16 ஆக., 2010

சூரியின் டைரி-24 : செல்லம்மாள் பாரதியின் "பாரதியார் சரித்திரம்"

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள  இந்நூலை 2007ல் வாங்கினேன் என்று நினைக்கிறேன்.  வாங்கியவுடனே படித்தும் விட்டேன்.  தற்போது மீண்டும் படித்தேன்.  யோகி சுத்தானந்த பாரதியார் அவர்களது முன்னுரையுடன் தொடங்கும் இப்புத்தகம், 96 பக்கங்கள் கொண்டது.   விலை ரூபாய் 35 /-.  

பாரதி அன்பர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய மற்றொரு நூல்.  இதன் சிறப்பு அவருடன் வாழ்ந்த அவரது துணைவியார் எழுதியது;  மற்றவர் யாருக்கும் தெரியாத பல  அன்யோன்யமான தகவல்களை  இதன் அறியமுடிகிறது.

பாரதியின் பிறப்பு தொடங்கி, இறப்பு வரை பல தகவல்களை அறிய முடிகிறது.

முதலில் யோகி சுத்தானந்த பாரதியாரது முன்னுரையிலிருந்து தொடங்கலாம்.  

"பாரதி வாக்கு, பராசக்தி வாக்கு.  அதன்  ஆற்றலுக்கு எல்லையில்லை. ..காலம் உள்ளளவும் பாடிக்கொண்டிருந்தாலும் பாரதி பாடல் தெவிட்டாது பாடப்பாட வீர விறுவிறுப்பும் ஆத்மக்கனாலும் உண்டாகும்."

"அவர் சொல் ஈகைக் கருடநிலை ஏற்றியது.  சிறுமையைச் ச்செர்மையாக்கியது.  அடிமைத் தலையை முறித்து, ஆண்மையைத் தந்தது.  அச்சப் பேயை  அடித்து விரட்டி நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது.  தேசாவேசமும், தெய்வக்கனாலும், முன்னேற்ற எழுச்சியும் அளித்தது.  ஆதலால் பாரதியாரைச் சொல்வடிவாக நாம் என்றும் வழிபடக் கடமைப் பட்டிருக்கிறோம்."  

ஐந்து வயதுக்கு முன்னரே தாயை இழந்த பாரதி, பதினாலாம் வயதில் செல்லாம்மாலை மணந்தார்.  செல்லாமாளுக்கு அப்போது வயது ஏழு.  பதினைந்தாம் வயதில் பாரதி தன் தந்தையைப் பறிகொடுத்தார்.  அவரது மரணம் பாரதிக்கு மனத்துயரை அளித்தது.  அதைப்பற்றி அவர் 

தந்தை போயினான் - பாழ்மிடி சூழ்ந்தது 
தரணிமீதில்  இனி  அஞ்சலென்பார்  இலர்;
சிந்தையில்  தெளிவில்லை;  உடலினில் 
திறனும் இல்லை;  உரனுளத்து  இல்லையால்;
மாந்தர்பால்  பொருள்  போக்கிப்  பயின்றதாம்
மடமைக்  கல்வியில்  மண்ணும்  பயனிலை;  
எந்த மார்க்கமும்  தொன்றிளது என்  செய்கேன்? 
ஏன்  பிறந்தனன்  இத்துயர்  நாட்டினிலே? 

இத்தருணத்தில்  அத்தை குப்பம்மாள்  அழைக்க  காசி சென்றார்.  அவரது அத்தை பாரதியை பெற்ற பிள்ளைக்கும் மேலாகப் போற்றி வளர்த்தார்.  காசி கலாசாலையில் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.  கங்கைக்கரையில் கவிதை புனைவது, இயற்கை அழகை ரசிப்பது, நண்பர்களுடன் படகுப் பயணம், ஜாதி வித்தியாசமின்றி அனைவருடனும் பழகுவது, அவர்களுடன் உண்பது என்று காசி வாழ்க்கை சென்றது.  தமது இருபதாவது வயதில் அவர் திரும்பினார்.  அது முதல்,  முப்பத்தொன்பதாவது வயதில் மறையும் வரை செல்லம்மாளுடன் வாழ்க்கை.  

மதுரை சேதுபதி கலாசாலையில் மூன்று மாதம் ஆசிரியப் பணி புரிந்தது,  பின் சென்னை சென்று சுதேசமித்திரன் பணி புரிந்தது, பாடல்கள், கட்டுரைகள் எழுதிக் குவித்தது, கடற்கரை பிரசங்கங்கள்,  பாடியது, வ.உ.சி.யின் நட்பு,  சூரத் மற்றும்  கல்கத்தாவில் நடந்த  காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்டு, திலகர் தலைமையில் அமிதவாதிகளின் பிரிவை காங்கிரஸ் கட்சியில் ஏற்படுத்தியது,  விவேகானந்தரின் சீடரான நிவேதிதா தேவியாரைச் சந்தித்து, அவரிடம் தீக்ஷை பெற்றது, ௧௯௦௭ ம் ஆண்டு முதல் இந்தியா பத்திரிகையில் பணி புரிந்தது, ௧௯௧௦ ல்  புதுவை சென்று அங்கு பத்து ஆண்டுகள் அரவிந்தர், வ.வே.சு. ஐயர் அவர்களோடு தேசிய, வேதாந்த சிந்தனையில் வாழ்ந்தது இப்படிப் பல சுவையான தகவல்களை  அறிய முடிகிறது.  

எத்தனையோ துன்பங்கள், துயரங்கள்;  சொல்லொணாத கஷ்டங்கள்;  மன உளைச்சல்கள் இருந்தபோதும்  அவரது தேசப்பற்றும், தமிழ்மொழிமேல்  அவர் கொண்டிருந்த மாளாக் காதலும் இறுதிவரை மறையவில்லை.  விரிந்த மனம், பரந்த பார்வை,  மேன்மையான இலட்சியங்கள் என்று வாழ்ந்து 1921ம் ஆண்டு செப்டம்பர் பதினோராம் நாள்  விண்ணுலகெய்தினார்.

மறக்கமுடியாத புத்தகம்!

கருத்துகள் இல்லை: