11 ஆக., 2010

சூரியின் டைரி-28: அகில இந்தியப் பயணம்-5


தில்லியிலிருந்து  எப்போது கிளம்பினோம் என்பது நினைவில்லை.  ஆனால் நாங்கள் அதிகாலை தாஜ்மஹாலிலிருந்தோம்.  பார்வையாளர்களுக்கு கதவு திறக்கப்பட்டதும் முதல் ஆட்களாக நாங்கள் உள்ளே சென்றோம்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை நேரில் பார்க்கிறோம் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருந்தது.  உடன் பயணித்த நண்பரில் கோடாக்  கிளிக் த்ரீ காமெராவில் சில படங்கள் எடுத்தோம்.  அங்கிருந்த புகைப்படக்காரர்கள் பணம் கொடுத்தால் படம் எடுத்துத் தபாலில் அனுப்பவதாகக் கூற, அதிலும் ஒன்று படம் எடுத்துக் கொண்டேன்.  அந்தப் படம் மேலே.  தாஜ் மகாலின் உள்ளே ஷாஜஹான் மற்றும் மும்தாஜின்  கல்லறைகள்.  ஆனால் உண்மையான கல்லறைகள் அடித்தளத்தில் என்று அதையும் காட்டினார்கள்.  பின்புறம் யமுனை நதி.  அதில் அப்போது தண்ணீர் இருந்ததாக நினைவில்லை. 

அடுத்தது மதுரா.  சிலர் மட்டுமே கோவிலுக்குச் சென்றார்கள்.  நான் என்ன காரணத்தினாலோ செல்லவில்லை.  பிருந்தாவன் செல்ல பெரும்பான்மையோருக்கு விருப்பமில்லாததால் அங்கு நாங்கள் செல்லவில்லை.

 குருஷேத்திரத்தில் சூரி 

அடுத்துப் பயணம் எனக்குக் கோர்வையாக நினைவில்லை.  குருஷேத்திரம் சென்றோம்.  மகாபாரத யுத்தம் நடந்த இடம் என்று கூட்டிக்கொண்டுபோய்க்  காட்டினார்கள்.  அங்கே படம் எடுத்துக் கொண்டேன்.    அடுத்த வரும் வழியில் பெரிய தடாகம்.  குருஷேத்திரப் பல்கலைக்கழகம் என்று பேருந்தில் இருந்தபடியே பார்த்தவாறு சென்றோம்.


நாசிக் பஞ்சவடி.  அங்கும் தீர்த்தமாடல். அடுத்தது  மும்பை.  மும்பையில் தமிழ்ச்ச் சங்கத்தில் தங்கினோம்.   மகாலட்சுமி கோவிலுக்குச் சென்று வழிபட்டோம்.  அடுத்தது ஒரு மசூதியைக் காட்டினார்கள்.  கடல் பின்வாங்கும்போது மட்டும் அதனுள் செல்லலாம்.  அது போன்ற அமைப்பு.  பிரபல ஓபராய் ஷெராட்டன் ஹோட்டல்,  தாஜ்மஹால்  ஹோட்டல்,  கேட் வே  ஆஃப் இந்தியா.  இந்திய நுழைவாயிலிலிருந்து படகுப்பயணம்.  அப்போது எடுத்த படங்களில் ஒன்று மேலே.

மறுநாள் அதிகாலை கிளம்பி புனே, கோல்ஹாபூர்.  ஹரிஹர் என்ற ஊரில் பேருந்து பிரேக் டௌன்.    ஒரு நாள் பொழுது வீணானது.  பயணம் முழுதிலும்  இரவு பேருந்து ஓட்டப்படுவதில்லை.  அன்று இரவு மட்டும் பேருந்து தொடர்ந்து ஒட்டப்பட்டு, அதிகாலை பெங்களூர்  அடைந்தோம்.  அங்கே காலை உணவு.  எல்லோருக்கும் ஒரே சோர்வு.  யாருக்கும் பெங்களூரில் சுற்ற திராணியில்லை, விருப்பமுமில்லை.  அநேகமாக எல்லோருமே பெங்களூரை ஏற்கனவே பார்த்திருக்கலாம்.  எனவே விதான் சபாவை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு தமிழ்நாட்டை நோக்கி,  வீடு நோக்கி விரைந்தோம்.  வழியில் கரூர் என்று நினைக்கிறேன்.  மதியம்.  காவிரியில் நீராடி, இரவு மதுரை வந்தடைந்தோம்.

எவ்வளவோ இனிய அனுபவங்கள், காட்சிகள்.  ஆனால் அவற்றில் பல நினைவிலிருந்து காணாமல் போய்விட்டன.  வழியில் சகபயணி ஒருவரை குரங்கு கடிக்க, அதனால் மருத்துவமனை தேடி, பயண திசை மாறி, சிகிச்சை பெற்று, அப்புறம் பயணம் தொடர்ந்தோம்.  வழியில் பல இடங்களில் விபத்துக் காட்சிகள்.  அப்போதெல்லாம் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் விபத்தில் சிக்கியவர்களுக்காகப்  பிரார்த்தனை.    முப்பத்து இரண்டு ஆண்டுகள் கடந்தபின் நினைமட்டுமே நம்பி இந்தக் குறிப்புகளை எழுதியுள்ளேன் என்பதை அன்பர்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஏதாவது விடுபட்டுப்போனது நினைவிற்கு வந்தால் அதனைப் பின்னர் பதிவு செய்கிறேன்.  நன்றி, வணக்கம்!

கருத்துகள் இல்லை: