2 செப்., 2010

சூரியின் டைரி-29: கண்ணன் வந்தான், கண்ணன் வருவான்!

நேற்று தொலைக்காட்சியில் காலை நேரத்திற்கேற்ற நல்ல பக்திப் பாடல் கேட்கலாம் என்ற எண்ணத்தில் சேனல் மாற்றம் செய்துகொண்டே வந்தேன்.  எதிர்பார்த்ததுபோல் மனதிற்குப் பிடித்த பாடல் கிடைத்தது.  ராமு திரைப்படத்தில் வரும் "கண்ணன் வந்தான், எங்கள் கண்ணன் வந்தான்" ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.  பாடலில் லயித்தேன், மனம் கசிந்தேன்.  பாடல் முடிந்தபின்னும் மனம் அந்தப் பாடலிலேயே இருந்தது.  பொறி தட்டியது.  நேற்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி.

கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்று மனதை ஓடவிட்டேன்.  கண்ணனின் லீலைகள் மனத்திரையில் ஓடின.

கோகுலத்தில் பிஞ்சுப் பாலகனாக வெண்ணை திருடி, குறும்புகள் செய்து கோபியர்கள் மனம் கொள்ளைகொண்ட கோபிகிருஷ்ணன்;  ஆயர்பாடிச் சிறுவர்களோடு ஆநிறை மேய்த்து, விளையாடிக் களித்த கோபாலகிருஷ்ணன்; ராதையின் பேரன்பில் கட்டுண்ட ராதாகிருஷ்ணன்;  வேங்கடத்தைக் குடையாகப் பிடித்த வேங்கடகிருஷ்ணன்; வாழ்க்கையே ஒரு மாயா  பஜார் என்று  காட்டிய மாயக்கண்ணன்;  பார்த்தனுக்கு மட்டுமன்றி, பாருலகோர் அனைவருக்கும் மாயையிலிருந்து விடுபட கீதை உரைத்த கீதகிருஷ்ணன்; வாழ்க்கை முழுவதையும் ஒரு யோகமாக வாழ்ந்துகாட்டிய யோகேஷ்வர் கிருஷ்ணன்;  எதிலும் வெற்றி, எல்லாவற்றிலும் வெற்றி என்று வெற்றி கொண்ட ஜெயகிருஷ்ணன்;  மெய்யடியார் குறை தீர்க்க ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்த ராமகிருஷ்ணன்;  ஆதி அந்தமற்ற அனந்தகிருஷ்ணன்; கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி! 

பாரதிக்கு கண்ணன் - மெய்க்காதலன், உயிர்க்  காதலி, தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆருயிர்த் தோழன், ஆதர்ஷ சேவகன்.  கண்ணதாசனுக்கு கானம் பாடிய ஸ்ரீ கிருஷ்ணன்.

என் சிறுவயதில் என் அன்னை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று மாக்கோலமிட்டு, கண்ணனின் பிஞ்சுப் பாதங்கள் வீட்டுக்குள் வருவதுபோல் வழி நெடுக பாதச்சுவடுகளைப் பதித்தது, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் படைத்த  தின்பண்டங்கள் பிரசாதமாக, அவற்றை உண்டு மகிழ்ந்தது எல்லாம் நினைவில் ஆடின.

எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குமோ, அப்போதெல்லாம் அதை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட மீண்டும் மீண்டும் வருவேன் என்று கீதையில் ஆறுதல் வார்த்தைகள் நல்கினான். அவன்  இன்று அராஜகமும், அக்கிரமும், அநியாயமும், அடாவடித்தனமும் மலிந்து அதர்மத்தின் உச்சத்தில் வாழ்கிறோம்.  இதற்கு மேலும் எங்களால் தாங்க முடியாது.  கண்ணா!  நீ வரமாட்டாயா, இந்தக் கம்சர்களை வதம் செய்யமாட்டாயா, எங்கள் உள்ளத்தைத்  தூய்மைப்படுத்தி, கோவிலாக்கி, அதில் நீ வந்து குடியேற மாட்டாயா , எங்கள் மனக் குழப்பங்கள், மடமைகள் நீக்கி நாங்கள் முழுமை பெற வழிகாட்ட  மாட்டாயா  என்று மனம் ஏங்குகிறது.

கண்ணன் வருவான்!
நிச்சயம் வருவான்!! 
அவன் வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருப்போம்!!!     

கருத்துகள் இல்லை: