17 ஜன., 2024

திருவள்ளுவர் திருநாள்

இன்று திருவள்ளுவர் திருநாள் 
...........................................
  *திருக்குறளும் ஆன்மிகமும்.*
*திருப்பூர் கிருஷ்ணன்*
...........................................
படங்கள்: வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை
...........................................
   *திருவள்ளுவர் ஒரு மாபெரும் ஆன்மிகவாதி. முனிவர் என்று சொல்லத்தக்க எல்லாப் பண்புகளும் நிறைந்தவர். இதற்கான பல ஆதாரங்கள் திருக்குறளில் காணப்படுகின்றன. 

  நம் ஆன்மிகம் `அருவம், உருவம், அருவுருவம்` என்ற மூன்று நிலைகளில் இறைச் சக்தியை வழிபடுவதை ஏற்கிறது. அருவம் என்பது வடிவமற்றது. உருவம் என்பது வடிவம் உடையது. 

  அருவுருவம் என்பது உருவம் இருந்தும் கண்காது முதலிய உறுப்புகள் இல்லாதிருக்கும் லிங்க வடிவம். 

  அவரவர் விருப்பத்தின்படி இம்மூன்று நிலைகளில் எதை வேண்டுமானாலும் தொழலாம் என்கிற சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு. 

  திருவள்ளுவர் அருவ வழிபாடு பற்றியோ அருவுருவ வழிபாடு பற்றியோ ஆதரித்தோ மறுத்தோ கருத்தெதுவும் சொல்லவில்லை. ஆனால் உருவ வழிபாட்டை வள்ளுவர் ஏற்கிறார். 

  இறைவனின் பாதங்களைப் போற்றுகிறார் வள்ளுவர். இறைவனின் திருப்பாதங்களைச் சரணடைய வேண்டும் என்கிறார். `அடி, தாள்` ஆகிய சொற்களை இறைவனின் பாதங்களைப் பற்றிச் சொல்வதற்குப் பயன்படுத்துகிறார். 

  `ஒருவன் தன் மனக்கவலையை மாற்ற வேண்டுமானால் தனக்குவமை இல்லாதான் தாளில் சரண்புக வேண்டும். என்ன கல்வி கற்றாலும் இறைவன் பாதங்களைத் தொழாவிட்டால் அந்தக் கல்வியால் பயனில்லை. 

  இறைவனின் அடியைச் சரணடைந்தவர்கள் நிலவுலகில் நீண்டநாள் வாழ்வார்கள். இறைவன் அடியைச் சரணடைந்தவர்க்குத் துன்பம் ஏற்படுவதில்லை. 

  இறைவன் பாதங்களைச் சரணடைவதே பிறவிக் கடலைக் கடக்கும் வழி. அவ்விதம் இறைவன் பாதங்களைச் சரணடையாதவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலாது.`

  இவையெல்லாம் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தில் வள்ளுவர் தெரிவிக்கும் இறைவனின் திருவடி பற்றிய கருத்துக்கள். 

  வள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதைத் தெளிவாக நம்மால் அறியக் கூடவில்லை. திருக்குறள் மதங்கடந்த நூலாகவே திகழ்கிறது. 

  எனினும் புலால் மறுப்பைத் தீவிரமாக வலியுறுத்துவதால் அவர் சமண மதத்தைச் சார்ந்தவராய் இருக்கலாம் என்பவர்கள் உண்டு. 

 வந்தவாசி அருகே குந்த குந்தர் மலை என்றொரு குன்று இருக்கிறது. குந்த குந்தர் என்ற சமணத் துறவி தவம் செய்த இடம் அது என்கிறார்கள். அந்தக் குந்த குந்தர்தான் திருவள்ளுவர் என்றொரு கருத்து நிலவுகிறது. 

  குந்த குந்தர் மலையின் அருகே திருவள்ளுவர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. 1330 திருக்குறளும் அந்த மண்டபத்தில் சுவரில் எழுதப்பட்டுள்ளன. 

 *இந்திரன், திருமகள் உள்ளிட்ட இந்துப் புராணப் பாத்திரங்களைப் பற்றி வள்ளுவர் சொல்வதால் அவரை இந்து என்பதே பொருத்தம் என்று சொல்பவர்களும் உண்டு. 

  வள்ளுவர் உருவ வழிபாட்டை ஏற்பதால், அவ்விதம் உருவ வழிபாட்டை ஏற்காத மதம் வள்ளுவருடைய மதமாக இருக்க முடியாதென்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

  வள்ளுவர் வழிபட்ட தெய்வம் ஆணாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர் கடவுளைப் பற்றிக் கூறும்போது `ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான்` என ஆணுக்குரிய பெயர்களையே பயன்படுத்துகிறார். 

  *திருவள்ளுவர் ஊழ்வினை என்ற ஒன்று மனித வாழ்வில் செயல்படுவதை ஏற்கிறார். `ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்` என்கிறார். 

  நம் தொன்மையான தமிழ் ஆன்மிக மரபு, ஊழ்வினையை ஏற்கிறது. 

  `யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்று தொடங்கும் கணியன் பூங்குன்றனார் எழுதிய புறநானூற்றுப் பாடல் `பெரும் ஆற்றில் மிதந்து செல்லும் மிதவை போன்றது மனித வாழ்க்கை, அது விதிவழியே செல்வது என்பதால் பெரியோரை நாங்கள் வியப்பதும் இல்லை. சிறியோரை இகழ்வதும் இல்லை` என்கிறது. 

  சிலப்பதிகாரம் ஊழ்வினையின் வலிமையை உரத்துப் பேசுகிறது. `ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்` என்கிறது. `கண்ணகி அடைந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஊழ்வினையே, அவள் முற்பிறப்பில் செய்த செயல்களுக்கு இப்பிறப்பில் நேர்ந்த விளைவுகளையே அனுபவித்தாள்` என்கிறார் இளங்கோ அடிகள். 

  ஊழ்வினையை ஏற்பது நம் மரபு. அந்த மரபு வள்ளுவர் காலந்தொட்டே தொடங்கிவிட்டது. 

  ஊழ்வினையை ஏற்பதால் மாற்றவே இயலாமல் நடந்துவிட்ட துயரச் சம்பவங்களை மனம் ஒப்புக்கொள்ளப் பழகுகிறது. மனித வாழ்வில் நிம்மதியும் சாந்தியும் அடைய இந்த ஊழ்வினைக் கோட்பாடு பெரிதும் உதவுகிறது.  

  *திருவள்ளுவர் இந்து மதத்தின் பல புராணப் பாத்திரங்களின் பெயர்களைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். எமனைக் கூற்றுவன் என்கிறார். லட்சுமிதேவியைத் `திரு, செய்யவள், தாமரையினாள்` என்று பலவிதமாகக் குறிப்பிட்டு எழுதுகிறார்.

 திருமகளின் அக்காவான மூதேவியைத் `தவ்வை` என்றும் `மாமுகடி` என்றும் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் பெயரளவில் அவர் சொல்லும் புராணப் பாத்திரங்கள். 

  இவை தவிர, புராணக் கதைகளையுமே கூட எடுத்துச் சொல்கிறார். ராமாயணத்தில் வரும் அகலிகை கதை அவரைக் கவர்ந்திருக்கிறது. `ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி` என அகலிகை கதையைத் தம் குறட்பாவில் கொண்டு வருகிறார். 

  `ஐம்புலன்களின் ஆசையை ஒழித்தவனுடைய வலிமை எத்தகையது என்பதற்கு இந்திரனே போதுமான சான்றாகிறான், வேறு சான்று தேவையில்லை` என்கிறார் வள்ளுவர். 

  ஐம்புலன்களை அடக்கியவர் கெளதம முனிவர். அவ்விதம் புலனை அடக்காமல் அவர் மனைவி அகலிகை மீது ஆசைகொண்டவன் இந்திரன். 

   தேவர்களின் மன்னனே ஆயினும் கெளதமர் சாபத்தால் இந்திரன் அடைந்த சங்கடங்கள் புராணத்தில் விளக்கப் பட்டுள்ளன. கெளதமரின் மனைவி அகலிகையும் கெளதமர் சாபத்திற்கு ஆட்பட்டுக் கல்லாகிறாள். பின்னர் கல்லாக இருந்த அகலிகை ராமபிரான் திருப்பாதங்கள் பட்டு மீண்டும் பெண்ணாகிறாள். 

  இந்த ராமாயணக் கதையைப் பொருத்தமான இடத்தில் கையாள்கிறார் வள்ளுவர். புலனடக்கத்தின் ஆற்றலை இக்கதையின் மூலம் எளிதாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கிவிடுகிறார். 

  `மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு` 

  என்ற குறட்பாவில் வாமனாவதாரத்தில் திருமால் உலகளந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். 

 சோம்பல் இல்லாத அரசன், திருமால் தன் அடியால் அளந்த உலகம் முழுவதையும் தன்னுடைய சொந்த முயற்சியால் தானும் பெற்றுவிடுவான் என்கிறார். 

  சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகச் சொல்லும் கிரகணக் கதை காமத்துப் பாலில்  ஒரு குறட்பாவில் சொல்லப்படுகிறது. 

  `கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்று.` 

 காதலரைக் கண்டதென்னவோ ஒரே ஒருநாள் தான். ஆனால் அதுபற்றி ஊரில் எழும் வம்புப் பேச்சோ சந்திரனைப் பாம்பு விழுங்கிய செய்திபோல எல்லா இடங்களிலும்  பரவி விட்டது என்று அங்கலாய்த்துக் கொள்கிறாள் தலைவி.

  *நம் ஆன்மிகம் மனித உடலைக் கூடு என்றும் உயிர் அந்தக் கூட்டில் அடைபட்ட பறவை என்றும் சொல்கிறது. உயிர்ப் பறவை உடல் கூட்டை விட்டுப் பறத்தலே மரணம் என்பது நம் ஆன்மிகக் கோட்பாடு. இதை வள்ளுவரும் ஏற்கிறார். 

  `குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு` என்கிறார் . முட்டை தனித்திருக்க அதை உடைத்துக் கொண்டு பறவை பறப்பது போன்றதே உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள தொடர்பு என்கிறது வள்ளுவம். 

 *ஆன்மிகத்தால் அடையும் இறுதி நிலையை வீடுபேறு என்கிறோம். உயிர் நீத்தவர்கள் முக்தி அடைகிறார்கள் என்கிறோம். முக்தி என்ற சொல்லே வீடுபேறு என வழங்கப் படுகிறது. 

 ஆன்மா கயிலாயம் அடைந்ததாக சைவர்களும் ஆன்மா வைகுந்தம் சேர்ந்ததாக  வைணவர்களும் சொல்கிறார்கள். 

 ஆன்மிகவாதியான வள்ளுவர் ஏனோ வீடு பேறு பற்றி ஒரு தனிப் பகுதி எழுதவில்லை. அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு நிலைகளில் அறத்தைப் பற்றியும் பொருளைப் பற்றியும் இன்பத்தைப் பற்றியும் தனித்தனியாக, பகுதிகளை வரையறுத்து எழுதியவர் வள்ளுவர். அதனாலேயே திருக்குறள் முப்பால் எனப் பெயர் பெற்றது. 

  ஆனால் ஓர் ஆன்மிகவாதி வீடு பற்றி, அதாவது முக்தி நிலை பற்றி எழுத வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை வெங்கரை ஸ்ரீனிவாசன் என்ற அறிஞர் `திருக்குறள் ஒரு நுண்ணாய்வு` என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.

  அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் ஆத்ம ஞானத்தையும் இறை அனுபூதியையும் பற்பல குறட்பாக்களின் மூலம் பரவலாகக் கையாண்டதால்தான் வீடு பேறுக்காக அவர் தனிப் பால் அமைக்கவில்லை என்கிறார் அவர். 

  அறத்துப் பாலில் வரும் நீத்தார் பெருமை துறவியரின் பெருமையைச் சொல்கிறது. அதே பாலில் வரும் அருளுடைமை அருளைப் பற்றிப் பேசுகிறது. தவம் என்றே தனி அதிகாரம் படைக்கிறார் வள்ளுவர். 

  நிலையாமை பற்றியும் ஓர் அதிகாரம் இருக்கிறது. துறவு என்றே ஒரு தனி அதிகாரம் எழுதுகிறார். மெய் உணர்தல் என்றும் ஓர் அதிகாரம் உண்டு. 

  இதுபோல் பொருட்பாலிலும் பல அதிகாரங்களில் முக்தி நிலை பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கும் குறட்பாக்கள் உண்டு. 

  இதனால் வீடுபேறு என்பதைப் பற்றித் தனிப் பகுதி அமைத்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றே வள்ளுவர் கருதியிருக்க வேண்டும் என்கிறார் வெங்கரை ஸ்ரீநிவாசன். 

 மிக உயர்ந்த ஆன்மிகவாதியான வள்ளுவர் போலித் துறவைக் கண்டிக்கிறார். உலகம் பழித்ததை விட்டுவிடுவதுதான் உண்மைத் துறவே தவிர முடியை மழித்தும் நீட்டியும் வேடங்கள் தரிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்கிறார். `மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்` என்பது குறள்.  

 பெரும்புலவர் திருவள்ளுவர் பகட்டும் ஆடம்பரமும் நிறைந்த போலி ஆன்மிகத்தைப் போற்றாது, மதங்கடந்த உண்மையான ஆன்மிகத்தை உளமாரப் போற்றிய உயர்ந்த ஆன்மிகவாதி என்பதில் சந்தேகமில்லை. 

(நன்றி: மாலைமலர்.)
 ...........................................

நன்றி :


கருத்துகள் இல்லை: