12 ஜன., 2013

சூரியின் டைரி-62: தென்றலாய் வருடியவை – டாக்டர் வர்கீஸ் குரியன்


சூரியின் டைரி-61: தென்றலாய் வருடியவை டாக்டர் வர்கீஸ் குரியன்

டாக்டர் வர்கீஸ் குரியன் தனது 90வது வயதில் காலமானபோது, உயிர்மை 2012 டிசம்பர் மாத இதழில், ஷாஜி எழுதிய பால் வீதியில் ஒரு பயணம் என்ற அஞ்சலிக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ்கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும், அதன் வணிக சாம்ராஜ்யத்தையும் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன்.  அமுல் என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்று பொருள் (Anand Milk Union Limited). உருவாகி சில மணி நேரத்திற்குள்ளேயே கெட்டுப் போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக்கொண்டு பலகோடி மக்களின் ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே உதாரணம், டாக்டர் வர்கீஸ் குரியந்தான்!  ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான் என்று திட்டவட்டமாகச் சொல்வேன்.

டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ, முதலீட்டாளரோ ஆக ஒருபோதும் இருந்தவரல்ல.  ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில் முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம்தான் அமுல்!  அமுல் ஒரு மாபெரும் கூட்டுறவு சங்கம்! 16,200 கிராமிய கூட்டுறவ் சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32 லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்!  ஆண்டில் 12,000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும், பால் பொருட்களையும் பதப்படுத்தி விற்கும் உலகின் தலைசிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய், குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ், பால் குளிர்பானங்கள், ஆரோக்கிய பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா, பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாய்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே.  அமுலில் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆரம்பித்த செயல் பெருவெள்ளம் (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது.  அதனூடாக உலகில் மிக அதிகமாகப் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது!

உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று!  எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள்.  மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்து முடித்தார் அவர்!


நன்றி : திரு ஷாஜி மற்றும் உயிர்மை மாத இதழ்

கருத்துகள் இல்லை: