24 அக்., 2009

இன்று படித்தவை-4: அக்டோபர் 24, 2009

4. "Universal Message of the Bhagavad Gita: An Exposition of the Gita in the Light of Modern Thought and Modern Needs" by Swami Ranganathananda - Volume I (Published by Advaita Ashrama, Kolkatta)

மூன்று தொகுதிகள் கொண்ட இந்த அற்புதமான புத்தகத்தை ஒருமுறை படித்து இன்புற்றுவிட்டேன். சுவாமி ரங்கநாதானந்தர் பெரிய மகான். உலகளாவிய ராமகிருஷ்ண மடங்கள் மற்றும் மிஷன் ஆகியவற்றின் தலைவராக வாழ்ந்து, நூறு வயதைத் தொட சில காலம் மட்டும இருக்கும்போது மகா சமாதி அடைந்தவர். அவருடைய நூல்கள் தெளிவான சிந்தனைகள், மேன்மையான கருத்துகள், புரட்சிகரமான கண்ணோட்டம் கொண்டவை. இருமுறை அவரை நேரில் கண்டு, அவரது உரையைக் கேட்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது.)

தற்போது தினமும் ஒரு சில பக்கங்கள் என்று படித்து வருகிறேன். இன்று படித்தது முதல் பத்து பக்கங்கள். இதில் மனதில் பதிந்தது:

நடைமுறை வேதாந்ததிற்கு பகவத் கீதையைவிட சிறந்த நூல் இருக்க முடியாது. முழுமை அடைந்த மனிதர்களைக் கொண்ட ஒரு உன்னத சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டும் நூல். ஆனால் நாம் கீதையின் உன்னதக் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பின்பற்றுவதை விட்டுவிட்டு , அதை ஒரு பூஜைக்குரிய ஒரு பொருளாக மட்டுமே காண்கிறோம். நாம் கீதையின் மேன்மையான கருத்துக்களை புரிந்துகொண்டு, அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்திருந்தால் வெளிநாட்டினரிடம் அடிமைப் பட்டிருக்கமாட்டோம். ஜாதிப் பூசல்கள், அடக்குமுறைக் கொடுமைகள், கொடிய வறுமை இவற்றில் உழன்றிருக்க மாட்டோம்.

மனித மகத்துவம், சுதந்திரம், சமத்துவம் - இவற்றின் அடிப்படையில் ஒரு புதிய மேன்மையான சமுதாயத்தை அமைப்பதற்கான வழியை கீதை காட்டுகிறது.

"வேதங்கள் என்ற பசுக்கள் தரும் பால், கீதை. ஸ்ரீ கிருஷ்ணர் அந்தப் பாலைக் கறந்து நமக்கு வழங்கும் பால்காரர். நாம் அதைப் பருகி பலம் பெறவேண்டும், வளரவேண்டும், மேன்மையடைய வேண்டும். ஆனால் பல நூற்றாண்டுகளாக நாம் அதைப் பூக்களால் பூசித்தும், வழிபட்டும், வணங்கியும் வந்தோமே தவிர அதைப் பருகவில்லை. அதனால்தான் நம் உடலும் உள்ளமும் பலமிழந்து, நம் சமுதாயமும் நலிந்துவிட்டது. இப்போது நாம் அப்பாலைப் பருகி, அதன் மேன்மையை கிரகித்து, மேன்மையான பண்புகள், செயல் திறமை, தொண்டுள்ளம் பெற்று ஒரு புதிய ஒப்பற்ற சமுதாயத்தைச் உருவாக்க வேண்டும். நம் நாட்டின் தலைவிதியை மற்ற வேண்டும்."

அடுத்து...?

கருத்துகள் இல்லை: