18 செப்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-83: பிரம்மச்சர்யம்

எந்த நேரமும் வெடித்து விடும்
அந்த காற்றடைத்த பலூனை
பல காலம் காத்து அவன் தன்
திருமணத்தில் போட்டுடைத்தான்.

நிர்சிந்தையாய் நிகழவில்லையது.
வெடித்து விடுமோ என்ற பயத்திலும்,
வெடித்துப் பார்ப்போமா எனும் குறுகுறுப்பிலும்,
முடிவெடுக்காமலேயே முடிந்துவிட்ட காலமது.

“மாரத்தான்” ஓட்டத்தில்
விழி பிதுங்கி, தளர்ந்து, மூச்சடைத்து
திருமண எல்லைக்கோடு வரை தாக்குப் பிடித்து
எல்லையை தொட்டு வீழ்ந்தான்.

நெஞ்சு நிமிர்த்தி, கையை உயர்த்தி
முரசு கொட்ட முடியவில்லை வெற்றியென்று.
உடல், எல்லை தொட்டு வீழ்ந்தாலும்
வழியெல்லாம் மனம் எத்தனை முறை
வீழ்வதும் எழுவதுமாய் எல்லை மீறியது.

வெயில், மழைக்கு ஒரே கம்பளியாய்
கவசமாகவும், மூச்சு முட்டும் இம்சையாகவும்
முதுகில் ஊர்ந்த கம்பளிப் பூச்சியாய்
இருந்ததவன் பிரம்மச்சர்யம்.


கருத்துகள் இல்லை: