17 ஜூன், 2010

பயணங்கள்-13: திருப்போரூர்

திருப்போரூர்   பேருந்து   நிலையம் 



உடற்பயிற்சி செய்யும் நெல்லையப்பன்

நெல்லையப்பன் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி!

அருள்மிகு கந்தசாமி கோவில் திருக்குளமும், அதன் நடுவில் மண்டபமும்

அருள்மிகு கந்தசாமி கோவில் திருக்குளமும், அதன் மண்டபமும் (இன்னொரு கோணத்தில்)



குளத்தங்கரை  விநாயகர்

அருள்மிகு கந்தசாமி கோவில் நுழைவாயில்

அருள்மிகு கந்தசாமி கோவிலினுள் நுழைந்ததும் அங்கே சிதம்பர சாமிகளுக்கு சிறிய ஆலயம்

அருள்மிகு கந்தசாமி கோவில் ஸ்தல விருக்ஷம் வன்னி மரமும், அதன் சிறப்பைப் பற்றிய விளக்கமும்

சிதம்பர சுவாமிகளின் திரு உருவப்படம் (கோவிலுக்கு வெளியே)

அருள்மிகு கந்தசாமி கோவில் தேர்

அருள்மிகு கந்தசாமி கோவில் அருகே சான்றோர் தெரு - என்னவொரு அற்புதமான பெயர்!

பிரணவமலை முன்வாயில்

பிரணவமலை வாயிலில் நினைவுச் சின்னம்

பிரணவமலை நுழைவாயில் மண்டபம்

அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை

மலைப்பாதையில் நம் சிந்தனைக்கு-1

மலைப்பாதையில் நம் சிந்தனைக்கு-2

அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறு சிறு ஆலயங்கள்

நெல்லையப்பன் மலைப்பாதையில் எனக்குமுன் படியேறுகிறான்

அருள்மிகு கைலாசநாதர்-பாலாம்பிகை ஆலயம்





அருள்மிகு கைலாசநாதர் ஆலயப் பிரகாரத்தில் சிதம்பர சுவாமிகளின் திருவுருவப்படம்

ஸ்ரீ சிதம்பர சுவாமிகளின் சமாதி

அருள்மிகு கைலாசநாதர் கோவிலின் பின்புறம் பக்தர் ஒருவர் கட்டிய வீடு

மலைமேல் அருள்மிகு கந்தசாமியின் வேல் வடிவம்

பிரணவமலையிலிருந்து கீழே ஒரு தோற்றம்
பிரணவ மலையிலிருந்து அருள்மிகு கந்தசாமி கோவிலின் தோற்றம் 

என்னருமை நெல்லையப்பன் திருப்போரூர் வந்த பிறகு பலமுறை அங்கு சென்று அவனோடிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அதுமட்டுமல்ல, அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.  அந்த ஊரின் உயிர்நாடியே ஊரின் நடுவேயுள்ள  அருள்மிகு கந்தசாமி கோவிலும் அதன் தெப்பக்குளமும்தான்.  OMR என்று அனைவரும் குறிப்பிடும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத ஒரு சிற்றூர்.  அங்கிருந்து சென்னை 40 கிலோமீட்டர். மாமல்லபுரம் 16 கிலோமீட்டர்.  செங்கல்பட்டு 25 கிலோமீட்டர்.  திருக்கழுக்குன்றம் 18 கி.மீ.

பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெறும் பனங்காடாக இருந்த இடத்தில் ஒரு பெரிய கோவிலை, அருள்மிகு கந்தசாமி கோவிலையும், அருகிலிருந்த சிறு ஓடையை ஒரு பெரிய திருக்குளமாகவும் உருவாக்கியவர் சிதம்பர சுவாமிகள் என்ற ஒரு தவ முனிவர்.  அதுமட்டுமல்ல சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் வழங்கப்படும்  சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர்-பாலாம்பிகை கோவிலை வடிவமைத்ததும் அவர்தான்.  இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கப்பாதை அமைத்து அதில் சமாதியடைந்ததாகச் சொல்லப்படுகிறது.  அந்த வாயிலைச் சுற்றி சங்கிலி வெளி அமைக்கப்பட்டுள்ளது.  அருகே அவரது திருவுருவப்படம்.

பிரணவமலையில் நான் பார்த்திராத-அதுவரை கேள்விப்பட்டிராத ஒன்றைக் கண்டேன்.  கோவிலின் பின்புறம் இடிக்கப்பட்ட யாகசாலையின் செங்கல்கள் நிறையக் கிடக்கின்றன.  அங்கு வரும் பக்தர்கள் அந்த செங்கல்களை தனியே ஒரு இடத்தில் அடுக்கி, தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர்.    அந்த வேண்டுதல் நிறைவேறும் இன்று பலருக்கு நம்பிக்கை இருப்பதை அங்கிருந்த நிறைய செங்கல் அடுக்குகள் (படம்) பறைசாற்றின.  

சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் சந்நிதித் திருமுறை என்ற பெயரில் 726 பாடல்கள் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்து  ஒரு  பாடல்.

அன்னம் அளிக்குமூர் அன்டினரைக்  காக்குமூர் 
சொண்ண  மழைபோற்  சொரிய்மூர்  -  உண்ணினர்க்குத்
தீதுபிணி  தீர்க்குமூர்  செவ்வேள்  இருக்குமூர்
ஓது  திருப்போரூர்  எம்மூர்.       

அருள்மிகு கந்தசாமி கோவில் முருகப்பெருமானின் திருக்கோவில்.  ஒருநாள் மாலை அங்கு சென்று வழிபட்டேன். அந்தக்  கோவிலின்  ஸ்தல  விருக்ஷம்  வன்னி  மரம்.  வன்னி மரத்தின் மேன்மைகள் பற்றிய ஒரு விவரப் பலகை பிரகாரத்தில் இருந்தது (படம்). ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு ஸ்தல விருக்ஷம்.  ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பிராணி வாகனம்.  முருகனுக்கு மயில், கணபதிக்கு சுண்டெலி என்று.  நம் முன்னோர்கள் எல்லா உயிர்களையும் - மரங்கள், பிராணிகள் எல்லாவற்றையும் - வணங்க சூக்சுமமாக  நமக்குக் கற்பித்திருக்கிறார்கள். நாம் இயற்கையின் ஒரு அம்சம்.  மரம், மனிதன், பிராணி - எல்லாவற்றையும் ஒருமைபடுத்தி, அத்வைதம் (Advaita - Non-dualism),  எல்லாம் ஒன்றே, ஒன்றின் பல அம்சங்கள்  என்ற மேன்மையான தத்துவத்தை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.   நினைக்கவே பெருமையாக இருக்கிறது. வழிபட்டுவிட்டு வெளியே வரும்போது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.

கோவில் கடைகளில் பொரி பாக்கெட் விற்கிறார்கள்.  அதை வாங்கி குளத்திலுள்ள மீன்களுக்குப் போடுகிறார்கள்.  கூட்டம் கோட்டமாக மீன்கள் வந்து அவற்றைத் தின்பதை பார்த்து ரசிக்கிறார்கள்.

நெல்லையப்பனுடன் அதிகாலையிலும், பின்மாலைப்பொழுதிலும் திருக்குளத்தைச் சுற்றி வருவது இனிய, சுகமான அனுபவம்.   அதுபோல் அதிகாலையில் பிரணவமலை சென்று அந்த எளிமையான, அமைதியான, யாருமே இல்லாத, ரம்மியமான  சூழலில் இயற்கையோடு லயிப்பது ஒரு அற்புதமான அனுபவம்.

ஒருநாள் அதிகாலை நானும் நெல்லையப்பனும் நடைபழகும்போது, எதிரே ஒரு முதியவர் ஆடுகள், நாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றிற்கு உணவளித்துக் கொண்டே வந்தார். அவர் பின்னே அந்தப் பிராணிகளும் நெருக்கமாகச் சென்றன.  நெல்லையப்பனுக்கு அவர் ஏற்கனவே பரிச்சயமாகி இருந்தார்.  அவரை வணங்கிவிட்டு, என்னை அறிமுகப்படுத்தினான்.  நானும் அவரை வணங்கினேன்.  அவர் வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலாரைப் போற்றுபவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்ற நெறிப்படி வாழ்பவர்.  என்னை அவர் கேட்டார்: "ஐயா, நீங்கள் புலால் உண்ணுவீர்களா?"  என்னால் அவருக்கு நேரான பதில் சொல்லமுடியவில்லை.  சைவக் குலத்தில் பிறந்த நான், நண்பர்கள், சந்தர்ப்பங்கள் காரணமாக அசைவ உணவை எப்போதாவது உண்ணுவேன்.  நிறைய முறை அசைவம் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுப்பேன்; பின்னர் சில காலம் கழித்து ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறழ்வேன்.  இம்முறை, அந்த நிமிடம் முதல் அசைவம் உண்பதில்லை, முட்டைகூட சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்தேன். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் பிறழாமல் இருப்பேன் என்று உறுதியுடன் நம்புகிறேன்.  நெல்லையப்பன் ஏற்கனவே அவரைப் பார்த்தபின் அந்த முடிவில் உறுதியாக இருந்தான், பின்பற்றி வருகிறான்.
 
நெல்லையப்பன் ஒவ்வொரு முறையும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் செல்வான்.  மூன்று அல்லது நான்கு சிறந்த எளிமையான உணவகங்கள்.  சுவையான உணவு, நியாயமான விலையில்.  (சென்னையில் ஒரு உணவு விடுதியில் ஒரு தோசைக்கு முப்பத்து இரண்டு ரூபாய் பில்லைப்பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது.  என்ன பாடாவதி எண்ணெயில் சுட்டதோ, அன்று முழுவதும் வேறு எதுவுமே என்னால் சாப்பிடமுடியவில்லை; உணவைப் பார்த்தாலே வெறுப்பு).  போஜனப்பிரியனான என்னால் அங்கு சாப்பிட்ட கல்தொசையை மறக்க முடியாது.  அதுபோல் வேறெங்கும் உண்டதில்லை.  (ஒரு காலத்தில் என்னுடைய புனைப்பெயர்களில் ஒன்று: "போ.ஜனப்பிரியன்"  என்பது).

தாம்பரம், கோயம்பேடு, பிராட்வே, சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய இடங்களிலிருந்து திருப்போரூருக்கு நேரடி பேருந்து சேவை உள்ளது.  கிழக்கு தாம்பரத்திலிருந்து நான் சென்றதால் சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து நேரடியாக திருப்போரூருக்கோ அல்லது கேளம்பாக்கம் சென்று அங்கிருந்து மாமல்லபுரம் பேருந்திலோ அல்லது வேனிலோ (தலைக்கு ஐந்து ரூபாய்) திருப்போரூர் சென்றுவிடலாம்.  ஒரு முறை ஆசைக்காக கொளுத்தும் வெயிலில்  குளிரூட்டப்பட்ட பேருந்தில் கோயம்பேட்டிலிருந்து கேளம்பாக்கம் சென்றேன். (கட்டணம் ரூபாய் முப்பத்து எட்டு.  மொத்தமே பத்துப் பதினைந்து பேருடன் மிகச் சுகமான, மறக்க இயலாத  பயணம்).  அதுபோல  சோளிங்கநல்லூரிலிருந்தும்  இரண்டு மூன்று முறை குளிரூட்டப்பட்ட பேருந்தில் கேளம்பாக்கம் வரை பயணம் செய்தேன் (கட்டணம் ரூபாய் இருபத்து மூன்று). சோளிங்கநல்லூர் சிக்னலில் நிற்கும்போது பத்து நிமிடத்தில் கேளம்பாக்கத்திற்கு ஐந்து பேருந்து செல்வதைக் கண்டிருக்கிறேன்.  அவ்வளவு பேருந்து வசதி.

திருப்போரூரிலிருந்து குன்றத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு  நேரடி பேருந்து வசதி உள்ளது.  

திருப்போரூரில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்திருக்கிறேன். திருப்போரூரிளிருந்து மாமல்லபுரம், சிங்கப்பெருமாள் கோவில், சோளிங்கநல்லூர் அருள்மிகு மகா பிரத்தியங்கரா தேவி கோவில் சென்று வந்தேன். மாமல்லபுரம் சென்று வந்ததைப்பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.  மற்றவற்றைப் பற்றி தனியே எழுதுகிறேன்.  அடுத்து எப்போது திருப்போரூர் செல்லலாம் என்று எதிர்நோக்கியிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: