30 மார்., 2010

காரைக்குடி கம்பன் விழா 2010 - மூன்றாம் நாள்









கம்பன் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற சித்திரைப் பொருட்காட்சியில், மதுரை இராமகிருஷ்ணா மடத்திற்கு ஒரு ஸ்டால் பதிவு செய்வதற்காக, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவரான திரு முத்து பழனியப்பன் அவர்களைக் கண்டு பேசுவதற்காக நேற்று மாலை கம்பன் மணிமண்டபம் சென்றிருந்தேன். அந்த வேலை முடித்து, கம்பன் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஒரு பகுதியைக் கண்ணுற்றேன்.

மாலை ஐந்தரை மணி முதல் திருமதி இளம்பிறை மணிமாறன் அவர்கள் தலைமையில் பட்டி மன்றம் நடந்து கொண்டிருந்தது. இதில் ஒரு சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் மகளிர் என்பதுதான். பட்டி மன்றத் தலைப்பு: 'தருமநெறி நின்ற தம்பியரில் தலை நின்றவர்'. கும்பகருணனே என்று திருமதி ருக்மணி பன்னீர்செல்வமும், திருமதி சித்திரா சுப்ரமணியமும் பேசினர். வீடணனே என்று திருமதி விசாலாட்சி சுப்ரமணியமும், திருமதி கவிதா ஜவகரும் பேசினர்.

பொதுவாக எனக்குப் பட்டிமன்றங்களில் ஈடுபாடு இல்லை. ஆனால் நிகழ்ச்சிக்குச் சென்றதால் ஒரு முக்கிய தகவலைத் தெரிந்துகொண்டேன். விழா அமைப்பாளரான திரு பழ.பழனியப்பன் அவர்கள் முயற்சியால், கம்பன் மணி மண்டபத்தில் மாதம் ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் இரண்டு சிறப்புப் பேச்சாளர்கள் பேசுவர். கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி, மற்றும் மொபைல் நம்பரை வாசலில் வைத்திருந்த ஏட்டில் பதிவு செய்யும்படி ஏற்பாடாகியிருந்தது. நானும் பதிவு செய்துகொண்டேன். எஸ்.எம்.எஸ். மூலம் கூட்டங்கள் பற்றிய தகவல்களும், அழைப்பும் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர். இனிய செய்தி இது!

வாசலில் போடப்பட்டிருந்த புத்தகக் கடையில், தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய, "அன்பின் மொழி" என்ற கண்கவர் வண்ணப்படங்கள் கொண்ட, அன்னை தெரசாவின் சிந்தனைகள் அடங்கிய அழகிய குறுநூலையும், தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய "ஊருக்கு நல்லது சொல்வேன்!" என்ற நூலையும் வாங்கினேன். இரண்டாவது நூல் ஒரு விகடன் பிரசுரம். ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்து, அனைவரையும் கவர்ந்த கட்டுரைகள், தொகுக்கப்பட்டு, நேர்த்தியான கட்டமைப்பில் வெளிவந்துள்ளது.

நிகழ்ச்சியில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்துள்ளேன்.

கருத்துகள் இல்லை: