9 ஆக., 2010

சூரியின் டைரி-27: அகில இந்தியப் பயணம்-4




தில்லியில்  இரண்டாம் நாள்  தீன்மூர்த்தி பவன்.  பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு வாழ்ந்த இல்லம்.  இன்று  அவரது நினைவு இல்லம்.  கட்டணம் செலுத்தி வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தோம்.  அவரது படுக்கையறையில் அவர் இறுதியாக  வாசித்த நூல்கள் படுக்கை அருகிலேயே இருந்தன.  தீன்மூர்த்தி பவனில் நான் எடுத்துக் கொண்ட படம் மேலே.

அடுத்தது குதுப்மினார். பத்தாம் நூற்றாண்டிலேயே துருப்பிடிக்காத தூண்களைக் கட்டியவர்கள் இல்லையா நாம் என்று பெருமையுடன்  தி.சா.ராஜூ குறிப்பிட்டுச் சொன்ன தூண்கள் இங்கேதான். உலோகத் துறையில் நாம் எவ்வளவு சிறந்த நிலையில் இருந்தோம் என்பதற்கு இன்றும் சான்றாக இருக்கிறது.  மேலே செல்வதற்குப் பெரிய கியூ.  எனவே மேலே செல்லமுடியவில்லை.  அங்கே எடுத்துக் கொண்ட படம் மேலே. 

இந்தியா  கேட்டில்  எடுத்துக்  கொண்ட  படம்  காணவில்லை.   ராஷ்ட்ரபதி பவனுக்கு முன் நான் நிற்கும் படம் மேலே.  பல படங்களில் நான் ஒரு ஓலைத் தொப்பி அணிந்திருப்பதைப் பார்க்கலாம்.  ஏப்ரல்-மே மாதமில்லையா, அதற்காக நான் ஹைதராபாத்தில் வாங்கிய தொப்பி அது.  சக பயணி ஒருவர் தொப்பியுடன் உங்களைப் பார்த்தால் கேரி  கூப்பர் போலிருக்கிறது என்று கிண்டலடித்தார்.

நாங்கள் செங்கோட்டைக்குச் சென்றபோது எனக்கு உடல் நிலை  சரியில்லை.  எனவே கோட்டைக்குள் செல்லவில்லை.  அதனால் எதுவும் பார்க்க முடியாமல் போனது.  ஆனாலும் கோட்டையின் முன் நின்று ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.  (அது மேலே).

அன்று மாலை என்னுடன் காரைக்குடியில் பணிபுரிந்த பாரத் பிரசாத் என்ற நண்பர் கல்வி அமைச்சகத்தில் செக்ஷன் ஆபீசராக இருந்தார்.  ராமகிருஷ்ணபுரத்தில் அவரது வீட்டைத் தேடி கண்டுபிடித்தேன்.  அவர் வீட்டில் சிறப்பாக வெஜிடபிள் புலாவ் சாப்பிட்டேன். அடுத்த நாள் அவருடன் சாந்தினி சௌக் சென்று சிறு சிறு பொருட்கள் வாங்கினேன்.      

 அடுத்த நாள் அதிகாலை தாஜ் மகாலைக் காணப் புறப்பட்டோம்.  அது  அடுத்த பதிவில்.

கருத்துகள் இல்லை: