5 மார்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-23: "அரங்கேறும் சொற்கள் - கண்ணதாசன்"

எனக்குப் பிடித்த கவிதை-23

அரங்கேறும் சொற்கள் - கண்ணதாசன்

கன்று தான் சிங்கம் என்பான்
கரடிதான் கலைமான் என்பான்
பன்றிதான் யானை என்பான்
பருந்து தான் மஞ்ஞ என்பான்
அன்றிலே காக்கை என்பான்
ஆமென்பார் சபையிலுள் ளோர்;
வென்றவன் சொல்வ தெல்லாம்
வேதமல் லாமல் என்ன?

பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான் ;
வெந்தயம் இனிக்கும் என்பான்;
கள்ளியே முல்லை என்பான்
கண்ணாலே கண்டேன் என்பான்;
உள்ளவன் சொல்வ தெல்லாம்
உண்மையல் லாமல் என்ன?

நதிபோகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியம் தன்வானை விட்டு
மண்ணிலே வீழட்டும் என்பான்
இதுமுதல் கடல்நீ ரெல்லாம்
இனிக்கட்டும் தேன் போல் என்பான்
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?

சொல்லுவார் வார்த்தை யாவும்
தொல்புவி ஏற்பதில்லை
செல்வர்கள் வெற்றி பெற்றோர்
தினஏடு கையில் உள்ளோர்
வல்லவர் பதவி கொண்டோர்
வார்த்தையே அரங்கம் ஏறும்
நல்லவர் சொற்கள் ஏறும்
நாளொன்று வருமா தாயே?

கருத்துகள் இல்லை: