11 செப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-21: "மரம்"

புவியீர்ப்பை எதிர்த்து,
வான் நோக்கி வளரும்
உன் தன்னம்பிக்கை பிடிக்கும்;
காற்றுடன் கலந்து நீ
நகைப்பது பிடிக்கும்;
எனக்கும் மழையில்
நனைவது பிடிக்கும்;
உனக்குப் பிடித்த
பச்சை நிறம்,
எழுத்தில் தவிர
மற்றெல்லாவற்றிலும்,
எனக்கும் பிடிக்கும்;
பூ, காய், கனி வழங்கும்
உன் அருட்கொடை பிடிக்கும்;
பூமிக்கு நீ பிடிக்கும்
நிழற்குடை பிடிக்கும்;
வெளியே வளர,
உள்ளேயும் வளர வேண்டும் -
எனும் உன் வேர்களின் பாடம்,
வேதமாய்ப் பிடிக்கும்;
கனமான கட்டை,
நீரில் மிதக்கும்,
தத்துவம் பிடிக்கும்;
காணாமல்போன காற்றுக்கு,
ஆடாமல், அசையாமல்,
நீ மௌனமாகிவிட ,
உன் சோகம்,

என்னைப் பிடிக்கும்;
கட்டிலாகி, தொட்டிலாகி,
வீடாகி, விறகாகி, வீணையாகி,
இன்னும்,
தூணாகி, துடுப்பாகி, தோணியாகி,
மலராகி, காயாகி, கனியுமாகி,
புத்தனுக்கு ஞானம் தந்த
போதியுமாகி,
யாதுமாகி நிற்கும்
என் சக்தி நீயே!
நீருக்கான உன் தாகம்,
என் ஞானத் தேடலுக்கு வேண்டும்;
மனிதநேயம் போற்ற,
உன் மலரின் மென்மை,
என் மனதிற்கு வேண்டும்;
சிறுமைகண்டு பொங்க,
உன் வைரம்பாய்ந்த வலிமை,
என் தேகத்திற்கு வேண்டும்;
மரமே இல்லாது போனால்,
மனிதகுலம் மரித்துப் போகும்;
நட்டு வைப்போம்,
மரத்தையும், மனித நேயத்தையும் -
மண்ணிலும், மனத்திலும்!

கருத்துகள் இல்லை: