26 மே, 2010

சூரியின் டைரி-12: "யோகி சுத்தானந்த பாரதியார்"


திருப்பத்தூர்-சிவகங்கை  நெடுஞ்சாலையில்  சோழபுரம் 
 (தேசிய  நெடுஞ்சாலை  எண்  226) 


சோழபுரம்   சிவன்   கோவில்    


யோகி சுத்தானந்த யோகா சமாஜம் மற்றும் 
சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளி நுழைவாயில் 


வழிபாட்டு மண்டப வாயிலில் நண்பர் செந்தில் 


வழிபாட்டு மண்டபத்தின் உட்புறம் 


வழிபாட்டு மன்றத்தின் கருவறை 


வழிபாட்டு மண்டபத்தின் பின்புறம் 


யோகி சுத்தானந்த பாரதியாரது திருவுருவப்படம் 


யோகியாரது தந்தையார் திரு ஜடாதர ஐயர் அவர்கள் 


யோகியாரைப் பற்றிய தகவல்கள் தரும் கல்வெட்டு 


யோகியாரைப் பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் 







சென்ற வெள்ளியன்று சிவகங்கை சென்று திரும்பும் வழியில் யோகி சுத்தானந்த பாரதியார் நிறுவிய பள்ளி, வாழ்ந்த இடம், அவரது சமாதி ஆகியவற்றை நேரில் காணும் பேறு கிட்டியது. சோழபுரத்தில் யோகி அவர்கள் வாழ்ந்தார் என்பது அரைகுறையாக நினைவில் இருந்தது. சோழபுரத்தில் ஒரு அன்பர் வீட்டிற்கு செல்லநேரிட்டது. அவர் நிறைய தகவல்களைத் தந்தார்; அவரது மகன் யோகியார் நிறுவிய பள்ளியில் படிப்பதையும், அவன் பள்ளியில் இருபதிற்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றதையும் கூறினார். சிறப்பு என்னவெனில், பரிசுகள் அத்தனையுமே யோகியார் எழுதிய அற்புத நூல்கள். உடனே அங்கு கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து நானும் நண்பர் செந்திலும் அவரது பஜாஜ் பாக்சரில் சென்றோம்.

முதலில் சோழபுரம் பற்றி. அங்கே ஒரு அழகான பெரிய கோவில் இருக்கிறது. ஒரு சிற்றூரில் இத்தனை பெரிய கோவிலா என்று எண்ணவைக்கும். வெளியிலிருந்தே வணங்கிவிட்டு, யோகியாரின் பள்ளிக்குச் சென்றோம். சோழபுரத்தில் பள்ளி இருந்த பெரிய நிலப்பரப்பு எதிர்பாராதவிதமாக அன்பளிப்பாகக் கிடைக்க அங்கேயே யோகியார் பள்ளியை நிறுவி, அங்கேயே வாழ்ந்து முடித்தார்.


யோகியாரைப்  பற்றிய  சுருக்கமான தகவல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டுக்களில் தரப்பட்டிருந்ததை மேலே பதிவு செய்துள்ளேன்.  


என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் யோகியாரைப் பற்றி என்னிடம் கூறியவர் எனது ஹோமியோ ஆசான் திரு அப்துல்லா சேகு அவர்கள்.  அடுத்து எனது மதிப்பிற்குரிய நண்பர், பேராசிரியர் இரகுநாதன் அவர்கள் யோகியாரது 'யோகசித்தி' நூலை என்னிடம் கொடுத்து படிக்குமாறு கூறினார்.  பின்னர் அதை எனக்கே பரிசாக வழங்கினார்.  அதை நான் இன்றும் போற்றி வருகிறேன்.  அதிலிருந்து ஒரு ஒரு பாடலாக இந்த வலைப்பூவில் பதிவும் செய்து வருகிறேன்.


அதன் பின் நண்பர் ஜம்பு அவர்கள் தமது நலந்தா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட யோகிராது 'உடல் வலிமை' என்ற நூலை எனக்கு வழங்கினார்.  அதைப் படித்து மகிழ்ந்திருக்கின்றேன்.    


அங்குள்ள தலைமை ஆசிரியர் அவர்கள் எங்களுக்கு யோகியார் பற்றிய குறுநூல் ஒன்றை வழங்கினார்.  அதிலிருந்து யோகியார் அவர்கள் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார் என்பதையும்,  அவர் மிகச் சிறுவயதிலேயே அருள்மிகு மீனாட்சி அம்மம் திருவருளால் கவிதை பாடும் வல்லமை பெற்றார் என்பதையும், அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்பதையும் தெரிந்துகொண்டேன்.  நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது -  ஆயிரம் நூல்கள்!  


எனது ஒரே வருத்தம் இந்த மகானைப் பற்றியும், அவரது நூல்கள் பற்றியும் என்போல் பலர் அறியாமலிருக்கின்றனரே என்பதுதான்.  அவரது நூல்கள் பல அந்தப் பள்ளியில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்றாலும்,  சோதனையாக அன்று நூல் விற்பனை நிலையத்தின் பொறுப்பாளர் வெளியூர் சென்றுவிட்ட படியால் எங்களால் புத்தகம் எதுவும் வாங்க முடியவில்லை.  இருப்பினும் அதற்காகவேண்டியாவது, இன்னொருமுறை சோழபுரம் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.  


உங்களுக்கு அருகில் உள்ள நூலகத்தில் யோகியாரது நூல்கள் கிடைத்தால் அவசியம் படித்துப் பயனடையுங்கள்.  


93 வயது வரை முற்றிலும் ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்த அம்மகானின் 
சமாதியின் மேல் கோவில் கட்டப்பட்டுள்ளது (படம் மேலே).  


அம்மகானை வணங்கி அவரது திருவருளை வேண்டி அங்கிருந்து விடைபெற்றோம். 

கருத்துகள் இல்லை: