9 செப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-19: "காத்திருக்கும் விதை நெல்"

மறுஜென்ம நம்பிக்கையுடனும்,
மண்சேரும் ஆசையுடனும்,
வயதுக்கு வந்தபின்னும்
மணமாகாக் கன்னியராய்
விதைநெல் காத்திருக்கிறது.

மண்ணும், நெல்லும்
மனிதனும், கலப்பையும்,
தயார் என்றாலும்,
நிகழவில்லை கலப்பு மணம்.

சீர் வேண்டுமாம்
நிறைய நீர் வேண்டுமாம்:
கண்களில் இருந்தென்றால்
கொடுத்து விடலாம்.

ஆனால்
கரையில் வரவேண்டுமாம்,
காவிரி
கரைஉடைக்க வேண்டுமாம்.

காவிரியில் எப்படி நீர் வரும்?
மொழி வழிமறிக்குமே!
மனம் வைக்கவேண்டுமே
மதகு திறக்க!!

கேட்பவன் மொழி ஒன்றாகவும்,
மதகு திறப்பவன் மொழி
வேறாகவும் இருக்க,
நிகழவில்லை அங்கே
புரிந்து கொள்ளுதல்.

காத்திருக்கிறது விதை நெல்;
மழை பொழிய வேண்டும்,
அல்லது
கர்நாடக மக்கள்
கருணை மழை பொழிய வேண்டும்.

கருத்துகள் இல்லை: