4 மார்., 2009

கடிதம்-14: "தீர்ப்பு கேலிக்கூத்து"

முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமிற்கு, அளவிற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. 1997-ல் தொடுக்கப்பட்ட வழக்கு, பதினோரு ஆண்டுகள் நடைபெற்றபின், தீர்ப்பு கூறப்பட்டு, வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின்படி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை தரப்பட்டு, அப்பீல் செய்ய இரண்டு மாதம் தவணை தந்து, அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அளித்த தீர்ப்பு குறித்து உடனே மேல்முறையீடு செய்ய, நீதிமன்றமே தவணை தந்ததால், தீர்ப்பில் குறை உள்ளது என்று தானே அர்த்தம்; இப்படிப்பட்ட தீர்ப்பை தருவதற்கு பதினோரு ஆண்டுகள் தேவையா?

இந்த தீர்ப்பின் மூலம் ஒரு நிமிடம் கூட சிறை வாயிலைத் தொடவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டதே. ஏற்கனவே பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன; மேல்முறையீடு மூலம் இன்னும் இருபது ஆண்டுகள் ஓட்டிவிடலாம்.

சுக்ராமிற்கு எண்பத்திரண்டு வயது. அப்பீல் முடிந்து தீர்ப்பு வரும்போது, எப்படியும் நூற்றிரெண்டு வயதாகிவிடும். அதன் பின்னர் அவருக்கு தண்டனை தந்து, அவர் சிறையில் இருந்து.... நினைக்கவே கேலிக்கூத்தாக உள்ளது.

இப்படிப்பட்ட உளுத்துப்போன சட்டங்களை வைத்துக்கொண்டு, உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்று, நம்மை நாமே பீற்றிக்கொள்வது, நூறு சதவிகித பைத்தியக்காரத்தனம். - ஏ.மலரவன், சென்னை, "இது உங்கள் இடம்", தினமலர், மதுரை.
நன்றி: திரு ஏ.மலரவன் & தினமலர்.

கருத்துகள் இல்லை: