நாளோ எல்லாவற்றையும் மறந்து, எங்காவது சென்று தனிமையில் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். அல்லது ஆன்மீகச் சான்றோரோடு தங்கி அவர்களுடன் வசிக்கவேண்டும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடங்களில் 'அந்தர் யோகம்' பயிற்சி நடத்துவது குருதேவரது இந்த அறிவுரையின்படி என்று நினைக்கிறேன். நானும் தொடர்ந்து மூன்றாண்டுகள் , குருதேவர் ஜெயந்தியை அடுத்து திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெறும் மூன்று நாள் அந்தர் யோகப் பயிற்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கிறேன், பயனடைந்திருக்கிறேன். குருதேவரது அறிவுரையின் மேலான உண்மையை அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.

வருடம் முழுவதும் திருப்பராய்த்துறையில் அந்தர் யோகம் நடைபெறுகிறது. தேதி மற்ற தகவல்களை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு எழுதிப் பெறலாம். அல்லது அவர்களது மாத இதழான 'தர்ம சக்கரத்தில்' காணலாம்.

அடுத்து நான் படித்தது....?

கருத்துகள் இல்லை: