6 ஆக., 2011

மனதில் பதிந்தவை-12: புதிய தலைமுறை, முழுமையான தமிழ் வார இதழ், ஜூலை 28 , 2011

புதிய தலைமுறை, முழுமையான தமிழ் வார இதழ், ஜூலை 28 , 2011, ஆசிரியர்: மாலன், விலை ரூ.10/-
------------------------------------
வாரா வாரம் படிக்கப் படிக்க, புதிய தலைமுறை உண்மையிலேயே ஒரு முழுமையான வார இதழ் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.  பலருக்கும் பயன்படும் பல்வேறு அம்சங்கள்.  எல்லாமே 'பாசிடிவ்', எதுவுமே 'நெகடிவ்' இல்லை.  இன்றைய சூழலில் இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அடுத்து அவர்கள் 84  மாணவர்களின் இலவச உயர்கல்விக்கு உதவுகிறார்கள் என்பதைப் படித்தபோது மிகவும் மகிழ்ந்தேன்;  சொல்லிலும், செயலிலும் மேன்மை; மனமார்ந்த பாராட்டுக்கள்.

நான் இங்கே பதிவு செய்யப்போவது எனக்கு மிகவும் பிடித்தவற்றிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டுமே. இடம், நேரம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த முடிவு. 

முதலில் தலையங்கம்: "வேதனையான நேரத்தில் வேண்டுமா வெட்டிப் பேச்சு?".  அண்மையில் நிகழ்ந்த மும்பை குண்டுவேடிப்பப் பற்றி.  இதிலிருந்து: "...வேதனையில் மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில், அரசியல்வாதிகள் வெட்டி அரட்டைகளிலும், வேடிக்கைப் பேச்சுக்களிலும், விதண்டாவாதங்களிலும் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பது. மேற்கே மும்பை குண்டு வெடிப்புச் செய்தி வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகியிராது, கிழக்கே புவனேஸ்வரில் ராகுல் காந்தியின் பேட்டி: 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காவல்துறை, உளவுத்துறை சீர்திருத்தங்கள் காரணமாக 99 சதவீத பயங்கரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுவிட்டன' என்றார் ராகுல். அழுவதா, சிரிப்பதா?

ஒருபுறம் ராகுல் இப்படிப் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் 'மும்பைச் சம்பவம் குறித்து உளவுத்துறையிடமிருந்து முன்கூட்டியே தகவல் ஏதும் வரவில்லை' என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர்.  மராட்டிய முதல்வர், 'மாநிலத்தின் காவல்துறை அமைச்சராக கூட்டணிக் கட்சிக்காரரை நியமித்தது தப்பாகிவிட்டது' என்கிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், 'இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப் பட்டிருக்கலாம்' எனக் குற்றம் சாட்டுகிறார். உடனே பா.ஜ.க. பொங்கி எழுகிறது. 

ஒரு மாபெரும் துயரத்தில் மக்கள் சிக்கி, ஏதும் செய்ய இயலாதவர்களாகத் துவண்டு கிடக்கிற நேரத்தில், இத்தனை அரசியல் கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.... வெட்கக்கேடு!"


அடுத்து, ஆ.பழனியப்பனின்  "நிலப்பறி:  குவிகிறது புகார்!"    இதிலிருந்து: "...(தமிழ்நாட்டில்) 2006-2011  காலக்கட்டத்தில் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து புகார்களைப் பெற முப்பத்தொரு மாவட்டங்களிலும், ஏழு மாநகர ஆணையங்களிலும், காவல்துறையில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.... அரசின் இந்த நடவடிக்கைகள், இதுவரை அச்சத்தால் அரண்டு கிடந்த மக்களுக்குத் தற்போது நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது. தனிப்பிரிவு தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களில் தமிழகம் முழுவதும் 1,449 புகார் மனுக்கள் வந்து குவிந்துள்ளன...."

(படிக்கப்படிக்க அதிர வைக்கிறது இந்தக் கட்டுரை.  அதிலும் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற நில விற்பனையில் தொண்ணூறு சதவிகிதம் மோசடியானது என்ற ஒரு குற்றச்சாட்டும், இந்த மோசடிகளில் காவல்துறையினரும், பத்திரப்பதிவுத் துறையினரும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்பதும், அவ்வப்போது நாட்டில் நடந்த மிரட்டல்கள், கொலைகள்  பலவற்றின் பின்னணியில் வீடு, நிலம் அபகரிப்பு இருக்கக்கூடும் என்ற செய்தித் தாட்களில் படித்த அனுமானங்களும் நம்மை நடுங்க வைக்கின்றன. மேலும் நண்பர்கள் மூலம் நான் அறிந்த எங்கள் பகுதியில் நடந்த இது போன்ற மோசடிகளும், சொத்து பத்து இருப்பது  உயிருக்கே ஆபத்தாகலாம் என்று எண்ணவைக்கிறது.  ஆனால் வேதனை தரும் விஷயம் என்னவெனில் இதையெல்லாம் தடுக்க இதுவரை எந்த வழியும் இல்லை என்பது.  தற்போதாவது மோசடிப் பேர்வழிகள் தண்டிக்கப்படுவார்களா, அபகரிக்கப்பட்ட வீடுகளும், நிலங்களும் உடையவர்களிடம் திரும்பப் போய்ச் சேருமா என்பதும் நிச்சயமாகச்  சொல்லமுடியாமல் இருக்கிறது.)

அடுத்து, பிரபஞ்சனின், "மனிதர், தேவர், நரகர்" தொடரிலிருந்து: 

"... ஒரு மழை நாளில் வீசிய புயற்காற்றில் முருங்கை இடுப்ப ஒடிந்து விழுந்தது. நாங்கள் மிகுந்த சோகத்துக்கு ஆளானோம். மரம் இருந்தது, இறந்தது என்று இருந்தோம்.  சில நாட்களுக்குப் பிறகு, மரத்தின் மிச்சமாகி மண்ணில் புதைந்திருந்த பகுதியிலிருந்து, கடுகு அளவில் பச்சை ஒன்று முகிழ்த்தது. இல்லை.

உயிர்.

நான், இந்த அனுபவத்தைப் பிரும்மம் என்ற சிறுகதையாக எழுதினேன். மரணம் என்ற உண்மையை இல்லாமையாக நான் உணரவில்லை.  மாறாக, மரணத்தை ஒரு மாற்றமாக உணர்ந்தேன்.  பிறந்தது எதற்கும் மரணம் அல்ல, மாற்றமே நிரந்தரம் என்பதாக உணர்ந்தேன்.  அதையே பிரும்மம் என்பதாக நான் குறிப்பிட்டேன். 

ஒரு நாள் மாலை, 'கணையாழி' அலுவலகத்தில் ஜானகிராமனைச் சந்தித்தேன். அப்போது அவர், 'கணையாழி' ஆசிரியராக இருந்தார். மிகுந்த மகிழ்ச்சியோடு, 'பிரும்மம் ரொம்ப நல்ல கதை' என்றார். நடந்து, ரத்னா கபேவுக்கு வந்து காபி சாப்பிட்டோம். அவர்தான் பில்லுக்குப் பணம் கொடுத்தார். அக்கதை, 'கணையாழி'யில் பிரசுரம் கண்டது.

அந்த மாதத்தின் சிறந்த கதை என்று இலக்கியச் சிந்தனைக்காகத் திருப்பூர் கிருஷ்ணன் அதைத் தேர்ந்தெடுத்தார். ஆண்டின் சிறந்த கதையாகக் கரிச்சான் குஞ்சு அதைத் தெரிவு செய்தார். ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தமிழக அரசு பிரும்மம் உள்ளிட்ட கதைத் தொகுதியைத் தெரிவு செய்து பரிசளித்தது. முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், அரசுப் பரிசை வழங்கினார். ஆங்கிலத்திலும், இந்தியாவின் பெரும்பாலான மொழிகளிலும் பிரும்மம் மொழியாக்கம் கண்டது."

அடுத்து, 'மரம் வளர்ப்போம்'.  எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று.  வீட்டைக் கட்டும் போதே வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் மரங்கள் நடுவது பற்றி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து புதிதாக வீடுகட்டுபவர்களுக்குத் தேவையான நல்ல தகவல்கள்: 


"...வேப்ப மரம் நல்லது. மா, தென்னை மரங்கள் நடலாம். இவற்றின் வேர்கள் அப்படியே செங்குத்தாக பூமிக்கு கீழே செல்லக்கூடியது. இதனால் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் வராது. பெற்றோம் ஜன்னலைத் திறந்தவுடன் கண்ணில் படும் பசுமை மனத்தைக் குளிர்விக்கும். சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய வீரியமிக்க மரக்கன்றுகள் கிடைக்கிறது. மூன்று ஆண்டுகளில் வீட்டுத் தேவைக்கான மாங்காய், தேங்காய் வந்துவிடும்."

அடுத்து, 'இன்பாக்ஸ்' பகுதியிலிருந்து மங்களபுரம் கா.ராஜசேகர் எழுதிய ஒரு கடிதம்: "நியாய விலைக் கடை என்றால நியாயமில்லாத கடை என மக்கள் சொல்லும் நிலையில் செம்பாக்கம் 'காஞ்சி மக்கள் அங்காடி'யின் செயல்பாடுகள் குறித்து படிக்கும்போது, தமிழகம் முழுவதும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என ஏக்கம் பிறக்கிறது."

அடுத்து, "வரும் வாரம்" பகுதியில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் பற்றிய தகவல். 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தேழாம் நாளன்று பிறந்தார்.  மற்ற  தகவல்கள்: 


"... தமிழ் படித்த அறிஞர் என்றாலும் அவர் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்த தேசிக விநாயகம் பிள்ளை, இலக்கியத்தில் செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானவை உமர்கய்யாமின் ருபையாத் மொழி பெர்யர்ப்பும், நாஞ்சில் நாட்டு  மருமக்கள் வழி மான்மியமும். அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் காந்தளூர்ச்சாலை. சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி தயாரிப்பில் இவரது பணி குறிப்பிடத்தக்கது. கவிதைகள் எழுதுவதோடு, கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் கவிமணி..."

நன்றி: "புதிய தலைமுறை"    

கருத்துகள் இல்லை: